சற்று முன்
சினிமா செய்திகள்
கிரைம் திரில்லராக உருவாகவுள்ள படத்தில் முக்கிய வேடத்தில் ஜீனியர் எம்.ஜி.ஆர் !
Updated on : 06 December 2022

Third Eye Creations சார்பில் MD விஜய் தயாரிப்பில், கிரிஷா குரூப் ஜீனியர் எம்.ஜி.ஆர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, இயக்குநர் தமிழ் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம், “Production No. #2” இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது.
எம்.ஜி.ஆரின் தோட்டமான சென்னை ராமவரம் தோட்டத்தில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள இப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் ஜீனியர் எம்.ஜி.ஆர், நடிகர் ஆனந்த்பாபு, இயக்குநர் மோகன் ஜி, சந்தோஷ் பிரதாப், விஜய் டிவி புகழ், உதயா, சிலுமிசம் சிவா, வையாபுரி, இயக்குநர் தமிழ், , பிக்பாஸ் டேனியல் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் கிரிஷா குரூப் நாயகியாக நடிக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழ் தியாகராஜன் இயக்குகிறார். முக்கிய வேடத்தில் ஜீனியர் எம்.ஜி.ஆர் நடிக்கிறார்.
புதுமையான க்ரைம் திரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஆனந்த்பாபு, உதயா ரவி, சிலிமிசம் சிவா, ஹிட்லர், காதல் சுகுமார், சானா கான் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்த விபரம் மற்றும் படம் குறித்த தகவல்கள் விரைவில் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
சமீபத்திய செய்திகள்
'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
நிர்மல் சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் வி.கே. புரொடக்ஷன்ஸ் வழங்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தை வ. கெளதமன் இயக்கி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ்குமாரும் பின்னணி இசைக்கு சாம் சி. எஸ்.-சும் பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்ள சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
வ. கெளதமன், E. குறளமுதன், U.M. உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் வி.கே. புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். சமுத்திரக்கனி, பூஜிதா, பாகுபலி பிரபாகர், சரண்யா பொன்வண்ணன், சாய் தீனா, ஆடுகளம் நரேன், மன்சூர் அலிகான், ஏ.எல். அழகப்பன், மதுசூதன ராவ், நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், தமிழ் கெளதமன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுத, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது படத்தொகுப்பை கவனிக்க, நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் சண்டைப் பயிற்சியை ஸ்டண்ட் சில்வாவும் கையாண்டுள்ளனர். 'படையாண்ட மாவீரா' இசை வெளியீட்டு விழா முக்கிய அம்சங்கள் வருமாறு:
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் தயாரிப்பாளர் எம்.ஜே.எஃப். லயன் பி.ஆர்.எஸ். சரவணராஜ் மற்றும் எஸ். கிருஷ்ணமூர்த்தி வரவேற்றனர். 'பிக் பாஸ்' புகழ் முத்துக்குமரன் நிகழ்வை தொகுத்து வழங்கினார். தயாரிப்பாளர்கள் கே. பாஸ்கர், E. குறளமுதன், U.M. உமாதேவன், நடன இயக்குநர்கள் தினேஷ் மாஸ்டர், ஸ்ரீதர் மாஸ்டர், ஐநா கண்ணன் உள்ளிட்டோர் படக்குழுவினரை வாழ்த்தி பேசினர்.
நடிகர் இளவரசு பேசுகையில், "தமிழகத்திற்கு அறிமுகமான ஒரு மனிதனின் கதை இது. கதையை முன்னெடுத்து செல்லும் கதாபாத்திரம் ஒன்றில் நான் இப்படத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் கெளதமன் எனக்கு சுமார் 25 ஆண்டுகளாக பழக்கம். இந்த திரைப்படத்தை மிகவும் சிறப்பாக அவர் உருவாக்கியுள்ளர்," என்றார்.
இயக்குநர் வி.சேகர் பேசுகையில், "இப்படம் ஒரு கூட்டு முயற்சி என்று அறிகிறேன். என்னுடைய 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை', 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்' உள்ளிட்டவையும் ஒற்றுமையை தான் வலியுறுத்தின. அத்தகைய ஒற்றுமை தான் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் பலம். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்."
வழக்கறிஞர் கே. பாலு பேசுகையில், "கெளதமன் ஒரு படம் எடுக்கிறார் என்று சொன்னால் அதில் உணர்வு இருக்கும், உயிர் இருக்கும் என்று பொருள். அவரது 'சந்தனக்காடு' தொடர் மிகுந்த வரவேற்பு பெற்றது. படையாண்ட மாவீரா என்று சொல்லும் போதே உள்ளத்தில் வீரம் கொப்பளிக்கிறது. வீரத்தின் எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஒரு மனிதனை பற்றிய படம் இது என்பது மிகவும் பெருமையான விஷயம். இப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார்.
கார்ட்டூனிஸ்ட் பாலா பேசுகையில், "அண்ணன் கெளதமன் பற்றி சொல்ல ஏராளம் உண்டு. எப்போதும் உணர்ச்சிப்பிழம்பாக இருக்கக்கூடியவர் அவர். மிகச்சிறந்த திரைக்கலைஞரான அவரது 'படையாண்ட மாவீரா' படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார்.
இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், "கெளதமன் என்னுடைய நல்ல நண்பர். அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம். 'படையாண்ட மாவீரா' படம் மிகவும் பிரம்மாண்டமாக வந்துள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் செயல்கள் சாதாரண மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக, அழுத்தம் திருத்தமாக இப்படம் பேசுகிறது. கெளதமனின் மகன் தமிழ் கெளதமன் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். விரைவில் பெரிய நாயகனாக அவர் வருவார்," என்றார்.
சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா பேசுகையில், "இயக்குநர் கெளதமன் மனிதநேயம் மிக்கவர், துன்பத்தில் தோள் கொடுப்பவர். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் மிகவும் அருமையாக வந்துள்ளன. அவரது போராட்ட குணம் அவற்றில் வெளிப்பட்டுள்ளது. படம் வெற்றியடைய அனைவரின் ஆதரவையும் கோருகிறேன்," என்றார்.
தயாரிப்பாளர் மணிவண்ணன் பேசுகையில், "படத்தின் சில காட்சிகளை பார்த்தேன், சிறப்பாக இருந்தன. குறிப்பாக புலிப்பாடல் மிகவும் எழுச்சியாக உள்ளது. இப்படம் வெற்றி பெறும் என நான் மிகவும் நம்புகிறேன்," என்றார்.
தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் பேசுகையில், "தமிழையும் தமிழ்நாட்டையும், தமிழ் சினிமாவையும் நம்பி வந்த யாரும் கெடுவதில்லை. இப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். தம்பி கெளதமன் சிறந்த மனிதர், சிறந்த படைப்பாளி. 'சந்தனக்காடு' தொலைக்காட்சி தொடரையே திரைப்படம் போல எடுத்தவர், 'படையாண்ட மாவீரா' பிரம்மாண்டத்தின் உச்சம், 'புஷ்பா' படம் போல இது இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி பெறும்," என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், "நல்ல கருத்துகளை தமிழன் கேட்டு தூங்கிவிடக்கூடாது, மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும். தமிழ் மற்றும் தமிழனுக்காக குரல் கொடுப்பவர் இயக்குநர் கெளதமன். அவரது 'படையாண்ட மாவீரா' வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் பேசுகையில், "அண்ணன் கெளதமனுக்கும் எனக்கும் நீண்ட நெடிய பழக்கம். இந்தப் படத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் சொல்லும் போதே இதை எப்படியாவது உருவாக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தோம். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும்," என்றார்.
நீதிபதி கலையரசன் பேசுகையில், "அருமையான வெற்றிப்படத்தை வழங்கியுள்ள கெளதமன் அவர்களை வாழ்த்துகிறேன். அறம் சார்ந்து இப்படத்தை அவர் எடுத்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு பல தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து 'படையாண்ட மாவீரா' படத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த திரைப்படம் வெற்றி பெற கடவுளை வேண்டிக்கொண்டு வாழ்த்துகிறேன்," என்றார்.
'படையாண்ட மாவீரா' படத்தின் இயக்குநரும் நாயகனுமான வ. கெளதமன் பேசுகையில், "இந்த மண்ணையும் மக்களையும் நேசிப்பது போலவே மற்றொருபுறம் எனது திரைத்துறையையும் நான் நேசிக்கிறேன். இது நான் இயக்கி நடித்திருக்கிற படைப்பு. உண்மையில் ஒரு படைப்பாளியின் படைப்பு தான் பேச வேண்டுமே தவிர அவன் பேசக்கூடாது என நான் நினைப்பேன். ஆனாலும் இந்த படத்தை பற்றி நான் பேசவேண்டியுள்ளது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் என் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்த படத்தை உருவாக்க முன்வந்தார்கள். திரைத்துறையின் நான் இன்னும் அதிகம் சாதிக்க வேண்டும் என விரும்பினார்கள். மக்களுக்கான கதையை அவர்களுக்கு வழங்க வேண்டும் என விரும்பினோம். இவற்றின் விளைவு தான் 'படையாண்ட மாவீரா'.
இப்படத்திற்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து இணைந்து மிகச் சிறந்த பாடல்களை வழங்கியுள்ளார்கள் புலிக்கொடி பாடல் உணர்வுப்பூர்வமாகவும், ஜிவி பிரகாஷும் மது ஸ்ரீயும் பாடிய பட்டாம்பூச்சி பாடல் அழகுணர்ச்சியுடனும் அமைந்துள்ளன. சாம் சி. எஸ். சிறப்பான பின்னணி இசையை தந்துள்ளார்.
இப்படத்தின் முன்னோட்டம், பாடல்கள் மிகுந்த சிலிர்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக அனைவரும் கூறினீர்கள், மிக்க நன்றி. முழுப்படத்தையும் பார்த்ததும் உங்கள் உள்ளங்களில் பேரதிர்வை அது ஏற்படுத்தும், அது உறுதி.
எத்தனையோ படங்களுக்காகவும் எத்தனையோ பிரச்சினைகளுக்காகவும் நான் குரல் கொடுத்த போதெல்லாம் அமைதியாக எனக்கு எந்த சாயமும் பூசாமல் இருந்தவர்கள் காடுவெட்டி குரு அவர்கள் பற்றியும் ஒரு சமுதாயத்தை பற்றியும் தவறாக திரைப்படத்தில் காட்டிய போது அதற்கு எதிராக நான் நியாயமான கேள்விகளை எழுப்பியவுடன் என் மீது சாதி சாயம் பூசினார்கள். அந்த சமயத்தில் கௌதமன் கேட்டதில் என்ன தவறு என்று எனக்குத் தெரிந்த ஒரு ஊடக நண்பர், அப்படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது நான் தான் தாதா போன்று ரவுடி போன்று காட்டிவிட்டேன், வேண்டுமானால் 'சந்தனக்காடு' எடுத்தது போன்று குரு அவர்களை வாழ்க்கையை பற்றியும் கௌதமன் ஒரு படம் எடுக்கட்டுமே என்று கூறியுள்ளார். அந்த சவாலை ஏற்று தான் இந்த படமே தொடங்கியது.
இது தனி சாதி படமல்ல, தமிழ் சாதி படமாக இருக்கும். சாதி, மதம் கடந்து மனிதனாக இருப்பவர்கள் யார் பார்த்தாலும் அரங்கம் மட்டுமல்ல அவர்கள் ஆன்மாவும் அதிரும், அறம் சார்ந்த ஒரு மாவீரனை அவர்கள் தரிசிப்பார்கள்.
என்னுடைய வாழ்நாள் லட்சியமே மூன்று காடுகள் பற்றிய படங்கள் எடுப்பது தான். ஒன்று வீரப்பன் வாழ்ந்த சந்தனக்காடு, அதை நிறைவேற்றி விட்டேன். இரண்டாவது காடுவெட்டி குரு அவர்களும் தோழர் தமிழரசன் அவர்களும் வாழ்ந்த முந்திரிக்காடு, இதில் ஒருவரை பற்றி தற்போது படம் எடுத்துள்ளேன். மூன்றாவது என்னுடைய தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எனது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்ந்த வன்னிக்காடு. லட்சிபப் பாதையில் உள்ள இரண்டு படங்களை முடித்துள்ளது போல் இன்னும் இருக்கும் இரண்டு படங்களையும் கட்டாயம் எடுப்பேன். தமிழ் இனத்தின் தலைநிமிர்விற்காக நான் இதை செய்யாமல் சாய மாட்டேன், அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி," என்றார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "தம்பி கெளதமன் மிகுந்த உரிமையாக அழைத்ததால் வெளியூரில் இருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன், அதனால் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிக்கவும்.
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவன் மாவீரன் பிரபாகரன் என்று பேசியவர் அண்ணன் திரு காடுவெட்டி குரு அவர்கள். ஒரு மாபெரும் சமூகமே மாவீரன் என்று வணங்கிக் கொண்டிருக்கும் குரு அவர்களே அண்ணன் பிரபாகரனை மாவீரன் என்று சொன்னது நாம் ஒரே ரத்தம் ஒரே மரபணு என்பதை காட்டுகிறது. அப்படிப்பட்ட காடுவெட்டி குரு அவர்களின் வாழ்க்கையை தான் தம்பி கௌதமன் அவர்கள் 'படையாண்ட மாவீரா' என்று வீரமும் அறமும் சுமந்த படைப்பாக எடுத்துள்ளார்.
கெளதமனின் படைப்பாற்றலை நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். 'சந்தனக்காடு', 'மகிழ்ச்சி' அவர் திறமைக்கான சான்றுகள். அவரின் அடுத்த படைப்பான 'படையாண்ட மாவீரா' மிகவும் அருமையாக வந்துள்ளது. இதை திரைப்படமாக மட்டும் சுருக்கிவிட முடியாது. மிகுந்த உழைப்பு, சிரமத்திற்கு பிறகு இப்படம் உருவாகியுள்ளது. முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்த்தேன், மிகச்சிறப்பு, படத்தை பார்க்க தூண்டுகின்றன. 'படையாண்ட மாவீரா' மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்," என்றார்.
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் கத்தார் அரசு விருதை வென்று சாதனை!
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஒரு பெயர் – அல்லு அர்ஜூன். அவரின் புகழ் காட்டுத்தீப்போல எட்டுதிக்கும் பரவிக்கொண்டிருக்கிறது. புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அவர், தேசிய விருதை வென்ற முதல் தெலுங்கு நடிகராக வரலாற்றில் இடம்பிடித்தார்.
இப்போது, அல்லு அர்ஜூன், கத்தார் தெலுங்கானா திரைப்பட விருது வென்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். கத்தார் அரசால் வழங்கப்படும் இவ்விருது, தெலுங்கு சினிமாவின் சிறப்பை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது. அல்லு அர்ஜூன் புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்துக்காக சிறந்த நடிகராக இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புஷ்பா 2 திரைப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ.1900 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, திரையுலக வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. இது, அல்லு அர்ஜூனின் தனிச்சிறப்பான திரைப்பயணத்தில், இன்னொரு மைல்கல்லாக அமைந்தது.
தெலுங்கு பேசும் மாநிலங்களில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும், அவரின் நடசத்திர கவர்ச்சி, தனித்திறமை மற்றும் விடாமுயற்சி ரசிகர்களை ஈர்த்துவந்திருக்கிறது. கங்கோத்திரியில் தொடங்கி புஷ்பா வரை அவர் கட்டியுள்ள பயணம், முழுமையாக அவர் தன் இரத்தமும், வியர்வையும் செலுத்தி எழுதிய வரலாறாகும்.
ஐந்து ஃபிலிம் ஃபேர் விருதுகள், இரண்டு நந்தி விருதுகள் மற்றும் ஸ்பெஷல் ஜுரி விருது, விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ள அவர், இந்திய திரையுலகின் உண்மையான ‘ஐகான்’ ஆக விளங்குகிறார்.
இப்போது, தேசிய நட்சத்திரமாக மாறியுள்ள அல்லு அர்ஜூன் தனது அடுத்த திரைப்படமான AA22xA6 மூலம் மீண்டும் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தவிருக்கிறார். இந்த படத்தை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் டைரக்டர் அட்லீ இயக்க உள்ளார். தற்போது முன் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லு அர்ஜூனின் திரை வருகைக்காக உலகமே காத்திருக்கிறது.
'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது!
இந்திய சினிமாவின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றான 'இராமாயணா' படத்திற்காக, ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் (Mad Max: Fury Road, The Suicide Squad புகழ்) மற்றும் இந்தியாவின் 'ராக்கிங் ஸ்டார்' யாஷ் கைகோர்த்துள்ளார்கள்.
நடிகர் யாஷ், ராவணனாக நடிப்பதோடு, இப்படத்தின் இணை-தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இப்படம், பரந்த எதிர் நாயகனாக ராவணனை மிக பிரம்மாண்டமாகக் காட்டும். ஹாலிவுட் தரத்திலான ஸ்டண்ட் காட்சிகளை உருவாக்கும் நோக்கில், கய் நோரிஸ் இந்தியா வந்து வேலை செய்யும் நிலையில், யாஷ் இதில் நேரடியாக ஈடுபட்டு, இந்திய ஆக்சன் சினிமாவின் தரத்தை புதிய உச்சிக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்.
இராமாயணா பாகம் 1 க்காக யாஷ் 60–70 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். சமீபத்தில் வெளியான படப்பிடிப்பு புகைப்படங்களில், யாஷ் தனது உடல் அமைப்பை மாற்றி, ராவணனாக ஒரு வித்தியாசமான, மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இந்தத் தோற்றம், இந்திய ஹீரோக்களை உலகளவில் புதிய பார்வையில் காணச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
இப்படத்தினை நிதேஷ் திவாரி இயக்குகிறார், நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார்கள். உலகத் தரத்தில் இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்தும் நோக்கில் உருவாகும் இந்த படம், ஹாலிவுட் தர VFX, பிரம்மாண்டமான செட்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகையர்களை ஒன்றிணைத்த ஒரு காட்சித் திருவிழாவாக உருவாகிறது.
'இராமாயணா பாகம் 1' – தீபாவளி 2026, மற்றும் பாகம் 2 – தீபாவளி 2027 வெளியாகவுள்ளது.
பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது
இந்தியாவில் முதன்முறையாக ஒரு அற்புத உலகத்தை பார்க்க தயாராகுங்கள்! சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும், கார்த்திக் கட்டமனேனி இயக்கும், பீப்பிள் மீடியா ஃபேக்டரி வழங்கும் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது, இப்படம் செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!
ஹனுமான் படம் மூலம் இந்தியா முழுக்க ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த தேஜா சஜ்ஜா, இப்போது அதைவிட மிகப் பெரிய மற்றும் பிரம்மாண்ட திரைப்படமான “மிராய்” படத்தோடு வந்துள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில், TG விஷ்வபிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரிக்கும், இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி இயக்கியுள்ளார். காட்சியமைப்பிலும், ஃபேண்டஸி கதைக்களத்திலும் பிரம்மாண்டத்திலும் அசத்தும், டீசர் இந்தியா முழுவதும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
டீசரில் ஒரு முனிவரின் குரல், கலியுகக் களத்தில் பிறந்த கட்டுப்பாடற்ற சக்தியின் எழுச்சியைப் பற்றி முன்கூட்டியே அறிவிக்கிறது. அந்த இருண்ட சக்தி தான் தி பிளாக் ஸ்வார்ட் The Black Sword (மனோஜ் மாஞ்சு), மனித சக்திக்கு அப்பாற்பட்ட வல்லமை கொண்டவர், அழிவுக்கான பயணத்தை தொடங்குகிறார். ஆனால், இந்த முறை கடவுள்கள் அல்ல; அவர்களின் ஆயுதமே எதிர்விளைவு தருகிறது. அதுதான் மிராய்.
தேஜா ஒரு எளிய வீரராக அரங்கேற்றமாகிறார் — ஒரு மர்ம வாய்ந்த சக்தி மிக்க ஆயுதத்துடன், அதன் பலம் குறித்த கேள்விகளுடம் தனது பயணத்தை தொடங்குகிறார். இருளுக்கு எதிரான போரில் தன்னுடைய சக்தியை வலிமையை கண்டடைகிறார், நியாயத்திற்கு உண்மைக்கு ஆதரவாக அவர் எழும் தருணமே கதையின் மையம்.
இந்தியாவின் இளம் பான் இந்தியா நட்சத்திரமான தேஜா சஜ்ஜா, ஒரு சாதாரண மனிதனில் இருந்து சூப்பர் யோதாவாக மாறும் ஹீரோவாக வெளிப்படுகிறார். ரயிலின் மேலே செய்யும் சாகசம் உட்பட, பல உயிர் அபாயம் நிறைந்த சாகசங்களை துணிவுடன் செய்து, அவர் ஒரு சக்திவாய்ந்த நட்சத்திரம் என்பதை நிரூபிக்கிறார்.
மனோஜ் மாஞ்சு ஒரு படு பயங்கர எதிர் நாயகனாக திகழ்கிறார். அவரது சக்தி வாய்ந்த நடிப்பு, ஒவ்வொரு காட்சியையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ரிதிகா நாயக், ஷ்ரேயா சரண், ஜெயராம் மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கார்த்திக் கட்டமனேனி இயக்குநராக மட்டுமல்ல, மிரட்டலான உலகை உருவாக்கி, பரபரப்பான திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். அவரது காட்சியை உருவாக்கும் திறமை, வித்தியாசமான கதாபாத்திரங்கள், அதிரடி சண்டைகள் — இவை அனைத்தும் திரைக்கதையை சிறப்பிக்கின்றன. டீசரின் கடைசி நிமிடத்தில், இராமர் வரும் தருணத்தில் குரங்குகள் தலைவணங்கும் காட்சி, நம்மை மயிர்க்கூச்செரிய வைக்கிறது.
கேமராவை கையாண்டுள்ள கார்த்திக், ஒவ்வொரு பிரேமையும் அற்புதமாகப் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் இசை அமைப்பாளர் கௌர ஹரி பின்னணி இசை, திரை அனுபவத்தை மேலோங்கச் செய்கிறது. மனிபாபு கரணம் வசனங்களை எழுதியிருக்கிறார். ஸ்ரீ நாகேந்திர தங்காலா கலை இயக்குநராக, சுஜித் குமார் கொல்லி நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளனர்.
கார்த்திகேயா 2 மற்றும் ஜாட் படங்களை தயாரித்த பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் தயாரிப்பில், மிராய் திரைப்படம் இந்திய அளவில் மற்றொரு பான் இந்திய பிரம்மாண்ட படைப்பாக உருவாகிறது. இப்படம் முற்றிலும் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. வெறும் VFX பிரம்மாண்டமாக இல்லாமல் - மிராய் திரைப்படம் அத்தியாவசியமான, கட்டுப்படுத்தப்பட்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான கோடி பட்ஜெட்டுகளில் எடுக்கப்படும் படங்களின் பிரமாண்டத்திற்கு இணையாக உள்ளது என்பதுதான் இதன் சிறப்பம்சம். உண்மையான சினிமா தாக்கத்திற்கு எப்போதும் பிளாக்பஸ்டர் செலவு தேவையில்லை, துணிச்சலான கற்பனை மற்றும் கூர்மையான செயல்படுத்தல் மட்டுமே தேவை என்பதற்கு இது உதாரணமாக இருக்கும்.
இந்த டீசர் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ள "மிராய்" திரைப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் அதிரடியாக வெளியாகிறது. இந்த திரைப்படம் 8 வெவ்வேறு மொழிகளில் 2D மற்றும் 3D வடிவங்களில் உலகளவில் வெளியிடப்படும்.
இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம்! - தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன்
இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து பாராட்டுகளை குவித்த ‘தமிழ்க்குடிமகன்’ திரைப்படத்தை படைத்த இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
வரும் ஜூன் 6 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘பரமசிவன் பாத்திமா’ வெளியாகிறது. இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க சாயாதேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தீபன் சக்கரவர்த்தி இசை அமைக்க, இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியுள்ளார்.
‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
பாடலாசிரியர் ஏகாதசி பேசுகையில், "இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள். ஐந்தையும் நான் தான் எழுதியுள்ளேன். ஐந்து பாடல்களும் வெவ்வேறு வகையிலானவை. இப்படத்தின் குழுவினர் மிகவும் நேர்மையோடு கடினமாக உழைத்துள்ளனர். பாடல்கள் சிறப்பாக வர வேண்டும் என்று இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தியும் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் அவர்களும் தனி கவனம் செலுத்தினர். படத்தின் நாயகன் விமல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி. ‘பரமசிவன் பாத்திமா’ மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்," என்றார்.
ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் பேசுகையில், "இப்படத்தில் எனக்கு நடிக்கவும் வாய்ப்பு கொடுக்க இயக்குநர் இசக்கி கார்வண்ணனுக்கு நன்றி. 'பரமசிவன் பாத்திமா’ படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் கோருகிறேன், நன்றி," என்றார்.
நடிகை சேஷ்விதா ராஜு பேசுகையில், "இன்று எனக்கு மிக முக்கியமான நாள். தமிழ் சினிமாவில் என் பயணம் இப்போது தான் தொடங்குகிறது. வாய்ப்பு கொடுத்த இயக்குநர் இசக்கி கார்வண்ணனுக்கும் விழாவில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி," என்றார்.
இசையமைப்பாளர் தீபன் சக்கரவர்த்தி பேசுகையில், "இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் என்னை விட சீனியர்கள். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பாடலாசிரியர் ஏகாதசி சொன்னது போல இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களும் வெவ்வேறு வகையிலானவை, அனைத்துப் பாடல்களும் மிகவும் சிறப்பாக வந்துள்ளன. இயக்குநர் இசக்கி கார்வண்ணன் மிகவும் தெளிவாக அவருக்கு தேவையான பாடல்களை வாங்கி விடுவார். இந்த மேடையில் நான் பேச காரணமான எனது தாயாருக்கும், வாய்ப்பளித்த இயக்குநருக்கும், இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மிக்க நன்றி," என்றார்.
இயக்குநரும் எழுத்தாளருமான சுகா பேசுகையில், "இயக்குநர் இசக்கி கார்வண்ணன் எங்கள் நண்பர்கள் குழுவில் ஒருவர். இப்படத்தின் கதையை அவர் என்னிடம் கூறிய போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த சத்யஜித்ரே தனது படத்திற்கான கதைகளை தன்னை சுற்றி நடப்பவைகளிடம் இருந்தே உருவாக்கினார். அவ்வாறு இசக்கி கார்வண்ணனும் அவரது ஊரில் அவர் பார்த்த சம்பவங்களை கதையாக்கி படமாக்கி இருக்கிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். இப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்," என்றார்.
நடிகர் காதல் சுகுமார் பேசுகையில், "இந்தப் படக்குழுவினர் என்னுடைய குடும்பத்தினர் போன்றவர்கள். இப்படத்தில் இயக்குநர் இசக்கி கார்வண்ணன் மிகவும் தைரியமான ஒரு விஷயத்தை சிறப்பாக கையாண்டு இருக்கிறார். 'பரமசிவன் பாத்திமா' படத்தில் ஒரு காவலராக நான் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநருக்கு நன்றி. எம் எஸ் பாஸ்கர் போன்ற திறமையான கலைஞர்களுடன் நடித்தது மிக்க மகிழ்ச்சி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி," என்றார்.
நடிகை ஆதிரா பேசுகையில், "இந்த விழாவுக்கு வந்திருக்கும் அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள், வணக்கம்," என்றார்.
தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் பேசுகையில், "இயக்குநர் இசக்கி கார்வண்ணன் சினிமாவை காதலிப்பவர். ஒரு வலுவான கதையுடன் தற்போது 'பரமசிவன் பாத்திமா' மூலம் வந்துள்ளார். நாயகன் விமலுக்கு வாழ்த்துகள், நடிகராக அறிமுகமாகும் ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கும் வாழ்த்துகள். படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன், நன்றி," என்றார்.
நாயகி சாயாதேவி பேசுகையில், "இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் இசக்கி கார்வண்ணன் உடனும் நடிகர் விமல் உள்ளிட்டோருடனும் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் ஐந்தாம் தேதி இப்படம் வெளியாகிறது, அனைவரும் ஆதரவு தாருங்கள். இந்த விழாவின் நாயகனான இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்திக்கு வாழ்த்துகள்," என்றார்.
இயக்குநர் பிரசாத் முருகேசன் பேசுகையில், "இயக்குநர் இசக்கி கார்வண்ணன் சினிமா மீது காதல் கொண்டவர். இப்படம் வெற்றியடைய அவருக்கும் அவரது குழுவினருக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். பாடலாசிரியர் ஏகாதசி அவர்கள் 'கிடாரி' திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து பாடல் எழுதினார், அதற்காக அவருக்கு நன்றி. இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்திக்கு வாழ்த்துகள்," என்றார்.
இயக்குநர் மனோஜ் குமார் பேசுகையில், "இயக்குநர் இசக்கி கார்வண்ணன் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்பவர். ஒரு குடும்பம் போல் குழுவினரை வழி நடத்தி செல்வார். இப்படத்தை மிகவுக் சிறப்பாக உருவாக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் சுகுமார் பிரமாதமாக தனது பணியை செய்துள்ளார். விமலுக்கு இது ஒரு மைல்கல் படமாக அமையும். இப்படத்தின் வெற்றி விழாவில் மீண்டும் சந்திப்போம்," என்றார்.
நடிகர் விமல்ராஜா (வி ஆர்) பேசுகையில், "இப்படத்தில் சலீம் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை பெற உதவிய ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு நன்றி. விமல் சாருடன் வேலை செய்தது நல்ல அனுபவம். இந்த படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள்," என்றார்.
நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசுகையில், "புரட்சிகரமான ஃபாதர் பாத்திரத்தில் நான் இப்படத்தில் நடித்துள்ளேன். படக்குழுவினரும் படப்பிடிப்பு நடந்த ஊர் மக்களும் உறவினர் போல பழகினோம், மறக்க முடியாத அனுபவம். இப்படத்தை வெற்றி படமாக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்," என்றார்.
நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில், "இந்த மேடையில் நான் வாங்கும் கைதட்டல் அனைத்தும் 'பரமசிவன் பாத்திமா' குழுவினரையே சேரும். படம் வெற்றி பெற உங்கள் அனைவரின் ஆதரவும் அன்பும் தேவை," என்றார்.
நடிகர் மகேந்திரன் பேசுகையில், "இசக்கி கார்வண்ணன் அவர்கள் எனக்கு ஊக்கமளித்தவர். எனவே இப்படத்தில் நடிக்குமாறு அவர் அழைத்துவுடன் மகிழ்ச்சியுடன் உடனே சம்மதித்தேன். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்," என்றார்.
சாட்டை துரைமுருகன் பேசுகையில், "இயக்குநர் இசக்கி கார்வண்ணன் உணர்ச்சிக் குவியலான ஒரு நபர். அவரது உணர்ச்சி மொழிக்கானது, மண்ணுக்கானது, மக்களுக்கானது. இப்படத்தின் மூலம் ஒரு சிறந்த கருத்தை மக்கள் முன் வைக்கிறார். எங்கு சென்றாலும் நம் வேர்களை மறக்கக் கூடாது என்பதே அவர் சொல்லும் செய்தி. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார்.
நாயகன் விமல் பேசுகையில், "வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இயக்குநர் இசக்கி கார்வண்ணன், ஒளிப்பதிவாளர் சுகுமார், இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தி, சாயா தேவி, எம் எஸ் பாஸ்கர் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இப்படம் வெற்றியடைய உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை," என்றார்.
தயாரிப்பாளர்-இயக்குநர் இசக்கி கார்வண்ணன் பேசுகையில், "இது வாழ்வியல் சம்பந்தப்பட்ட கதை. என்னை சுற்றி வாழ்ந்த மக்களின் கதை. இது மதவாத படமல்ல, மனிதம் பேசும் படம். இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தியும், பாடலாசிரியர் ஏகாதசியும் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளார்கள். ஒளிப்பதிவாளர் சுகுமார் மிகவும் திறமை வாய்ந்த கலைஞர். இப்படம் அதற்கு மற்றுமொரு சான்று. விமல் ஒரு கடின உழைப்பாளி. சாயா தேவியும் சுகுமாரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். எம் எஸ் பாஸ்கர் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எடிட்டர் புவன் படத்தொகுப்பு அருமை. இப்படி அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "சிறு வயதிலேயே சிறப்பான இசையை தம்பி தீபன் சக்ரவர்த்தி வழங்கி உள்ளார். இயக்குநர் இசக்கி கார்வண்ணனிடமும் இதைக் கூறியுள்ளேன். தம்பி ஏகாதசியின் வரிகள் வலிமை மிக்கவை. காவியப் படைப்பை தந்துள்ளார். முன்னோட்டத்தை பார்த்தவுடன் ஒளிப்பதிவாளர் யார் என்று தான் கேட்டேன். சுகுமார் என்று சொன்னவுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது, ஒளியோடு விளையாடி இருக்கிறார். இப்படத்தில் நடித்துள்ள விமல் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். மொழிப்பற்றும் இனப்பற்றும் என்னையும் இயக்குநர் இசக்கி கார்வண்ணனையும் இணைக்கிறது. 'பரமசிவன் பாத்திமா' திரைப்படம் சிறப்பாக உருவாகியுள்ளது. மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையை துணிச்சலாக கையாண்டுள்ளார். அவரது போர்க்குணம் தான் இந்தக் கதையை படமாக எடுக்க காரணம். அவருக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்," என்றார்.
இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது - இயக்குநர் வசந்தபாலன்
நடிகை வனிதா விஜயகுமார் எழுதி, இயக்கி, கதையின் நாயகியாக நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் ( Mrs & Mr) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் (Mrs & Mr) திரைப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி. ராஜபாண்டி - விஷ்ணு ராமகிருஷ்ணன் - டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். பாலகுரு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார்.
ஜூனில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் நடிகர் அன்பு மயில்சாமி, நடிகை ஃபாத்திமா பாபு, கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், அம்பிகா, பிரவீண் லால் வாணி, ஷகீலா, தனஞ்ஜெயன், வசந்தபாலன், ஸ்ரீகாந்த் தேவா, வனிதா விஜயகுமார், ஜோவிகா விஜயகுமார், தயாரிப்பாளர் மதியழகன், கிரண், ஷார்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், ''வனிதா மேடம் நடிப்பதற்கு வருகை தந்த தருணத்தில் இருந்து தொடர்ந்து அவர்களை பார்த்து வருகிறேன். அவர்களுடைய போராட்டம் மிகப்பெரியது. ஒரு பெண்ணாக அவர் எதிர்கொள்ளும் சவால்களும் பெரியது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த சமூகம் அவர் மீதான விமர்சனத்தை முன்வைத்து வருகிறது. இதையும் நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.
நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அவரும் இடம்பெற்று, அவருடைய சொந்த வாழ்க்கை பற்றிய பல விபரங்களை பகிர்ந்து கொண்டார். அதன் போது அவர்கள் கண்ணீர் வடித்ததையும் நான் பார்த்திருக்கிறேன். இன்றும் இந்த ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணை ஒடுக்கப்பட்ட சமூகமாகத் தான் பார்க்கிறோம். தொடர்ந்து அப்படித்தான் நடத்திக் கொண்டு வருகிறோம். ஒரு பாலினமாக அவர்களை ஒதுக்கி வைத்துக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் என்ன உடை அணிந்தாலும், என்ன செய்தாலும் அதில் குறையை கண்டுபிடிக்கிறோம். அதில் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நுழைக்கிறோம். எல்லா விசயத்தையும் திணித்து பிரச்சனை கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். அதுபோன்றதொரு இடத்தில் இருந்து வனிதாவின் போராட்டம் என்பது மிகப்பெரியது.
ஒரு ஆண் பத்தாயிரம் மனைவிகளை கூட திருமணம் செய்து கொள்ளலாம். அது தொடர்பாக பெருமிதமாகவும் பேசலாம். இதனை பெருமிதமாக கருதும் சமூகத்தில் இருந்து ஒரு பெண் இதனை செய்யும் போது தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக்கி, அவரை கேலிக்குரிய பொருளாக மாற்றி பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில், இவற்றையெல்லாம் துணிச்சலாக எதிர்கொண்டு அவர் போராடிக் கொண்டிருப்பதை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. நான் ஒரு இயக்குநராக இருக்கிறேனோ இல்லையோ, ஒரு பெண்ணாக அவர் செய்யும் அனைத்து செயல்களுக்கும் ஒரு ஆணாக ஆதரவு தர விரும்புகிறேன்.
இங்கு பெண்களுக்கான குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. அதிலும் திரைப்படத் துறையில் இருந்து கொண்டு அவர் நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம், அதிலும் இங்கு அவர் இயக்குநராக அமர்ந்திருப்பது பெருமையான விஷயம், மகிழ்ச்சிக்குரிய விசயம்.
ஒவ்வொருவருக்கும் செல்வதற்கு அவர்களிடம் கதை உள்ளது. இந்த உலகம் ஒட்டுமொத்தமாக ஆணாதிக்க சமுதாயம். இங்கு பெண்கள் கதை சொல்ல வர வேண்டும் என விரும்புகிறேன். தற்போது ஹெர் ஸ்டோரீஸ் என்று ஒரு பதிப்பகம் இருக்கிறது. இந்த பதிப்பகம் நூறு பெண்களின் கதையை சொல்லத் தொடங்கி இருக்கிறது. பெண்கள் இயக்குநராக தங்களது கதையை சொல்ல வேண்டும். அது ஒரு புதிய கதையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். சினிமா - இயக்கம் ஆகியவை ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன் . ஆண்களிடம் மட்டும் சினிமா இல்லாமல் ஒவ்வொருவரும் தங்களுடைய கதைகளை சொல்ல முன்வர வேண்டும். தற்போது யூட்யூபில் வயதான ஒரு பெண்மணி தன் பேரன் / பேத்தியுடன் இணைந்து நடனமாடி அந்த காணொலியை பதிவேற்றம் செய்கிறார்கள். இந்த ஷார்ட்ஸ் (Shorts) உலகத்தை பார்க்கும் போது ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பெண்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதை காண முடிகிறது. அந்த வகையில் இந்த சமூகத்திற்கு சொல்வதற்கு வனிதாவிடம் கதை உள்ளது. அவர்கள் பேசுவதற்கும் ஒரு கதை இருக்கிறது.
ஷகிலாவிடம் கதை கேட்டால், இதுவரை உலகத்தில் யாரும் சொல்லாத கதை இருக்கும். அந்த கதையை அவரால் சொல்ல முடியும். ஷகிலாவை காமத்துடன் தொடர்பு படுத்தி நாம் பார்க்கும் போது அவரிடம் சொல்வதற்கு அழுத்தமான கண்ணீர் கதைகள் இருக்கின்றன. அது போல் வனிதாவிற்கும் சொல்வதற்கு கதை இருக்கிறது. அந்த கதை தான் மிஸஸ் அண்ட் மிஸ்டர்.
என் இயக்கத்தில் உருவான படத்தில் அவர்கள் நடித்திருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்க்கும் வனிதா விஜயகுமார் வேறு. அவருடன் இணைந்து பணியாற்றும் போது இருக்கும் வனிதா விஜயகுமார் வேறு. அந்தப் பெண் சாதாரண எளிமையான பெண். அதே தருணத்தில் அவர் ஏற்படுத்திக் கொள்கிற திமிர்த்தனம் என்பது, அவரை பாதுகாத்து கொள்கிற ஆயுதமாகத்தான் பார்க்கிறேன். எல்லா பெண்களும் அப்படித்தான். எல்லா பெண்களும் திமிராகத்தான் பேசுவார்கள். திமிராகத்தான் நடந்து கொள்வார்கள். அகங்காரம் உடையவர்களாகவும், கர்வம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இதை இந்த ஆணாதிக்க சமூகத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிற ஆயுதமாகத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் வனிதாவிடம் இருக்கும் தைரியம் அப்படிப்பட்டது. ஆனால் உண்மையில் அவர் அன்பானவர். அவருக்கு ஆதரவு தெரிவிக்கவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
இப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக தெரிகிறது. இந்த படம் வெற்றி அடைய மனமார வாழ்த்துகிறேன்,'' என்றார்.
நடிகை அம்பிகா பேசுகையில், ''இந்த திரைப்படத்திற்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தேன். இயக்குநர் வசந்த பாலன் இப்படத்தின் டைட்டில் தனக்கு பிடித்திருப்பதாக சொன்னார். அந்த டைட்டிலை தேர்வு செய்தது நான்தான். இது தொடர்பாக வனிதா பேசிய போது ஏன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் இருக்க வேண்டும்? மிஸஸ் அண்ட் மிஸ்டர் ஆக இருக்கக் கூடாதா..!? என்றேன். அதனால் ஒரு சந்தோஷம். இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்தை பார்த்தேன். பொழுதுபோக்காக இருக்கிறது.
இப்போது உள்ள சூழலில் ஒரு படத்தை தயாரிப்பது, இயக்குவது என்பதெல்லாம் கடினமானது. அதுவும் ஒரு பெண்மணி செய்ய வேண்டும் என்றால் அதைவிட கடினம் . அதிலும் இது போன்றதொரு கதையை எழுதி இயக்குவது என்பது அதைவிட கடினம். அதே சமயத்தில் இது போன்ற கதையை வனிதாவால் மட்டுமே இயக்க முடியும். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அனைவரும் தவறாமல் திரையரங்கத்திற்கு சென்று இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில், ''இந்த மேடை கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. கவர்ச்சிகரமான பெண்களுக்கு மத்தியில் நானும் இருப்பதால் என்னுடைய கவர்ச்சியும் ஒரு சதவீதம் அதிகரிக்கும் என நினைக்கிறேன்.
வனிதாவை பற்றி இயக்குநர் வசந்தபாலன் அழகாக குறிப்பிட்டார். வனிதாவின் செயல்பாடுகளிலும், பேச்சுகளிலும் அவரிடம் உள்ள தன்னம்பிக்கையை பார்க்கிறேன். நம்பிக்கையுடன் அவர் வாழ்வதையும் பார்க்கிறேன். அவர்கள் தனக்கு பிடித்தது போல் வாழ்கிறார்கள். சவால் மிகுந்த இந்த உலகத்தில் தனக்கு பிடித்தது போல் வாழ்வது என்பது கடினமானது. இந்த துணிச்சல் என்னை கவர்ந்திருக்கிறது. இதில் ஒரு கட்டமாக அவர் இயக்குநராக உருவெடுத்திருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சினிமாவில் அவர் பல தோல்விகளையும், வெற்றிகளையும் சந்தித்திருக்கிறார். அதை எல்லாம் கடந்து, இன்று வெற்றிகரமான பெண்மணியாக வலம் வருகிறார். இந்த சினிமாவை நீங்கள் முழுமையாக நம்பினால், சினிமா உங்களுக்கான இடத்தை நிச்சயமாக வழங்கும்.
இந்தப் படம் பெரிய பட்ஜெட்டில் தான் உருவாக்கியிருக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு கலைஞர்களை அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்துவது என்பது எளிதானதல்ல . பெரிய பொருட்செலவில் வனிதாவின் மகள் ஜோவிகா இப்படத்தை தயாரித்திருக்கிறார். ஸ்ரீனிக் கிரியேஷன்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது. அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறும் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தை நல்லதொரு தேதியில் வெளியிடுங்கள். ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கும் இந்த படக்குழு வெற்றி பெற வேண்டும். இந்தத் திரைப்படம் மத்திம வயதில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. அதனால் இந்த படம் நல்ல தேதியில் வெளியானால் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.
தமிழ் சினிமாவில் 240 படங்கள் வெளியானால் அதில் இரண்டு பேர் மட்டுமே பெண் இயக்குநர்கள். இந்த தருணத்தில் நிறைய பெண் இயக்குநர்கள் தமிழ் சினிமாவுக்கு வரவேண்டும் என விரும்புகிறேன். தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் அதிகமாக உருவாகும் போது வித்தியாசமான கதைகளை எதிர்பார்க்கலாம். அந்த வரிசையில் வனதா இயக்கி இருக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் நல்லதொரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தத் திரைப்படம் நல்லதொரு அதிர்வை ஏற்படுத்தி வெற்றியை அளிக்கும் என நினைக்கிறேன்,'' என்றார்.
நடிகை ஃபாத்திமா பாபு பேசுகையில், ''நடிகை வனிதா விஜயகுமாரை 18 வயதிற்கு முன்னதாகவே எனக்குத் தெரியும். நாங்கள் இருவரும் ஒரே உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டவர்கள். இவர் எப்போதும் மற்றவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சுற்றத்தார்களும் நண்பர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார நினைக்கும் ஒரு நபர். அவருடைய இந்த எண்ணம் என்னை வியக்க வைத்திருக்கிறது. அத்துடன் அவர் தன்னை பற்றி எத்தனை விதமான எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அதனை தனது இடது கையால் புறம் தள்ளிவிட்டு, அதனையே தன்னுடைய முன்னேற்றத்திற்கான படிக்கல்லாக மாற்றிக் கொண்டு உயர்ந்து கொண்டே போகும் அவருடைய அணுகுமுறை என்னை வியக்க வைத்திருக்கிறது.
இன்றைய சூழலில் சமூக ஊடகங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டு முன்னேற வேண்டும் என்பதற்கு வனிதா மிகச்சிறந்த முன்னுதாரணம். இந்த விஷயத்தை நான் வனிதாவிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன்.
இந்த படத்தின் போஸ்டரை ஒட்டும் பணியை கூட நள்ளிரவு இரண்டு மணி அளவில் மேற்பார்வை செய்தவர் தான் வனிதா. இந்த அளவிற்கு கடும் உழைப்பாளியான வனிதாவிற்கு அவருடைய அம்மாவின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.
ஷகிலாவை இந்த படத்தில் புதிய அவதாரத்தில் நீங்கள் பார்க்கலாம். அவர் காமெடி செய்திருக்கிறார். அவருடைய நகைச்சுவை திறமையை வனிதா இப்படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என்றார்.
ஷகீலா பேசுகையில், ''வனிதா நன்றாக பேசுவார். அக்கா என்று அன்பாக பேசுவார். ஆனால் கோபம் வந்து விட்டால், குரலை உயர்த்துவார். இந்தப் படத்தைப் பற்றி நான்கு நாட்கள் என்னுடைய வீட்டில் விவாதித்தார். ஐந்தாவது நாள் இப்படத்தை தொடங்கினார். படப்பிடிப்பிற்காக பாங்காக் செல்கிறோம் என்றார். இதில் நான் மட்டுமல்ல, என்னுடைய குழுவினர் அனைவரும் சென்றோம்.
பாங்காக்கில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் உழைத்தோம். 30 ஆண்டுகளுக்கு முன் கடினமாக உழைத்த காலகட்டங்கள் இந்த படப்பிடிப்பின் போது நினைவுக்கு வந்தன.
எனக்கு குடும்பம் இல்லை என்று இணையம் வழியாக நிறைய முறை அழுது புலம்பி இருக்கிறேன். வனிதாவால் எனக்கு மிகப் பெரிய குடும்பம் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
எங்களுடன் வந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் அன்புடன் பணியாற்றினார்கள். பாங்காக்கில் சுற்றிப் பார்க்க இரண்டு நாள் மட்டும் அனுமதி அளித்தார் வனிதா.
அதன் பிறகு சென்னை வந்து இங்கும் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். படப்பிடிப்பு முடிவடைந்த பிறகும் இப்படத்திற்காக கடுமையாக உழைத்தார். இந்த தருணத்தில் தயாரிப்பாளர் மதியழகனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் நன்றாக இருக்கிறது, நான் நடித்திருக்கிறேன். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான், வனிதா போன்றவர்கள் எல்லாம் உரிமைகளை கேட்பதில்லை எடுத்துக் கொள்வோம்," என்றார்.
ஜோவிகா விஜயகுமார் பேசுகையில், ''இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மேடையில் தயாரிப்பாளராக நிற்க வைத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவர்களின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் இப்படம் நிறைவடைந்து இருக்காது.
இந்த விழாவிற்கு அனைவரும் வருகை தந்து, மனமார்ந்த ஆதரவை அளித்து வருவதால் தான் நாங்கள் தனியாக இல்லை என்று உணர்வு ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்தப் படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் வருகிறது.
நான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். இதற்காக விஜய் டிவி மற்றும் ஹாட்ஸ்டார்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
தயாரிப்பாளர் மதியழகன் பேசுகையில், ''தம்பிகள் பாலா & சதீஷ் இருவரும் இணைந்து ஸ்ரீனிக் ப்ரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிறுவனத்திற்கு ஆலோசகராக நான் பணியாற்றுகிறேன். அவர்கள் மாதத்திற்கு ஒரு படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த வரிசையில் முதல் படம் தான் வனிதா விஜயகுமாரின் மிஸஸ் & மிஸ்டர்.
இவர்கள் ஒரு கோடியில் இருந்து ஐந்து கோடி ரூபாய்க்குள் தயாராக படங்களை தான் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தையும் அதிக அளவிலான திரையரங்குகளில் வெளியிட முடியாத நிலை தான் இருக்கிறது.
ஜோவிகாவிற்காக தான் இப்படத்தில் இணைந்தோம். நாங்கள் அனைவரும் ஜோவிகாவிற்கு சகோதரர்கள். நான் இந்தத் திரைப்படத்தை மூன்று முறை பார்த்து விட்டே
சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'
'காதல் மட்டும் வேணா' திரைப்படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கான் தற்போது 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' எனும் படத்தை தயாரித்து இயக்குவதோடு நாயகனாகவும் நடிக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் உருவாகும் இத்திரைப்படம் ஒரு கலகலப்பான காதல் கதை ஆகும். அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக மிகவும் ஸ்டைலான முறையில் இப்படத்தை வடிவமைத்திருப்பதாக சமீர் அலி கான் தெரிவித்தார்.
மான்சி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, அலி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின், உதயதீப், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
"திருச்சூரில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்த நான் விஸ்காம் பட்டம் பெற்ற பின்பு 'காதல் மட்டும் வேணா' திரைப்படத்தை இயக்கி நடித்தேன். தற்போது 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' படத்தை தயாரித்து இயக்குவதோடு முதன்மை வேடத்திலும் நடிக்கிறேன். இரண்டு வெவ்வேறு பின்னணிகளை கொண்ட நாயகனும் நாயகியும் காதலில் விழுகின்றனர். இவர்கள் காதலுக்கு எத்தகைய இடையூறுகள் எழுகின்றன அத்தனை தடைகளையும் வெற்றிகரமாக கடந்து எவ்வாறு இணைகின்றனர் என்பதை மிகவும் கலகலப்பான முறையில் கூறியிருக்கிறோம்," என்று சமீர் அலி கான் தெரிவித்தார்.
'தமிழ் பையன் இந்தி பொண்ணு' படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட சமீர் அலி கான் திட்டமிட்டுள்ளார்.
திரைப் படைப்பாளிகளின் பாராட்டுக்களைக் குவித்துள்ள 'மனிதர்கள்' மே 30 முதல் திரையரங்குகளில்!
Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில், புதுமுகங்களின் நடிப்பில், மனித குணத்தின் விசித்திரங்களைச் சொல்லும், திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மனிதர்கள்” திரைப்படம், வரும் மே 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர், திரை ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, திரைப் படைப்பாளிகள் மத்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்துள்ளது.
இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெகு சுவாரஸ்யமான டிரெய்லர், படத்திற்காக காத்திருக்கிறேன் எனக் கூறியதோடு, தனது சமூக வலைத்தள பக்கத்திலும் படத்தின் டிரெய்லரைப் பகிர்ந்துள்ளார்.
புகழ் மிகு ஒளிப்பதிவாளர் பி சி ஶ்ரீராம் இப்படத்தின் டிரெய்லரால் ஈர்க்கப்பட்டு, உடனடியாக படக்குழுவினரை அழைத்துப் பாராட்டி, அவர்களோடு உரையாடியுள்ளார். அந்நிகழ்வில்.. முதல் சில நொடிகளிலேயே இந்தப்படம் என்னை ஈர்த்துவிட்டது. காட்சியும் களமும் வெகு சுவாரஸ்யமாக உள்ளது. படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள், எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு இரவில் ஒன்று சேர்ந்து மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், வித்தியாசமான களத்தில் புதுமையான திரில்லராக, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில், இப்படத்தை உருவாகியுள்ளார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா.
இப்படத்தில் அறிமுக நடிகர்கள் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெளியீட்டுக்கு முன்னதாகவே மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் மே 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகீறது.
பேயை செல்லப்பிராணியாக வளர்க்கலாம் என்று 'ஜின் தி பெட்' படம் சொல்கிறது - ஆர். கே. செல்வமணி
'பிக் பாஸ் சீசன் 3' வெற்றியாளரும், 'வேலன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமான நடிகரும், இசைக் கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஜின் - தி பெட்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, 'நிழல்கள்' ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை தீபக் கவனிக்க கலை இயக்கத்தை வி. எஸ். தினேஷ்குமார் மேற்கொண்டிருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை டி ஆர் பாலா மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்குகின்றன.
வரும் 30ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ' ஜின் -தி பெட்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் படக்குழுவினருடன் நீதியரசர் எஸ் கே கிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரி பன்னீர்செல்வம் ஐபிஎஸ், ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, தயாரிப்பாளர் கேயார், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் சங்க தலைவர் ஆர். வி. உதயகுமார் , செயலாளர் பேரரசு , துணைத் தலைவர் ஆர் . அரவிந்தராஜ், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவரையும் தமிழ்நாடு திரைப்பட கல்லூரியின் முதல்வரும் இயக்குநருமான திருமலை வேந்தன் வரவேற்றார்.
ஃபெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், ''இப்படத்தின் இயக்குநரின் தந்தையான திருமலை வேந்தன் திரைப்படக் கல்லூரியில் எனக்கு ஜூனியர். அவருடன் எனக்கு 40 ஆண்டுகால நட்பு இருக்கிறது. அவருடைய வரவேற்புரையும் , வாழ்த்துரையும் சுருக்கமாகவும் , சிறப்பாகவும் இருந்தன.
இயக்குநரின் தாயாரான ராஜேஸ்வரி அம்மாவை பார்த்தால் பலருக்கு பயம். உண்மையில் அவர்தான் புரட்சிகரமான போராளி. அவருடன் பழகத்தொடங்கினால் ஒன்று எதிரியாகி விடுவார்கள், இல்லையென்றால் நட்பாகி விடுவார்கள். ஆனால் அவர் ஒருபோதும் யாருக்கும் துரோகியானதில்லை. இப்படத்தின் பாடல்களையும் முன்னோட்டத்தையும் பார்த்தபோது தமிழ் திரையுலகுக்கு அற்புதமான திறமை மிக்க குழு கிடைத்திருப்பதாகவே நினைக்கிறேன்.
நாங்கள் எல்லாம் நாயகியை தேர்வு செய்யும்போது அந்தப் பெண்ணின் புன்னகையையும், கண்களையும் மட்டும் தான் கவனிப்போம். அந்த வகையில் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் பவ்யாவிடம் அழகான புன்னகை இருக்கிறது. பார்ப்பதற்கு சமந்தா போல் இருக்கிறார். அவருக்கு தென்னிந்திய திரைப்படத்துறையில் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
வளர்ந்த நட்சத்திரங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். இயக்குநரிடமும், எழுத்தாளர்களிடமும் நீங்களே நேரடியாக கதையை கேளுங்கள். நடிகர்களின் மேலாளர்களும், உதவியாளர்களும் கதை கேட்க தொடங்கியதால் தான் சினிமா சீரழிகிறது. இதனால் திரைத்துறையில் ஆரோக்கியமான நட்பு ஏற்படுவதில்லை. எப்போது ஒரு நாயகனுக்கும்.. நாயகிக்கும் இயக்குநருக்கும் இடையே ஒரு புரிதலும், நட்பும் இல்லையோ, அப்போதே அந்தப் படம் தோல்வியை தழுவுகிறது. இதை என் படத்தினை ஆய்வு செய்து தெரிந்து கொண்டிருக்கிறேன்.
தயாரிப்பாளர் கேயார் ஒரு ஜீனியஸ். அவர் நினைத்தால் தற்போது திரைத்துறையில் நடைபெற்று வரும் பிரச்சனைக்கு தீர்வை சொல்ல முடியும். அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. இன்றைய தேதியில் ஒரு நாளைக்கு திரையரங்குகளில் ஏழு முதல் எட்டு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன. இதன் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு அறுபது கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இவை அனைத்தும் படத்தின் தயாரிப்பாளர்கள் மூலம் தான் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் இந்த வருமானம் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை. படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு மட்டும்தான் நஷ்டம் ஏற்படுகிறது.
என்னுடைய தயாரிப்பாளர் நண்பர் ஒருத்தர் 'மத கஜ ராஜா' படம் வெளியாகி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டான, இன்னும் அதற்கான வசூல் முழுமையாக வந்து சேரவில்லை என குறிப்பிட்டார். இதுதான் தயாரிப்பாளர்களின் இன்றைய நிலை. அதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும். திரையுலகத்தில் தொழிலாளர்கள் தான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிப்பதில்லை. சில தயாரிப்பாளர்கள் மட்டுமே 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள்.
எங்களுடைய பெப்சி பொதுக்குழுவில் தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் தொழிலாளர்களாகிய நாம் நன்றாக இருக்க முடியும் என்று சொல்லி இருக்கிறேன். தற்போதுள்ள தயாரிப்பாளர்களில் 80 சதவீதத்தினர் தொழிலாளர்களை சிறப்பான மரியாதையுடன் நடத்துகிறார்கள். அதனால் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்களும் பிரார்த்திக்கிறோம். தயாரிப்பாளர் கேயார் ஒரு ஃபார்முலாவை வைத்திருக்கிறார். அதனைப் பயன்படுத்தி தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு அவர் தீர்வு காண வேண்டும். நாங்கள் தவறு செய்திருந்தாலும் அதனை அவர் சுட்டிக் காட்டலாம். நாங்கள் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம்.
படத்தின் இயக்குநர் பாலா எதிர்காலத்தில் சிறந்த இயக்குநராக வருவார்.
பெற்றெடுத்த குழந்தையை கையில் ஏந்திக் கொள்ளும் போது கிடைக்கும் உணர்வை போல் இசை இருக்க வேண்டும். அப்படித்தான் கதையும் இருக்க வேண்டும். இப்போதுள்ள ஹீரோக்களுக்கு கதையை சொல்ல வேண்டும் என்றால் மெயிலில் அனுப்புங்கள் என்கிறார்கள். இது குழந்தையை மெயிலில் அனுப்புவது போல் இருக்கிறது. கதையை இயக்குநர் விவரிக்கும் போது தான் எதிரில் இருப்பவர்கள் கதையில் எந்த தருணத்தை ரசிக்கிறார், எதனை ரசிக்கவில்லை என்பதை இயக்குநரால் தெரிந்து கொள்ள முடியும். கதையை மெயிலில் அனுப்ப சொன்னால் அது கடினமானது. முதலில் கதையை ஆங்கிலத்தில் எப்படி மொழியாக்கம் செய்வது என்று யோசிக்க வேண்டும். இதுவரை பேய் படம் என்றால் ஒரு பயம் இருந்தது. ஆனால் அந்த பேயை ஒரு செல்லப்பிராணியாக மாற்றி அதனை வளர்க்கலாம் என்று இந்த படம் சொல்கிறது. அதனால் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.
ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசுகையில், ''என்னுடைய பெற்றோர்கள் முதலில் சென்னையில் தான் வணிகம் செய்தார்கள். அதில் நஷ்டம் ஏற்பட்டதும் சொந்த ஊருக்கு திரும்பி விட்டார்கள். நான் முதன் முதலாக 19 வயதில் சென்னைக்கு வந்தபோது, எனக்கு அறையை கொடுத்து, உணவளித்து, தினசரி ஊதியமும் கொடுத்து, அவருடைய இயக்கத்தில் வேலை செய்வதற்கான வாய்ப்பு கொடுத்து ஆதரித்தவர் டி ஆர் பாலா. என் பின்னணி தெரியாமல் என்னிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று கண்டுபிடித்தவர் டி ஆர் பாலா. இவர் திறமையான இயக்குநர். இவர் இதற்கு முன் 'தேர்ட்டீன்' என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இவருடைய வாழ்வியலை மையப்படுத்தி 'சென்னை பிரம்மாக்கள்' என்ற ஒரு குறும்படத்தை நான் இயக்கினேன். இதன் பிறகு எங்களுடைய நட்பு இன்று வரை தொடர்கிறது. அதன் பிறகு தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆன்மீகத்தின் பக்கம் என்னுடைய கவனம் திரும்பியது.
படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நண்பர் டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஜின் -தி பெட்' திரைப்படத்திற்கு உங்களது ஆதரவை வழங்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
இயக்குநர் ஆர். அரவிந்தராஜ் பேசுகையில், ''16 குட்டி சாத்தான்களுக்கு தலைவர் ஒரு பூதம். 16 பூதத்திற்கு தலைவர் ஒரு பேய். 16 பேய்களுக்கு தலைவர் ஒரு ஜின். என நான் வாசித்திருக்கிறேன். இந்த 'ஜின்' திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது, எனக்கு 'பட்டணத்தில் பூதம்' திரைப்படம் நினைவுக்கு வந்தது. எனவே இந்தத் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும். பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள திரைப்படங்கள் வந்து நாளாகி விட்டது. அதுவும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒரு திரைப்படம் வருகிறது என்றால் அது வரவேற்கக் கூடியது. இன்றைக்கு குழந்தைகள் பேய் படங்களை பார்த்து பேயை ரசிக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
தயாரிப்பாளர் கேயார் பேசுகையில், ''ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு முக்கியம். ஒரு தலைப்பு வைத்தால் அந்தத் தலைப்பு அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும். தற்போது ஓ டி டியில் அனைத்து மொழியினரும் படத்தை பார்ப்பதால் அவர்களுக்கும் பிடிக்கும் வகையில் படத்தை தலைப்பை வைக்க வேண்டியதிருக்கிறது. இதையெல்லாம் நன்றாக சிந்தித்து, இந்தப் படத்திற்கு இயக்குநர் டி ஆர் பாலா 'ஜின்' என்று பெயர் வைத்ததை பாராட்டுகிறேன்.
இப்படத்தின் முன்னோட்டத்தை அண்மையில் பார்த்தேன். பார்த்தவுடன் அதன் தரம் புரிந்தது. ஹீரோ-ஹீரோயின் காம்பினேஷன் சூப்பராக இருந்தது. ஜின் என்பது புது கான்செப்ட். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 'ஈ டி' என்றொரு படம் வந்தது. அதை அடிப்படையாக வைத்து தான் 'மை டியர் குட்டிச்சாத்தான்' உருவானது. அந்த வகையில் குழந்தைகளை கவரும் வகையில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் 'ஜின்'. இப்படத்தின் ஆடியோ உரிமை, டிஜிட்டல் உரிமை என அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு விட்டது என கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெற்றியை பெற்றிருக்கிறது. எந்த அளவிற்கு வெற்றியை பெறுகிறது என்பதை 30ம் தேதி முதல் திரையரங்குகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் படத்தின் இயக்குநர் டி ஆர் பாலா லோகேஷ் கனகராஜ், நெல்சன் போல் முன்னணி நட்சத்திர இயக்குநராக வருவார். அந்த அளவிற்கு திறமைசாலியாக இருக்கிறார். அது படத்தின் முன்னோட்டத்திலேயே தெரிந்து விட்டது,'' என்றார்.
இணை தயாரிப்பாளர் ராகவேந்திரா பேசுகையில், '' எனக்கு சினிமா மீது ஆசை இருக்கிறது. படத்தை தயாரிக்கலாம் என்று நினைத்தபோது இப்படத்தின் கதை கிடைத்தது. படத்தின் கதை பிடித்து போனதால் இணை தயாரிப்பாளராக இந்த குழுவுடன் இணைந்தேன். இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருப்பது ஒரு கதை. ஆனால் படத்தில் மற்றொரு கதையும் உண்டு. அது சிறப்பானதாக இருக்கும். இது என்னுடைய முதல் படம். இவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படத்தின் மூலம் இயக்குநருக்கு சிறப்பான எதிர்காலம் கிடைக்க வேண்டும், கிடைக்கும் என நம்புகிறேன். இந்த திரைப்படத்தை திரையரங்கத்தில் பத்துக்கு மேற்பட்ட முறை பாருங்கள். பலருக்கு பகிருங்கள், ஆதரவிற்கு நன்றி,'' என்றார்
தயாரிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி வேந்தன் பேசுகையில், ''ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் மகன் என்னிடம் 'ஜின்' என்றொரு தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டார். அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி ஜின் என்ற தலைப்பை பதிவு செய்தேன். அதன் பிறகு இந்த ஜின் என் குடும்பத்தை சின்னாபின்னமாக்கிவிட்டது. என் மகன் இந்த டைட்டிலையும், கதையையும் வேறொரு நிறுவனத்திற்கு சொல்கிறார், நன்றாக இருக்கிறது என சொன்னார்கள் ஆனால் மேற்கொண்டு எந்த பணியும் நடைபெறவில்லை. அதன் பிறகு முன்னணி பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர் நடிப்பதற்காக இந்த டைட்டிலும் கதையையும் சொன்னார். கதை விவாதம் எல்லாம் நடந்தது. ஆனால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இந்த தருணத்தில் இப்படத்தின் டைட்டில் வேறு ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது. அதன் பிறகு அந்த டைட்டிலை அந்த நிறுவனத்திடம் கேட்டோம். அவர்கள் தர மறுத்து விட்டார்கள். அதன் பிறகு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து 'ஜின் தி பெட்' என டைட்டில் வைத்தோம். இதன் பிறகு எங்கள் குடும்பம் தொடர்ந்து உயர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கடவுள் இருக்கிறார் என்று ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். கடவுள் இல்லை என்று ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். ஆனால் ஜின் நிச்சயமாக இருக்கிறது. 'ஜின்- தி பெட்' என்று பெயர் வைத்த பிறகுதான் எங்களுக்கு நல்லது நடந்திருக்கிறது. இந்த ஜின்னை மலேசியாவில் வளர்க்கிறார்கள்.. அதன் பின்னணியில் உருவானது தான் இப்படத்தின் கதை," என்றார்.
நடிகை பவ்யா தரிகா பேசுகையில், ''2022 நவம்பர் 20ம் தேதியன்று நான் என்னுடைய தோழியின் வீட்டில் இருந்தேன். அப்போதுதான் என்னுடைய தோழிகள் 'ஜின் 'என்ற ஒரு விஷயத்தை பற்றி சொன்னார்கள். அதைப்பற்றி அப்போது நான் அவ்வளவாக நம்பவில்லை. ஒரு வார்த்தையை சொல்லி அதனை அடிக்கடி சொல் அதனுடைய எனர்ஜி கிடைக்கும் என்றார்கள். அதனையும் நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். அங்கிருந்து நான் நள்ளிரவு 2.30 மணிக்கு கிளம்பினேன். அதன் பிறகு ஏதோ ஒரு விஷயத்திற்காக தோழியின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். அந்தத் தருணத்தில் என் முதுகு பின்னாடி இருந்து' பவ்யா என்ற குரல் ஒலித்தது. அதைக் கேட்டவுடன் பயம் ஏற்பட்டது.
அதன் பிறகு அடுத்த நாள் காலை என்னுடைய சமூக வலைதளத்தை பார்வையிடுகிறேன். அப்போது ஜின்ஷா என்றொரு ஃபாலோயர் நிறைய லைக்குகளை போட்டு கவனத்தைக் கவர்ந்தார். இது எனக்கு மேலும் பயத்தை ஏற்படுத்தியது இதனால் உடனடியாக கோவில், சர்ச், தர்கா, குருத்வாரா ஆகிய இடங்களுக்கு சென்று வந்தேன், மூன்று மாதங்கள் கழித்து இயல்பானேன். அதன் பிறகு என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் வருகிறது. அதன் டைட்டில் 'ஜின்'. எனக்குள் ஆச்சரியம் ஏற்பட்டது. இயக்குநர் பாலா என்னை சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சந்தித்தார். அப்போது ஜின்னை பற்றிய எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. அதனால் தானோ என்னவோ இப்படத்தில் நான் நாயகியாக நடித்திருக்கிறேன். ஜின்னுடைய தொடர்பு எனக்கும் இருக்கிறது என ந
'மெட்ராஸ் மேட்னி' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் லுக் மூலம் ரசிகர்களிடம் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் இப்படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மிடில் கிளாஸ் வாழ்வியலை, அதன் அழகியலை, ஒரு மாறுபட்ட தளத்தில், அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கும் இப்படம், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது.
இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. சி. பாலசாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்புகளை ஜாக்கி ஏற்றிருக்கிறார். இந்த திரைப்படத்தை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் எக்ஸிகியூடிவ் புரொடக்ஷன் பணிகளை மேற்கொடுள்ளது. இந்த திரைப்படத்தை முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
இப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா