சற்று முன்
சினிமா செய்திகள்
Updated on : 01 January 1970
சமீபத்திய செய்திகள்
சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!
இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு பிரத்தியேக அடையாளத்தை உருவாக்கியுள்ள சாம் CS தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் மீண்டும் இசை ரசிகர்களின் கவனத்தின் மையமாகியுள்ளார்.
“மகாவாதார் நரசிம்மா” படத்தின் மிகப்பெரிய கமர்ஷியல் மற்றும் விமர்சன வெற்றிக்குப் பிறகு, அதன் யூனிவர்ஸை விரிவுபடுத்தும் இந்த புதிய படத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவெனில், சாம் CS வழக்கமான முறையை மாற்றி, கதைக்கு முன்கூட்டியே இசையமைத்து முடித்துள்ளார். பொதுவாக காட்சிகள் தயாரான பிறகே இசை அமைப்பது வழக்கம் என்றாலும், இங்கு இசையே முதலில் உருவாக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன் மற்றும் காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த “music-first” அணுகுமுறை இந்திய சினிமாவில் அரிதாகக் காணப்படும் ஒன்று. இதனால், இந்த படத்தின் இசை வெறும் பின்னணி இசையாக இல்லாமல், முழுக் கதையின் ஓட்டத்தையும் உணர்வையும் வழிநடத்தும் மைய சக்தியாக மாறியுள்ளது.
மேலும், இந்த படத்தின் தொழில்நுட்ப தரம் உலகத் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஹாலிவுட் அனுபவமுள்ள இசைக் கலைஞர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் இதில் இணைந்துள்ளனர். மிகப்பெரிய ஆர்கெஸ்ட்ரேஷன், ஆழமான சவுண்ட் லேயரிங் மற்றும் விஷுவலுடன் நேரடியாக இணையும் இசை அமைப்பு ஆகியவை இந்த படத்தின் முக்கிய பலங்களாக இருக்கின்றன.
“மகா அவதார் பரசுராம்” படத்தில் முந்தைய பகுதிகளை விட முழுக்க புதிய விஷுவல் மாடல்கள் மற்றும் மேம்பட்ட கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப, சாம் CS-ன் இசையும் புதிய பரிமாணத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அவர் ஒரு சாதாரண இசையமைப்பாளராக அல்லாமல், கதையின் உணர்வுகளை முன்கூட்டியே வடிவமைக்கும் முக்கிய படைப்பாளராக செயல்படுகிறார்.
சமீப காலமாக பின்னணி இசைக்கு மட்டுமல்லாமல் பாடல்களிலும் சாம் CS சிறந்து விளங்குகிறார். அவரது சமீபத்திய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மெலடிகள் மூலம் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் அவரது திறன், தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பல மொழி ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது.
தற்போது, புஷ்கர் காயத்ரி இயக்கும் அடுத்த திரைப்படம், ரவிமோகனின் “கராத்தே பாபு”, கார்த்தி நடிக்கும் “சர்தார் 2” ஆகிய படங்களில் அவர் பணியாற்றி வருகிறார். மேலும் H. வினோத் மற்றும் தனுஷ் உடன் இணையும் புதிய திட்டங்களும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இதனுடன், பாலிவுட், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் அவரது பங்களிப்பு அதிகரித்து வருகிறது. விரைவில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன.
இசையை மையமாகக் கொண்டு உருவாகும் “மகா அவதார் பரசுராம்”, இந்திய சினிமாவில் ஒரு புதிய முயற்சியாகவும், இசை மற்றும் அனிமேஷன் இணையும் வித்தியாசமான அனுபவமாகவும் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
“29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் தரமான தயாரிப்புகளையும் வழங்கி முன்னேறி வரும் தயாரிப்பு நிறுவனமாக White Carpet Films திகழ்கிறது. குறுகிய காலத்திலேயே தனித்துவமான படைப்புகளால் கவனம் ஈர்த்துள்ள இந்த நிறுவனம், தற்போது தனது அடுத்த முக்கிய வெளியீடாக “29” திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொண்டு வரத் தயாராகியுள்ளது. இப்படம் வரும் மே 8, 2026 அன்று தமிழகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த வெளியீட்டை நிறுவனத்தின் சார்பில் கே. விஜய் பாண்டி முன்னின்று மேற்கொள்கிறார்.
