சற்று முன்
சினிமா செய்திகள்
சரத்குமார், ராதாரவி மீது குற்றச்சாட்டு - நடிகர் சங்கத்திலிருந்து நீக்க முடிவு
Updated on : 15 March 2016
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் முன்னாள் செயலாளர் ராதாரவி, முன்னாள் பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோரை நடிகர் சங்கத்திலிருந்து தற்காலிமாக நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திங்கள்கிழமை நடைபெற்ற நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, புதிய நிர்வாகிகளாக தேர்வான தலைவர் நாசர், செயலாளர் விஷால் உள்ளிட்டவர்கள் பழைய உறுப்பினர்கள் தங்களது செலவு கணக்குகளை முறையாக ஒப்படைக்கப்படவில்லை எனக் கூறி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க முடிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற நடிகர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் மூவரையும் தற்காலிமாக நீக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
சமீபத்திய செய்திகள்
இரா. சரவணனின் ‘சங்காரம்’ நூல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது
கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநரும் எழுத்தாளருமான இரா. சரவணன் எழுதிய ‘சங்காரம்’ நூலின் வெளியீடு மற்றும் அறிமுக விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் பதிப்பாளரான நக்கீரன் கோபால், மக்களவை உறுப்பினரும் இலக்கியவாதியுமான தமிழச்சி தங்கபாண்டியன், ஆனந்த விகடன் ஆசிரியர் முருகன், ஜூனியர் விகடன் ஆசிரியர் கலைச்செல்வன், கவிஞர் வெயில், நடிகர்கள் சசிகுமார், சூரி, கலா சின்னதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வாழ்த்தினர்.
ஜூனியர் விகடன் வார இதழில் 50 வாரங்களுக்கு மேலாக தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்தக் கதை, தற்போது ‘சங்காரம்’ என்ற நாவலாக உருவெடுத்துள்ளது. வன்முறை, அதிகார அரசியல், காதல், பேரன்பு, மனித அகப் போராட்டங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்த நாவல் குறித்து விழாவில் பேசியவர்கள், சமகால சமூக யதார்த்தங்களை ஆழமாக பேசும் படைப்பாக இது அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.
இலக்கியத்தையும் சினிமா மொழியையும் இணைக்கும் தன்மை கொண்ட ‘சங்காரம்’, வாசகர்களிடையே மட்டுமல்லாமல் திரைப்பட உலகிலும் கவனம் பெறும் படைப்பாக உருவாகியுள்ளது.
கவிஞர் வெயில் பேசுகையில்,
'' ஜூனியர் விகடன் இதழில் 'ஒரு கொலை 6 ஆயிரம் ரூபாய்' என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியானது. இந்த கட்டுரையை படித்த சரவணன் திரைப்பட இயக்குநராக இருந்தாலும் ... அவருடைய மனதில் எப்போதும் உறங்காத ஒரு பத்திரிக்கையாளராக என்னை அழைத்து பேசினார். அந்த சந்திப்பில் நான் எழுதிய கட்டுரையை கடந்தும் பல விசயங்களை குறிப்பிட்டார். அப்போது அவர் ஒரு சம்பவத்தை சொன்னார். அந்த சம்பவத்தை... அவர் சொன்ன விதத்தை... பார்த்துவிட்டு, ஜுவிக்கு ஒரு தொடர் எழுதுங்கள் என்று அன்பாக கட்டளையிட்டேன். அப்போது அவர், 'நான் ஒரு சிறுகதை கூட எழுதியதில்லையே... எப்படி தொடரை எழுத முடியும்' என்றார். ஆனால் எனக்கு அவர் மீது நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் அடிப்படையில் அவர் ஒரு கதை சொல்லி. அவருடைய கட்டுரையை நான் வாசித்திருக்கிறேன்.
பொதுவாக ஒரு பத்திரிக்கையாளருடைய கட்டுரையில் தகவல்களும், தரவுகளும் கொட்டிக் கிடக்கும். ஆனால் சரவணனுடைய கட்டுரையில் உணர்ச்சியும் மேலோங்கி இருக்கும். களத்திற்கு சென்று மக்களை சந்தித்து தகவல் திரட்டி அதனுடைய சூடு குறையும் முன்பாக வெப்பத்துடன் கட்டுரையை எழுதுவார். அவருடைய எழுத்தில் ஒரு எழுத்தாளரின் இலக்கியத்துவம் மிகுந்த நடை இருக்கிறது. அதற்குத் தேவையான உணர்வும் இருப்பதால் அவரை நான் எழுதுங்கள் என்று சொன்னேன்.
ஒரு கதையை எழுதுவதற்கு இலக்கிய பயிற்சி இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு கதையை சுவைபட சொல்ல இயலாது.
சரவணனிடம் பெண்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் மனப்பான்மை இருக்கிறது. இதன் காரணமாக கூட அவருடைய எழுத்து மேம்பட்டிருக்கலாம்.
இந்த நூலுக்கு பெயர் சூட்டியது தனிக்கதை. நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலைப்பை சொல்ல.. வரை கலை ஓவியரான பாண்டியன் என்பவர் சம்ஹாரம் என சொல்ல... அதனை தமிழில் 'சங்காரம்' என பாரதி தாசன் குறிப்பிட்டதை.. இதன் தலைப்பாக தேர்வு செய்தோம். சங்காரம் என்ற ஒரு சொல் ... அவருடைய எழுத்தில் மிகப்பெரிய வீச்சை உருவாக்கியது.
ஒவ்வொரு தொடருக்கான கட்டுரையை அவர் அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் எழுதி கொடுத்து விடுவார், நிறைய அனுபவங்களை மனதிற்குள் வைத்துக் கொண்டு இருப்பார்களால்தான் இப்படி சரளமாக குறுகிய நேரத்தில் தரமாக எழுத இயலும்.
இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் விசயத்தை சுருக்கமாக விவரிக்க வேண்டும் என்றால்.. குற்றம் தான் அனைத்திற்கும் அடிப்படை. குற்றத்தை பற்றிய உளவியல் ரீதியிலான கவித்துவமான இலக்கியத் தரமான நூலாக நான் எப்போதும் பைபிளை தான் பார்ப்பேன்.
அதில் 'மனிதன் எப்போது தன்னை மறைக்கத்தொடங்கினானோ... அப்போதே குற்றம் பிறக்கிறது' என்றிருக்கும்.
பாலியல் குற்றமும், அதிகாரத்தை கைப்பற்றும் குணமும் தான் மனிதர்களின் பிரதான இரண்டு குற்றங்கள் என நான் பார்க்கிறேன். இதுதான் இந்த நாவல் முழுவதும் பரவி கிடக்கிறது.
டெல்டா மண்டலத்தில் செயல்படும் இரண்டு தாதாக்கள் ....அந்த இரண்டு தாதாக்களுடைய இரண்டு காதல்கள்--- அவர்களை சுற்றியுள்ள மனிதர்கள் --- விசுவாசிகள்... உறவினர்கள்... இந்த இரண்டு தாதாக்களையும் பயன்படுத்திக் கொள்கிற ஒரு அரசியல்வாதி.... இந்த இரண்டு தாதாக்களையும் கொன்று விட வேண்டும் என நினைத்து செயல்படும் ஒரு காவல்துறை அதிகாரி... இதற்குள் நிகழும் சம்பவங்கள் தான் இந்த நாவலின் கதை.
இரண்டு தாதாக்களின் வன்முறை உலகத்தை எழுதியிருந்தாலும்.. இதில் மனித உணர்வுகளுக்கும் , அவனுடைய அக போராட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக நிறைய உணர்ச்சிகளை பற்றி பேசி இருக்கிறார். இதில் சமூகத்தை உலுக்கி கொண்டிருக்கும் சாதிய பிரச்சினையை பற்றியும் பேசி இருக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களுடைய எழுச்சி என்பது எவ்வளவு நுட்பமானதாக இருக்க வேண்டும் என்பதையும் விவரித்திருக்கிறார். இது விவாதிக்கப்பட வேண்டிய விசயமும் கூட.
வன்முறை அதிகம் பேசப்படும் இந்த நாவலின் காமமும் , ரொமான்ஸும் பேசப்பட்டு இருக்கும். காமம், வன்மம் எனும் இரு பிரிவுகளிலும் சொல்லப்பட்டிருக்கும் கதை இது.
ஆண்- பெண் என இரு பாலின அரசியலை சரியாக சம நிகராக புரிந்து கொண்டிருக்கும் ஒருவரால் தான் காமத்தை கண்ணியமாக எழுத இயலும். அந்த வகையில் இரா. சரவணன் மாஸ்டர் என்று சொல்லலாம்.
இந்த நாவலில் தன் பாலின ஈர்ப்பாளர்களைப் பற்றியும் விவரித்து இருக்கிறார். இந்த சங்காரம் நாவல் உலகத்தில் உள்ள உறவுகளைப் பற்றி பேசக்கூடிய நாவலாக இருக்கிறது.
இந்த புத்தகத்தை வாசித்தவர்களுக்கு வாசித்த பின் மரிக்கொழுந்து வாசம் தான் வீசும். அந்த அளவிற்கு இந்த நாவலில் மரிக்கொழுந்து எனும் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.
அத்துடன் இந்த கதாபாத்திரத்தில் சக மனிதர்கள் மீது ஒவ்வொருவரும் காரணமற்ற அன்பை செலுத்துவார்கள் என்ற பேருண்மையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
குற்றம் என்பது நமக்கு நாமே வகுத்துக் கொண்ட எல்லையை மீறுவது. இதனையே அதிகாரத்தில் இருப்பவர்கள் மீறும் போது எமக்குள் எழும் வெடிப்புதான் சங்காரம். இந்த சங்காரம் தொடரும். இது முடிவுறாத மானுட கதையாக இருக்கும் என நினைக்கிறேன்'' என்றார்.
திரு. கலைச்செல்வன் பேசுகையில்,
'' பேசுவது எப்படி ஒரு கலையோ அதேபோல் பேசாமல் இருப்பதும் ஒரு கலை. அந்தப் பட்டியலில் உள்ள நான் சரவணன் கேட்டுக் கொண்டதற்காக இங்கு அவரை வாழ்த்த வருகை தந்துள்ளேன்.
சரவணன்- இந்த மனிதர்களின் இருளடைந்த பகுதிக்குள் சரளமாக உலா வருகிற ஒரு நபர். அவருடைய திரைப்படங்களில் சமூகப் பிரச்சனையை விவசாயிகளின் பிரச்சனையை குடும்ப உறவுகளின் சென்டிமென்ட் சார்ந்த பிரச்சனையை பேசி இருக்கிறார். ஆனால் அவர் இப்படி ஒரு எழுத்தை வழங்குவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவருக்குள் இருக்கும் எழுத்தாளருக்கு என் வாழ்த்துக்கள்'' என்றார்
திரு. முருகன் பேசுகையில்,
'' சரவணன் கட்டுரை எழுதும் போதே அது ஒரு இலக்கியமாக இருக்கும். அதனால் அவர் இப்படி ஒரு நாவல் எழுதி இருப்பது வியப்பல்ல. ஒரு தொடரை நூறு அத்தியாயங்களுக்கு மேல் எழுதி ஏராளமான வாசகர்களை படிக்க வைப்பது என்பது எளிதான விசயம் அல்ல. ஒரு பத்திரிக்கையாளராக இருந்து கதை சொல்லும் போது அது சுவைபட இருக்கும்.
