சற்று முன்
சினிமா செய்திகள்
அஜீத்துக்கு அடுத்து ஆத்விக்
Updated on : 24 April 2015
நட்சத்திர தம்பதிகளான அஜீத் சாலினிக்கு கடந்த மார்ச் 3, 2015 அன்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. தன்னுடைய மூத்த மகளுக்கு அனுஷ்கா என்று பெயர் சூட்டி மகிழ்ந்த அஜீத் தன்னுடைய இரண்டாவது மகனுக்கு ஆத்விக் என பெயர் சூட்டியுள்ளார். ஆத்விக் என்றால் 'தனிப்பட்ட' என்று அர்த்தமாம்.
சமீபத்திய செய்திகள்
என் அடுத்த படம் ‘கைதி 2’ தான் – சம்பள சர்ச்சை, LCU, ரஜினி–கமல் படம் குறித்து லோகேஷ் விளக்கம்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ், தனது எதிர்கால திரைப்படத் திட்டங்கள், தற்போதைய பணிகள் மற்றும் சமூக வலைதளங்களில் தன்னை குறித்து வெளியான எதிர்மறை விமர்சனங்கள் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “ஒவ்வொரு படத்தின் வெளியீட்டுக்குப் பிறகும் ஊடகங்களை சந்திப்பது என்னுடைய வழக்கம். ‘கூலி’ படத்திற்குப் பிறகு இதை செய்ய வேண்டும் என நினைத்தேன். இப்போது தான் அது சாத்தியமானது” என்றார்.
‘கூலி’ திரைப்படம் 35 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதாக குறிப்பிட்ட லோகேஷ், வசூல் விவரங்கள் குறித்து பேச விரும்பவில்லை என்றும், படம் லாபகரமானது என தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார். “ஆயிரம் விமர்சனங்களை கடந்து அந்த படம் 35 நாட்கள் ஓடியதே மக்களின் ஆதரவு தான்” என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், “அந்த விமர்சனங்கள் என்னை யோசிக்க வைத்தது. ரசிகர்கள் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள உதவியது. அதை என் அடுத்த படங்களில் பயன்படுத்த முயற்சி செய்வேன்” என்றார்.
ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைப்பு படம் குறித்து பேசும் போது, “ ‘கூலி’ வெளியான நேரத்தில் இருவரையும் சந்தித்தேன். 46 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் எனக்கு இயக்க வாய்ப்பாக கிடைத்தது மிகப்பெரிய விஷயம். ஆனால் அவர்கள் இருவரும் தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், மென்மையான திரைக்கதை வேண்டும் என நினைத்தனர். அந்த ஸ்டைலில் படம் இயக்குவது எனக்கு வராது என்பதால் மரியாதையுடன் விலகி கொண்டேன்” என விளக்கம் அளித்தார்.
‘கைதி 2’ தாமதமானது சம்பள விவகாரம் காரணமாக என்ற செய்தியை மறுத்த லோகேஷ், “ஒரு இயக்குநரின் சம்பளத்தை சந்தையும் தயாரிப்பாளரும் தான் தீர்மானிக்கிறார்கள். கடந்த வாரமே ‘கைதி 2’ தயாரிப்பாளரை சந்தித்து பேசியுள்ளேன். என்னுடைய அடுத்த படம் ‘கைதி 2’ தான்” என உறுதிபட தெரிவித்தார்.
LCU குறித்து, “LCU என்ற பெயரை நான் வைக்கவில்லை. ரசிகர்கள்தான் உருவாக்கினார்கள். ‘கைதி 2’, ‘விக்ரம் 2’, ‘ரோலக்ஸ்’ ஆகியவை என் கமிட்மெண்ட்கள். அவை இல்லாமல் நான் நகர முடியாது. அதனால் LCU தொடரும்” என்றார். அல்லு அர்ஜுன் நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் படம் இயக்க இருப்பதும், அமீர் கானுடன் பேச்சுவார்த்தை தொடர்வதும் அவர் உறுதிப்படுத்திய முக்கிய தகவல்களாக அமைந்தது.
மொத்தத்தில், சமூக வலைதளங்களில் எழுந்த பல்வேறு கேள்விகளுக்கும் நேரடியாக பதிலளித்து, தனது எதிர்கால பாதை குறித்த தெளிவான செய்தியை லோகேஷ் கனகராஜ் இந்த சந்திப்பின் மூலம் ரசிகர்களுக்கும் திரையுலகிற்கும் தெரிவித்தார்.
சித்தார்தின் ‘ரெளடி & கோ’ வித்தியாசமான போஸ்டர் கான்செப்ட்
தரமான கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்து வரும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெளடி & கோ’ திரைப்படத்தை தயாரித்துள்ளது. வழக்கமான விளம்பர யுக்திகளுக்கு மாறாக, இந்தப் படத்தின் டீசர்–போஸ்டர் கான்செப்ட்டை முற்றிலும் புதிய பாணியில் அறிமுகப்படுத்தியுள்ளது படக் குழு.
“ரெளடிகளை தேர்ந்தெடு… அவர்களை படத்தின் முதல் பார்வையில் வெளியிடு” என்பதே இந்த வித்தியாசமான கான்செப்ட். இதன் மூலம், படத்தில் இடம்பெறும் முன்னணி நடிகர்கள் ஒவ்வொருவராக போஸ்டர்களில் வெளிப்படுத்தப்பட்டு, ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரிக்கும் இந்த காமெடி என்டர்டெய்னரின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டர், சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
‘கப்பல்’ திரைப்படம் மூலம் பாராட்டப்பட்ட இயக்குநர் கார்த்திக் ஜி. கிரிஷ், இந்த படத்தை முழுக்க முழுக்க கலகலப்பான, வித்தியாசமான முயற்சியாக உருவாக்கியுள்ளார். நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், ராஷி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி, சார்ல்ஸ் வினோத் மற்றும் ‘தனி ஒருவன்’ வில்லன் வம்சி கிருஷ்ணா உள்ளிட்டோர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாகவுள்ள ‘ரெளடி & கோ’, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நிறைவு செய்து வருகிறது.
முதல் பார்வையிலேயே வித்தியாசமான யுக்தியால் கவனம் ஈர்த்துள்ள இந்த படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
காதலின் ஐந்து உயிரெழுத்துகள்… ‘VOWELS – An Atlas of Love’ டைட்டில் லுக் வெளியீடு!
இதுவரை ரசிகர்கள் உணர்ந்திராத ஆழமான உணர்வுகளுடன் கூடிய ஐந்து காதல் கதைகளை ஒரே திரைப்படத்தில் முன்வைக்கும் முயற்சியாக, ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் உருவாகியுள்ளது.
உயிரிலும், உணர்விலும், சுவாசத்திலும் இருந்து பிறக்கும் காதலே மனித வாழ்க்கையின் மையம் என்பதைக் கவிதைநடையில் சித்தரிக்கும் இந்த படம், காதலின் பல பரிமாணங்களை வித்தியாசமான கோணத்தில் பேசுகிறது. கற்பனையிலிருந்து குற்றம் வரை, ஈர்ப்பிலிருந்து பிடிவாதம் வரை, இனிமையிலிருந்து இருள் வரை… காதலின் இருபக்கங்களையும் துணிச்சலுடன் ஆராயும் படமாக ‘VOWELS’ உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தின் டைட்டில் லுக் இன்று (ஜனவரி 26, 2026) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஒலி, ஓசை, உணர்வு ஆகியவற்றின் மூலம் வார்த்தைகளுக்கு உயிரூட்டும் உயிரெழுத்துகள் மொழியின் அடிநாதம் என்பதுபோல், இந்த திரைப்படமும் ஐந்து உயிரெழுத்துகளை மையமாகக் கொண்ட ஐந்து தனித்துவமான கதைகள் வழியாக காதலை வெளிப்படுத்துகிறது.
காதலின் ஐந்து உயிரெழுத்துகள் – ஐந்து உணர்வுகள்
-
A – Attraction (ஈர்ப்பு):
முதல் பார்வையிலேயே மலரும் உண்மை காதல், இளமை, கட்டுப்பாடற்ற உணர்வு -
E – Emotion (உணர்ச்சி):
ஆழமான பிணைப்பு, தியாகம், ஏக்கம், பிரிவு -
I – Intimacy (நெருக்கம்):
உடல்–மன நெருக்கம், ஆசை, பற்றுதல், பலவீனம் -
O – Obsession (பிடிவாதம்):
இருண்ட காதல், குற்றம், “எனக்கே” என்ற உரிமை உணர்வு, த்ரில்லர் -
U – Unconditional (நிபந்தனையற்ற காதல்):
கட்டுப்பாடுகளற்ற தூய்மை, ஆன்மீகம், அர்ப்பணிப்பு
ஒரு வரைபடம் (Atlas) போல, ஒவ்வொரு கதையும் தனித்தனி உணர்வுகளை பிரதிபலிக்க, அனைத்தும் ஒன்றிணைந்து காதலை ஒரு அழகான மொழியாக மாற்றுகின்றன. இந்த ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத்நாத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகியோர் இயக்கியுள்ளனர். பல்வேறு மொழிகள் மற்றும் பின்னணிகளை சேர்ந்த நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
காதலை உணர்வுகளின் பயணமாக வரையறுக்கும் ‘VOWELS – An Atlas of Love’, தமிழ் சினிமாவில் ஒரு புதிய அனுபவமாக ரசிகர்களை மெய்மறக்கச் செய்யத் தயாராக உள்ளது.
ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்ட ‘ராவடி’ ஃபர்ஸ்ட் லுக்! – ரசிகர்கள் உற்சாகம்
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் காமெடி என்டர்டெய்னர் திரைப்படம் ‘ராவடி’, மலையாளத்திலும் அதே பெயரில் தயாராகி வருவதாக படக் குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் L.K. அக்ஷய் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதோடு, மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் பஸில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிகர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கும் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை P.S. ஹரிஹரன் கவனிக்க, பிரியா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S.S. லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு L.K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக உள்ளார்.
படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், ‘ராவடி’ படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கேரக்டர் கிளிம்ப்ஸை, இசையமைப்பாளர் ‘ராக் ஸ்டார்’ அனிருத் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதில் பஸில் ஜோசப், L.K. அக்ஷய் குமார், ஜாபர், நோபல், அருணாசலம் ஆகியோரின் வித்தியாசமான தோற்றங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
காமெடி கலந்த கலகலப்பான கதையுடன் உருவாகும் ‘ராவடி’ திரைப்படம், எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. ☀️🎬
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் மம்மூட்டி, மோகன்லால்!
இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை எழுதத் தயாராக இருக்கும் மெகா மல்டி–ஸ்டாரர் திரைப்படம் “பேட்ரியாட்” தனது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை பிரம்மாண்டமான போஸ்டருடன் அறிவித்துள்ளது. மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த சர்வதேச ஸ்பை திரில்லர் திரைப்படம் 2026 ஏப்ரல் 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த ரிலீஸ் டேட் போஸ்டரை 40-க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தது, படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. தமிழ் பதிப்பு போஸ்டரை அட்லீ, தெலுங்கு போஸ்டரை விஜய் தேவரகொண்டா, ஹிந்தி போஸ்டரை கரண் ஜோஹர் வெளியிட்டனர்.
மலையாளத்தில் துல்கர் சல்மான், பிரித்விராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ், ஃபஹத் ஃபாசில், ஆசிஃப் அலி, நஸ்ரியா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் போஸ்டரை பகிர்ந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இதற்கு முன் வெளியான மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், குஞ்சாக்கோ போபன், ராஜீவ் மேனன் ஆகியோரின் கதாபாத்திர போஸ்டர்கள் ரசிகர்களிடையே வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றன.
Anto Joseph Film Company மற்றும் Kichappu Films இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அன்டோ ஜோசப் மற்றும் K.G. அனில்குமார் தயாரித்துள்ளனர். 17 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி–மோகன்லால் இணையும் இந்த படம், மலையாள சினிமாவின் இதுவரை இல்லாத மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளதோடு, Twenty:20 படத்திற்குப் பிறகு அதிகமான முன்னணி நடிகர்களை ஒன்றிணைக்கும் படமாகவும் அமைந்துள்ளது.
ஒரு வருடத்திற்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட கட்டங்களாக நடைபெற்ற படப்பிடிப்பு, இந்தியா, இலங்கை, UK, அசர்பைஜான் மற்றும் UAE உள்ளிட்ட பல நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. Take Off, Malik படங்களுக்குப் பிறகு, இயக்குநர் மகேஷ் நாராயணன் இந்த படத்தை சர்வதேச தரத்திலான ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாக்கியுள்ளார்.
முன்னதாக வெளியான டைட்டில் டீசர், மம்மூட்டி–மோகன்லால் இணைந்து தோன்றும் சக்திவாய்ந்த ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை மிரள வைத்தது. மலையாள சினிமாவில் இதுவரை காணாத தொழில்நுட்ப தரமும், உலகளாவிய களமும் கொண்ட படமாக ‘பேட்ரியாட்’ உருவாகியுள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!
எஸ்.பி.பி. சரண் தயாரிப்பில் வெளியாகி கவனம் பெற்ற திரைப்படமான ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, தற்போது அதன் திரைக்கதை புத்தக வடிவில் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி 17 ஆண்டுகள் கடந்த நிலையில், திரைக்கதையை புத்தகமாக வெளியிடுவது தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒரு சிறப்பு முயற்சியாகக் கருதப்படுகிறது.