White Carpet Films நிறுவனம் இதற்கு முன்பு திரில்லர் வகையில் உருவான “தேஜாவு” மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் வெளியான “வித்தைக்காரன்” போன்ற படங்களை தயாரித்து பாராட்டைப் பெற்றுள்ளது. தயாரிப்புடன் சேர்த்து விநியோகத்திலும் தங்களது திறனை நிரூபித்துள்ள இந்த நிறுவனம், கர்நாடகாவில் அஜித் நடித்த “துணிவு” மற்றும் தமிழகத்தில் “ஆர் யூ ஓகே பேபி” போன்ற படங்களையும் விநியோகம் செய்துள்ளது. இதன் மூலம் தயாரிப்பிலும் விநியோகத்திலும் சமநிலையை பேணும் நிறுவனமாக வளர்ந்து வருகிறது.
“29” திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் Stone Bench மற்றும் லோகேஷ் கனகராஜின் G Squad நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. “மேயாத மான்”, “ஆடை” போன்ற படங்கள் மூலம் தனித்துவமான கதை சொல்லலுக்காக அறியப்படும் இயக்குநர் ரத்னகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். 2000களின் காதலை மையமாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் விது நாயகனாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான “ரெட்ரோ” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், இந்த படத்தின் மூலம் முழுநீள நாயகனாக ரசிகர்களை கவர இருக்கிறார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். மேலும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2000களின் காதல் நினைவுகள், அந்த காலத்தின் உணர்வுகள் மற்றும் மனநிலைகளை அழகாக பிரதிபலிக்கும் வகையில் உருவாகியுள்ள “29” திரைப்படம், காதல் மற்றும் நினைவுகளை இணைக்கும் இனிய அனுபவமாக ரசிகர்களுக்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. White Carpet Films நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் இந்த படம் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!
பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் மற்றும் சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னை நகரில் சிறப்பாக நடைபெற்றது. தயாரிப்பாளர் சரத் பாபு மற்றும் இணை தயாரிப்பாளர் சூர்யா தேவி இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
அறிமுக இயக்குநர் பா. விஜய் கார்த்திக்கேயன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் பெயரிடப்படாத திரைப்படத்தில் காளி வெங்கட் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் ரேஷ்மா முரளிதரன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். பாடல்களை விவேக், கார்த்திக் நேத்தா, கவிஞர் சாரதி, உமாதேவி ஆகியோர் எழுதியுள்ளனர். படத்தொகுப்பை சக்தி திரு கவனிக்க, கலை இயக்கத்தை ஹாசினி மேற்கொள்கிறார். சண்டைப் பயிற்சியை ராம்போ விமல் அமைக்க, ஆடை வடிவமைப்பை கவிதா மேற்கொள்கிறார். நடன அமைப்பை ராதிகா கவனிக்கிறார்.
குடும்பத்தை மையமாகக் கொண்ட இப்படம், 1995ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு, அரசுப்பள்ளியில் படிக்கும் தனது மகனை தனியார் பள்ளியில் சேர்க்க போராடும் ஒரு தந்தையின் உணர்ச்சிகரமான பயணத்தை வெளிப்படுத்துகிறது.
*படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''1995 அரசுப்பள்ளியில் படிக்கும் தனது மகனை தனியார் பள்ளியில் படிக்க வைக்க போராடும் ஒரு தந்தையின் கதையை மையப்படுத்தி குடும்ப உணர்வுகளை கொண்டு உருவாக இருக்கிறது. குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் பார்க்க கூடியதாக இருக்க இப்படம் தயாராகிறது. இதற்காக சிவகங்கை மற்றும் சென்னையிலும் படப்பிடிப்பு நடத்துகிறோம் '' என்றார்..
2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!
தமிழக அரசியல் சூழல் சூடுபிடித்து வரும் நிலையில், கமல்ஹாசன் அவர்கள் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம்க்கு ஆதரவாக “தலைவன் இருக்கின்றான்” என்ற சிறப்பு பிரச்சாரப் பாடலை எழுதி, தாமே பாடி வெளியிட்டுள்ளார்.
இப்பாடலின் பின்னணியில் உள்ள உணர்வை விளக்கிய கமல்ஹாசன்,
அறிவார்ந்த தமிழ் மக்களின் மனதில் எழுந்திருக்கும் கோபமும் எழுச்சியும் என் மனதில் பாடலாய் எதிரொலித்தது.
தமிழ்நாடு தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னேறி, வலிமை, கண்ணியம், தைரியம் மற்றும் பெருமையுடன் முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட "தலைவன் இருக்கின்றான்" என்ற பாடலாக அந்த உணர்வு இப்போது வடிவம் பெற்றுள்ளது.
இப்பாடல், பின்வரும் வரிகளுடன் கூடிய ஒரு வலிமையான மற்றும் வீரியமிக்க செய்தியைத் தாங்கி நிற்கிறது:
“இதுவே வெற்றிப் படை, ஒதுங்கிக்கொள், ஒதுங்கிக்கொள்.”
தமிழ்நாட்டின் வெற்றியை அறிவிக்கும் திராவிட சிங்கத்தின் கர்ஜனையாக வெளிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், #TheLeaderIsHere என்ற செய்தியுடன் மக்களை ஒன்றிணைத்து, எதிர்காலத்தை பொதுமக்களின் கரங்களில் ஒப்படைக்கிறது.
இப்பாடலை வெளியிடுகையில், பின்வரும் குறிப்புடன் தனது செய்தியை திரு.கமல்ஹாசன் நிறைவு செய்தார்:
“இப்போது இது உங்கள் கைகளில் உள்ளது. நல்லுள்ளங்கள் இதைக் கேட்பீர்களாயின், தயவுசெய்து இதைப் பரவலாகப் பரப்புங்கள்.”
உங்களின்,
கமல்ஹாசன்
இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!
SEVEN HILLSS CINE CREATIONS நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் “பீட்சா பாய்ஸ்” திரைப்படம் இன்று எளிமையான மற்றும் மகிழ்ச்சியான பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்தப் படத்தை ஷங்கர் KN மற்றும் சஹானா ஷங்கர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தை சேகர் கேஷவ் சிர்ரின் இயக்குகிறார். அவர் இப்படத்திற்கு இசையையும் அமைக்கிறார். கதாநாயகனாக சிவம் சங்கர், கதாநாயகியாக நேகா நடித்துள்ளனர்.
பீட்சா கடையில் வேலை செய்யும் ஐந்து இளைஞர்கள், ஒரு புதிய பீட்சா ஐடியாவை உருவாக்கி அதில் வெற்றி பெற முயற்சிப்பது தான் கதையின் மையம். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அதைக் கடந்து வெற்றி பெறும் பயணம், காமெடி, செண்டிமெண்ட், ஆக்சன் கலந்து சுவாரஸ்யமாக சொல்லப்படுகிறது.
ஜிம்மி கலி, சிவா, காக்கா முட்டை ரமேஷ், அருள், சோப்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சரத் லோகித் அஷ்வா வில்லனாக நடித்துள்ளார்.
ஒளிப்பதிவை குரு பிரசாத் செய்துள்ளார். R. L. ஜெகதீசன் முதன்மை இணை இயக்குநராக பணியாற்றுகிறார். படத்தொகுப்பை கணேஷ் குமார். டி கவனிக்கிறார். கலை இயக்கத்தை கணேஷ் மேற்கொள்கிறார். உடை வடிவமைப்பை வினோத் செய்துள்ளார். புரொடக்ஷன் டிசைனராக சதீஷ் பிரம்மாவர் பணியாற்றுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. பல இடங்களில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையின் கனவுகள் மற்றும் முயற்சிகளை பேசும் இந்த “பீட்சா பாய்ஸ்” படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!
இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள “பிரேக்ஃபாஸ்ட்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் சார்பில் கிரிஜா வரதராஜ் தயாரித்துள்ள இந்த படத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
எடிட்டர் பாஸ்கர் பேசியதாவது, "படத்தின் தலைப்பு 'பிரேக்ஃபாஸ்ட்' என வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் மிகவும் ஸ்லோவாக தான் எடிட் பண்ணினோம். ஏனென்றால் நிறைய வெர்ஷன் எடிட் செய்தோம். அதில் இயக்குநருக்கு எப்பொழுது மனநிறைவு ஏற்பட்டதோ அப்பொழுதே இப்படம் வெளியில் வந்தது" என தெரிவித்தார்.
