சற்று முன்
சினிமா செய்திகள்
ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்
Updated on : 02 May 2018
திரையரங்கில் இருந்து வெளியே வரும் ரசிகர்கள், "இது முழுக்க முழுக்க ஒரு எண்டர்டெயினர் படம்" என்று சொல்லி விட்டு, மகிழ்ச்சியோடும், கொண்டாட்டத்தோடும் வீட்டுக்கு போகும்போது அப்படி ஒரு படத்தை எடுத்து, அவர்களுக்கு வழங்கிய படக்குழுவுக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும். இதுநாள் வரையில் ஸ்டுடியோக்ரீன் கேஈ ஞானவேல்ராஜா, இயக்குனர் ராஜேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் தங்களது துறைகளில் முழுக்க பொழுதுபோக்கு படங்களை வழங்கியவர்கள். தற்போது இந்த மூன்று பேரும் ஒரு படத்தில் இணைவது ட்ரிபிள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு அமையப் போவது உறுதி.
ஸ்டுடியோக்ரீன் ப்ரொடக்ஷன் நம்பர் 9 தற்போதைக்கு, சிவகார்த்திகேயன் 13 #SK13 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் சம்பிரதாய பூஜையுடன் இன்று துவங்கியது.
இந்த படத்தை பற்றி தயாரிப்பாளர் கேஈ ஞானவேல்ராஜா கூறும்போது, "ராஜேஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஆளுமைகள் ஒரு படத்தில் இணையும்போது, அந்த படம் என்ன மாதிரி படமாக இருக்கும் என ஆராய வேண்டியதில்லை. மேலும் ராஜேஷ் படங்களின் கதாநாயகர்களின் கதாபாத்திர சித்தரிப்பு, ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் எப்போதும் அமையும். எனவே சிவகார்த்திகேயன் படத்தில் ரசிகர்கள் என்ன ரசிப்பார்களோ அதை நிச்சயம் ராஜேஷ் இந்த படத்தில் கொடுப்பார் என நம்புகிறேன். மேலும் சிவகார்த்திகேயன் பொழுதுபோக்கு படங்களை கொடுக்கும் ஒரு நாயகனாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரும் பயனடைய வேண்டும் என்று நினைப்பவர். எனவே இந்த மாதிரி நேர்மறையான எண்ணங்களை உடைய மனிதர்களோடு இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன், ரசிகர்கள் ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கலாம். மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என்றார்.
சமீபத்திய செய்திகள்
குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!
வீழ்ச்சியை சந்தித்த ஒரு வயதான கேங்க்ஸ்டர், தனது இழந்த அதிகாரத்தையும் குடும்பத்தையும், குறிப்பாக தலைமுறைகளாக கடந்து வந்த பாரம்பரிய மரபையும் மீட்டெடுக்க முயலும் கதையைக் களமாக கொண்டு உருவாகி வரும் பிரம்மாண்டமான வெப் தொடர் ‘லெகஸி’.
‘லெகஸி’ குறித்து படக்குழு பகிர்ந்து கொண்டதாவது,
“‘லெகஸி’ எங்களுக்கெல்லாம் ஒரு முக்கியமான சாப்டர். அதிகாரம், வெற்றி, தோல்வி, குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான மோதல்கள் ஆகியவற்றை ஆழமாக உணர்ந்து இந்தக் கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளோம். குற்ற உலகத்தை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், கடந்த தலைமுறைகளில் விட்டுச் சென்ற பாரம்பரியம், தற்போதைய ஆசைகளுடனும் விசுவாசத்துடனும் எவ்வாறு மோதுகிறது என்பதே மையமாக இருக்கும்,” என்றனர்.
மேலும், இந்தக் கதையை திரையில் உருவாக்குவது பிரம்மாண்டமான முயற்சியும், பலரின் கூட்டு உழைப்பும் தேவைப்பட்டதாகவும், அந்த நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்கிய நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கு படக்குழு தனது நன்றியை தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள ‘லெகஸி’, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில், அதிகாரம், குடும்பம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு வலுவான க்ரைம் டிராமாவாக உருவாகி இருப்பதாக படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி
புதிய திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதும், ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் கதாபாத்திரங்களையும் நடிகர்களையும் திரையில் அறிமுகப்படுத்துவதும், சமூகத்தை பிரதிபலிக்கும் வலுவான கதைகளை முன்னிலைப்படுத்துவதுமாக ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டுகளில் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருதுகள் வழங்கி கௌரவித்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் வெளியான விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்ற ‘கூழாங்கல் (Pebbles)’ திரைப்படம், சிறந்த திரைப்படத்திற்கான மாநில விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் செல்லபாண்டி, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றுள்ளார். எந்தவித சமரசமும் இன்றி உணர்வுகளின் வலிமையோடு கதையை திரையில் வடித்த இயக்குநர் பி. எஸ். வினோத்ராஜ் அவர்களுக்கு ரௌடி பிக்சர்ஸ் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
அதேபோல், 2021 ஆம் ஆண்டு வெளியான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் பெண்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு, சமூகத்திற்கு வலுவான கருத்துகளை எடுத்துரைத்ததற்காக சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றுள்ளது. சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய கருத்தை தாக்கம் ஏற்படுத்தும் வகையில் திரையில் வடிவமைத்த இயக்குநர் மிலிந்த் ராவ் அவர்களுக்கு ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
மேலும், சமூக நெறிமுறைகளை வலியுறுத்திய ‘அறம்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை நயன்தாரா, 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகை விருதை பெற்றிருப்பதும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இப்படத்தை இயக்கிய கோபி நயினார், தயாரிப்பாளர்கள் கோடபாடி ஜே. ராஜேஷ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ஆகியோருக்கும் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.
இந்த விருதுகள், இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கிரியேட்டிவ் குழுக்களின் முழு அர்ப்பணிப்பின் விளைவே என்றும், சமூக பொறுப்புணர்வுடன் கூடிய தரமான திரைப்படங்களை தொடர்ந்து உருவாக்கவும், புதிய திறமையாளர்களுக்கான தளமாகவும் ரௌடி பிக்சர்ஸ் செயல்பட இந்த அங்கீகாரம் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தூய்மை பணியாளர் பத்மாவுக்கு பார்த்திபன் வழங்கிய மரியாதை!
பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் பத்மா, தனது நேர்மை மற்றும் மனிதநேய செயலால் ஒட்டுமொத்த சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். கடந்த மாதம் தி.நகரில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சாலையில் கிடந்த ஒரு பையை கண்டெடுத்த பத்மா, அதில் இருந்த 45 சவரன் தங்க நகைகளை எந்த தயக்கமுமின்றி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் விசாரணையில், அந்த நகைகள் நங்கநல்லூரைச் சேர்ந்த பரமேஷ் என்பவருக்குச் சொந்தமானவை என்பது உறுதி செய்யப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த மனிதநேய செயலுக்கு தமிழ்நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு சமூக அமைப்புகள் வரை பத்மாவை பாராட்டியுள்ள நிலையில், மத்திய அரசின் சார்பில் அவரை கௌரவிக்கும் வகையில் தபால் தலை வெளியிடப்பட்டது. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்மாவை அவரது இல்லத்திற்கு வரவழைத்து தங்க சங்கிலி பரிசளித்து கௌரவித்ததும் கவனம் பெற்றது.
இந்நிலையில், புதுமைகளின் புகலிடமாக விளங்கும் இயக்குநரும் நடிகருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபன், பத்மாவை சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரிக்கு அழைத்து சென்று மாணவிகள் முன்னிலையில் கௌரவித்தார். கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்மாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவிகளுக்கு நேர்மையின் அவசியத்தை தனது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய பார்த்திபன்,
"எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்த நிலையில் விருந்தினராக நானும் சிறப்பு விருந்தினராக பத்மா அவர்களும் கலந்து கொண்டால் என்ன என்று தோன்றியது திருவல்லிக்கேணியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அவரை இந்த நிகழ்ச்சியில் என்னுடன் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தேன். அதை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்ட அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எத்திராஜ் கல்லூரியின் மாணவிகளுக்கு ஊக்கம் அளித்தார். தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் இன்றைய சூழ்நிலையில் 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்த எளிய மனிதரான அவரது உயர்ந்த உள்ளத்தை பாராட்டும் வகையில் அவருக்கு புதிய காலணிகளையும், புடவையையும் வழங்கி அவரிடம் ஆசி பெற்றேன். இது ஒரு மகிழ்ச்சியான தருணமாக என்றென்றும் நினைவில் நிற்கும் " என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பத்மா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. மேலும், சவாலான வேலையான தூய்மை பணியாளராக பணியாற்றும் பத்மா அவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் ஆட்டோ ஓட்டுநரான அவரது கணவர் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறினார்.
திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பத்மாவின் இந்த நேர்மையான செயல், “நேர்மை இன்னும் உயிருடன் இருக்கிறது” என்பதற்கான வாழும் உதாரணமாக சமூகத்தில் பேசப்பட்டு வருகிறது.
அரசியல் அல்ல, முழு எண்டர்டெய்னர் - ‘லீடர்’ குறித்து லெஜெண்ட் சரவணன் விளக்கம்
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜெண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. இதனையொட்டி, படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வைக்கான பிரத்யேக காணொலி (First Look Glimpse) சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.
இயக்குநர் R. S. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வருகிறது. லெஜெண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், பிரபாகரன், அமிர்தா ஐயர், VTV கணேஷ், பேபி இயல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை S. வெங்கடேஷ், இசையை ஜிப்ரான் வைபோதா, படத்தொகுப்பை பிரதீப் E. ராகவ், கலை இயக்கத்தை G. துரைராஜ் மேற்கொண்டுள்ளனர். Legend Saravanaa Stores Productions நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘லீடர்’ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. A. M. விக்ரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டைட்டிலை வெளியிட்டார்.
திரு. விக்ரமராஜா பேசுகையில், "லெஜெண்ட் சரவணனின் இரண்டாவது படத்தின் பெயர் வெளியிட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. நாடறிந்த தொழிலதிபர் சரவணன் என்பது அனைவருக்கும் தெரியும்.
தகப்பனார் ஒரு பிரபலமான நிறுவனத்தை ஸ்தாபித்து அதனை பிள்ளைகளின் கைகளில் கொடுக்கும் போது சில பிள்ளைகள் வெற்றி பெறுவதுண்டு, சில பிள்ளைகள் தோற்றுப் போவதுண்டு. ஆனால் இதற்கெல்லாம் மாற்றாக கடுமையாக உழைத்து ஆசியா கண்டத்திலேயே சிறந்த விற்பனையாளர் என்று உயர்ந்து கொண்டிருப்பவர் தான் மரியாதைக்குரிய சகோதரர் லெஜெண்ட் சரவணன். இது அவருடைய இரண்டாவது திரைப்படம். அவருடைய முதல் படத்தை நான் பார்த்திருக்கிறேன். மிக நன்றாக இருக்கும். அதுவும் வெற்றிப்படம் தான். ஆனால் இந்த படம் அதையும் தாண்டி சிறந்த மைல்கல் படமாக திகழும். இது வெற்றி பெறுவது நிச்சயம். இதை யாரும் தடுத்திட இயலாது. இந்த 'லீடர் ' கட்டாயம் வெற்றி பெறுவார்.
இரண்டரை மணி நேர திரைப்படம் என்று சொன்னாலும் மக்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக மக்கள் அதை பார்த்து ரசிக்கக்கூடிய வகையிலும், மன மகிழ்ச்சியோடு வரக்கூடிய சூழலிலும் இந்த படம் அமையவிருக்கிறது.
இந்த திரைப்படத்தை திட்டமிட்டு பணியாற்றி இரவு பகல் பாராது உழைத்திருக்கிறார்கள். இந்த படம் வெற்றி பெறும். இந்த விழாவில் எங்களையும் அழைத்து கௌரவப்படுத்தியதற்காக நன்றி. தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஒரு பெட்டிக்கடை நடத்தும் சாமானிய வணிகர்களை கௌரவப்படுத்தும் வகையில் இந்த மேடை அமைந்திருக்கிறது. ஆகவே இந்த நிகழ்ச்சி எங்களுடைய குடும்ப நிகழ்ச்சி. ஒவ்வொரு வணிகர்களும் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக எப்படி கடுமையாக உழைத்து, முன்னேற வேண்டும் என்பது குறித்து தான் நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் சரவணன் அவர்கள் விவாதிப்பார்.
ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் கம்பெனிகள், இது போன்ற நிறுவனங்களால் சாமானிய வணிகர்கள் பாதிக்கப்படாமல் அவர்களை பாதுகாப்பதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறீர்கள் என்பது குறித்து தான் பேசுவார். ஜிஎஸ்டி பிரச்சினையாக இருந்தாலும், உணவு பாதுகாப்பு துறை சட்டம் சம்பந்தமான விஷயமாக இருந்தாலும் சாமானிய வியாபாரிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அதிக அக்கறையுடன் விவாதிக்க கூடியவர். அவர்கள் மீது உள்ளன்போடு இருப்பவர்தான் லெஜெண்ட் சரவணன்.
லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படம் வெளியான பிறகு உலகம் முழுவதும் சரவணனின் பெயர் கொடி கட்டி பறக்கும்,'' என்றார்.
படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில், "ஒவ்வொரு இயக்குநரும் பல திரைப்படங்களை இயக்கியிருப்பார்கள். அதில் நாம் சிலவற்றை தவறவிட்டிருப்போம். அந்த வகையில் நான் ஒரு இயக்குநரின் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன் என்றால் அது இயக்குநர் ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான படங்களைத் தான். அவருடைய படங்களை பார்க்கும்போது எல்லா தரப்பினருக்கும் ஏற்றதாக இருக்கும். அவரிடம் எல்லா படங்களையும் என்டர்டெய்ன்மென்டாக வழங்கும் மேஜிக் இருக்கிறது. அந்த மேஜிக் இந்த படத்தில் இன்னும் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் ரொம்ப நாளாக இத்தகைய ஜானரிலான படங்களை தவறவிட்டிருக்கிறோம். அதை லீடர் படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களுக்காக உருவாக்கி இருக்கிறோம்.
நான் சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப் படத்தில் பணியாற்றி இருக்கிறேன். லெஜெண்ட் நடிக்கும் படத்தில் பணியாற்றும்போது, என்னை சந்திக்கும் பலரும் சிறப்பான இசையை வழங்குங்கள் என்று உற்சாகப்படுத்தியுள்ளனர். அவருடைய படத்தை குடும்ப ரசிகர்கள் அனைவரும் திரண்டு வந்து பார்ப்பார்கள். அதனால் பாடலையும் பின்னணி இசையையும் சிறப்பாக உருவாக்குங்கள் என அன்பாக வேண்டுகோள் விடுத்தனர். அந்த வகையில் இந்த படத்தில் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி. திங்க் மியூசிக் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனைய விஷயங்களைப் பற்றி தொடர்ந்து பேசுகிறேன். இந்த தருணம் மகிழ்ச்சியானதாக இருக்கிறது. அனைவருக்கும் நன்றி,'' என்றார்.
இயக்குநர் R. S. துரை செந்தில்குமார் பேசுகையில், "இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸை பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் வெளியிடுவோம் என தயாரிப்பாளரான சரவணன் சார் என்னிடம் சொன்னார். ஊடகங்கள் பிள்ளையார் சுழி மட்டுமல்ல, பிள்ளையாரே அவர்கள் தான். மக்கள் என்ற கடவுளை சந்திப்பதற்கு முன் பிள்ளையாரான பத்திரிகையாளர்களை நாங்கள் தற்போது சந்தித்திருக்கிறோம்.
2022ம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் இருந்து லெஜெண்ட் சரவணன் அவர்களை சந்தித்து பேச்சு வார்த்தையை தொடங்கினேன். 5, 6 மாதங்கள் கழித்து தான் இப்படத்திற்கான பணிகளை இறுதி செய்து தொடங்கினோம்.
அந்தத் தருணத்தில் அவரை சந்தித்து பேசும் போதெல்லாம் அவர் ஆசைக்காகத் தான் நடிக்க வந்திருக்கிறார் என்று தான் நான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அவருடனான தொடர் சந்திப்பில் அவரின் பேச்சு மூலம் சினிமாவை பற்றிய அனைத்து விஷயங்களை நுணுக்கமாக பார்க்கக் கூடியவர் அவர் என்பது தெரிந்தது. அதன் பிறகு தான் அவர் நடிக்க வந்தது ஆசையால் அல்ல என்பது புரிந்தது.
சாதாரணமாக அவருடனான சந்திப்பின்போது ஒருமுறை அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருக்கும் போது சில இந்தி நடிகர்களின் போட்டோக்களை வீட்டில் ஒட்டி இருந்தாராம். அது தொடர்பாக அவரது அம்மா கேட்டபோது, 'நான் இவர்களைப் போல் எதிர்காலத்தில் வரவேண்டும், வருவேன்" என்றாராம். அதன் பிறகு அவர் தன்னுடைய குடும்பத்திற்காகவும், கடமைகளுக்காகவும் கடுமையாக உழைத்து உச்சத்தை எட்டி இருக்கிறார். இருந்தாலும் அந்த சிறுவனுடைய ஆசையை, கனவை ஒரு இளைஞனாக- இளைஞர்களுக்கான உத்வேகத்துடன் இந்தப் படத்தை தயாரித்து நடித்திருக்கிறார். இது எனக்கு உண்மையிலேயே சிறந்த முன்னுதாரணமாக இருந்தது.
அவருடன் பழகிய இந்த இரண்டு ஆண்டுகளில் அவருடைய கடும் உழைப்பை நேரில் பார்த்து வியந்து இருக்கிறேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அவரிடம் உள்ள அசாத்தியமான துணிச்சலும் தன்னம்பிக்கையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
படப்பிடிப்பு தளங்களில் அவருடனான அனுபவம் ஒவ்வொன்றும் மறக்க முடியாதது.
ஒவ்வொரு இயக்குநருக்கும் அல்டிமேட் கோல் என்னவென்றால், அவர் நினைத்ததை நினைத்த வகையில் உருவாக்கிட வேண்டும் என்பது தான். அதற்கு முழுமையான சுதந்திரமும், அனுமதியும் வழங்கும் தயாரிப்பாளர் தான் தேவை. அந்த வகையிலான ஒரு நல்ல தயாரிப்பாளராகவும், நான் எதைச் சொன்னாலும் அதனை அப்படியே கேட்டு செய்வதற்கு தயாராக இருக்கக்கூடிய நடிகராகவும் அவர் இருந்தார். அவரின் இந்த துணிச்சலை கண்டு தான் நான் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். இந்த படம் எங்களுக்கு மன நிறைவை அளித்திருக்கிறது. உங்களுடைய ஆதரவிற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். நன்றி,'' என்றார்.
தயாரிப்பாளர் / நடிகர் லெஜண்ட் சரவணன் பேசுகையில், "லீடர்- இந்த படத்தின் டைட்டிலை பார்த்தவுடன் உங்கள் அனைவருக்கும் அரசியல் சார்ந்த படமா, அல்லது எந்த மாதிரி படம் என்ற கேள்வி வரும். இந்தப் படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகளோ, அரசியல் சார்ந்த வசனங்களோ ஒரு துளி கூட கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் என்டர்டெய்னர் ஃபிலிம். தற்போது வெளியாகி இருக்கும் க்ளிம்ப்ஸ் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இருக்கும். இந்த படத்தின் எசன்ஸ் இதுதான். இதே போல் தான் படம் முழுவதும் இருக்கும்.
இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும், பிள்ளையும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். திடீரென்று அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்க் நுழைந்து விடுவார்கள். அதற்குப் பிறகு நடக்கும் விஷயங்களை தான் என்னுடைய இயக்குநர் துரை செந்தில்குமார் அற்புதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினருக்கு பிடித்தமான வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார். இதுதான் முக்கியமானது.