சரவணன் இந்த சிறிய வயதிற்குள் ஏராளமான மனிதர்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை பொறுமையுடன் கேட்டிருக்கிறார். அதனால்தான் இந்த கதை இவ்வளவு இன்ட்ரஸ்ட் ஆக வந்திருக்கிறது.
இந்தக் கதையில் சூரியையும், மார்ட்டினையும் அவர் நேர் எதிராக நிறுத்துவது நன்றாக இருக்கும்.
இந்தக் கதை வன்முறை நிரந்த கதை என்பதை மேலோட்டமாக பார்த்தால் சொல்லலாம். அன்பு எப்படி எல்லா மண்ணுக்கும் பொருத்தமானதோ... அதேபோல் வன்முறையும் எல்லா மண்ணிற்கும் பொதுவானது தான்.
இந்தக் கதை சினிமாவாகவோ இணைய தொடராகவோ உருவானால் நிச்சயமாக வெற்றி பெறக்கூடும். இது போன்ற நூற்றுக்கணக்கான கதை சரவணன் இடத்தில் இருக்கிறது. எழுதுவதற்கு எங்களிடம் இடம் இருக்கிறது. அவர் தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் '' என்றார்.
தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில்,
'' சரவணனை பத்திரிக்கையாளராக தெரியும். எழுத்தாளராக தெரியும். இயக்குநராகவும் தெரியும். அவர் எழுதிய இந்த நாவலை படிக்கும் போது தான் அவருக்குள் இவ்வளவு பெரிய வன்முறையும், காதலும் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். இந்த நாவலில் ஆக்சன் சீனும் அதிகம் ரொமான்ஸ் சீனும் அதிகம். இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தை வாசிக்கும் போதும் ஒரு ஆக்ஷன் படத்தை பார்ப்பது போல் இருந்தது. இந்த புத்தகத்தை படிக்கும் போது சினிமாவிற்கான நிறைய காட்சிகளை எழுதி இருக்கிறார் என்பதை பார்த்தேன். சினிமாவாக உருவாகும் போது மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பது என்னுடைய நம்பிக்கை. நாவலில் இருக்கும் சூரி மற்றும் மார்ட்டின் என இரண்டு கதாபாத்திரத்தை வைத்து சினிமாவை உருவாக்கலாம். இதை திரைப்படமாக எடுத்தால் எங்களுடைய மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் என்பதை இந்த தருணத்தில் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.
திருமதி சத்யா கரிகாலன் பேசுகையில்,
''புத்தகங்கள் நமக்கு நிரந்தரமான தோழர்கள் என புத்தகத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்கு தெரியும். மனித சமுதாயத்திற்கு நிரந்தரமான விடுதலையை புத்தகம் மூலம் அடைய முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அந்த வகையில் விடுதலை சிந்தனை கொண்ட எழுத்தாளரும், இயக்குநரும் , சிறந்த நண்பருமான சரவணனுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சரவணிடமிருந்து இது போன்ற படைப்புகள் வருவது எனக்கு மகிழ்ச்சியேத் தவிர ஆச்சரியம் இல்லை. மனிதர்களை காதலிக்க கூடிய ஒரு கலைஞனுக்கு அதே மனிதர்கள் சில நேரங்களில் பொருளாதாரத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் சில சல்லித்தனமான செயல்களை செய்யும் பொழுது அதை நுட்பமாக உணர்ந்த ஒரு படைப்பாளியின் கோபத்தின் வெளிப்பாடு தான் இந்த புத்தகம்.
இவர் மனிதர்களிடத்தில் மட்டும் பற்றும் பாசமும் அன்பும் கொண்டவர் இல்லை. இயற்கை மீதும் பேரன்பும் காதலும் கொண்டவர் என்பது இந்த கதையில் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும்.
'எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு பூ பூக்கத் தான் செய்யும்' என பிரபஞ்சன் குறிப்பிட்டதை போல்... ' தலையை காவு வாங்க ஒரு கூட்டம் காத்திருக்கும் நிலையில் ..ஒருவன் காதலித்துக்கொண்டிருக்கிறான் என்பதே சமகால கவித்துவமாக தான் நான் பார்க்கிறேன்.
அத்துடன் இந்த நாவலில் காமத்தில் புரிதலின் அவசியத்தை குறித்து நெற்றிப்பொட்டில் அடித்தது போல் சொல்லி இருக்கிறார்.
இந்தக் கதை அதிகார வேட்கையின் உச்சகட்டத்தை விவரிக்கும் வகையில் தொடங்கினாலும்.. படிப்படியாக பெண் முடிவெடுக்கும் திறனை நோக்கி நகர்ந்து வருவதால் ஒரு பெண்ணாக இதை பார்க்கும் போது சரவணன் மீதான மரியாதை இன்னும் அதிகமாகிறது'' என்றார்.
நக்கீரன் கோபால் பேசுகையில்,
'' இந்த விழாவை தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் உள்ள பிரம்மாண்டமான அரங்கத்தில் நடந்திருந்தால்... இன்னும் சில ஆயிரம் பேர் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்திருப்பார்கள்.
இந்த தொடரைப் பற்றி என்னுடன் பணியாற்றிய லே அவுட் ஆர்டிஸ்ட்டான பாண்டியன்.. 'கதை முழுவதும் ரத்தம் தான்' என சொல்வார். டெல்டா என்ற உடன் நான் சரவணனிடம் மணல்மேடு சங்கர் என்பவரை பற்றிய விசயங்கள் இடம் பிடித்திருக்கிறதா..? என கேட்டேன். அவர் ஆமாம் என தலையாட்டினார்.
இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் முருகனுடைய வாழ்வில் நடைபெற்ற சம்பவமும் ஒரு கதையாக எழுதலாம்.'' என்றார்.