இந்த திரைப்படத்தை இயக்கிய ராஜமோகன், இயக்குநர்கள் ராஜகுமாரன், விஜய் மில்டன், ஏ. வெங்கடேஷ் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
இயக்குநர் சேரன் உதவியாளராக இருந்த ராமகிருஷ்ணன், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இந்த படத்தின் பாடல்கள், வெளியான காலகட்டத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், இப்படத்தின் திரைக்கதை தற்போது அறம் பதிப்பகம் சார்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சென்னை புத்தகக் கண்காட்சி திருவிழாவில், இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் ராஜமோகன், ராஜகுமாரன், விஜய் மில்டன், நடிகர் ராமகிருஷ்ணன், கவிஞர் மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், இயக்குநர் ராஜகுமாரன் புத்தகத்தை வெளியிட, இயக்குநர் விஜய் மில்டன் பெற்றுக் கொண்டார். ஒரு திரைப்படத்தின் திரைக்கதை, காலத்தைக் கடந்து புத்தக வடிவில் வாசகர்களை சந்திப்பது, தமிழ் சினிமா – இலக்கிய இணைப்பின் ஒரு முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில்
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் நூலின் ஆசிரியரும் இயக்குநருமான ராஜமோகன் ஏற்புரை ஆற்றி பேசும்போது,
நல்ல விமர்சனங்களை தந்த இந்தப்படம் ஒரு சிறந்த திரைக்கதை என்பதை கர்வத்துடன் சொல்லிக் கொள்வேன். இயக்குநராகும் ஆசையுடன் சென்னைக்கு வந்த என் அண்ணன் விபத்தில் இறந்து விட்டார். அதன் பிறகு நானும் என் தம்பியும் படிப்பை முடித்தோம். ஒரு கட்டத்தில் என் தம்பி என்னை சினிமாவுக்கு செல்ல ரொம்பவே ஊக்கம் கொடுத்து வற்புறுத்தினார். அப்போதுதான் இயற்கையே என்னை கவிதை, கதை எழுதுவதற்கு தயார்படுத்தியது. அதன்பின் சென்னை வந்து இயக்குநர் ராஜகுமாரனிடம் உதவி இயக்குநராக சில படங்களில் பணியாற்றினேன். அப்போது என்னை அவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். அவரிடம் பணியாற்றிய அனுபவத்தில் நான் இயக்குநராக மாறினேன். ஒளிப்பதிவையும் சேர்த்து கற்றுக் கொண்டேன். இந்த சினிமாவில் எனக்கு ஒரு நந்தவனம் அமைத்துக் கொடுத்தவர்கள் இவர்கள் இருவரும் தான். அவர்கள் இருவருக்கு நடுவே நான் இன்று என்னுடைய புத்தக விழாவில் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்பதை விட வேறு பெருமை எனக்கு கிடைக்காது.
நான் உதவி இயக்குநராக பணியாற்றிய சமயங்களில் என்னுடன் நட்பாக பழகிய புரொடஷன் மேனேஜர் சின்னச்சாமி என்னிடம் இருந்த கதையை கேட்டுவிட்டு என்னை விட அதிக இடங்களுக்கு அந்த கதையை சுமந்து சென்றார். அப்படி நான்கு இடங்களில் எனக்கு படம் இயக்க வாய்ப்பு கிடைத்த போது அதில் அழகாக அமைந்த வாய்ப்பு தான் கேப்பிட்டல் பிலிம் ஒர்க்ஸ் தயாரிப்பாளர் எஸ்பி. சரண் சார் இந்த படத்தை தயாரித்தது. இந்த படத்தில் வாலி மற்றும் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுத யுவன் சங்கர் ராஜா இசையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இன்று வரை அந்த பாடல்கள் பேசப்படுகின்றன. புத்தகத்தை வெளியிட்டுள்ள அறம் பதிப்பகத்திற்கு கடந்த வருடம் வேறு ஒரு புத்தகம் வாங்குவதற்காக சென்றபோது நான்தான் குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் படத்தின் டைரக்டர் என்பதை அறிந்து நீங்கள் நிச்சயம் இந்த கதையை புத்தகமாக எழுதுங்கள் எங்கள் நிறுவனத்தில் வெளியிடுகிறோம் என்று ஊக்கப்படுத்தினார்கள். இந்த புத்தகம் வெளியாக உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று கூறினார்.
ஜேம்ஸ் பேசும்போது,
“இயக்குநர் ராஜமோகனுடன் பல வருடங்களாக பழகி வருகிறேன். அவர் நான்கு படங்களை இயக்கி விட்டாலும் கூட இன்று வரை அவரை உயிர்ப்புடன் நகர்த்தி செல்வது குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் படத்தை பற்றி பலரும் சிலாகித்து பேசுவது தான்” என்று கூறினார்.
நடிகர் ராமகிருஷ்ணன் பேசும்போது,
“நான் இயக்குநராகும் முயற்சியில் தீவிரமான தேர்தலில் இருந்தபோது என்னை குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் படத்தில் கதாநாயகனாக இயக்குநர் ராஜமோகன் நடிக்க வைத்தது யாரும் எதிர்பாராதது. இந்த படம் வெற்றி தோல்வி என்பதையெல்லாம் தாண்டி இன்று வரை உயிர்ப்போடு இருக்கிறது என்றால் இந்த படத்தின் திரைக்கதை தான் காரணம். இந்த திரைப்படத்தை வாழ்வியல் நுட்பத்துடன் எடுத்த இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகையாகாது. இந்த படம் வெளியாகி 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போதும் என்னை இந்த படத்தில் நடித்த ஹீரோ தானே என்று சொல்லித்தான் அடையாளம் காட்டுகிறார்கள். இந்த படத்தின் காட்சிகள் பாடல்கள் இப்போதும் கூட சோசியல் மீடியாவில் உயிர்ப்போடு இருக்கிறது என்றால் நிச்சயம் இந்த படம் ஏதோ ஒரு மேஜிக் செய்திருக்கிறது” என்று பேசினார்.
இயக்குநர் விஜய் மில்டன் பேசும்போது,
“எங்களைப் போன்ற இயக்குனர்கள் கதை எழுதுவது, கவிதை எழுதுவது எல்லாம் ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். யாரோ ஒருவர் நம்முடைய கதையை, படத்தை நன்றாக இருக்கிறது, அதுவும் தோற்றுப்போன படம் கூட நன்றாக இருக்கிறது என்று சொல்லும்போது அது மிகப்பெரிய அங்கீகாரம். அப்படி ஒரு சந்தோஷத்தை இயக்குநர் ராஜமோகனுக்கு கொடுத்ததற்காக அறம் பதிப்பகத்திற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். எங்கே சென்றாலும் அவரை குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும் டைரக்டர் தானே என்று சொல்கிறார்கள். இந்த வருடம் அதையும் தாண்டி ஒரு படத்தை பண்ணுவதற்காக கதையுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார்” என்று பேசினார்.
இயக்குநர் ராஜகுமாரன் பேசும்போது,
“இந்த புத்தக வெளியிட்டு விழாவை ஒரு மனிதனின் அயராத முயற்சியும் ஒரு தன்னம்பிக்கை எழுச்சிமாகத்தான் நான் பார்க்கிறேன். ஒரு குடும்பத்தில் மூன்று பேருக்கு நடுவில் பிறந்து தந்தையையும் அண்ணனையும் இழந்து படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழலில் ஒரு சினிமாவை பார்த்துவிட்டு அதில் கதாநாயகன் செய்யும் பல வேலைகளை குறித்து வைத்துக் கொண்டு அதில் சில வேலைகளை தனது தினசரி வாழ்க்கையில் செய்து படிப்பை விடாமல் தொடர்ந்து கல்லூரி பட்டம் பெற்ற ஒரு செயல் வீரனின் கதையாகத்தான் இந்த புத்தகத்தை நான் பார்க்கிறேன். அப்படி கல்லூரி படிப்பை முடித்த பிறகும் அந்த வேலைகளை தொடர்ந்து கொண்டிருந்த சமயத்தில் என்னுடைய, ‘நீ வருவாய் என’ படத்தை பார்த்துவிட்டு நான் விக்ரமனின் உதவியாளர் என்பதை அறிந்து கொண்டு தொடர்ந்து எனக்கு கடிதங்கள் எழுதி, என்னைக் கவர்ந்து, என்னை தேடி சென்னைக்கு வந்து விட்டார் இயக்குநர் ராஜமோகன். என்னிடம் உதவியாளராக சேர்வதற்கு சில தேர்வுகளை வைத்தேன். நல்ல காட்சி சொன்னால் 100 ரூபாய் தருவதாக சொன்னேன். அப்படி பலமுறை என்னிடம் பரிசாக பணம் பெற துவங்கினார். இவர் இப்படி என்னிடம் பரிசாக பணம் வாங்குவதை பார்த்து, நான் இன்னும் அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டுமோ அல்லது தவறாக வாக்கு கொடுத்து விட்டோமோ என்கிற அச்சமும் கூட எனக்கு ஏற்பட்டு அதனாலயே அவரை என் உதவியாளராக சேர்த்துக் கொண்டேன். அவருடைய வாழ்க்கையே ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ என்கிற அந்தப் படத்தினால் தான். ஒரு படைப்பு என்பது ஒரு மனிதனுக்கு எத்தகைய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் “என்று கூறினார்.
கவிஞர் மனுஷ்ய புத்திரன் பேசும்போது,
“இந்த புத்தகத்திற்கு இயக்குநர் ராஜமோகன் எழுதி இருக்கும் முன்னுரையே ஒரு திரைக்கதை போல அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. அதையே ஒரு படமாக எடுக்கலாம். பேருந்து நிலையத்தில் யாரோ ஒரு வயதான பெண் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை சொன்ன போது, அதையே இந்த சமூகத்திற்கு ஒரு படைப்பாக கொடுக்கும் விதமாக இந்த கதையை அவர் உருவாக்கி இருக்கிறார். ஒரு படம் வெளிவந்து 17 வருடங்களுக்குப் பிறகு அது ஏன் புத்தகமாகி இருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இன்று படங்களின் ஆயுள் காலம் ஓரிரு வாரங்கள் என்று ஆகிவிட்ட நிலையில் கால ஓட்டத்தில் சமூக நோக்கில் எடுக்கப்பட்ட படங்கள் கூட மறக்கடிக்கப்பட்டாலும் அவற்றின் திரைக்கதைகள் புத்தகங்களாக வெளியாகி இன்றைய தலைமுறையை சென்று அடைய வேண்டும். அந்த பணியை தான் அறம் பதிப்பகம் செய்திருப்பதாக நினைக்கிறேன். இதுபோன்ற நல்ல படைப்புகளை ராஜமோகன் படமாக இயக்க வேண்டும். இது போன்ற நல்ல திரைக்கதைகளை அறம் பதிப்பகம் தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என பேசினார்.
‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!
‘திரௌபதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்த கவனத்தை ஈர்த்த இயக்குநர் மோகன் ஜி, தற்போது மிகப் பெரும் வரலாற்றுக் காவியமான ‘திரௌபதி 2’ திரைப்படத்துடன் மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறார். துணிச்சலான கதை சொல்லல் மற்றும் வரலாற்று நுணுக்கங்களை துல்லியமாக கையாளும் இயக்குநராக அறியப்படும் அவர், இந்த படத்தின் மூலம் 14ஆம் நூற்றாண்டு ஹோய்சால பேரரச வம்சத்தின் மகத்துவத்தை மீண்டும் திரையில் உயிர்ப்பிக்கிறார்.
ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘திரௌபதி 2’, ரசிகர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவமாக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் செழுமையான ஆனால் பெரிதும் பேசப்படாத பாரம்பரியத்தை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு வரலாற்று சினிமா ஆவணமாக இருக்கும் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
படம் குறித்து அவர் மேலும் கூறியதாவது, “‘திரௌபதி 2’ திரைப்படம் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹோய்சால பேரரச வம்சத்தின் வரலாற்றை எந்த சமரசமும் இல்லாமல், துல்லியமான வரலாற்று உண்மைகளுடன் திரையில் மீண்டும் உருவாக்குகிறது. மன்னர் வீர சிம்ம கடவராயன் கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் ரிஷி, பேரரசருக்கே உரிய கம்பீரமும் அதிகாரமும் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை, பேரரசர்களின் ஆன்மாவை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.”
மேலும், பிலிப் கே. சுந்தர் ஒளிப்பதிவு அரச கம்பீரத்தை அழகாக பதிவு செய்கிறது. ஆக்ஷன் சந்தோஷ் வடிவமைத்த போர் காட்சிகள் வரலாற்று காவியங்களுக்கு இணையானவை. ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ் ஆகியோர் தீவிரமான நடிப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு பேரரசின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியின் வழியாக தமிழ் வீரத்தின் வரலாற்றை பதிவு செய்யும் இந்த துணிச்சலான வரலாற்றுத் திரைப்படத்தை நேதாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மோகன் ஜி இயக்கத்தில், சோலா சக்கரவர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு
தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் உன்னத படைப்பாகக் கருதப்படும் திருவாசகம், இப்போது சமகால இசை வடிவில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இசையமைப்பாளரும் பாடகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்கும் முயற்சியின் முதல் படியாக, அதன் முதல் பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த பாடல் ஆன்மிக இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், இந்த திருவாசகப் பாடலின் ஒரு பகுதியை ஜி.வி. பிரகாஷ் நேரடி இசை நிகழ்ச்சியாக வழங்கினார். அந்த நிகழ்வின் போது மேடை முழுவதும் தெய்வீக அமைதி நிலவியதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். இதன் மூலம், திருவாசக இசை முயற்சியின் ஆன்மிக ஆழம் வெளிப்பட்டது.
ஜி.வி. பிரகாஷின் YouTube சேனலில் வெளியான இந்த முதல் பாடல், சிவபெருமானின் மகிமையையும், திருவாசகத்தில் நிறைந்திருக்கும் ஆத்மார்த்தமான பக்தி உணர்வையும் இசை வழியாக எடுத்துரைக்கிறது. சிவனின் பல ரூபங்களும் – கருணை வடிவம், ருத்ர ரூபம், யோகி நிலை – இசையின் ஓட்டத்தில் நுட்பமாக சித்தரிக்கப்பட்டுள்ளன.ஜி.வி. பிரகாஷின் குரலில் வெளிப்படும் வலிமையும் பணிவும், பாடலின் ஆன்மிக தாக்கத்தை மேலும் உயர்த்துகின்றன.
திரைப்பட இசையில் தனக்கென ஒரு வலுவான அடையாளத்தை உருவாக்கியுள்ள ஜி.வி. பிரகாஷ், பாரம்பரியத்தையும் நவீனத்தையும் இணைக்கும் இசை முயற்சிகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த திருவாசக இசை திட்டம் பார்க்கப்படுகிறது. பாரம்பரிய ஆன்மிக இலக்கியத்தை இன்றைய தலைமுறைக்கு எளிதாக கொண்டு சேர்க்கும் நோக்கில், நவீன இசை அமைப்புகளுடன் பாரம்பரிய பக்தி சுவை இணைக்கப்பட்டுள்ளது.
திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக வெளியிடுவது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவாக இருந்த நிலையில், அதன் தொடக்கமாக வெளியாகியுள்ள இந்தப் பாடல், அந்த கனவு உறுதியான பாதையில் பயணிக்கத் தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த முயற்சி, தமிழ் ஆன்மிக இசை உலகில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.
பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!
தென் இந்திய சினிமாவில் தனது மென்மையான மெலடிகள், உணர்வுப் பூர்வமான பின்னணி இசை மூலம் தனி அடையாளத்தை உருவாக்கிய இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப், தற்போது பாலிவுட் திரையுலகில் அதிகாரப்பூர்வமாக கால்பதித்துள்ளார். இந்தியாவின் பிரம்மாண்டமான இயக்குநர்-தயாரிப்பாளர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கும் “தோ திவானே ஷெகர் மெய்ன்” (Do Deewane Sheher Mein) திரைப்படத்தின் மூலம், ஹேஷம் இந்தி திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இது தென் இந்திய சினிமாவுக்கே பெருமை சேர்க்கும் தருணமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ரவி உத்யாவர் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில், பாலிவுட் பிரபல இசையமைப்பாளர் ஜோடி சச்சின் – ஜிகர் உடன் இணைந்து, ஒரு முக்கிய பாடலுக்கு ஹேஷம் இசையமைத்துள்ளார். அந்த பாடலை ஜூபின் நௌடியல் மற்றும் நீதி மோகன் பாட, பாடல் வரிகளை அபிருச்சி எழுதியுள்ளார். மெலடியும் உணர்ச்சியும் கலந்த இந்த பாடல், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை வழங்கிய ஹேஷம், குறிப்பாக தெலுங்கில் “குஷி”, “ஹாய் நானா” போன்ற ஹிட் படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார். சமீபத்தில் வெளியான “கேர்ள்ஃபிரண்ட்” திரைப்படத்தின் இசை, அவரது பயணத்தில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. தமிழில் “ஒன்ஸ் மோர்”, சூரி நடித்த “மாமன்” ஆகிய படங்கள் மூலம் ஹேஷம் பெற்ற பாராட்டுகள் குறிப்பிடத்தக்கவை.
தற்போது, ஹேஷம் அப்துல் வஹாப் பல பிரம்மாண்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். தெலுங்கில் ஆதித்யா ஹாசன் இயக்கும் பெரிய படம், ஹாய் நானா இயக்குநர் ஷௌர்யுவ் உடன் புதிய கூட்டணி, மேலும் “ஹிட்” பட இயக்குநர் சைலேஷ் கோலனு உடன் ஒரு திரைப்படம் என அவரது கைவசம் பல முக்கியப் படங்கள் உள்ளன. தமிழில் அர்ஜூன் தாஸ் நடிக்கும் சூப்பர்ஹீரோ திரைப்படம் அவரது அடுத்த வெளியீடாக தயாராகி வருகிறது.
இதோடு மட்டுமல்லாமல், Netflix தயாரிக்கும் முதல் இந்தோ–கொரியன் முழுநீள திரைப்படமான “மேட் இன் கொரியா” (Made in Korea)-க்கும் ஹேஷம் இசையமைக்கிறார். பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகும் இந்த படம், இந்தியா – தென் கொரியா கூட்டுத் தயாரிப்பாக சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது.
கன்னடத்தில் Golden Star கணேஷ் நடித்துவரும் படத்தின் மூலம் ஹேஷம் அந்த திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். மலையாளத்தில் விரைவில் வெளியாகவுள்ள “மதுவிது” திரைப்படத்திற்கும் அவர் இசையமைத்துள்ளார்.
ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்கும் முதல் பாலிவுட் திரைப்படமான “தோ திவானே ஷெகர் மெய்ன்”, Zee Studios, Rankcorp Media, Bhansali Productions, Ravi Udyawar Films ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த திரைப்படம் பிப்ரவரி 20ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’
கன்னட திரையுலகில் உணர்வுபூர்வமான கதைகளில் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகராக அறியப்படும் சதீஷ் நினாசம், கதையின் நாயகனாக நடித்துள்ள ‘ரைஸ் ஆஃப் அசோகா’ திரைப்படம், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு இளைஞன் தனது உரிமைக்காக மேற்கொள்ளும் போராட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் வினோத் வி. தோந்த்ளே (வினோத் வி. தோண்ட்லே) இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பீரியாடிக் ஆக்சன் எண்டர்டெய்னர் திரைப்படத்தில், சதீஷ் நினாசத்துடன் சப்தமி கௌடா, பி. சுரேஷ், சம்பத் மைத்ரேயா, கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே, யஷ் ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லவித் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பூர்ணசந்திர தேஜஸ்வி இசையமைத்துள்ளார். விருத்தி கிரியேசன் – சதீஷ் பிக்சர் ஹவுஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வர்தன் ஹரி, ஜெய்ஷ்ணவி, சதீஷ் நினாசம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ரைஸ் ஆஃப் அசோகா’ படத்தின் விளம்பர நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் சதீஷ் நினாசம், சப்தமி கௌடா, தயாரிப்பாளர் வர்தன் ஹரி, ஒளிப்பதிவாளர் லவித் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
தயாரிப்பாளர் வர்தன் ஹரி பேசுகையில்,
'' ரைஸ் ஆஃப் அசோகா எனும் இந்த திரைப்படம் கன்டென்ட் ஓரியண்ட்டட் மூவி. இந்தத் திரைப்படத்தை ஒட்டுமொத்த பட குழுவினரும் அர்ப்பணிப்புடன் உருவாக்கி இருக்கிறோம். உங்களின் ஆதரவை தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
இணை தயாரிப்பாளர் தேவராஜ் கிருஷ்ணப்பா பேசுகையில், '' ரைஸ் ஆஃப் அசோகா எனும் இந்த திரைப்படம் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞன் அவனுடைய உரிமைக்காக போராடுகிறான். அவனுக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பது தானே படத்தின் கதை. அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
நடிகை சப்தமி கௌடா பேசுகையில்,
இந்த திரைப்படத்தில் அம்பிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். 80, 90களில் உள்ள பெண்ணாக நடித்திருக்கிறேன். அவளுக்கென்று தனியாக ஒரு கனவு இருக்கிறது. லட்சியம் இருக்கிறது. அதற்காக அவள் எப்படி போராடுகிறார்? என்பதுதான் உச்சகட்ட காட்சி. இது எனக்கு மிகவும் பிடித்தமானது. இது எனக்கு மட்டுமல்ல உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
தமிழ்நாடு ரசிகர்கள் என் மீதும் என்னுடைய இந்த படக் குழு மீதும் ஏராளமான அன்பை செலுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன். இந்தப் படமும், பாடலும் அனைவருக்கும் பிடிக்கும். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.
நடிகர் சதீஷ் நினாசம் பேசுகையில்,
'' இது எனக்கு மிகப்பெரிய நிகழ்வு. இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் கன்னடத்தில் ஹீரோ. ஆனால் தமிழகத்தில் என்னை யாருக்கும் தெரியாது. இந்தப் படம் இயற்கையின் ஒத்துழைப்பின் காரணமாக தமிழிலும் வெளியாகிறது.
இந்த நாள் என் வாழ்க்கையில் மிக சிறப்பான நாள். இது என்னுடைய முன்னோர்களின் கனவு. இந்தப் படம் மிகச் சிறப்பாக இருக்கிறது.
என்னுடைய பத்து ஆண்டுகால திரை உலக பயணத்தில் பத்து அல்லது பன்னிரண்டு படங்களில் தான் ஹீரோவாக நடித்திருக்கிறேன். ஏனெனில் நான் உணர்வுபூர்வமான கதைகளை தேர்வு செய்து தான் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். என்னால் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களில் நடிக்க முடியாது. அது ரொம்பவும் கஷ்டம். ஏனென்றால் அதற்கு ஏற்ற கதை இல்லை. அதனால் தேர்வு செய்து.. காத்திருந்து.. அதன் பிறகு படங்களில் நடிக்கிறேன்.
என் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். ஏனெனில் இந்த கதை தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லை பகுதியான சாம்ராஜ் நகரை கதைக்களமாக கொண்டது. அந்த மண்ணின் நிறம்.. அந்த மண்ணில் வாழும் மனிதர்களின் நிறம்.. என்னுடைய நிறம்.. ஆகிய அனைத்தும் ஒத்துப் போகிறது. இந்த தமிழகத்திற்கும் பொருத்தமானதாக இருக்கிறது. அந்த மக்கள் பேசும் பேச்சு வழக்கு கூட தமிழ் கலந்திருக்கும். தமிழ்- தெலுங்கு- கன்னடம் -என எல்லா மொழிகளும் ஒன்று தான். உணர்வுகள் ஒன்றுதான். இந்த அசோகா உங்களுடைய படம். நீங்களும் ஆதரவு தாருங்கள்.
நான் இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அதிகாரப்பூர்வமாக அடி எடுத்து வைத்திருக்கிறேன். வரவேற்பு தாருங்கள். இந்த குழுவினருக்கும் இந்த படத்திற்கும் உங்களுடைய வாழ்த்துக்களையும், ஆதரவுகளையும் தாருங்கள்.
நான் கர்நாடகாவில் வெளியாகும் எல்லா தமிழ் திரைப்படங்களையும் பார்ப்பேன். அங்கு தமிழ் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு. அந்த வகையில் எங்களுடைய ரைஸ் ஆஃப் அசோகா எனும் திரைப்படமும் தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன் '' என்றார்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













