Sports News

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 2-வது அரைஇறுதியின் 2-வது கட்ட போட்டியில் சென்னையின் எப்.சி- கோவா அ
Updated on : 12 March 2018

ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்திய சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டி கடந்த நவம்பர் 1-ந்தேதி தொடங்கியது.

சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்த இந்தப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்றன.

கடந்த 4-ந்தேதியுடன் 90 ‘லீக்’ ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் மூலம் பெங்களூர் எப்.சி., சென்னையின் எப்.சி, கோவா, புனே ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

ஜாம்ஷெட்பூர், கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை சிட்டி, டெல்லி டைனமோஸ், அட்லெடிகோ கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடட் (கவுகாத்தி) ஆகிய அணிகள் முறையே 5 முதல் 10 இடங்களை பிடித்து போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.

ஒரு அரைஇறுதியில் பெங்களூர்- புனே அணிகளும், மற்றொரு அரை இறுதியில் சென்னையின் எப்.சி- கோவா அணிகளும் 2 முறை மோத வேண்டும்.

பெங்களூர்- புனே அணிகள் மோதிய முதல் ஆட்டம் கோல் எதுவுமின்றி ‘டிரா’ செய்தது. 2-வது முறையாக நேற்று மோதிய போட்டியில் பெங்களூர் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

சென்னையின் எப்.சி- கோவா அணிகள் மோதும் 2-வது அரைஇறுதியின் 2-வது கட்ட போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (13-ந்தேதி) நடக்கிறது. இரவு 7 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

இரு அணிகளும் கோவாவில் மோதிய முதல் கட்ட ஆட்டம் 1-1 என்ற கணக்கில் ‘டிரா’ ஆனது. இதனால் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். சென்னையின் எப்.சி. அணி கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

கடந்த 2013-ம் ஆண்டு சென்னை அணி கோவாவை வீழ்த்தி தான் ஐ.எஸ்.எல். கோப்பையை வென்றது. அதே மாதிரி தற்போது அரைஇறுதியில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் திகழ்கிறது. 2014-ம் ஆண்டு சென்னை அணி அரை இறுதியில் வெளியேறி இருந்தது. அது மாதிரி ஏற்பட்டு விடக்கூடாது எள்பதில் சென்னையின் எப்.சி. கவனமாக உள்ளது.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு சென்னை அணிக்கு சாதகமாக இருக்கும். இதனால் சென்னையின் எப்.சி. 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழையும் ஆர்வத்துடன் இருக்கிறது.


Latest News