நடிகர் சூரி பேசுகையில்,
'' நேற்று முதல் நான் பதட்டத்தின் உச்சத்தில் தான் இருக்கிறேன். சரவணன் போன் செய்து நூல் வெளியீட்டு விழாவிற்கு அவசியம் வர வேண்டும் என சொன்னார். எப்போது? எனக் கேட்டேன். 'நாளை' என்றார். யார் யாரெல்லாம் வருகிறார்கள்? என கேட்டேன். இங்கு மேடையில் வீற்றிருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களும் வருகிறார்கள் என சொன்னார். . நான் சிறிது நேரம் மௌனம் காத்து விட்டு என்னை எதற்காக அழைக்கிறீர்கள்? எனக் கேட்டேன். நீங்கள் வந்தால் தான் சிறப்பாக இருக்கும் என்றார். புத்தகத்தை அனுப்பி இருக்கிறேன் படித்துவிட்டு விழாவிற்கு வாருங்கள் என சொன்னார். அப்போது அவரிடம் புத்தகத்தை படிக்க வா? அல்லது விழாவிற்கு வரவா? இரண்டில் ஏதாவது ஒன்றை சொல்லுங்கள் என்று கேட்டேன். விழாவிற்கு வாருங்கள் என சொன்னார்.
விழாவிற்காக கிளம்பும்போது என் மனைவி இரண்டு பக்கத்தைையாவது படித்துவிட்டு செல்லுங்கள் என சொன்னார். ஜோசியக்காரன் போல் புத்தகத்தில் ஒரு பக்கத்தை திடீரென்று எடுத்தேன். அது 43 வது பகுதி. மார்ட்டின்- காயத்ரி பற்றி எழுதி இருந்ததை உரக்க வாசித்துக் கொண்டிருந்தேன். இருவருக்கும் இடையேயான அளவற்ற காதலை.. கட்டுக்கடதங்காத காதலை.. அடாவடித்தனமான அந்த அன்பை ஒளிந்து இருந்து ஜன்னல் வழியாக பார்ப்பது போல் ஆகிவிட்டது. அவரது எழுத்து நடையை வாசிக்கும் போது உருவம் தெரிந்தது. அதுதான் அவருடைய சிறப்பு.
அண்ணன் சமுத்திரக்கனி படிப்பதற்காக இரண்டு புத்தகங்களை கொடுத்திருக்கிறார். அவரை சந்திப்பதை இப்போது தவிர்த்து வருகிறேன். ஏனென்றால் சந்திக்கும்போது புத்தகத்தை படித்து விட்டாயா? என கேட்டால்... என்ன பதில் சொல்வது?
என்னை பொருத்தவரை புத்தகத்தை நான் பொழுதுபோக்காக நினைத்து விட்டேன். நான் ஏன் அடிக்கடி புத்தகத்தை பார்த்தேன் என்றால் இந்த புத்தகத்தின் டைட்டிலை மறந்து விடக்கூடாது என்பதற்காக பார்த்தேன். சங்காரம் என்பதை சிங்காரம் என்று பேசிவிட்டால் தப்பாக்கி போய்விடும் அல்லவா..!
புத்தகம் சாதாரண விசயம் அல்ல. பல நாடுகளில் பல சரித்திரத்தை உருவாக்கி இருப்பது புத்தகங்கள் தான். எழுத்துகள் தான் சமூக சீர்திருத்தத்தை உருவாக்கியிருக்கிறது. சமூகத்திற்கு தேவையான பல நல்ல விசயங்களை புத்தகங்கள்தான் கொடுத்திருக்கிறது. எத்தனை ஆண்டு காலமானாலும் புத்தகங்கள் அழிவதில்லை.
இப்போதுதான் புத்தகத்தின் அருமையை தெரிந்து கொண்டிருக்கிறேன். :மாமன்' படத்திற்கு கதை எழுதினேன். தற்போது என் தந்தையை பற்றிய சுயசரிதையை எழுதி வருகிறேன்.
இரா. சரவணன் இயக்குநர் மட்டுமல்ல அவருடைய சமூகத்திற்கான பங்களிப்பு இன்றும் தொ
வைரலாகும் ‘லக்கா லக்கா லடுக்கி’ ‘தீராப்பகை’ பட குத்து பாடல்!
‘சிலந்தி’, ‘அருவா சண்ட’, ‘நினைவெல்லாம் நீயடா’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் படநிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள புதிய படம் ‘தீராப்பகை’. விறுவிறுப்பான த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் விஜயராகவேந்திரா நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக, தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகை ஹரிப்பிரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு ஸ்டைலான குத்து பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த பாடலை இயக்குநர் ஆதிராஜன் தானே எழுதியுள்ளார். நட்சத்திர ஹோட்டலின் பாரில் அமைந்த காட்சியில், ஒரு நடனமங்கை மதுபானங்களை தன் உடலோடு ஒப்பிட்டு பாடுவது போல அமைந்துள்ள இந்த பாடல், தைரியமான வரிகளும் கவர்ச்சியான காட்சிகளும் கலந்து உருவாகியுள்ளது.
“லக்கா லக்கா லடுக்கி நான் தான் டாஸ்மாக்கு…
பீரு பிராந்தி விஸ்கி தொட்டா பாஸ்மார்க்கு…”
என தொடரும் இந்த பாடலை, ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’ என ரசிகர்களால் அழைக்கப்படும் ஸ்ரீநிஷா சீனிவாசன், தனது கிக் ஏற்றும் குரலில் பாடியுள்ளார்.
ஸ்ரீநிஷா சீனிவாசன், சமீபத்தில் ‘அரண்மனை – 4’ படத்தில் தமன்னாவின் கவர்ச்சி நடனத்திற்கு இடம்பெற்ற “அச்சோ அச்சோ அச்சச்சோ…” பாடல் மூலம் பெரும் ஹிட்டை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் குறித்து அவர், “இந்த ‘சரக்கு சாங்’ நிச்சயமாக பெரிய அளவில் வைரலாகும்” என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த பாடலில், பல படங்களில் நாயகியாக நடித்துள்ள மேக்னா நாயுடு, செம கவர்ச்சி ஆட்டத்துடன் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். எம்.ஜி. கார்த்திக் இசையில் உருவான இந்த பாடலுக்கு, மாஸ்டர் சிவகுமார் நடன அமைப்பு செய்துள்ளார்.
படத்தின் தொழில்நுட்ப தரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பல பிரம்மாண்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜேஷ் கே. நாராயன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கேஜிஎப்’ படப்புகழ் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை கவனித்துள்ளார். மற்ற பாடல் வரிகளை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார்.
விறுவிறுப்பான திருப்பங்களும், த்ரில்லர் அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகியுள்ள ‘தீராப்பகை’, விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்களிடையே இப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திகில், திரில்லர், அதிரடி என 2026-ஐ அதிரடியாக தொடங்கிய ZEE5 தமிழ்
தமிழ் ஓடிடி உலகில் 2026-ஆம் ஆண்டை மிகுந்த வேகத்துடனும், திகில் நிறைந்த பொழுதுபோக்குடனும் தொடங்கியுள்ளது ZEE5 தமிழ். இருக்கையின் நுனியில் அமர வைக்கும் திரில்லர்கள், பரபரப்பான கதைக்களங்கள் மற்றும் வலுவான நடிகர் கூட்டணியுடன், இந்த ஆண்டுக்கான தனது உள்ளடக்கத் திட்டத்தை ZEE5 தமிழ் உறுதியாக வெளிப்படுத்தியுள்ளது.
ஆண்டின் தொடக்கமே ZEE5 தமிழுக்கு சாதனை படைத்த ஒன்றாக அமைந்துள்ளது. தளபதி விஜய்யின் “ஜனநாயகன்” இசை வெளியீட்டு விழா, ZEE5 உள்ளடக்கங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் நாளிலேயே அதிகமான புதிய சந்தாதாரர்களை சேர்த்தது. இதனைத் தொடர்ந்து, கவின் நடித்த “மாஸ்க்” திரைப்படம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த தொடர் வெற்றிகள், 2026-க்கான ZEE5 தமிழின் வலுவான ஆரம்பத்தை உறுதி செய்துள்ளன.
இந்த வெற்றியின் அடுத்த கட்டமாக, ஜீவா மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா நடிப்பில் உருவான சிறப்பு பொங்கல் பிராண்ட் திரைப்படத்தை ZEE5 தமிழ் வெளியிட்டுள்ளது.
“ZEE5-இல் இந்த பொங்கல் – திகில் பொங்கல்” என்ற விளம்பர வாசகத்துடன் வெளியான இந்த படம், விழாக்கால கொண்டாட்டத்தையும், மர்மம் நிறைந்த திகில் அனுபவத்தையும் ஒன்றாக இணைக்கிறது.
பாரம்பரியமான பொங்கல் பின்னணியில் தொடங்கும் கதை, திடீரென நிகழும் ஒரு மர்ம சம்பவத்தின் மூலம் எதிர்பாராத திருப்பத்தை எடுக்கிறது. உறுதியான விசாரணை அதிகாரியாக ஜீவா நடித்துள்ள நிலையில், ஆண்ட்ரியா மர்மத்தின் மையக் கதாபாத்திரமாக தோன்றுகிறார். நியோ-நாயர் பாணி திகில் சூழலுடன் கூடிய இந்த பிராண்ட் திரைப்படம், ZEE5 தமிழின் 2026-க்கான பல்வகை திரில்லர் உள்ளடக்க திட்டத்தை தெளிவாக பிரதிபலிக்கிறது.
இந்த பொங்கல் சீசனில், ZEE5 தமிழ் வலுவான திரைப்பட மற்றும் சீரிஸ் வரிசையையும் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. அதில்,
விக்ரம் பிரபு மற்றும் L.K. அக்ஷய் குமார் நடித்த விமர்சகர்களால் பாராட்டப்பட்ட “சிறை”,
பிளாக்பஸ்டர் திகில் திரைப்படமான “டிமாண்டி காலனி – பாகம் 2”,
சமுத்திரக்கனி நடித்த “பார்த்த ஞாபகம் இல்லையோ”,
“ஒன்ஸ் அப்ஆன் எ டைம் இன் காயம்குளம் ” போன்ற ஒரிஜினல் சீரிஸ்கள்
இடம்பெறுகின்றன.
இதுகுறித்து பேசிய லாய்ட் C. சேவியர், பிஸ்னஸ் ஹெட் – தமிழ் & மலையாளம், ZEE5; சீனியர் வைஸ் பிரசிடென்ட் – மார்க்கெட்டிங், தென் இந்தியா கூறியதாவது,
“2026-ஆம் ஆண்டில் அதிக தாக்கம் கொண்ட திகில் மற்றும் திரில்லர் பொழுதுபோக்கை வழங்குவதே எங்கள் தெளிவான நோக்கம். ஜனநாயகன் இசை விழாவுக்கும் ‘மாஸ்க்’ படத்திற்கும் கிடைத்த வரவேற்பு, சக்திவாய்ந்த உள்ளடக்கத்திற்கான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆண்டில் தமிழ் ஓடிடி உலகில் புதிய உயரங்களை எட்ட ZEE5 தமிழ் தயாராக உள்ளது” என்றார்.
பிராண்ட் திரைப்படத்தின் முகமாக இருக்கும் நடிகர் ஜீவா கூறுகையில்,
“ZEE5 தமிழ் குழுவுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம். திகிலும், ரசிகர்களை ஈர்க்கும் கதைகளிலும் அவர்கள் காட்டும் கவனம் பாராட்டத்தக்கது. இந்த பொங்கல் படம், இந்த ஆண்டுக்கான ZEE5 தமிழின் அதிரடியான தொடக்கத்தை பிரதிபலிக்கிறது” என்றார்.
நடிகை ஆண்ட்ரியா ஜெரமையா கூறியதாவது,
“இந்த படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். ‘மாஸ்க்’ திரைப்படத்தின் புரமோஷனை க்ரியேட்டிவாக இணைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. பார்வையாளர்களின் வரவேற்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” என்றார்.
திகில் நிறைந்த திரில்லர்கள், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் தரமான ஒரிஜினல் சீரிஸ்களுடன், ZEE5 தமிழ் 2026-ஆம் ஆண்டை தமிழ் ஓடிடி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக மாற்ற தயாராக உள்ளது.
சர்வதேச திரைப்பட விமர்சன தள தரவரிசையில் ‘பைசன் காலமாடன்’ சாதனை!
சர்வதேச திரைப்பட விமர்சன தளமான Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய Top 10 Action / Adventure திரைப்படங்கள் தரவரிசைப் பட்டியலில், ‘Bison Kaalamaadan’ திரைப்படம் இடம்பிடித்து பெரும் கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம் என்பதும் தமிழ் சினிமாவுக்கு கூடுதல் பெருமையைச் சேர்த்துள்ளது.
வலுவான கதை அமைப்பு, தீவிரமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் தனித்துவமான திரைக்கதை ஆகிய அம்சங்களால் பார்வையாளர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்ற ‘Bison Kaalamaadan’, உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக Letterboxd பயனர்களிடமிருந்து கிடைத்துள்ள உயர்ந்த மதிப்பீடுகள், இந்த திரைப்படத்தின் சர்வதேச தாக்கத்தையும் தரத்தையும் வெளிப்படுத்துகின்றன.
ஆக்ஷன் மற்றும் சாகச (Adventure) வகைப்பாட்டில் சர்வதேச அளவில் இப்படம் பெற்றுள்ள இந்த அங்கீகாரம், படக்குழுவிற்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது. தமிழ் சினிமா உலக அரங்கில் தொடர்ந்து தன்னுடைய முத்திரையைப் பதித்து வருவதற்கான இன்னொரு முக்கியக் கட்டமாக, ‘Bison Kaalamaadan’ இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளது.
சென்னையில் இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்ப கருத்தரங்கம்!
இந்திய திரைப்படத் துறையின் எதிர்காலத்தை நோக்கி தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றல் எவ்வாறு ஒன்றிணைய வேண்டும் என்பதைக் குறித்து ஆராயும் வகையில், ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப் மற்றும் புரொடியூசர் பஜார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து “ஃபிலிம் இன்டஸ்ட்ரி 5.0: தி ஃபியூச்சர் ஆஃப் இந்தியன் சினிமா” எனும் கருத்தரங்கை சென்னையில் புதன்கிழமை (ஜனவரி 7) நடத்தின. இந்த நிகழ்வு கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள புரொடியூசர் பஜார் அலுவலகத்தில் நடைபெற்றது.
திரைப்படத் துறையின் எதிர்கால வளர்ச்சி, தொழில்நுட்பத்தின் தாக்கம், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அலசி ஆராயும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில், திரைப்படம், தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் அறிவுசார் உரிமைகள் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டு, படைப்பாற்றலை தொழில்நுட்பத்துடன் இணைத்து புதிய உயரங்களை எட்டுவது குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.
இந்நிகழ்வில், சிங்கப்பூரைச் சேர்ந்த ரிவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலரான டாக்டர் விவேகா காளிதாசன், தொழில்நுட்பம் திரைப்படப் படைப்பாற்றலுக்கு எவ்வாறு துணை நிற்கிறது என்பது குறித்து முக்கிய உரையாற்றினார். கதை எழுதுதல், படத்தொகுப்பு, காட்சி கதைசொல்லல் ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த திரைத்துறை பொருளாதார சூழலில் உரிமைகள், வருமானம் மற்றும் உலகளாவிய தாக்கங்களை எவ்வாறு மறு உருவாக்கம் செய்யலாம் என்பதைக் குறித்து வட்டமேசை கலந்துரையாடலும் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில், பிக்ஸ் ஸ்டோன் இமேஜஸ் பிரைவேட் லிமிடெட் வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர் உஜ்வல் தன்குட்டே, தேஜ் என்டர்டெயின்மென்ட் இயக்குநர் நாகராஜன் வைத்தியநாதன், சக்தி குளோபல் டிவி ஓடிடி தலைவர் மற்றும் மகாராஜ குழுமத்தின் திரைப்பிரிவு தலைவர் சம்மந்த்ராஜ் கோதண்ட்ராம், பாக்கெட் எஃப்.எம் கிரியேட்டிவ் புரொடியூசர் அசாருதீன் ஜெ, ஐபிஆர்எஸ் தென் மண்டல உறவுகள் பிரிவின் உறுப்பினர் பாலமுரளி திருமுருகன், கிறிஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கிறிஸ்டி எஸ், சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பின் செயல் இயக்குநர் ஜமுனராணி கோவிந்தராஜூ, பிராண்ட் எக்சேஞ்ச் நிறுவன இயக்குநர் ரமேஷ் குமார் மல்லேலா, பியூர் சினிமா நிறுவனர் அருண் மோ, புரொடியூசர் பஜார் சட்டப்பிரிவு தலைவர் அர்ச்சனா கவில், ஓஓ ஸ்டூடியோ இன்க் இணை நிறுவனர் சிந்துஜா ராஜமாறன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கருத்தாழம் மிக்க உரைகள் மற்றும் சிந்தனைகள், கலந்து கொண்ட திரைத்துறையினரிடையே தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி வர்த்தக எல்லைகளை விரிவுபடுத்துதல், படைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் அறிவுசார் உரிமைகளை பாதுகாத்தல் குறித்த புரிதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். இதற்காக ஏற்பாட்டாளர்களான ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப் மற்றும் புரொடியூசர் பஜார் நிறுவனங்களுக்கு அவர்கள் நன்றியை தெரிவித்தனர்.
100 நாட்கள் வெற்றி… உலகத் திரையரங்குகளை நோக்கி 'காந்தாரா சேப்டர் 1'
“காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அதன் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், கலாச்சார தாக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்திய மக்கள் மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் பூர்வகுடி கதைகளில் ஆழமாக வேரூன்றிய இந்தத் திரைப்படம், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம், இன்றைய இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக “காந்தாரா சேப்டர் 1 ” தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
ரிஷப் ஷெட்டி எழுத்து இயக்கத்தில், விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவான இப்படம், அதன் ஆழமான கதையமைப்பு, காட்சித் தன்மை மற்றும் பிரம்மாண்டமான காட்சிப்படுத்தலுக்காக பரவலான அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
வெளியீட்டின் 100 நாட்களை கொண்டாடும் இந்நேரத்தில், “காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் “அகாடமி அவார்ட்ஸ்” விருதுகளுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது, பண்பாட்டுச் செழுமையும் உண்மையான உள்ளூர் கதையாக்கமும் கொண்ட இந்திய திரைப்படங்களுக்கு, உலகளாவிய அளவில் கிடைக்கும் அங்கீகாரத்தை பிரதிபலிக்கிறது.
“காந்தாரா சேப்டர் 1” தற்போது இந்திய எல்லையைக் கடந்து, உலகளாவிய அளவில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது.

’மெல்லிசை’ நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நினைவூட்டியது - நடிகர் கிஷோர்!
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும். இந்த வரிசையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ‘மெல்லிசை’ இணைய உள்ளது. பல திரைப்படங்களில் காவல்துறை அதிகாரியாகவும் தீவிரமான கதாபாத்திரங்களிலும் பார்த்து பழகிய நடிகர் கிஷோர் இந்தப் படத்தில் உடற்கல்வி ஆசிரியராக நடித்துள்ளார். அன்றாட வாழ்க்கை, அமைதியான கனவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான உண்மைகள் ஆகியவற்றை ’மெல்லிசை’ பேசுகிறது. படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் இசை ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
’மெல்லிசை’ தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நடிகர் கிஷோர் பகிர்ந்து கொண்டார், “நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண வாழ்க்கையைப் பற்றிய கதையாக ‘மெல்லிசை’ என்னிடம் சொல்லப்பட்டது. எந்தவிதமான சமரசங்களும் இல்லாமல் கதை நேர்மையாக இருந்தது. வாழ்க்கையுடன் நெருக்கமாக இருக்கும் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை எனக்கு நினைவூட்டியது. எங்கள் இயக்குநர், தயாரிப்பாளர்கள், என் சக நடிகர்கள் மற்றும் இந்தப் பயணத்தை உண்மையாக கொடுத்த ஒவ்வொரு தொழில்நுட்ப வல்லுநருக்கும் என்னுடைய நன்றி. இந்தப் படத்தில் அனைவருமே மனப்பூர்வமாக வேலை பார்த்திருக்கிறோம் என்பதே இந்தப் படத்தை இன்னும் ஸ்பெஷலாக்கியது” என்றார்.
திரவ் எழுதி இயக்கியுள்ள ’மெல்லிசை’ படத்தில் நடிகர் கிஷோருடன் சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், புதுமுகங்கள் தனன்யா, ஜஸ்வந்த் மணிகண்டன், புரோக்டிவ் பிரபாகரன் மற்றும் கண்ணன் பாரதி ஆகியோர் நடிக்கின்றனர். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'வெப்பம் குளிர் மழை' படத்தை தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்ஷன்ஸ் ’மெல்லிசை’ படத்தையும் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் சங்கர் ரங்கராஜன் இசையும், தேவராஜ் ஒளிப்பதிவும் இந்தக் கதைக்கான ஆன்மாவை திரையில் கொண்டு வந்துள்ளது. ’மெல்லிசை’ 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை ‘மெல்லிசை’ கொடுக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் தயாரித்திருக்கும் புதிய படம் மூலம் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான பல தருணங்களைக் கொண்ட இந்தப் படத்தை பிரீத்தி கரிகாலன் இயக்கியுள்ளார். குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் படத்தின் காட்சிகள், இசை, கதை என அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
இது பற்றி தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் பேசுகையில், “ஒரு படத்தை திட்டமிட்டபடி முடிக்க ஒவ்வொரு துறையும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும். அந்தவகையில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் எங்கள் இயக்குநர் என அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளனர். படத்தை வெளியிடுவதற்கான சரியான தருணத்தை திட்டமிட்டு வருகிறோம். பார்வையாளர்களிடம் படம் சரியாக சென்றடைய வேண்டும் என்பதற்கான மார்க்கெட்டிங், புரோமோஷன் பணிகள் போன்றவற்றையும் தெளிவாக திட்டமிடுவோம்” என்றார்.
படத்தின் டைட்டில், டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீடு குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர்கள்: ரொமாண்டிக் எண்டர்டெயினரான இந்தப் படத்தில் விக்ரமன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுப்ரிதா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட் - மூன்று வில்லன்கள் அறிமுகம்!
ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் மூன்று வில்லன்களை அறிமுகப்படுத்துகிறது. அதில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானி நடித்துள்ளார்.
இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை பல மொழிகளில் திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து சமீபத்தில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) U/A சான்றிதழைப் பெற்றுள்ளது ‘திரெளபதி2’ திரைப்படம். ரிச்சர்ட் ரிஷியின் கவர்ந்திழுக்கும் வசீகர தோற்றம், அற்புதமான பாடல்கள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் ஆகியவை படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று வலுவான வில்லன் கதாபாத்திரங்களில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானியை அறிமுகப்படுத்துகிறது படக்குழு.
நடிகர் சிராக் ஜானியை தேர்ந்தெடுத்தது குறித்து இயக்குநர் மோகன் ஜி கூறுகையில், “முகமது பின் துக்ளக் கதாபாத்திரத்தில் நடிகர் சிராக் நடித்துள்ளார். வெறும் வில்லனாக மட்டுமல்லாது புத்திசாலித்தனம் நிறைந்த தனது சொந்த முடிவுகளின் விளைவுகளை தைரியமாக எதிர்கொள்ளும் நபராக வருவார். உடல் ரீதியாக வலுவாகவும் அதேசமயம், புத்திசாலித்தனத்தையும் நடிப்பில் கொண்டு வரும் வகையிலான நடிகரை நாங்கள் எதிர்பார்த்தோம். துக்ளக்கை புத்திசாலித்தனமான முட்டாள் என்று வரலாறு நினைவு கூறுகிறது. அந்த முரண்பாட்டைப் படம்பிடிக்க மிகப்பெரிய கட்டுப்பாடு தேவை. சிராக் முழு ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான அச்சுறுத்தல், கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார். அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்” என்றார்.
இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசுதன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் Y.G. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோழ சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த 'திரௌபதி 2' திரைப்படத்தின் தொழில்நுட்பக்குழுவில் பிலிப் ஆர். சுந்தர் (ஒளிப்பதிவு), ஜிப்ரான் வைபோதா (இசை), ஆக்ஷன் சந்தோஷ் (ஸ்டண்ட்ஸ்), தணிகா டோனி (நடன அமைப்பு), தேவராஜ் (எடிட்டிங்), மற்றும் கமல்நாதன் (தயாரிப்பு வடிவமைப்பு) ஆகியோர் உள்ளனர். வசனங்களை பத்மா சந்திரசேகர் மற்றும் மோகன் ஜி எழுதியுள்ளனர்.
சென்சார் பணிகள் முடிவடைந்த நிலையில் ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் மார்க்கெட்டிங் பணிகள் தொடங்கியுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை விரைவில் வெளியிடப்படும், அதைத் தொடர்ந்து உலகளவில் திரையரங்க வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படும்.
பல சவால்களை தாண்டி 'பராசக்தி' படத்தை படமாக்கினேன் - இயக்குநர் சுதா கொங்கரா!
இயக்குநர் மணி ரத்னத்தின் சினிமா பட்டறையில் இருந்து வந்தவரான இயக்குநர் சுதா கொங்கரா, தனது அழுத்தமான கதைகள் மூலம் தமிழ் சினிமாவை தொடர்ந்து உயர்த்தியுள்ளார். அந்தவகையில், அவரது வெளியாகவிருக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே வர்த்தக வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டான் பிக்சர்ஸ், ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜனவரி 10, 2026 அன்று வெளியாகிறது.
படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பகிர்ந்து கொண்டதாவது, “’பராசக்தி’ கதை நான் எழுதிய பின்பு பாராட்டுகளை பெற்ற அதேசமயம் கதையை சுற்றி பல சந்தேகங்களும் எழுந்தது. திரைக்கதை உருவாக்கமே கடினமாக இருந்தது. இந்தக் கதையை படமாக்குவது மிகவும் சவாலானதும் என்றும் படம் வெளியானதும் பல விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்றும், பலர் எச்சரித்தனர். இருப்பினும், மணி ரத்னம் சார் பின்பற்றும் 'சாத்தியமற்றதை சாத்தியமாக்க வேண்டும்' என்பதின் அடிப்படையில் பல சவால்களை தாண்டி இதை படமாக்கினேன்” என்றார்.
மேலும் பேசியதாவது, “படம் உருவாக்கத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சாருக்கு நன்றி. அவரது ஆதரவு இல்லாமல் ’பராசக்தி’ இல்லை. இந்தப் படத்தின் முதுகெலும்பு நடிகர் சிவகார்த்திகேயன். அவரது அர்ப்பணிப்பும், கதாபாத்திரத்திற்காக அவர் கொடுத்திருக்கும் உழைப்பும் நிச்சயம் பார்வையாளர்கள் மத்தியில் பேசப்படும்.
ரவி மோகனின் திரை ஆளுமை ‘பராசக்தி’ படத்தின் அசைக்க முடியாத பெரும்பலம். இந்தப் படத்தில் நடிக்கவேண்டும் என அவர் முடிவெடுத்ததற்கு நன்றி. திரைக்கதை எழுதும் போதே அதர்வா முரளியின் கதாபாத்திரம் என்னை உற்சாகப்படுத்தியது. அதர்வாவின் அர்ப்பணிப்பால் நான் எதிர்பார்த்ததைவிட திரையில் அவர் கதாபாத்திரம் இன்னும் நன்றாக வந்துள்ளது. நடிகை ஸ்ரீலீலாவை இந்தப் படத்தில் முற்றிலும் வேறொரு கோணத்தில் பார்ப்பீர்கள். அற்புதமான நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.
எனது படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை பெரும் பலம். ’பராசக்தி’ படத்தில் அவரது இசையை நிச்சயம் ரசிப்பீர்கள். ’பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவிலும் ரசிகர்களின் மனதிலும் நிச்சயம் தனியிடம் பிடிக்கும்” என்றார்.
விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பல வெற்றி படங்கள் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரு காலகட்டத்தை மறுஉருவாக்கும் செய்திருக்கும் ‘பராசக்தி’திரைப்படம் ஜனவரி 10, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













