சற்று முன்
'மாயபிம்பம்' விமர்சனம்
Directed by : K. J. Surendar
Casting : Janaki, Aakash, Hari Rudran, Rajesh, Arun Kumar
Music :Nandha
Produced by : Selfstart Productions - K. J. Surendar
PRO : AIM
Review :
"மாயபிம்பம்" கே.ஜெ.சுரேந்தர் இயக்கத்தில் செல்ப் ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ் – கே.ஜெ.சுரேந்தர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை நந்தா. இந்த படத்தில் ஜானகி, ஆகாஷ், ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மருத்துவக் கல்லூரி மாணவரான ஆகாஷ் மற்றும் பேருந்து பயணத்தில் தற்செயலாக சந்திக்கும் ஜானகி இடையே தொடங்கும் ஒரு எளிய ஈர்ப்பே இந்த படத்தின் அடிப்படை. மீண்டும் சந்திக்கும் தருணம் விபத்தாக மாறினாலும், அதுவே இருவரையும் நெருக்கமாக பழகச் செய்யும் வாய்ப்பாகவும் அமைகிறது. ஆனால் உண்மையைப் பார்க்காமல், மாய பிம்பத்தில் மயங்கும் ஆகாஷின் ஒரு தவறான முடிவு, அவன் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. அந்த திருப்பமே இந்த காதல் கதையை சாதாரண ரோமான்ஸிலிருந்து எப்படி வேறுபடுத்துகிறது என்பதே "மாயபிம்பம்" படத்தின் கதை
ஜானகி சுமதி கதாபாத்திரத்தில், பக்கத்து வீட்டு பெண் போல எளிமையாக தோன்றினாலும், தன் கண்களாலேயே காதல், நம்பிக்கை, ஏமாற்றம் என பல உணர்வுகளை வெளிப்படுத்தி மனதில் பதிந்து விடுகிறார். குறிப்பாக நாயகனின் செயலை உணரும் அந்த ஒரே காட்சியில், வார்த்தைகள் இல்லாமலே தன் மனநிலையை வெளிப்படுத்தும் விதம் கைதட்டலை பெறுகிறது. அறிமுக நடிகை என்பதே நம்ப முடியாத அளவிற்கு, அழுத்தமான கதாபாத்திரத்தை இயல்பாக கையாள்கிறார்.
ஆகாஷ் நாயகனாக, செயற்கை இல்லாத நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். காதலை உணராமல் போன தவறுக்காக மனம் உடையும் தருணங்களிலும், தன் காதலுக்கு தானே எதிரியாக மாறியதை உணரும் காட்சிகளிலும், ஒரு முதிர்ச்சியான நடிகராக தன்னை நிரூபிக்கிறார். அவரது உடல் மொழியும் கண்களின் வழியாக வெளிப்படும் வலி உணர்வும் கதைக்கு வலு சேர்க்கிறது.
நாயகனின் நண்பர்களாக வரும் ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் புதுமுகங்கள் என்றாலும், எந்த தயக்கமும் இல்லாமல் திரைக்கதையோடு ஒன்றி பயணிக்கிறார்கள். அதேபோல், நாயகியின் குடும்ப உறுப்பினர்களாக நடித்துள்ள அறிமுகமில்லாத முகங்களும், தங்கள் நடிப்பால் கதாபாத்திரங்களை நம்ப வைக்கிறார்கள்.
எட்வின் சகாய்யின் ஒளிப்பதிவு, கடலூர் மற்றும் சிதம்பரம் பேருந்து நிலையங்களை வெறும் பின்னணியாக அல்ல, கதையின் ஓர் அங்கமாக மாற்றுகிறது. ஆடம்பரமற்ற காட்சியமைப்பு, பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துச் செல்கிறது.
நந்தாவின் இசை, கதாபாத்திரங்களின் உணர்வுகளை மென்மையாக பிரதிபலிக்கிறது. பாடல்கள் கேட்கும்படியும், பின்னணி இசை திரைக்கதையோடு பயணிப்பதும் படத்திற்கு கூடுதல் பலம்.
வினோத் சிவகுமார்யின் படத்தொகுப்பு, காதல் கதையின் ஓட்டத்தை சீராகவும், சுவாரஸ்யமாகவும் வைத்திருக்கிறது.
எழுதி இயக்கியுள்ள கே.ஜெ. சுரேந்தர், காதலை வெறும் அழகிய கவிதையாக அல்ல, கனத்த இதயங்களோடு கூடிய உணர்ச்சிப் பயணமாக திரையில் பதிவு செய்துள்ளார். சில இடங்களில் முன்பு வெளியான படங்களின் தாக்கம் தெரிந்தாலும், அதே அளவு தாக்கத்தை பார்வையாளர்களிடமும் ஏற்படுத்துவதில் அவர் வெற்றி பெறுகிறார்.
மொத்தத்தில், காதலுக்கு வெளி எதிரிகள் மட்டுமல்ல, காதலே ஒரு காதலுக்கு எப்படி எதிரியாக மாற முடியும் என்பதை சுவாரஸ்யமான திரைமொழி திருப்பங்களுடன் சொல்லும் இந்த படம், உணர்ச்சிகரமான காதல் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு தாக்கம் கொண்ட அனுபவமாக அமைகிறது.
"மாயபிம்பம்" படத்திற்கு மதிப்பீடு 3.25/5
Verdict : மனதைத் தொடும் தாக்கம் கொண்ட காதல் படம் “மாயபிம்பம்”
மேலும் திரைப்பட விமர்சனம்
- WORLD TAMIL
- |
- CINEMA


