ஏனெனில் கதைகள் ஏராளமாக இருக்கும். ஆனால் திரைக்கதை அமைப்பது தான் சவாலானது. அந்த வகையில் இந்தப் படத்தில் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநர் துல்லியமாக செதுக்கி செதுக்கி உருவாக்கி இருக்கிறார்.
ஜிப்ரானின் பின்னணி இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். அதேபோல் படத்தின் கதையோட்டத்திற்கு தகுந்தாற்போல் பாடல்களுக்கும் அவர் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்திற்காக தூத்துக்குடியில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அதன் பிறகு ஜார்ஜியா நாட்டில் 15 நாட்கள் படபிடிப்பு நடத்தினோம். ஜெய்ப்பூர், சென்னை , ஊட்டி ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தினோம். ஒவ்வொரு காட்சியிலும் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அற்புதமாக பணியாற்றி இருக்கிறார்.
சமீபத்தில் வெளியான 'டிராகன்' மற்றும் 'ஜனநாயகன்' படங்களில் பணியாற்றிய எடிட்டர் பிரதீப் ராகவ் தான் இப்படத்திற்கும் எடிட்டராக பணியாற்றி இருக்கிறார். இந்த படத்திலும் அவர் நேர்த்தியாக பணியாற்றி இருக்கிறார் அவருக்கும் என் வாழ்த்துக்கள்.
கலை இயக்குநர் துரைராஜுக்கும் என் வாழ்த்துக்கள். படப்பிடிப்பு தளத்திற்கு சண்டை பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூ வந்துவிட்டால் அந்தத் தளமே உற்சாகமடைந்திடும். அந்த அளவிற்கு உத்வேகத்துடன் பணியாற்றுவார்.
சிறிய வயதில் இருந்தே எனக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது. என்னுடைய வீட்டில் உள்ள பிரிட்ஜில் ஒரு பக்கம் சல்மான் கான், ஒரு பக்கம் ஷாருக்கான் ஆகியோரின் புகைப்படங்களை ஒட்டி இருப்பேன். என் தாயிடம் என்றைக்காவது ஒரு நாள் இவர்களைப் போல் நான் ஸ்டார் ஆவேன் என சொல்லி இருக்கிறேன். இதைக் கேட்ட என் தாய் 'சந்தோஷம்' என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்.
நான் என்னுடைய தந்தையார் மீது மிகுந்த பக்தியும், மரியாதையும் வைத்திருக்கிறேன். அதன் காரணமாக குடும்ப தொழிலில் ஈடுபட்டு, என்னுடைய தந்தையாருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். அதன் பிறகு என்னை நம்பி முழு பொறுப்பையும் வழங்கி விட்டார். நான் கடுமையாக உழைக்கத்தொடங்கினேன். என்னுடைய நிறுவனத்தில் காலையில் முதல் ஆளாக உள்ளே நுழைவேன். அனைவரும் சென்ற பிறகு கடைசி ஆளாக வெளியேறுவேன். ஆரம்பம் முதல் இன்று வரை இப்படித்தான் தொடர்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் இதைத்தான் கடைப்பிடித்தேன். படப்பிடிப்பு தளத்திற்கு முதல் ஆளாக செல்வேன். அங்கிருந்து கடைசி ஆளாக வெளியேறுவேன். நான் எந்த வேலையை செய்தாலும் அதில் முழு கவனத்துடன் அர்ப்பணிப்புடன் உழைப்பேன். இதுதான் என்னுடைய கேரக்டர்.
இன்றைக்கு ஒரு பக்கம் கன்டென்ட் உள்ள படங்கள் தான் வெற்றி பெறும் என்கிறார்கள். மறுபக்கம் மாஸான ஆக்ஷன் படங்கள்தான் வெற்றி பெறும் என்கிறார்கள். இந்த படத்தில் நல்ல கதையம்சமுள்ள கன்டென்ட்டும் இருக்கிறது. மாஸான ஆக்ஷன் எலிமெண்ட்டும் இருக்கிறது. இந்த திரைப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
படத்தை பார்த்த நானும் எங்களுடைய படக் குழுவினரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதே மகிழ்ச்சியும், சந்தோஷமும், மன நிறைவும் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் கிடைக்கும் என நினைக்கிறேன்.
சினிமா என்பது ஒரு தனிநபரின் வெற்றி அல்ல. சினிமாவில் பல ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். படத்தை திரையிடும் திரையரங்குகளிலும் பல ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாக நான் ஒவ்வொரு திரைப்படமும் வெற்றியடைய வேண்டும் என நினைப்பேன்.
சினிமா துறை தற்போது கொஞ்சம் இறங்கு முகமாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு சற்று குறைந்திருக்கிறது. புதிதாக வருபவர்களுக்கும் வேலை வாய்ப்பு முழுமையாக கிடைப்பதில்லை. அதனால் தான் நான் எப்போதும் ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி அடைய வேண்டும் என நினைப்பேன். அதேபோல் பத்திரிகையாளர்களாகிய நீங்களும் இந்த சினிமாத்துறை வளர்ச்சி அடைவதற்கும், மீண்டும் எழுச்சி பெறுவதற்கும் உங்களாலான பங்களிப்பை தொடர்ந்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலை பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிடுகிறோம். அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் ஆறாம் தேதி இப்படத்திற்கான க்ளிம்ப்ஸ் வெளியிடுகிறோம்.
இந்த திரைப்படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு முன்னதாக பிரம்மாண்டமான முறையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும். அந்த விழாவில் இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்," என்றார்.
Fire Fox Film House தயாரிப்பில் புதிய போலீஸ் லவ் கமர்ஷியல் படம், படப்பிடிப்பு தொடக்கம்!
Fire Fox Film House நிறுவனம் சார்பில் சரணிகா தயாரிப்பில், இயக்குநர் மணிகண்டன் செல்வராஜ் இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் புரொடக்ஷன் நம்பர் 1 படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இயக்குநர் அறிவழகன் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிகண்டன் செல்வராஜ், இந்தப் படத்தின் மூலம் முழுநீள இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
தமிழ் ரசிகர்கள் புதிய கதைகளையும், வித்தியாசமான திரைக்கதை அமைப்புகளையும் வரவேற்கும் சூழலில், ஒரு போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் உருவாகும் இந்த படம், ஒரு காதல் ஜோடியை மையமாகக் கொண்டு, ஆக்ஷன், உணர்ச்சி மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் சமநிலையில் கலந்த ஒரு முழுமையான எண்டர்டெயினராக உருவாகி வருகிறது. விறுவிறுப்பான கதை நகர்வு மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பு இப்படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில் மணிகண்டன் செல்வராஜ் நாயகனாக நடிக்க, இயக்குநரும் நடிகருமான ஆ. வெங்கடேஷ் கதையின் திருப்புமுனையாக அமையும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். டாக்டர் படத்தின் மூலம் கவனம் பெற்ற ஸ்ரீஜா ரவி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க, டைரி, குற்றம் 23 போன்ற படங்களில் நடித்த தணிகை உட்பட பல புதிய முகங்கள் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 05-02-26 அன்று சென்னையில் தொடங்கப்பட்டு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
Fire Fox Film House தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கிரி மர்ஃபி ஒளிப்பதிவு செய்ய, புதுமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் உருவாகும் இந்த புதிய காதல்–ஆக்ஷன் கமர்ஷியல் படம், ரசிகர்களிடையே எந்த அளவுக்கு கவனம் பெறும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
ராம் சரண்–புச்சி பாபு சானா கூட்டணியில் ‘பெத்தி’, ஏப்ரல் 30 உலகளாவிய திரையரங்கு வெளியீடு!
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் "பெத்தி" யின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஏப்ரல் 30 என்ற முக்கியமான கோடை வெளியீட்டு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறை காலத்தை முழுமையாகப் பயன்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வெளியீட்டு தேதி அறிவிப்பு போஸ்டரில், ராம் சரண் இதுவரை காணாத முற்றிலும் புதிய, மாஸ் தோற்றத்தில் ரசிகர்களை கவர்கிறார். அலங்கோலமான நீளமான முடி, கனமான தாடி, மூக்கில் அணிந்த வளையம் ஆகியவை அவரது கதாபாத்திரத்திற்கு தனித்துவம் சேர்க்கின்றன. புகை சூழ்ந்த இருண்ட பின்னணியில், சோர்வும் கடுமையும் கலந்த முகபாவனையுடன் கூட்டத்தைக் கடந்து முன்னேறும் அவரது தோற்றம், போராட்டம் மற்றும் எதிர்ப்பின் தீவிரத்தை வலுவாக வெளிப்படுத்துகிறது.
‘பெத்தி’யின் புரமோஷன் உள்ளடக்கங்கள் வெளியாகியதிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. முன்னதாக வெளியான க்ளிம்ப்ஸ், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் A.R. ரஹ்மான் இசையமைத்த “சிக்கிரி சிக்கிரி” பாடல் அனைத்து தளங்களிலும் அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடல் இதுவரை 200 மில்லியன் பார்வைகளை கடந்து, பல சாதனைகளை நோக்கி பயணித்து வருகிறது.
படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளதுடன், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். ராம் சரண், தனது திரைப் பயணத்தில் இதுவரை காணாத ஒரு புதிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் உருவாகும் ‘பெத்தி’ படத்திற்கு வலுவான தொழில்நுட்பக் குழு இணைந்துள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற A.R. ரஹ்மான் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு காட்சிகளைப் பிடிக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பை கவனிக்க, அவிநாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பின் மூலம் படத்தின் உலகத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார்.
கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த ஆக்சன்-ஸ்போர்ட்ஸ் டிராமா, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் இந்தியிலும், பான்-இந்தியா அளவில் ஏப்ரல் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'பராசக்தி' ZEE5-ல், பிப்ரவரி 7 முதல் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு!
இந்தியாவின் முன்னணி உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அரசியல் ஆக்ஷன் டிராமா திரைப்படமான "பராசக்தி"யை 2026 பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராக வெளியிடுகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், Dawn Pictures நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்த திரைப்படம், தமிழ்நாட்டின் சமூக–அரசியல் வரலாற்றிலிருந்து ஒரு முக்கியமான காலகட்டத்தை திரையில் உயிர்ப்பிக்கிறது.
1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள பராசக்தி, அடையாளம், சுயமரியாதை மற்றும் எதிர்ப்பின் குரல் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்டு, அந்த காலத்தின் அரசியல் சூழலில் சிக்கிக்கொள்ளும் இரு சகோதரர்களின் உணர்ச்சிபூர்வமான பயணத்தை சித்தரிக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடும், கொள்கை உறுதியான இளைஞரான செழியன் என்ற கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் ஸ்ரீலீலா முக்கிய பெண் கதாபாத்திரமான ரத்னமாலாவாக தோன்றுகிறார்.
திரைப்படத்தின் பின்னணி குறித்து பகிர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா...,
“மரியாதை, மொழி மற்றும் மக்களின் கூட்டுச் சிந்தனையின் சக்தி குறித்து ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற ஆழமான விருப்பத்திலிருந்து பராசக்தி உருவானது. இது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல; ஒருவரின் அடையாளம் கேள்விக்குள்ளாக்கப்படும்போது, சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை இக்கதை பேசுகிறது. நம் குரல்கள், பண்பாடுகள், வரலாறுகள் குறித்து அறிந்து கோள்ள வேண்டிய அவசியத்தை பேசும் இப்படைப்பை, உலகளாவிய பார்வையாளர்களிடம் ZEE5 கொண்டு செல்கிறது என்பது பெரிய மகிழ்ச்சி என்று கூறினார்.
சிவகார்த்திகேயன் கூறுகையில்,
“செழியன் எனக்கு மிகவும் பிடித்த அழுத்தமான, அர்த்தமுமிக்க கதாபாத்திரங்களில் ஒன்று. நம்பிக்கை, துணிவு மற்றும் உண்மையாக முக்கியமான விஷயங்களுக்காக குரல் கொடுப்பதற்கான பொறுப்பு ஆகியவற்றின் பிரதிநிதியாக செழியன் இருக்கிறான். பராசக்தி என்னை ஒரு நடிகராகவும், ஒரு மனிதராகவும் பல சவாலுக்கு உள்ளாக்கியது. இப்போது இந்த பயணத்தை ZEE5 வழியாக பார்வையாளர்கள் அனுபவிக்கவிருக்கிறார்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்,” என்றார்.
ஸ்ரீலீலா கூறுகையில்,
“பராசக்தி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மைல்கல்லாகும். ரத்னமாலா கதாப்பாத்திரம் அமைதியான வலிமையும் கருணையும் கொண்ட கதாபாத்திரம். இவ்வளவு கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கதையின் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு பெருமை. இந்த வேடத்தில் என்னை நம்பிய சுதா மேடம் மற்றும் முழு குழுவுக்கும் என் நன்றி,” என்றார்.
எதிர்ப்பு, சகோதரத்துவம் மற்றும் அடையாளத்தின் அரசியல் ஆகியவற்றை தீவிரமாக பேசும் பராசக்தி திரைப்படத்தை, பிப்ரவரி 7 முதல் ZEE5 தளத்தில் காணலாம்.
கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி
சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில், எம்.ஆர். பாரதி கதை எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ட்ரீம் கேர்ள்’. மசாலா கலப்பில்லாத, முழுக்க முழுக்க காதலும் கனவுகளும் மையமாக அமைந்த இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தி மற்றும் நடிகை பபிதாவின் மகளான ஹரிஷ்மிதா அறிமுகமாகிறார். இவர்களுடன் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் எம். ஆர். பாரதி பேசும்போது,
" இது ஒரு காதல் கதை.கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு.கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டும் என்று கனவு. இப்படி இருவரும் கனவைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.மற்றபடி இருவருமே ஜாலியாக வாழ்க்கையை, அதன் போக்கில் போகவிட்டு மகிழ்ச்சியின் தருணங்களை ஒரு சொட்டு கூட வீணடிக்காமல் வாழத் துடிப்பவர்கள்.
நவீன உலகத்தின் சமகாலப்பிரதியாகவும் பிரதிநிதியாகவும் அந்த இருவரும் இருக்கிறார்கள்.அவர்களுக்குள் காதல் வருகிறது. கனவைத் துரத்தும் அவர்களுக்குள் ஒரு கனவும் வருகிறது.அது சில மாயங்களைச் செய்கிறது.அதன் வர்ணஜால விளைவுகளைச் சொல்வதுதான் 'ட்ரீம் கேர்ள்' படம்.
இது மசாலா கலப்பில்லாத ஒரு முழுமையான காதல் கதை.படத்தில் வில்லனே கிடையாது, வேண்டுமானால் கனவு தான் வில்லன் என்று கூறலாம்.
கதையில் குளுமை இருப்பதால் இதன் படப்பிடிப்பை முழுக்க முழுக்க ஊட்டியிலேயே நடத்த திட்டமிட்டேன். அதன்படியே நடைபெற்றுள்ளது "என்கிறார்.
படப்பிடிப்பு அனுபவத்தைக் கேட்டபோது,
"இது 20 நாட்களில் முழுப் படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்ட படம்.'சில்ட்ரன் ஆப் ஹெவன்' மிகக்குறைந்த நாளில் எடுக்கப்பட்ட படம்.ஆறு - ஏழு லட்சத்தில் முடிந்த படம். பெரிய படமான 'ப்ரேவ் ஹார்ட் 'கூட 80 கால்ஷீட்டில் முடிக்கப்பட்ட படம் என்றால் நம்ப முடியாது அல்லவா?
இன்று வருகிற மிகச் சாதாரண படங்களுக்குக் கூட 60 நாட்கள் 70 நாட்கள் என்று படப்பிடிப்பு நடைபெறுகின்றன. ஒரு கோடி இரண்டு கோடி என்று செலவு செய்கிறார்கள்.
இது மிகவும் தவறான போக்கு. சரியான திட்டமிடல் இல்லாதது, சினிமாவைப் புரிந்து கொள்ளாதது , தொழில்நுட்பங்களைக் கையாளத் தெரியாதது போன்றவைதான் இதற்கெல்லாம் காரணம்.
சரியாகத் திட்டமிட்டால் 25 லட்ச ரூபாயில் ஒரு நல்ல படம் எடுக்க முடியும் .
நல்ல படம் ஓடினால் அது பெரிய படம். ஆனால் அதே படத்துக்கு இரண்டு கோடி செலவழிக்கிறார்கள் .சில லட்சங்கள் என்றால் ஒரு தயாரிப்பாளர் தாங்குவார். ஆனால் கோடி ரூபாய் இழப்பு என்றால் அவர் எப்படித் தாங்க முடியும்? இப்படிப்பட்ட திட்டமிடாத சிலரால் தான் சினிமா நெருக்கடியில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது.
வணிக மதிப்புள்ள கதாநாயகர்களுக்குக் கோடிக்கணக்கில் செலவு செய்வதைக் குறை சொல்ல முடியாது. எப்படியாவது வியாபாரம் ஆகிவிடும். சமாளித்துக் கொள்வார்கள். ஆனால் இப்படியான சிறு முதலீட்டுப் படங்களுக்குச் சில லட்சங்களைத் தாண்டினால் தயாரிப்பாளரால் இழப்பைத் தாங்க முடியாது" என்றார்.
இதைத் தடுப்பதற்குரிய வழியாக அவர் கூறுவது என்ன?
"சரியாகத் திட்டமிட்டு நன்றாக நடிக்கத் தெரிந்த புதுமுகங்களை வைத்து எடுத்தால் அந்தப் படம் நிச்சயமாக கவனிக்கப்படும். அதிக திரையரங்களில் வெளியிடாமல் குறைந்த திரையரங்குகளில் வெளியிட்டு நல்ல படம் என்று பெயர் பெற்றால் போதும். படம் தப்பித்து விடும். நல்ல படம் ஓடினால் அது பெரிய படமாக மாறிவிடும்.அந்தப் படம்
வெளியான முதல் காட்சி - அந்த ஒரு காட்சியே படத்தின் தலைவிதியைச் சொல்லிவிடும். இப்போது படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் போதும் .செய்தி தீ போல பரவிவிடும். ஒரு காட்சியை வைத்தே அதன் தலைவிதி தெரிந்து விடும்.
அந்த நம்பிக்கையில் தான் நான் இந்தப் படத்தை சில லட்சங்களில் எடுத்து இருக்கிறேன்.ஏழு லட்ச ரூபாயுடன் ஊட்டிக்குச் சென்றேன் .சரியாகத் திட்டமிட்டோம். அதனால் ஒருநாளும் படப்பிடிப்பு தடை பட்டதில்லை. நண்பர்கள் உதவினார்கள் இயற்கை உதவியது. பனியும் மழையும் நாங்கள் எதிர்பார்த்த நேரத்தில் வந்து உதவி செய்தன.சரியாகத் திட்டமிட்டுப் படப்பிடிப்பு நடக்கும் இயற்கை நிலைகளைத் தேர்வு செய்தோம் .ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்து நேரத்தை வீணடிக்கவில்லை.எல்லாமே சுமுகமாக நடந்தது"என்றவர், நடிகர்கள் தேர்வு பற்றிப் பேசும்போது,
"நான் இந்தக் கதையை வைத்துக் கொண்டு தயாரிப்பாளரைத் தேடி அலையவில்லை. திறமைசாலிகளை மட்டுமே தேடினேன் .அதற்குரிய பலன் கிடைத்தது. இதில் நடித்திருக்கும் நாயகனும் சரி, நாயகியும் சரி, பிறபாத்திர நடிகர்களும் சரி அருமையாக நடித்திருக்கிறார்கள். நான் அவர்களை -அழகையும் தோற்றத்தையும் வைத்து தேர்வு செய்யவில்லை. நடிப்புத் திறமையை மட்டுமே வைத்து தேர்வு செய்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.இதில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் அனைவரும் திறமையின் வழியாகத்தான் இந்தப் படத்திற்குள் வந்தார்கள்.
நான் இதற்கு முன்பு 'அழியாத கோலங்கள் 2 'என்ற படத்தை இயக்கி இருந்தேன்.அதன் படப்பிடிப்பை 12 நாள்களில் முடித்திருந்தேன். நான் செலவு செய்த தொகையை கலைஞர் டிவியிலிருந்தே எனக்குக் கொடுத்து விட்டார்கள். தேவையில்லாமல் செய்த சில செலவுகள்தான் எனக்கு இழப்பு .மற்றபடி இன்று ஏராளமான வியாபார வழிகள் உள்ள சினிமாவில் சரியாகப் புரிந்து கொண்டு திட்டமிட்டுப் படமெடுத்து வெளியிட்டால் இழப்புக்கு வழியே இல்லை என்பது என் கருத்து" என்கிறார்.
விஜய் நடித்த 'ஜனநாயகன்' பிரச்சினைக்குப் பிறகு திரைப்படத் தணிக்கைத் துறை படைப்புக்கு எதிராக இருப்பது போல் ஒரு கருத்து நிலவுகிறது. இதற்கு இவர் என்ன பதில் கூறுகிறார்?
" தணிக்கைத் துறை நல்ல படைப்புக்கு எதிராக இருப்பதாக நான் நினைக்கவில்லை.சென்சார் போர்டு எனப்படும் தணிக்கைத் துறைக்கென்று சில விதிகள் உள்ளன. அதன்படி அவர்கள் பார்க்கிறார்கள் .உரிய முறையில் சமூகத்தில் பொறுப்புள்ள உறுப்பினர்கள் சேர்ந்து படம் பார்க்கிறார்கள்.
அந்த விதிகளுக்கு முரணாக உள்ளவற்றுக்கு அவர்கள் வெட்டு கொடுப்பார்கள். சினிமா எடுப்பதற்குப் பல விஷயங்களைப் புரிந்து கொள்வது போல சென்சார் விதிகளையும் புரிந்து கொள்ளவேண்டும் .தணிக்கைத் துறையின் வெட்டு என்பது எம்ஜிஆர் நாடோடி மன்னன் எடுத்த காலத்திலிருந்து இருக்கிறது. அப்போது கூட வெட்டுகளுக்குப்பின் அந்த காட்சிகளுக்கு மறுபடியும் படப்பிடிப்பு நடத்திய வரலாறு உண்டு. அந்த விதிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என் படத்திலும் சில வெட்டுகள் கொடுத்தார்கள். . அதைச் சரி செய்து கொடுத்தேன், பிரச்சினை முடிந்தது. சென்சாருக்கென்று ஒரு பொறுப்புள்ள அதிகாரி இருக்கிறார். சமூகத்தில் பொறுப்பானவர்கள் படம் பார்க்க வருகிற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களே படத்தைப் பார்க்கிறார்கள்.
எனவே அந்த விதிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே சென்சார் மீது குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. இங்கே பட்ஜெட் பற்றி நட்சத்திர நடிகர்கள் பற்றியும் பேசப்படுகிறது. ஆனால் கடந்து போன 2025-ல் எவ்வளவு பெரிய பட்ஜெட், எவ்வளவு பெரிய நடிகர் நடித்த படம் என்றெல்லாம் மக்கள் பார்க்காமல் நிராகரித்து விட்டார்கள். .நல்ல கதை அம்சம் உள்ள சிறிய பட்ஜெட் படங்கள் ஓடி இருக்கின்றன மக்களை ஏமாற்ற முடியாது ஓடுகிற படம் நல்ல படம் பெரிய படம் அவ்வளவுதான்" என்றார்.
லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்துள்ள புதிய பிரம்மாண்ட படத்திற்கு ‘லீடர்’ என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான R.S. துரை செந்தில்குமார் எழுதி இயக்கும் இந்த படம், மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் அம்சங்களை ஒருங்கிணைத்த நவீன கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது.
படக்குழு தரப்பில் கூறியதாவது, “நிழல் உலகத்துக்கும் காவல் துறைக்கும் இடையே நடைபெறும் கடும் யுத்தத்தில், ஒரு சாமானிய மனிதன் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்கிறான். அந்த சூழ்நிலையில் இருந்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக்கொள்ள அவன் மேற்கொள்ளும் போராட்டமே ‘லீடர்’.”
சாதாரண மனிதன் ஒரு சூழ்நிலையால் ‘லீடர்’ ஆக மாறும் பயணத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா உள்ளிட்ட பல்வேறு பிரம்மாண்ட லொகேஷன்களில் நடைபெற்று, சென்னையில் நிறைவடைந்துள்ளது. தற்போதைய சினிமா டிரெண்டுக்கு ஏற்ற வகையில், ஆக்ஷன் காட்சிகளும், பரபரப்பான திரைக்கதையும் படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
‘லீடர்’ படத்தில், பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி பிரபாகர், அமிர்தா ஐயர், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா, அறந்தாங்கி நிஷா, குழந்தை நட்சத்திரம் இயல் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைக்க, S. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் E. ராகவ் படத்தொகுப்பை கையாள, ஆக்ஷன் காட்சிகளை மகேஷ் மேத்யூ வடிவமைத்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாக உயர்தரமான காட்சியமைப்புடன், விஎஃப் எக்ஸ் மற்றும் அனிமேஷன் அம்சங்களும் படத்தில் முக்கிய இடம் பெறுகின்றன.
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், லெஜெண்ட் சரவணன் நடிப்பில், R.S. துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படம், லெஜெண்ட் சரவணனின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சாத்தியமற்றதை மேடையில் சாத்தியமாக்கிய முரளிதரன்” - இயக்குநர் K. பாக்யராஜ்
மருது சகோதரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் இயல்–இசை–நடன ஒருங்கிணைந்த வடிவில் மேடையேற்றும் கலைமாமணி மதுரை R. முரளிதரனின் கனவு முயற்சியான ‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7, 2026 (சனி) அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெற உள்ளது.
இந்தப் பெருநிகழ்ச்சியை முன்னிட்டு, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்ற அறிமுக விழாவில், இயக்குநர் K. பாக்யராஜ், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் மற்றும் செயலாளர் விஜயா தாயன்பன், பத்திரிகையாளர் மக்கள் குரல் ராம்ஜி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கலைமாமணி மதுரை R. முரளிதரன் பேசியதாவது…
உலக வரலாற்றில் முதல் முறையாக மருது சகோதரர்களின் கதையை இயல்–இசை–நடன வடிவமாக மேடையேற்ற உள்ளேன். இதை அறிமுகப்படுத்த வந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். தமிழக மண்ணில் தோன்றிய இந்த இரு சகோதரர்கள் ஆங்கிலேய அரசையே அதிர வைத்தவர்கள். கொரில்லா போர்முறையை கையாண்டு ஆங்கிலேய படைகளை திணறடித்தனர். தமது வீரத்தால் 16 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களை நடுங்க வைத்த விடுதலை வீரர்கள் அவர்கள். கி.பி. 1801 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று, “இந்த தேசத்தின் பிறவி எதிரிகள்” என அறிவிக்கப்பட்ட அவர்கள், மக்களிடம் அச்சம் விளைவிக்க இருவரும் தூக்கிலிடப்பட்டனர். ஆனால் அதற்குப் பதிலாக மக்களிடையே புரட்சி எழுந்தது. இந்த வரலாற்றை இயல், இசை, நாடக வடிவில் மேடையேற்ற உள்ளோம். இதில் 70 பேர் பங்கேற்க உள்ளனர். குதிரை, மாடு போன்றவை கூட மேடையேற உள்ளன. இந்த மேடை நாடகத்தை அனைவரும் கண்டு ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் பேசியதாவது…
முரளிதரன் அவர்களின் மகள் காவ்யாவின் நடனத்திற்கு நான் பெரிய ரசிகை. ஒரு நாட்டிய நாடகத்திற்கான அறிமுக விழாவை பார்க்கும் முதல் அனுபவம் இது. முரளிதரன் எப்போதும் வித்தியாசமாக செயல்படுவார். நாட்டிய மேடையில் புலிகேசியாகவும், நாகநந்தியாகவும் ஒரே நேரத்தில் சந்திக்கும் வகையில் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேடையில் நிகழ்த்தியவர் அவர். அவரது திறமைக்கு என் வணக்கங்கள். அவரது அர்ப்பணிப்புக்கு என் வாழ்த்துக்கள். பல்வேறு மேடைகளில் அவர் கலை ஒளிவீசுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு மிகச் சிறந்த கலைஞர். ‘மருதிருவர்’ என்ற தலைப்பே அருமையாக உள்ளது. முரளிதரன் அவர்களின் முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தாயன்பன் பேசியதாவது…
இன்று அறிஞர் அண்ணாவின் நினைவு நாள். “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்று அவர் கூறினார். ஏனெனில் மருது சகோதரர்கள், குயிலி உள்ளிட்ட பலரின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டது. அந்த மறைக்கப்பட்ட வரலாற்றை இங்கு முரளிதரன் எடுத்துச் சொல்கிறார். இயல், இசை, நடனம், நாட்டியம், நாடகம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து, மொசார்ட் இசையையும் இணைத்து இந்த மேடை நாடகத்தை உருவாக்கியுள்ளார். எல்லாக் கலைஞர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் முரளிதரன் அவர்களின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஒரு சக கலைஞனாக வாழ்த்துகிறேன். நன்றி.
மக்கள் குரல் ராம்ஜி பேசியதாவது…
இந்த மேடை நிகழ்ச்சி வெறும் ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல, நடனம், இசை, நாடகம், சிந்தனை, சமூகப் பொறுப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைத்த ஒரு முயற்சி. தமிழ் கலாச்சாரம், கலைஞர்கள், மருத்துவர்கள், சமூக சேவையாளர்கள் என பல தரப்பினரின் பங்களிப்பு இதில் உள்ளது. சிறுவயதிலிருந்தே கலைக்கு ஊக்கம் அளித்த பெற்றோர்கள், ஆசான்கள், நடனம், இசை, நாடகம் போன்ற துறைகளில் தங்களை அர்ப்பணித்தவர்களின் உழைப்பு இந்த மேடையில் வெளிப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒருவருக்கானது அல்ல — அவரது குடும்பத்தார் நான்கு பேரின் உழைப்பு, பலரின் கனவு, அனைவரின் ஆதரவு. அதனால் இதன் வெற்றி அனைவருக்கும் உரியது. இவ்வளவு அர்த்தமுள்ள நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றிகள். இது அவரது குடும்பத்திற்கே உரித்தானது. அவர்களோடு தொடர்புடையவன் என்ற முறையில், இந்த மேடையில் நானும் இருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி. மருது சகோதரர்களின் வரலாற்றை சொல்லும் முரளிதரனின் இந்த புதிய முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இயக்குநர் K. பாக்யராஜ் பேசியதாவது…
முரளிதரன் அவர்களைப் பற்றி இத்தனை நாளாகத் தெரியாமல் இருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கும் நடனத்திற்கும் அவ்வளவு பொருத்தம் இல்லை. ஆனால் முரளிதரன் இத்தனை சாதனைகள் செய்துள்ளார் என்பதே எனக்கு இன்றுதான் தெரிய வந்தது. அவர் செய்த சாதனைகள் அனைத்தையும் கேட்கும் போது பிரமிப்பாக உள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ள அவரது நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது. மேடையில் அவர் டூயல் ரோலை நிகழ்த்திய விதம் அபாரம். சினிமாவிலேயே டூயல் ரோல் எடுப்பது கடினம். ‘கைதியின் டைரி’ கதையை எழுதினேன். ஆனால் அதை அமிதாப் பச்சனை வைத்து இந்தியில் எடுக்கும்போது நான் மாட்டிக்கொண்டேன். டூயல் ரோல் ஷூட்டிங் எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். பின்னர் அமிதாப் சொன்னபடியே மாஸ்க் ஷாட்டை எடுத்தேன். அதை என் குரு பாரதிராஜா பாராட்டினார். எம்.ஜி.ஆர். அவர்களும் பாராட்டினார். அத்தனை சிரமமான விஷயத்தை முரளிதரன் மேடை நாடகத்தில் செய்திருக்கிறார் என்பதே ஆச்சரியம். இதில் இசையும் அவரே அமைத்துள்ளார். வசனம், பாடல், சண்டைக் காட்சிகள் என அனைத்தும் உள்ளதாகச் சொல்கிறார்கள். இத்தனையும் மேடையில் எப்படி நிகழப்போகிறது என்பதை காண ஆவலாக இருக்கிறது. மருது சகோதரர்களின் தெரியாத பல வரலாறுகளை இந்த நாடகம் வெளிக்கொண்டு வருகிறது. முரளிதரன் அவர்களின் இந்த புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். நன்றி.
இந்த மேடை நிகழ்ச்சியில், மருது சகோதரர்களாக கலைமாமணி மதுரை R. முரளிதரன் மற்றும் சிவக்குமார் நடிக்கின்றனர். வீர வேலு நாச்சியாராக முரளிதரனின் மகள் காவ்யா மேடையேறுகிறார். கவிஞர் வைரமுத்து தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
வரலாறு, கலை, புரட்சி மூன்றையும் ஒரே மேடையில் சந்திக்க வைக்கும் ‘மருதிருவர் – A Dance Musical’, தமிழ்க் கலை மேடைகளில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