நடிகை அமிதா, "காதலிப்பது எல்லோருக்கும் எளிது. ஆனால், அந்த காதலில் நிலைத்து நிற்பது கடினம். ஏன் என்றால் நம் எல்லோரிடமும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்ப நம் தாயின் அன்பை துணையிடம் தேடும்போது தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. திருமணம் ஆன தம்பதி நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். சின்ன ஈகோ கூட எப்படி பெரிய பிரச்சினையாக மாறுகிறது என்பதை இந்தக் கதை சொல்லும்".
நடிகர் க்ருத்கிக் மோகன், "ஜிவி பிரகாஷ் இசையில் திரைப்படம் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனக்கு வாழ்நாள் நினைவாய் இந்த வாய்ப்பைக் கொடுத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணா மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கும், என்னுடன் நடித்த தோழமை நடிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் இத்திரைப்படத்தை அனைவரும் திரையரங்கு சென்று பார்க்க வேண்டும்".
டிஸ்ட்ரிபியூட்டர் குகன், "இந்த படத்தில் உழைத்துள்ள அனைவருக்கும் குறிப்பாக கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் நடிகர் நடிகைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள். இந்த படத்தின் தலைப்பு என்பது எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளுதல். இதனை இயக்குநர் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் படமாக்கி உள்ளார். 'ஜனநாயகன்' திரைப்படம் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இதனை எப்படியும் ஈடு செய்ய முடியாது. இவற்றை எல்லாம் தாண்டி அந்த படம் திரையரங்கில் வெளியிடப்பட உள்ளதற்கு அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்" என்றார்.
இயக்குநர் வசந்த பாலன், "20 வருடங்களுக்கு முன்பு சிறுவனாக பார்த்த ஒரு பையன் இப்பொழுது 20 வருடங்களுக்குப் பிறகு ஒரு சிறந்த இசையமைப்பாளராக ஆளுமையாக வளர்ந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. எனது வாழ்வின் வெற்றியில் நான் ஜிவி பிரகாஷை சந்தித்த நாள் மிகவும் வியப்பான நாள். அதனை எண்ணி மகிழ்கிறேன். இப்பொழுது அவருக்கு இருக்கின்ற இந்த புரிதல் என்னை மிகவும் வியக்க வைக்கிறது. மிகப் பிரபலமான இசையமைப்பாளராக உள்ள ஜிவி பிரகாஷ் ஒரு புதுமுக நடிகரின் திரைப்படத்தில் வேலை செய்வது மிகவும் பெருமையாக உள்ளது. இயக்குநர் காந்தி கிருஷ்ணன் என்பவர் ஒரு மிகச்சிறந்த தலைவர். அவரின் இந்தத் திரைப்படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்" என்றார்.
நடிகை ரோஸ்மின் பேசியதாவது, "என் மீது மிகவும் நம்பிக்கை வைத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்தத் திரைப்படம் எனக்கு மிகப்பெரிய திருப்புனையாக அமைந்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையில் நான் நடித்துள்ளது எனக்கு பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். எங்களது தயாரிப்பாளர்கள் எங்களை ஒரு குடும்பமாக வழி நடத்தினார்கள். பாடலாசிரியர் வைரமுத்து முன்பு நான் நின்று பேசுவதே எனது பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுகின்றேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றி! என்னுடன் உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி!!" என தெரிவித்தார்.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், "எனக்கு முதல் முதலாக வாய்ப்பளித்த இயக்குநர் வசந்த பாலன் அவர்களுக்கு மிக்க நன்றி. நீங்களும், இயக்குநர் ஷங்கர் அவர்களும் எனக்கு அளித்த இந்த வாய்ப்பின் மூலம் நான் கற்றுக் கொண்ட பாடத்தில்தான் நானும் புதுமுக நடிகர்கள் நடிக்கின்ற படங்களில் இணைந்து வேலை செய்ய ஒப்புக்கொள்கிறேன். எனது துவக்க காலங்களில் எனக்கு பட வாய்ப்பு அளித்த அனைத்து இயக்குநர்களுடனும் நான் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுடன் நான் தொடர்ந்து இயங்க வேண்டும் என நினைத்தேன். அதனாலே இந்த படத்தில் நான் இணைந்து பணியாற்ற முன்வந்தேன். இந்தப் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் வெற்றி பெற எனது சிறப்பான வாழ்த்துக்கள்".
கதாநாயகன் ராணவ், "ஒரு முதல் படத்தில் இது போன்று சிறந்த ஆளுமைகளான இயக்குநர் காந்தி கிருஷ்ணா, கவிப்பேரரசு வைரமுத்து, திரைப்பட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், டிஸ்ட்ரிபியூட்டர் குகன் ஆகியோரின் படங்களில் நான் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததை நான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன். என்னைப் போன்று எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவனுக்கு இது போன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது ஒரு மிகப்பெரிய பாக்கியமாகவும் ஆசீர்வாதமாகவும் பார்க்கின்றேன். இதை எனக்கு அளித்த காந்தி கிருஷ்ணன் சார் அவர்களுக்கு மிக்க நன்றி. ஊடக நண்பர்களுக்கு நன்றி. உங்களால் தான் இந்த படம் பொதுமக்களை சென்று சேர்த்து இருக்கிறது. படம் வெளியான பின்பும் திரையரங்குகளுக்கு சென்று இதே ஆதரவை நீங்கள் தர வேண்டும்" என்றார்.
இயக்குநர் காந்தி கிருஷ்ணன், "இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் மிக சிறந்த முறையில் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.
கவிப்பேரரசு வைரமுத்து, "நான் நடிகர் நடிகைகளை நேரில் பார்த்ததில்லை. அப்படி பார்ப்பது என்பது வெற்றி விழாக்களில் மட்டும் இருந்தது. ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. இதுபோன்று பாடல் வெளியீட்டு விழாவில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஒரு கொண்டாட்டம். நம்மை நாம் அறிமுகம் செய்து கொள்வதற்கும், நலம் நலம் விசாரிப்பதற்கும் இந்த மேடை பயன்படுவதாக தான் நினைக்கிறேன். இந்த மேடையைக் கூட்டிய நண்பர் காந்தி கிருஷ்ணாவிற்கு எனது நன்றி. நான் இப்பொழுது குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் பேச நினைக்கின்றேன் அதில், நண்பர் காந்தி கிருஷ்ணாவை எனக்கு முப்பது ஆண்டுகளாக தெரியும். நான் 46 ஆண்டுகளாக திரையுலகில் இருக்கிறேன்.அதில் முப்பது ஆண்டுகளாக காந்தி கிருஷ்ணாவை அறிவேன் என்றால், இந்த முப்பது ஆண்டுகளாக ஒருவர் இயக்குநராக இருந்து கொண்டிருக்கிறார் என்றால் அதுதான் காந்தி கிருஷ்ணாவின் பலம், ஆற்றல். மேலும், இந்த கலை உலகம் என்பது மாறிக்கொண்டே இருக்கிற ஒரு பிம்பம். இது ஓடிக்கொண்டே இருக்கிற ஒரு நுரை. இது வானவில்லை தனக்குள் வைத்து முடிந்து வைத்திருக்கின்றது. இதில் நிரந்தரமாக கால் நூற்றாண்டுக்கு மேல் ஒருவர் பயணிக்கிறார் என்றால் அவர்தான் அறிவுத் திறன் வாய்ந்தவன். பண்பாட்டுத் திறன் வாய்ந்தவன், கலை உலகைப் புரிந்து கொண்டவன் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த மூன்று பெருமைக்கும் உரியவர் எனது அருமை நண்பன் காந்தி கிருஷ்ணா என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
காந்தி கிருஷ்ணா முப்பது ஆண்டுகளுக்குப் பிறகும் பிரேக் பாஸ்ட் என்று ஒரு படத்தை உங்களுக்கு வழங்க வந்திருக்கிறார் என்றால் அவரின் கால நீட்சியை நான் போற்றுகிறேன்.
காலம் மாறுகின்ற பொழுது தானும் மாறிக் கொள்ளாத வரை காலம் கருணை இல்லாமல் விட்டு விட்டு போகிறது. ஆனால் எனது நண்பர் காந்தி கிருஷ்ணா தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவரோடு இந்த முப்பது ஆண்டுகளாக நான் இருக்கிறேன் என்பதால் என்னையும் அவர் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது மகிழ்ச்சி.
காந்தி கிருஷ்ணாவை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கும் நிலையில் இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் கருப்பொருள் பழையலாகாத கருப்பொருள், இது நேற்று வெளிவந்திருக்க வேண்டிய படம், இந்தப் படத்தில் அவர் கையாண்டிருக்கும் செய்தி ஆண் பெண் உறவு குறித்து. ஒரு ஆண் பெண்ணை புரிந்து கொள்வதும், ஒரு பெண் ஆணை புரிந்து கொள்வதும், ஆண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் பெண் என்ற வர்க்கம் இருக்கும் வரைக்கும் இருக்கவே செய்யும். நீங்கள் புரிந்து கொண்ட ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணோடு ஒப்பிட்டு புரிந்து கொள்வதாக. ஒரு ஆணை புரிந்து கொண்ட ஒரு பெண் அதே அளவுகோலை வைத்து, இன்னொரு ஆணை புரிந்து கொள்ள முடியாது. கணவனை வைத்து தந்தையையோ, தந்தையை வைத்து தனையனையோ, தமையனையோ ஒரு பெண் புரிந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு பெண்ணும் ஒரு உலகம் . ஒவ்வொரு ஆணும் ஒரு உலகம். அவர்களை புரிந்து கொள்ள முடியாது. பெண் ஆணை புரிந்து கொள்ளும் வரைக்கும் ஆண் பெண்ணை புரிந்து கொள்ளும் வரைக்கும், கலை இருக்கும்.
இந்தக் கலைகளும் இலக்கியங்களும் இருக்கும் வரைக்கும் ஆண் பெண் புரிதல் என்று ஒரு மிகப்பெரிய சங்கிலி அறிந்து விடாமல் ஓடிக்கொண்டே இருக்கும் என நான் நம்புகிறேன். அதைத்தான் எனது நண்பர் இந்த படத்தில் செய்திருக்கிறார். நடித்தல் என்பது நடுத்தல் அல்ல இருத்தல், அப்படி இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். ஆனால், இந்தப் படத்தின் தலைப்பு தனக்கு பிடிக்கவில்லை. தமிழில் பெயர் வைத்திருக்கலாம். இதனை குறையாக சொல்லவில்லை எனது ஆதங்கமாக கூறுகிறேன். மொழி என்பது ஒரு குறியீடு. அதனால், தமிழில் எடுக்கும் படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என நான் அன்போடு வேண்டுகோள் வைக்கிறேன்.
திருமணம் செய்து கொண்டது தப்பா சரியா என்பதே இந்த படத்தின் கருப்பொருள். திருமணம் என்பது முற்றுகை இடப்பட்ட ஒரு கோட்டை.உள்ளே இருப்பவர்கள் வெளியே வர துடிக்கிறார்கள். வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல துடிக்கிறார்கள். இதுதான் இந்தத் திரைப்படத்திலும் நிகழ்ந்துள்ளது. காந்தி கிருஷ்ணா இதை அருமையாக படமாக்கி உள்ளார். கிருஷ்ணாவிடம் இன்னும் நிறைய சரக்கு இருக்கிறது. சமுதாய அக்கறை இருக்கிறது. பாத்திரங்களை வடித்தெடுக்கக்கூடிய நேர்த்தி இருக்கிறது. பாத்திரங்கள் எது மட்டும் பேசலாம் என்ற அளவீடு தெரிகிறது. எனவே காந்தி கிருஷ்ணா தொடர்ந்து படம் எடுக்க வேண்டும். தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். இந்த படத்தின் நடித்தவர்கள் புகழ் பெற வேண்டும்" என்றார்.
நடிகர் ரியோ, "எல்லா திரைப்படங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி. 'பிரேக்ஃபாஸ்ட்' திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக ராணவ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல படங்களையும், பல வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன். சினிமாவில் எல்லாருக்கும் ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவுக்கு என்ன செய்வது என்று தெரியாது. எனவே அதை நோக்கிய தேடலில் நமது பயணம் இருக்கும் அதில் சில வழிகளும் வேதனைகளும் இருக்கும்.
இந்தத் திரைப்பட குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். குறிப்பாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும், நன்றியும். இயக்குநர் காந்தி கிருஷ்ணா அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்" எனக் கூறினார்.
நடிகர் பரத், "இந்த மேடையில் உள்ள இரண்டு இயக்குநர்களுமே எனக்கு மிகவும் முக்கியமான நபர்கள். வசந்தபாலன் சார் மற்றும் காந்தி கிருஷ்ணா சார் ஆகியோருக்கு எனது சிறப்பு நன்றிகள். என்னோட வாழ்க்கையில் 'செல்லமே' திரைப்படம் மிகப்பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம். அந்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த காந்தி சார் அவர்களுக்கும், தொடர்ந்து எனக்கு வாய்ப்பளித்த வசந்த பாலன் சாருக்கும் நன்றி.
மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்தப் படத்தை மிகவும் நம்பிக்கையோடு தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி".
இயக்குநர் காந்தி கிருஷ்ணா, "இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் மிக சிறந்த முறையில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவை நீங்கள் தர வேண்டும்" என்றார்.
தயாரிப்பாளர் வரதராஜன், "இன்றைய காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை இயக்குநர் படமாக்கி உள்ளார். அதற்காகவே நாங்கள் இந்தப் படத்தை தயாரித்தோம். இப்போதுள்ள இந்த இளைய தலைமுறைகள் முன்னேற எங்களால் முடிந்த உதவியாகவே இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளோம். மேலும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றி. வரும் 24 ஆம் தேதி திரையரங்குகளில் இத்திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்" என்றார்.
விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!
இந்திய திரையுலகில் உலகளாவிய நோக்கத்துடன் உருவாகி வரும் புதிய பிரம்மாண்ட முயற்சியாக, நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் #VDxSHOURYUV படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சௌர்யுவ் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், இந்திய சினிமாவை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்லும் துணிச்சலான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு, ஒரு வித்தியாசமான மற்றும் சக்திவாய்ந்த போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. அதில், விஜய் தேவரகொண்டா உலோக பட்டைகளால் நான்கு நாய்களை கட்டுப்படுத்திக் கொண்டு முன்னோக்கி நடந்து செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது. அவருக்குப் பின்னால் பலர் இணைந்து நடந்து செல்லும் அந்த காட்சி, “ஒரே மனிதன்” அல்ல, “ஒரு சக்திவாய்ந்த குழு” என்ற கருத்தை வலுப்படுத்துகிறது.
இந்தக் குழுவே “ட்ரீம் கலெக்டிவ்” என அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்த இந்த அணியின் ஒவ்வொரு உறுப்பினரும் முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது. இந்த அணியின் ஒற்றுமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தும் வகையில் “That’s a Rover” என்ற தலைப்பில் ஒரு தீம் பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தீம் பாடல், வாழ்க்கையில் வரும் வலி, தோல்வி, போராட்டங்களை எதிர்கொண்டு மீண்டும் எழுவது பற்றிய உறுதியை பேசுகிறது. புகழ் அல்லது அங்கீகாரம் இல்லாமல்கூட, மன உறுதியே உண்மையான வலிமை என்பதை வலியுறுத்துகிறது. சிறிய முயற்சிகளும் கூட ஒரு மனிதனின் “உண்மையான கர்ஜனை” ஆக மாறும் என்ற கருத்தை இது உணர்த்துகிறது.
#VDxSHOURYUV படம், ஒரு இணையான புராண உலகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. பழமையான தோற்றம் கொண்டாலும், முழுக்க முழுக்க கற்பனையாக வடிவமைக்கப்பட்ட இந்த உலகம், பரிச்சயமான உணர்வை தருவதோடு, தனித்துவமான காட்சியமைப்பையும் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக அதன் சர்வதேச தொழில்நுட்பக் குழு அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளராக Alejandro Martinez, தயாரிப்பு வடிவமைப்பாளராக சுரேஷ் செல்வராஜன், VFX மேற்பார்வையாளராக Eric Durst, இசையமைப்பாளராக ஹேஷாம் அப்துல் வஹாப், படத்தொகுப்பாளராக பிரவீன் ஆண்டனி, ஆடை வடிவமைப்பாளராக சச்சின் லோவாலேக்கர் ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்களின் பங்களிப்பு படத்தை உலக தரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா, தனது ஒவ்வொரு படத்திலும் புதிய சவால்களை ஏற்று, தனக்கான எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டு வருபவர். இந்தப் படத்தின் மூலம், அவர் உணர்ச்சி மற்றும் காட்சி ரீதியாக மிகப்பெரிய பரிமாணத்திற்கு நகர்கிறார் எனக் கூறப்படுகிறது.
இயக்குநர் சௌர்யுவ், தனது முந்தைய படைப்பான “Hi Nanna” மூலம் பெற்ற வரவேற்புக்கு பிறகு, இந்தப் படத்தின் மூலம் தனது கலை பார்வையை மேலும் விரிவுபடுத்துகிறார். Vyra நிறுவனத்தின் ஆதரவுடன் உருவாகும் இந்த படம், எல்லைகளை தாண்டிய கதைகளை சொல்லும் முயற்சியாக உருவாகி வருகிறது.
மொத்தத்தில், பல்வேறு நாடுகள் மற்றும் திரைத்துறைகளிலிருந்து வந்த திறமையாளர்கள் இணைந்து உருவாக்கும் இந்த #VDxSHOURYUV, உலகளாவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு மாபெரும் சினிமா முயற்சியாக உயர்ந்து நிற்கிறது.
ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!
இந்த ஆண்டின் மிகப்பெரிய திரைப்பட அறிவிப்புகளில் ஒன்றாக, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் “லவ் & வார்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் காதல் காவியம், 2027 ஜனவரி 21, வியாழக்கிழமை, குடியரசு தின வார இறுதியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த பிரம்மாண்டமான காதல் படைப்பில் ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த மூவரின் கூட்டணி மட்டுமே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
பன்சாலியின் தனித்துவமான காட்சியமைப்பு, செறிந்த உணர்வுகள் மற்றும் ஆழமான கதை சொல்லும் பாணி காரணமாக, “லவ் & வார்” இந்திய சினிமாவின் மிகப்பெரிய காதல் காவியங்களில் ஒன்றாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரம்மாண்டமான தயாரிப்பு மதிப்பு மற்றும் உணர்ச்சி மிக்க திரைக்கதை இந்த படத்தை ஒரு மிகப்பெரிய திரை அனுபவமாக மாற்றும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
மேலும், இந்த படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பான்-இந்தியா வெளியீடாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு தின விடுமுறை வார இறுதியை குறிவைத்து வெளியாகும் இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தொடக்கத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படம் “சியான் 63” அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார்.
இந்த அறிவிப்பு, ஒரு ஸ்டைலிஷ் புரோமோ வீடியோவுடன் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இயக்குநர் ஆனந்த் சங்கர் மற்றும் விக்ரம் கூட்டணி, 2016-ல் வெளியான “இருமுகன்” படத்தின் மூலம் பெரிய வெற்றியை பெற்றது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்தப் படத்தை டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.
இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது இசை, படத்தின் மாஸ் மற்றும் உணர்ச்சி அம்சங்களை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர், கலை இயக்குநராக சூர்யா ராஜீவன், வசனகர்த்தாவாக ஷான் கருப்புசாமி, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் பெயர் பெற்ற சியான் விக்ரம், இந்தப் படத்திலும் புதிய பரிமாணத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வலுவான கதை, திறமையான தொழில்நுட்பக் குழு மற்றும் பெரிய தயாரிப்புடன் உருவாகும் “சியான் 63”, அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று பார்க்கப்படுகிறது.
“கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த பாடலுக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மோகன் ராஜன் எழுதியுள்ள இந்த பாடலை வங்கல் புள்ள, விக்கி, சுப்லாஷினி, லீலா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். “கொரியன் ஃபேமிலி சாங்” என்ற சுவாரஸ்யமான தலைப்பில் வெளியாகியுள்ள இந்த பாடல், “ரா ரா ரங்கையா” என்ற வரியுடன் துவங்கி, முழுக்க முழுக்க தரைலோக்கல் குத்து ஸ்டைலில் உற்சாகத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.
பாடலின் இசை மட்டுமல்லாமல், காட்சியமைப்பும் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஆடும் குத்தாட்டம், பாடலுக்கு மேலும் உயிரூட்டுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான ஸ்கிரீன் பிரசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதால், பாடல் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
“கான் சிட்டி” திரைப்படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகியவை கலந்து ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாகவும், அன்னா பென் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், ஒவ்வொரு அப்டேட்டும் சுவாரஸ்யத்தை கூட்டி வரும் “கான் சிட்டி”, முதல் சிங்கிள் பாடல் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ள நிலையில், விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













