சற்று முன்
சினிமா செய்திகள்
விக்ரம் பிரபுவின் 'வீர சிவாஜி ' செப்டம்பரில் வெளியீடு
Updated on : 22 August 2016

விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் "வீர சிவாஜி" திரைப்படம் செப்டம்பர் 23-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு,ஷாம்லி, ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடும் வீர சிவாஜி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே விக்ரம் பிரபு நடிப்பில் GNR.குமாரவேலன் இயக்கியுள்ள "வாகா" திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள்
16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்'
'டி டி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' குறித்த தகவல்களை பகிரும் வகையில் கலகலப்பான முறையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் கதாநாயகன் சந்தானம், திரைப்படத்தை வெளியிடும் நடிகர் ஆர்யா, இயக்குநர் பிரேம் ஆனந்த் கலந்து கொண்டனர்.
இயக்குநர் பிரேம் ஆனந்த் பேசுகையில், "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்ற திருக்குறளுக்கு உதாரணமாக திகழ்பவர்கள் சந்தானம் மற்றும் ஆர்யா. அந்த நட்புதான் எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்து இருக்கிறது. இவ்வளவு பிரமாண்டமான இப்படத்தை தொடங்கும் போது நான் சந்தானத்திடம், "முதலாளி கண்டிப்பா நான் பயங்கர ஹார்டு வொர்க் பண்ணி இந்த படத்தை சக்சஸ் பண்ணி உங்களுக்கும் ஆர்யா சாருக்கும் சிலை வைப்பேன்," என்று கூறினேன்.
அதன் பின்னர் படத்தின் ஷூட்டிங் பெரிய பெரிய லொகேஷன், குரூஸ் என்று நல்லபடியா போனது. பின்னர் போஸ்ட் ப்ரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்து படம் முழுமையாக எப்போது தயாராகும் என்ற கேள்வி வந்தபோது சந்தானம் என்னை அழைத்து "நீ எங்களுக்கு சிலை வைக்கலன்னாலும் பரவாயில்லை, எங்க பிரண்ட்ஷிப்புக்கு உலை வச்சிராத, சீக்கிரம் படத்தை முடித்து கொடுத்துவிடு," என்று சொன்னார். ஆர்யா சார், படம் இப்போது முழுவதும் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.
இப்படத்தில் இரண்டு மூத்த இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனன் சார் மற்றும் செல்வராகவன் சார் சிறப்பாக நடித்து ஒத்துழைத்தார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. கஸ்தூரி மேடம், நிழல்கள் ரவி சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி.
இது ஒரு சராசரி ஹாரர் படம் கிடையாது. இதற்குள் ஒரு பேண்டஸி உலகமே உள்ளது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் சவாலாக இருந்தன. இதற்காக இராப்பகலாக ஒத்துழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி. படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. மே 16 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. என்னுடைய கடந்த படமான 'டிடி ரிட்டர்ன்ஸ்' பெரிய வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் கொடுத்த ஆதரவு தான். இப்படத்திற்கும் அதே ஆதரவை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது அனைவருக்குமான சம்மர் ட்ரீட் ஆக இருக்கும். இப்படத்தை டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் என்று சொல்வதை வட சந்தானத்தின் நெக்ஸ்ட் லெவல் என்று சொல்லலாம். ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்று இப்படத்தை பார்த்து மகிழ வேண்டும். நன்றி, வணக்கம்," என்றார்.
நடிகர் ஆர்யா பேசுகையில், "உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 'டிடி ரிட்டர்ன்ஸ்' படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் ஒரு நல்ல ஸ்டோரி இருக்கும், அதற்கான ரீஸனிங் இருக்கும், ஒரு பிளே இருக்கும், ஒரு கேம் இருக்கும். பிரேம் அதை ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா எடுத்து காமெடியை ரொம்ப அழகா எக்ஸிக்யூட் பண்ணி இருப்பாரு. அதே மாதிரி பிரேம் என்னிடம் வந்து 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' கான்செப்ட் சொன்ன உடனே ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. ஒரு படத்துக்குள்ளயே கேரக்டர்ஸ் டிரான்ஸ்போர்ட் ஆயிடுறாங்க.
பிரேம் இந்த கதையை சொல்லி முடித்தவுடன் "நீ என்னிடம் சொன்ன மாதிரி அப்படியே நல்ல பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்தால் சூப்பராக இருக்கும்" என்று சொன்னேன். படத்தை எப்படி உருவாக்கப் போகிறார் என்று ஆர்வமாக இருந்தேன். படம் முடிந்தவுடன் பார்த்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன். அனைவரும் இதை 100% எக்ஸ்பீரியன்ஸ் பண்ண முடியும் என்ன நம்புகிறேன்.
இந்த படத்தை சந்தானத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்திருக்க முடியாது, அவருக்கு நன்றி. சந்தானமும் பிரேமும் சேர்ந்து ரொம்ப சூப்பரா இந்த படத்தை பண்ணி இருக்காங்க. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல் இந்த படத்துக்காக முழுமையாக வைத்துள்ளார்கள். ஒட்டுமொத்த குழுவினருக்கும் பாராட்டுகள்.
'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' சிறந்த பொழுதுபோக்கை ரசிகர்கள் அனைவருக்கும் வழங்கும். இப்படத்தை தொடர்ந்து இதன் அடுத்த பாகத்திற்கும் நாங்கள் இணைவோம் என்று நம்புகிறேன். இப்படத்தை வழங்குவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி," என்று கூறினார்.
திரைப்படத்தின் நாயகன் சந்தானம் பேசுகையில், "இந்த படம் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். ஆர்யாவும் நானும் எப்போதும் தொடர்பில் இருப்போம். அவ்வாறு ஒரு நாள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, "நீ காமெடியெனா இருக்கும்போது ஜாலியா இருப்ப, இப்பல்லாம் அந்த ஃபன் இல்லையே, ஏன்?" என்று கேட்டார். அதற்கு நான் நாயகனாக இருக்கும் சவால்கள் குறித்தும், இன்னும் சில சிக்கல்கள் பற்றியும் அவரிடம் சொன்னேன். அப்போது அவர் "டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தில் நீ முழுவதுமாக இறங்கி வேலை செய். உன் மொத்த கிரியேட்டிவிட்டியையும் காட்டு. உன் பிரச்சனை எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்," என்றார்.
அப்படித்தான் இந்த படத்தை ஆரம்பித்து முடித்துள்ளோம். ஒரு நல்ல கதை, திரைக்கதை, காமெடி, ஆக்டிங் என எல்லாமே இதில் நிச்சயமாக உங்களை திருப்திப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். மே 16 தியேட்டரில் குடும்பத்துடன் போய் பாருங்கள்.
இயக்குநர் பிரேம் ஆனந்தை தமிழ் திரை உலகின் கிறிஸ்டோபர் நோலன் என்று நான் சொல்லுவேன். ஏனென்றால் ஆனந்த் பண்ற கதை எல்லாம் ஒரு லைனில் இருக்கவே இருக்காது. பல லேயர்களை கொண்டிருக்கும். கஷ்டமான விஷயங்களை அவ்வளவு எளிதாக, சுவாரஸ்யமாக ஒன்றாக கோர்த்திருப்பார். அது எப்படி என்று நமக்கு புரியவே புரியாது. அதுதான் பிரேம் ஆனந்த்.
இந்த படத்தையும் அவர் அப்படித்தான் அற்புதமாக உருவாக்கியுள்ளார். அவுட்புட் ரொம்ப நன்றாக இருந்தது, அருமையான காமெடி ட்ரீட்டாக இப்படம் ரசிகர்களுக்கு அமையும். நீங்கள் அனைவரும் முழுவதுமாக என்ஜாய் செய்வீர்கள். குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருடனும் இணைந்து 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தை திரையரங்குகளில் பாருங்கள். நன்றி, வணக்கம்," என்று கூறினார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பான 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் 'மெட்ராஸ் மேட்னி' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள ' மெட்ராஸ் மேட்னி' எனும் திரைப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்புகளை ஜாக்கி ஏற்றிருக்கிறார். இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் எக்ஸிகியூடிவ் புரொடக்ஷன் பணிகளை மேற்கொண்டது. இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
இப்படத்தின் டைட்டிலுக்கான காணொளி நடிகர் சத்யராஜின் குரலிலும், தோற்றத்திலும் வெளியிடப்பட்டு.. ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகர்களின் கதாபாத்திரமும், அவர்களது திரைத்தோற்றமும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருப்பதால்.. பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' செப்டம்பர் 18 முதல் உலகம் முழுவதும்!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' ( Love Insurance Kompany) திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக் குழுவினர் பிரத்யேக காணொளி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ' லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்து, வழங்குகிறார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகி 33 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர், ஸ்னீக் பிக்..ஆகியவை அடுத்தடுத்து வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் - அனிருத் கூட்டணியில் வெளியான இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடல்... மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பினை பெற்றிருப்பதாலும்.. இப்படத்தின் பாடல்களுக்கும்... படத்திற்கும் ...ரசிகர்களிடத்திலும், திரையுலகினரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்ற நடிகை ரெஜினா கசாண்ட்ரா!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. ‘அழகிய அசுரா’ படத்தில் கதாநாயகியான ரெஜினா கசாண்ட்ராவுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு தந்தன.
இதனை தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கிலும் நடிகையாக அறிமுகமானார். தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அங்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
ரெஜினா கசாண்ட்ரா தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘நிர்ணயம்’, ‘ராஜதந்திரம்’, ‘மாநகரம்’, ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’, ‘விடாமுயற்சி’, ‘பார்டர்’, ‘ஃப்ளாஸ் பாக்’ ஆகிய படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘விடா முயற்சி’ படத்தில் யாரும் எதிர்பாராத தோற்றத்தில் நடித்து அசர வைத்தார். இவரது வில்லத்தனமான நடிப்புக்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்தது. தற்போது இந்தி படங்களான சன்னி தியோலுடன் ‘ஜாத்’, அக்ஷய் குமார், அனன்யா பாண்டேவுன் ‘ கேசரி 2’ ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து தமிழில் சுந்தர்.சி. இயக்கத்தில் மூக்குத்தி அம்மன்2-ம் பாகத்திலும் என பிசியாக நடித்து வருகிறார். இதனால் ரெஜினா கசாண்ட்ரா பான் இந்தியா நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளார்.
‘மூன்வாக்’ திரைப்படம் — உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியது!
பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் பெருமையாக அறிவிக்கிறது — பலரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள ‘மூன்வாக்’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளது. இந்த திரைப்படத்தில் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா மற்றும் ஆஸ்கார் நாயகன் AR ரஹ்மான் 25 வருடங்கள் கழித்து ஒன்றிணைகிறார்கள்.
இப்படத்தை இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மீடியா பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான மனோஜ் NS இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் அறிவிப்பிலிருந்தே ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர் மற்றும் ராம்குமார் நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
மூன்வாக் - இசை, நடனம், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு அனைத்து வயதினரையும் மகிழ்விக்கும் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. பான் இந்திய ரீதியில் வெளியாகும் இந்தப் படம் தற்போது படப்பிடிப்பும், எடிட்டிங்கும் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் வேகமாக முன்னெடுக்கப்படுகிறது.
விஜய் நடித்த G.O.A.T மற்றும் அஜித் குமார் நடித்த Good Bad Ugly போன்ற திரைப்படங்களை வெற்றிகரமாக சமீபத்தில் வெளியிட்டது ரோமியோ பிக்சர்ஸ்.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கூறுகையில் - "25 ஆண்டுகளுக்குப் பிறகு AR ரஹ்மானும், பிரபுதேவாவும் ஒன்றாக இணையும் மூன்வாக் போன்ற சிறப்பான திரைப்படத்தை வெளியிடுவதில் பெருமையாக உள்ளது. இயக்குநர் மனோஜ் என்.எஸ் உடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ்-இன் முதல் திரைப்படமே அதிக பொருட்செலவில், குடும்பம் முழுவதையும் மகிழ்விக்கும், இசை, நடனம் மற்றும் நகைச்சுவையால் நிரம்பிய படமாக உருவாகியுள்ளது" என்றார்.
படத்திற்கு ஒளிப்பதிவு: அனூப் V ஷைலஜா, எடிட்டிங்: ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, நடனம்: சேகர் VJ, பியூஷ் ஷாஷியா, புரொடக்ஷன் டிசைன்: ஷனூ முரளிதரன், ஆடையமைப்பு: திவ்யா ஜார்ஜ் மற்றும் சுவேதா ராஜு சிறப்பாக பங்களித்துள்ளார்கள். திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் இலக் இயக்குநர் மனோஜ் NS உடன் சேர்ந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள்.
மூன்வாக் உலகம் முழுவதும் இசை, நடனம் மற்றும் நகைச்சுவையுடன் திரையரங்குகளில் விழாவாக ரசிகர்களை மெய்மறக்கச் செய்ய தயாராக உள்ளது.
Photo (இடது முதல் வலது): கிருஷ்ண குமார் Y (லைன் புரொட்யூசர், பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்), ரமிஸ் ராஜா (எக்ஸிகியூட்டிவ் டைரக்டர், பிஹைண்ட்வுட்ஸ்), மனோஜ் NS (நிறுவனர் மற்றும் சிஇஒ, பிஹைண்ட்வுட்ஸ்), நடிகர் பிரபுதேவா மற்றும் ராகுல் (ரோமியோ பிக்சர்ஸ்).
2025 தீபாவளிக்காக பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம்!
'லவ் டுடே' படத்தில் நடிகராக அறிமுகமான பிறகு நடிகராகவும் இயக்குநராகவும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதற்கடுத்து அவர் நடித்த 'டிராகன்' படமும் தமிழ், தெலுங்கில் வெற்றிடயடைந்தது. அடுத்தடுத்து வெற்றிகளுக்குப் பிறகு அவர் இப்போது பிரபல மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் புதிய பான் இந்திய படம் ஒன்றில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். 'பிரேமலு' படப்புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, சீனியர் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் டைட்டில், முதல் பார்வை மற்றும் படத்தின் வெளியீட்டு தேதியையும் இன்று படக்குழு அறிவித்துள்ளது. இளைஞர்களைக் கவரும்படி 'Dude' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. முகத்தில் காயங்களோடு கையில் தாலி வைத்துக் கொண்டு பிரதீப் முதல் பார்வை போஸ்டரில் இருக்கிறார். மாடர்ன் ட்விஸ்ட்டோடு கதை இருக்கும் என்பதை போஸ்டர் தெளிவாகக் காட்டுகிறது. இந்த வருடம் 2025 தீபாவளி பண்டிகைக்கு படம் வெளியாகிறது.
இந்தப் படத்தில் பல திறமையாளர்களை மைத்ரி மூவி மேக்கர்ஸ் கொண்டு வந்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்திருக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக லதா நாயுடுவும் படத்தொகுப்பாளராக பரத் விக்ரமனும் பணியாற்றியுள்ளனர்.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நிர்வாகத்திற்கு வந்துவிட்டால் எல்லாம் முடிந்தது - ஆர்.கே. செல்வமணி
ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, “இயக்குநர் ஏழுமலைக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறோம். புதிய முயற்சியாக இந்தப் படத்தை எடுத்துள்ளார். பாடல் காட்சிகளைப் பார்க்கும்போது பழைய பாரதிராஜா படங்களைப் பார்ப்பது போல இருந்தது. இந்தப் படம் அறிவால் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ஹீரோயினுக்கும் நம்ம வீட்டுப் பெண் போல அழகு உள்ளது. ஹீரோவுக்கும் நிச்சயம் பெரிய எதிர்காலம் உள்ளது. சிறந்த டெக்னீஷியன்ஸ் தான் சிறந்த படிப்புகளை உருவாக்குகிறார்கள். உருவாக்குவது கடினம். அதை உடைப்பது எளிது. கெட்ட எண்ணம் உள்ளவர்கள் நிர்வாகத்திற்கு வந்துவிட்டால் எல்லாம் முடிந்தது. அடுத்தவர்களைத் தூண்டி விடுவது எளிது. முரண்பாடுகளை சரிசெய்தால் மட்டுமே வேலைகள் சரியாக நடக்கும். சங்கத்தில் பிரச்சினைகள் வரும்போது அதை சரிசெய்யாமல், அடுத்தடுத்து சங்கங்கள் தொடங்கிக் கொண்டே இருந்தால் கடைசி வரை பிரச்சினைகள் முடியாது. இது ஒரு எச்சரிக்கை மணி. அடுத்து எப்படி வேண்டுமானாலும் திருப்பி விடப்படலாம். இந்தப் படத்தின் டெக்னீஷியன்ஸ் தான் இந்தப் படத்தை சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!”.
தயாரிப்பாளர் தனஞ்செயன், ”’மையல்’ என்ற தலைப்புக்கே என்ன அர்த்தம் என்பதை இங்கே வந்திருக்கும் அனைவரும் அறியும்படி இயக்குநர் செய்திருப்பது சிறப்பு. பாடல், போஸ்டர் எல்லாம் பார்க்கும்போது ‘பருத்திவீரன்’ கார்த்தி, ப்ரியாமணி போல உள்ளது. ஆக்ஷன் மோடுடன் நல்ல திரைப்படமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதுபோன்ற நிறைய நல்ல படங்கள் வரவேண்டும். ’டூரிஸ்ட் ஃபேமிலி’ போல இந்தப் படமும் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்”.
தயாரிப்பாளர் அனுபமா விக்ரம் சிங், “’மையல்’ படக்குழு சார்பாக அனைவரையும் வரவேற்கிறேன். இந்தக் கதையில் ஆன்மா இருக்கிறது. இந்தப் படத்தை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்”.
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், “தேனப்பன் இதில் பணிபுரிந்திருப்பதும் மகிழ்ச்சி. டெக்னீஷியன்ஸ்தான் படத்தின் பலமே. சமந்தாவும் இல்லாமல் நயன்தாராவும் இல்லாமல் ஹீரோயினுக்கு இது என்ன புது பெயர் என்று யோசித்தேன். அமருக்கு பெரிய எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்! கிராமத்து படம் எனும்போது லைவ்வாக இசை அமைய வேண்டும். அதை சரியாகக் கொண்டு வந்திருக்கிறார். பாடல்களும் படமும் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்”.
பாடலாசிரியர் ஏகாதிசி, “படம் நன்றாக வந்துள்ளது. அமர் சிறந்த இசையமைப்பாளர். மூன்றாவது பாடல் என்னுடையது. அவருடன் இணைந்து வேலை செய்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், “படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் இயக்குநர் அழகாக செய்துக்கியுள்ளார். ‘மையல்’ இல்லை என்றால் மனிதமே இல்லை. ஆண் பெண் மீதும், பெண் ஆண் மீதும் மையல் கொள்ளவில்லை என்றால் இனப்பெருக்கமே இல்லை. இந்த ‘மையல்’ மிகப்பெரிய வெற்றியை மனிதக்குலத்திற்கு தர இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. தயாரிப்பாளர் ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை என்றால் ரஜினியோ கமலோ உருவாகி இருக்க மாட்டார்கள். தயாரிப்பாளர் செய்வதை சரியாகச் செய்தாலே திரைத்துறை நன்றாக இருக்கும். கே.எஸ். ரவிக்குமார் எனக்குப் பிடித்த இயக்குநர். எல்லோரையும் அரவணைத்து அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். தான் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளரின் மகனது படத்தின் விழாவிற்கு கே.எஸ். ரவிக்குமார் அமர்ந்திருக்கிறார். அவருக்கு பெருமிதமான தருணம். படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!”.
மாஸ்டர் கனல் கண்ணன், “படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். அருமையாக வந்துள்ளது. அமர் இசையமைத்திருக்கும் படத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஹீரோவும், ஹீரோயினும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படம் மிகப்பெரிய வெற்றிப் பெற எனது வாழ்த்துக்கள்”.
தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன், “வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. இயக்குநர் மிகவும் நம்பிக்கையாக உள்ளார். படம் நிச்சயம் வெற்றி பெறும். செல்வமணி சொன்னதுபோல ஃபெப்சியை உடைக்க முடியாது”.
பாடலாசிரியர் விவேகா, “ஆழமான சிந்தைனையோடு இந்தப் படம் உருவாகி இருக்கிறது. கே.எஸ். ரவிக்குமார் சாரிடம் நிறைய படங்கள் பணிபுரிந்திருக்கிறேன். அவர் இந்தப் படத்திற்கு வந்து வாழ்த்தியது பெரிய விஷயம். படத்தின் கதாநாயகன் அதிகம் புத்தகங்கள் பற்றி என்னிடம் பேசுவார். நடிகர் புத்தகம் பற்றி பேசுவது ஆரோக்கியமான விஷயம். அமர் அழகான பாடல்களைக் கொடுத்துள்ளார். படத்திலும் அனைவரும் சிறப்பாகப் பணிபுரிந்துள்ளார். ‘மையல்’ அனைவருடைய இதயத்தையும் கொள்ளை கொள்ள வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”.
இயக்குநர் பேரரசு, “ரவிக்குமார் சார் தலைமையில்தான் விழா நடந்து கொண்டிருக்கிறது. அவரது காலம் சினிமாவில் பொற்காலம். ஏனெனில் தயாரிப்பாளரை விட அதிக அக்கறை அவருக்கு இருக்கும். ‘திருப்பதி’ படத்திற்கும் வெளியீட்டுத் தேதி ஏப்ரல் மாதம் என்று ஃபிக்ஸ் செய்து தான் வேலைப் பார்த்தோம். ’மையல்’ எல்லோருக்கும் இருந்ததால்தான் எம்.ஜி.ஆர். அவர்கள், ஜெயலலிதா அவர்கள், கலைஞர் என எல்லோரும் சினிமாவிலும் அரசியலிலும் ஜெயித்தார்கள். மையலை பல வகையாகச் சொல்லலாம். ஃபெப்சி தொழிலாளர்கள் நலன் கருதியிருக்கும் அமைப்பு. அதற்கு எதிராக ஒன்று ஆரம்பிக்கும்போது அது உழைப்பாளர்களுக்கு என்று ஆரம்பிப்பதா? இல்லை, ஃபெப்சியை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிப்பது. அது தவறான நோக்கம். ‘மையல்’ திரைப்படத்திற்கு வருவோம். ‘மைனா’ படத்தில் கதாநாயகன் விதார்த்தாக இருக்கலாம். ஆனால், சேதுதான் அங்கு அடுத்த கதாநாயகன். இந்தப் படத்தில் அவருக்கு நல்ல ஜோடி அமைந்துவிட்டது. அமலாபால் போலவே இந்தப் படத்திலும் நல்ல ஹீரோயின் அமைந்து விட்டார். கதையும் நன்றாக வந்துள்ளது. படத்திற்கு வாழ்த்துக்கள்”.
இயக்குநர் ஏழுமலை, “இந்த ‘மையல்’ உருவாக காரணம் சேதுதான். எல்லாப் புகழும் என் கதாநாயகன் சேதுவுக்குதான். என் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இயக்குநர் சங்கத்தில் இருந்து வாழ்த்த வந்திருக்கும் அனைத்து முன்னோடி இயக்குநர்களுக்கும் வாழ்த்துக்கள். சவுந்தர்யன் சாருடைய மகன் அமர் இந்தப் படத்தில் அழகாக இசையமைத்திருக்கிறார். படத்திற்காக அயராது உழைத்திருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி. உங்கள் அனைவரது ஆதரவும் தேவை”.
முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட விஜய் சேதுபதியின் 'ஏஸ்' (ACE ) பட முன்னோட்டம்!
'மக்கள் செல்வன் ' விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் ' ஏஸ்' ( ACE) எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தை தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி ஆர் - சிவகார்த்திகேயன் - அருண் விஜய் - விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ' ஏஸ்' ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு ,ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ் ,பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ்குமார், டெனிஸ் குமார் , ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர் ,ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன் , ஜாக்கிநாரீஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கிரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களுக்கும், சாம் சி. எஸ். படத்திற்கான பின்னணி இசையையும் அமைத்திருக்கிறார்கள். பென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஏ.கே. முத்து கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கமர்சியல் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7Cs என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
மலேசிய நாட்டில் படமாக்கப்பட்டு, எதிர்வரும் 23ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் ' ஏஸ் ' ( ACE) திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய காதல் காட்சிகள்- அதிரடி ஆக்சன் காட்சிகள்- காமெடி காட்சிகள்- கண்ணுக்கு அழகான காட்சிகள் - என அனைத்து அம்சங்களும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்த!
2 டி என்டர்டெய்ன்மென்ட் - ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'ரெட்ரோ' திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி முதல் வார இறுதியில் உலகம் முழுவதிலும் நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, நூறு கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்திருக்கிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையிலும் , படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதற்காக படக் குழுவினர் பிரத்யேக நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திரையுலகினரும், படக் குழுவினரும், ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 'ரெட்ரோ' படத்தை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் விநியோகம் செய்த சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் உரிமையாளரான சக்தி வேலன், படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நாயகனான சூர்யாவிற்கும் வைர மோதிரங்களை பரிசாக அளித்தார்.
இது தொடர்பாக விநியோகஸ்தர் சக்தி வேலன் குறிப்பிடுகையில், ''ரெட்ரோ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட வாய்ப்பளித்த 2D நிறுவனத்திற்கும், சூர்யா அண்ணன் மற்றும் ராஜசேகர பாண்டியன் அண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. மேலும் இத்திரைப்படம், இவ்வருடத்தில் வெளியான திரைப்படங்களில் அதிக இலாபம் தந்த திரைப்படமாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். இத்திரைப்படம் உருவாக காரணமான தயாரிப்பாளர்கள் மற்றும் முக்கிய கலைஞர்களான இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசியர், ஒளிப்பதிவாளர் போன்றவர்களுக்கு வைர மோதிரங்களை பரிசாக வழங்கினோம். சூர்யா அண்ணாவிற்கு மோதிரம் வழங்கிய போது அதனை உடனடியாக மீண்டும் எனக்கே திரும்ப அணிவித்து, தன் அன்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொண்டார், அது என் வாழ்வில் மற்றொரு நெகிழ்வான தருணமாக மாறியது. இந்நெகிழ்ச்சி எனக்கு முதல் முறையல்ல, முன்பு 'கடைகுட்டி சிங்கம்' வெற்றி விழாவில் தங்க செயின் மற்றும் 'விருமன்' வெற்றி விழாவில் வைர பிரேஸ்லெட் பரிசாக வழங்கும் போதும் சூர்யா அண்ணா எனக்கே அதை திரும்ப அணிவித்தார்.'' என்றார்.
இதனைத் தொடர்ந்து இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் திரையுலகினர் சூர்யாவுடனும், படக் குழுவினருடனும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.
பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்த சூர்யா!
முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, 104 கோடி வசூலைக் கடந்து, சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் லாபத்தில் 10 கோடி ரூபாயை, அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார்.
இப்படம் திரையரங்குகளை திருவிழாகோலம் ஆக்கியதோடு, விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாரட்டுக்களை குவித்துள்ளது. இந்நிலையில், இன்று நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உட்பட படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில் மீடியா நண்பர்களுடன் நீண்ட நேரம் உரையாடி அன்பைப் பகிர்ந்து கொண்ட சூர்யா, அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். மீடியா நண்பர்கள் நடிகர் சூர்யாவுக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
ரெட்ரோ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில், அரங்கு நிறைந்த காட்சிகளாக, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா