சற்று முன்
சினிமா செய்திகள்
Updated on : 01 January 1970
சமீபத்திய செய்திகள்
சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் டீசர் வெளியீடு
நடிகர் சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த டீசர், சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தின் உலகத்தை ரசிகர்களுக்கு ஒரு சிறிய பார்வையாக காட்டுகிறது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யதேவர நாக வம்ஷி தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. உணர்ச்சியும் குடும்ப பாசமும் கலந்த ஒரு சினிமா அனுபவத்தை இந்த படம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டீசரில் சஞ்சய் விஸ்வநாத் ஒரு சர்வதேச துப்பாக்கி சுடும் வீரராக அறிமுகமாகிறார். நாற்பது வயதிலும் தனது கனவுகளை விடாமல் தொடர்ந்து முயற்சி செய்யும் மனிதராக சூர்யா நடித்துள்ளார். தந்தையாகும் பாசமும், உணர்ச்சி மிக்க மனிதராகவும் அவர் நடித்திருப்பது டீசரில் வெளிப்படுகிறது. சூர்யாவின் ஸ்டைலான தோற்றமும், இயக்குநர் வெங்கி அட்லூரியின் வசனங்களும் டீசரின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
இந்த படத்தில் நடிகை மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் படத்திற்கு புதிய உற்சாகத்தை சேர்க்கிறார். மேலும், வயது வித்தியாசம் கொண்ட ஒரு வித்தியாசமான காதல் கதை இதில் இருக்கும் என டீசர் சுட்டிக்காட்டுகிறது.
படத்தின் தொழில்நுட்ப குழுவும் வலுவாக அமைந்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள பின்னணி இசை டீசருக்கு கூடுதல் வலிமை அளிக்கிறது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி அழகான காட்சிகளை பதிவு செய்துள்ளார். நவீன் நூலி எடிட்டிங் பணியை சிறப்பாக செய்துள்ளார். கலை இயக்குநர் பங்களான் கலை வடிவமைப்பும் படத்தின் காட்சிகளை மேலும் அழகாக மாற்றியுள்ளது.
உணர்ச்சிகளும் குடும்ப பொழுதுபோக்கும் கலந்த பெரிய படமாக உருவாகும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், சிறந்த நடிகர் பட்டாளத்தையும் திறமையான தொழில்நுட்ப குழுவையும் கொண்டுள்ளது. ‘லக்கி பாஸ்கர்’ மற்றும் ‘வாத்தி’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இந்த படத்தையும் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.
சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்த படத்தை ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் வரும் ஜூலை மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.
‘கே டி : தி டெவில்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு… ரசிகர்களிடையே உற்சாகம்
இயக்குநர் பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘கே டி : தி டெவில் (KD : The Devil)’ திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கே வி என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்த படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் ‘ஆக்ஷன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தின் “திற நீ எந்தன் தரணி திற நீ” என்ற புதிய நடனப் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிரடியான இசையும் உற்சாகமான தாளமும் கொண்ட இந்த பாடல் ரசிகர்களிடையே ‘பார்ட்டி கீதம்’ ஆக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாடலில் பாலிவுட் நடன நட்சத்திரம் நோரா ஃபதேஹி மற்றும் நடிகர் சஞ்சய் தத் இணைந்து தோன்றுகின்றனர். இருவரின் ஆற்றல்மிக்க நடன அசைவுகளும் காட்சிகளும் பாடலை மேலும் கவர்ச்சியாக மாற்றியுள்ளன.
அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இந்த பாடலை பாடகி ராஜலட்சுமி பாடியுள்ளார். பாடலின் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.
பாடல் இணையத்தில் வெளியானதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. விரைவில் இந்த பாடல் ரசிகர்களின் பிளேலிஸ்ட்களிலும், நடன நிகழ்ச்சிகளிலும் இடம் பெறும் என படக்குழு நம்புகிறது.
‘கே டி : தி டெவில்’ திரைப்படம் ஏப்ரல் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை இந்த படம் வழங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
‘சிறை’ திரைப்பட வெற்றிவிழா – படக்குழுவிற்கு கேடயம் வழங்கி கௌரவிப்பு
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் LK அக்ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை.”
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மாறுபட்ட கதைக்களத்தில் உருவான இந்த படம், 2025 டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. வெளியான பிறகு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து, ஜனவரி 23 அன்று ZEE5 ஓடிடி தளத்தில் இப்படம் வெளியிடப்பட்டது. அங்கும் இந்த படத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
திரைப்படம் வெளியாகி 75 நாட்கள் கடந்தும் சில திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள், சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என பல தரப்பினரிடமிருந்து பாராட்டுகளை பெற்ற இந்த படம், கடந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க நல்ல திரைப்படங்களில் ஒன்றாக பேசப்பட்டது.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் “சிறை” திரைப்படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. இதில் படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நினைவாக வெற்றிக் கேடயங்கள் வழங்கப்பட்டன. மேலும், இந்த படத்திற்கு ஆதரவு அளித்த திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வினில்
இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசுகையில்,
இப்படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. ஒரு காட்சியை எடுக்கும் போது அது எப்படி வரும் என்று தெரியாமல் இருந்தாலும், நம்பிக்கையுடன் அதை எடுப்போம். அந்த நம்பிக்கையில்தான் இந்த படம் முழுவதும் உருவானது. இப்படிப் பட்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளை திரைப்படமாக உருவாக்குவது மிகவும் சவாலான விஷயம். ஏனெனில் ஒரு உண்மை சம்பவத்தை அப்படியே திரையில் காட்டினால் அது சினிமாவாக வேலை செய்யாது. அதே நேரத்தில் சினிமாவாக மாற்றும் போது அதன் உண்மை தன்மையும் காப்பாற்ற வேண்டும். அந்த சமநிலையை வைத்துப் படம் உருவாக்குவது மிகவும் கடினமான ஒரு செயல்முறை.
இப்போது பலர் மலையாள சினிமாவை எடுத்துக்காட்டாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மாதிரியான படங்களை நம் திரையரங்குகளில் ஓட வைப்பது சுலபமல்ல. பல நேரங்களில் அந்த வகை படங்களை நாம் ஓடிடியில் பார்த்து பாராட்டுகிறோம். ஆனால் தமிழ் ரசிகர்கள் திரையரங்கில் ரசிக்கும் வகையில் ஒரு படமாக உருவாக்குவது மிகவும் முக்கியமானது. அந்த முயற்சியில் எங்கள் குழுவில் உள்ள அனைவரும் பெரிய ஆதரவாக இருந்தார்கள். ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் இந்த படத்தை சிறப்பாக உருவாக்க உழைத்தார்கள்.
தயாரிப்பாளர் லலித் சார் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். இந்த கதையை நம்பி, அதில் தனது மகனையும் அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவர் வைத்திருந்த நம்பிக்கை மிகவும் பெரிய விஷயம். ஒரு புதிய இயக்குநரையும், ஒரு புதிய முயற்சியையும் நம்பி இந்த படத்தை தயாரித்தது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது.
இந்த படத்தின் வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படிப் பட்ட கதைகளை நம்பி எடுத்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணமாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்துள்ளனர். அவர்களின் உழைப்பால் தான் இந்த படம் இந்த அளவிற்கு வந்துள்ளது. இந்த படம் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படவில்லை, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவிய பாராட்டுக்களால் தான் மக்கள் அதிகமாக வந்து பார்த்தார்கள். அந்த வார்த்தைகள் மூலம் பரவிய வரவேற்பு இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. இந்த படத்திற்கு மிகுந்த ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும், தொடர்ந்து ஊக்கமளித்த பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி.” என்றார்.
இயக்குநர் தமிழ் பேசுகையில்,
"இந்த படத்தின் வெற்றிக்கு பலரின் பெரிய பங்களிப்பு இருக்கிறது. முதலில் இதில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. அவர்களின் முயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவற்றால் தான் இந்த படம் உருவாகி வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தை மக்களிடம் எடுத்துச் சென்ற பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.
இயக்குநர் சுரேஷ் சார் குறித்து நான் தனியாக நன்றி சொல்ல வேண்டும். ஒரு நல்ல கதையை மிகச் சிறப்பாக திரையில் கொண்டு வந்து, அதை மக்களுக்கு சேர்க்கும் திறன் அவருக்கு உள்ளது. டாணாக்காரன் படம் வெளியாக சுமார் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இந்த படம் இப்போது வெளியானபோது, அது எனக்கு புதிய உணர்வை தந்தது. இப்படத்திற்கான பாராட்டுக்கள் எனக்கானதாக தோன்றுகிறது. இந்த நான்கு ஆண்டுகளில் பல சவால்கள் இருந்தன. சில சமயங்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலைகளும் வந்தன. ஆனால் அந்த எல்லா சிரமங்களையும் கடந்து இந்த படம் ரசிகர்களிடம் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு இப்போது தமிழ் சினிமா வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் மலையாள சினிமாவையும் நாம் பெரிதும் பாராட்டுகிறோம். அங்கு பல திறமையான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். உண்மையில் இந்தியாவில் அதிகமான எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தமிழ்நாடு தான். அதிகமான புத்தகங்களும் இங்குதான் வெளியாகின்றன. ஆனால் நம் எழுத்தாளர்களுக்கு நாம் தர வேண்டிய மரியாதை மற்றும் வாய்ப்புகளை இன்னும் அதிகமாக வழங்க வேண்டும்.
எழுத்தாளர்களின் கதைகளை அதிகமாக வாசித்து, நல்ல கதைகளை திரைப்படங்களாக மாற்ற வேண்டும். ஏனெனில் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்ல, அது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கிறது. அதனால் டிஜிட்டல் மற்றும் ஓடிடி தளங்களையே மட்டும் நம்பாமல், திரையரங்குகளுக்காக உருவாகும் பெரிய படங்களையும் தொடர்ந்து செய்ய வேண்டும். ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து ரசிக்கும் வகையில் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம், நன்றி.” என்றார்.
நடிகர் எல்.கே.அக்ஷய் குமார் பேசுகையில்,
“இந்த மேடையில் எனது முதல் படத்திற்காக நின்றதும், இப்போது அதே மேடையில் அந்த படம் வெற்றி பெற்றதற்காக பேசுவதும் எனக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது. முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் என் குடும்பத்தினருக்கும், குறிப்பாக என் டீமுக்கும் நன்றி சொல்ல வேண்டும். என் டீம் தான் என் குடும்பம். அவர்களின் ஆதரவால் தான் நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன்.
ஒரு புதிய கலைஞராக நடித்த பிறகு, ரசிகர்கள் நம்மை ஏற்றுக் கொள்வார்களா என்ற பயம் ஒவ்வொரு நடிகருக்கும் இருக்கும். ஆனால் எனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை எனக்கு வழங்கிய ரசிகர்கள், ஊடகங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர் என் அப்பா. எங்களுக்குள் சில சமயங்களில் வாக்குவாதங்களும் நடந்திருக்கிறது. ஆனால் அவர் எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி, மனதளவில் வலிமையாக இருக்கச் செய்தார். அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
இயக்குநர் சுரேஷ் சார் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தது மிகவும் பெரிய விஷயம். இப்படி ஒரு சிறப்பான அறிமுகம் கிடைப்பது எளிதான விஷயம் இல்லை என்பதை நான் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளேன். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இப்போது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் இருந்தும் எனக்கு பாராட்டுச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இந்த படத்தில் நடித்த அனைவருக்கும், குறிப்பாக விக்ரம் பிரபு சாருக்கு என் நன்றி. அவரின் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகப்பெரிய உற்சாகமாக இருந்தது. அதேபோல் தயாரிப்பு குழுவில் இருந்த அருண், யோகேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என் முதல் படத்திற்காக அவர்கள் என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கியது எனக்கு மிகவும் முக்கியமான விஷயம். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.” என்றார்.
நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில்,
“இன்றைய இந்த விழாவில் கலந்து கொண்டு, இப்படத்திற்கு கிடைத்துள்ள விருதுகளைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்னர் என் அப்பாவின் அவார்ட் விழாக்களுக்கு இரண்டு முறை சென்றிருக்கிறேன். ஆனால் இன்று நான் நடித்த ஒரு படத்திற்கு இவ்வளவு கேடயங்கள் கிடைப்பதை நேரில் பார்க்கும் போது அது எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் அது ஒரு டீம் வொர்க் என்பதற்கு சிறை படம் ஒரு உதாரணம். இந்த மேடையில் விருது பெற்றவர்களும், இன்னும் பெறவிருப்பவர்களும் அனைவரும் இந்த படத்தை தங்களது வாழ்க்கை போல உழைத்து உருவாக்கியவர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த படம் 2025 டிசம்பர் 25ஆம் தேதி வெளியானது. அதன் பிறகு படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகு ‘டாணாக்காரன்‘ படத்திற்கு மாநில விருது கிடைத்த செய்தி வந்தபோது, அந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை. எனக்கு இரட்டை சந்தோஷமாக அமைந்தது.
இந்த வெற்றிக்கு பலர் காரணமாக இருக்கிறார்கள். குறிப்பாக தயாரிப்பாளர் லலித் குமார் சார் ஒரு நல்ல தயாரிப்பாளராக இந்த படத்திற்கு பெரிய ஆதரவாக இருந்தார். இந்த படம் எனது 25வது படம் என்பதும் எனக்கு ஒரு சிறப்பு. நான் ஒரு நடிகரின் மகன், பேரன் என்ற அடையாளத்தோடு வளர்ந்தேன். பள்ளி நாட்களிலேயே சில சமயம் அந்த அடையாளம் காரணமாக தனியாக உணர்ந்த தருணங்களும் இருந்தன. அதனால் பல விஷயங்களில் இருந்து ஓடிக்கொண்டே இருந்தேன். பிறகு அமெரிக்காவுக்கு சென்றபோது தான் என்னை நான் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு தான் திரும்பி வந்து சினிமாவிலேயே என் பாதையை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
என் முதல் படம் ‘கும்கி’ பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றிக்கு பிறகு ஒரு அழுத்தமும் வந்தது. ஆனால் அதை தாண்டி தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்த பயணத்தில் பல விமர்சனங்களும், சவால்களும் இருந்தன. சிலர் பாராட்டினார்கள், சிலர் விமர்சித்தார்கள். ஆனால் நான் என்னுடைய பாதையை தெரிந்து கொண்டு முன்னேறிக் கொண்டே வந்தேன்.
சினிமா என்பது திறமை, நேரம், அதிர்ஷ்டம், வாய்ப்பு ஆகியவை சேர்ந்த ஒரு துறை. அதில் பல சவால்களும் இருக்கும். ஆனால் அந்த எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு தான் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன். இப்போது இந்த 25வது படத்திற்குப் பிறகு, இது எனக்கு ஒரு புதிய ஆரம்பம் போல தோன்றுகிறது. இனிமேல் இன்னும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து, நம் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
என் பயணத்தில் என்னை ஆதரித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. இந்த படத்தின் வெளியீட்டு நாளில், ‘இது ஒரு டீம் வெற்றி’ என்று நான் சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். இன்று அந்த டீமுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் நன்றி.” என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில்,
“இன்றைக்கு இங்கே வந்து நிற்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பெரிய ஸ்டார் பவர் இல்லாத, ஒரு கதையை மட்டும் நம்பிய படம் திரையரங்குகளில் வெளியாகி இவ்வளவு பெரிய வெற்றி பெறுவது எளிதான விஷயம் அல்ல. இப்படிப்பட்ட ஒரு படத்தை நம்பி தயாரித்து, முழு ஆதரவுடன் நிற்கும் தயாரிப்பாளருக்கே முதலில் நன்றி சொல்ல வேண்டும்.
படம் வெளியான பிறகும் தொடர்ந்து அதை புரொமோட் செய்து, சரியான முறையில் மக்களிடம் கொண்டு சென்றது மிகப்பெரிய விஷயம். தயாரிப்பாளர் வைத்திருந்த நம்பிக்கையால் தான் இந்த படம் கமர்ஷியல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது என்று நான் நினைக்கிறேன். நான் படம் பார்த்த பிறகு அவரிடம் ”படம் மிகவும் நன்றாக இருக்கிறது, நீங்கள் முதலீடு செய்த பணம் கண்டிப்பாக திரும்ப வரும்” என்று சொன்னேன். ஆனால் அவர் வைத்திருந்த நம்பிக்கை அதையும் தாண்டி இருந்தது. உண்மையில் அவரது நம்பிக்கையை விட அதிகமாகவே இந்த படம் ஒரு பெரிய கமர்ஷியல் வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் இருக்கும் உண்மை, அதில் உள்ள உணர்வு, எல்லோரிடமும் பொதுவாக சென்றடைந்ததால் தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த படத்தை இப்படியாக உருவாக்கிய இயக்குநர் சுரேஷின் முயற்சி மிகவும் சிறப்பு. உண்மையில் இது தமிழ் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. அதை ஒரு திரைக்கதையாக மாற்றி, தனது பார்வையில் ஒரு முழுமையான திரைப்படமாக உருவாக்குவது சுலபமான விஷயம் அல்ல. அந்த பயணத்தில் பல சவால்கள் இருந்திருக்கும். ஆனால் அதை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அவர் நிறைவேற்றியிருக்கிறார்.
அவரது வேலை செய்யும் விதம், குழுவை ஒருங்கிணைக்கும் திறன், சிக்கலான சூழ்நிலைகளையும் அமைதியாக கையாளும் திறன் ஆகியவை மிகவும் சிறப்பானவை. அதனால் தான் இந்த படம் இவ்வளவு சிறப்பாக உருவாகியுள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் அழகும், நுட்பமும் அவரது திறமையை வெளிப்படுத்துகிறது. இந்த படத்தில் நடித்த நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்கள்.
இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக் கொண்டது மிகவும் சிறப்பான விஷயம். நான் எப்போதும் சொல்லும் விஷயம் என்னவென்றால், தமிழ் சினிமாவின் மெயின்ஸ்ட்ரீம் ரசிகர்கள் மிகவும் சிறந்த ரசனையுடையவர்கள். இந்த மாதிரியான ஒரு முயற்சி வேறு மொழியில் எடுக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற வெற்றியை அடைந்திருக்குமா என்பது தெரியாது. ஆனால் தமிழில் அது சாத்தியமாகியுள்ளது.
இந்த படத்தில் தமிழும் சுரேஷும் ஒருவருக்கொருவர் அளித்த மரியாதை மிகவும் சிறப்பானது. வெற்றி கிடைக்கும் போது ‘இதற்கு நான் தான் காரணம்’ என்று சொல்வது எளிது. ஆனால் எங்கும் அப்படிச் சொல்லாமல், ஒருவருக்கொருவர் கௌரவம் அளித்திருப்பது மிகவும் நல்ல விஷயம்.
இந்த படத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு, விமர்சகர்களு
18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் ‘தாம் தூம்’
நடிகர் ரவி மோகன் ஹீரோவாக நடித்த பிரபலமான தாம் தூம் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இளைஞர்களிடம் ஒரு காலத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது புதுப்பிக்கப்பட்ட தரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது.
முருகன் பிலிம் பேக்டரி சார்பில் கந்தசாமி மற்றும் பாலசுப்ரமணி இந்த ரீ-ரிலீஸை பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். சேலம் பகுதியில் பல வெற்றி திரைப்படங்களை விநியோகம் செய்த அனுபவம் இவர்களுக்கு உள்ளது. மேலும் ஹோசூரில் கிராண்ட் சினிமாஸ் என்ற மல்டிப்ளெக்ஸ் திரையரங்கையும் நடத்தி வருகிறார்கள். தற்போது “தாம் தூம்” படத்தை மீண்டும் வெளியிட்டு ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை மீண்டும் தர இருக்கிறார்கள்.
"தாம் தூம்" படம் முதலில் 2008 ஆகஸ்ட் 28 அன்று வெளியானது. வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட காட்சிகள், அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் அழகான காதல் காட்சிகள் அந்த காலத்து இளைஞர்களை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக 2K தலைமுறைக்கும் இன்றும் நினைவில் இருக்கும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது அவர் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாகவும் அரசியலிலும் முக்கிய பங்கிலும் உள்ளார். மேலும் இந்த படத்தில் ராய் லக்ஷ்மி, ஜெயராம், போஸ் வெங்கட், பிதாமகன் மகாதேவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். அவர் அமைத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை அப்போது பெரிய ஹிட் ஆனது. அந்த பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கேட்கப்படுகின்றன.
மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் Jeeva இயக்கத்தில் உருவான இந்த படம் முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக அமைந்தது. Mediaone Global Entertainment Limited மற்றும் Ayngaran International / Metro Film (P) Ltd ஆகிய நிறுவனங்கள் இந்த படத்தை தயாரித்திருந்தன.
18 ஆண்டுகளுக்குப் பிறகு, "தாம் தூம்" படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு 5.1 ஆடியோ சவுண்ட் தரத்துடன் மீண்டும் வெளியிடப்படுகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது.
மேலும் முருகன் பிலிம் பேக்டரி சார்பில் கந்தசாமி மற்றும் பாலசுப்ரமணி எதிர்காலத்தில் இன்னும் பல வெற்றி திரைப்படங்களையும் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ரவி மோகன் ரசிகர்களுக்கும், 2000களின் நினைவுகளை மீண்டும் அனுபவிக்க விரும்பும் ரசிகர்களுக்கும் "தாம் தூம்" ரீ-ரிலீஸ் ஒரு சிறப்பு திரை அனுபவமாக இருக்கும்.
'சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு' நடிகர் குமரனின் சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் புதிய இளம் நடிகர்களில் கவனம் ஈர்த்து வருபவர்களில் ஒருவர் குமரன். “குமார சம்பவம்” திரைப்படத்தின் மூலம் அவர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். தற்போது தொடர்ந்து புதிய படங்களில் நடித்து சினிமாவில் தனது இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். சமீபத்தில் “இறுதிபக்கம்” இயக்குநரின் அடுத்த படத்திலும் அவர் ஹீரோவாக நடிக்கிறார்.
சின்னத்திரை மூலம் ரசிகர்களிடம் முதலில் பிரபலமானவர் குமரன். அங்கு கிடைத்த அனுபவத்தை அடிப்படையாக வைத்து பெரிய திரையிலும் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.
பள்ளி நாட்களிலிருந்தே நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்த குமரன், பல ஆண்டுகள் சினிமாவில் வாய்ப்புக்காக முயற்சி செய்தார். ஆரம்பத்தில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கினார். அப்போது அவர் நடித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் அவருக்கு பெரிய பெயரை பெற்றுத் தந்தது. அந்த தொடரின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்ததால், மீண்டும் சினிமா வாய்ப்புகள் அவரை தேடி வந்தன.
பின்னர் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘வதந்தி’ வெப் சீரிஸில் நடித்தது அவரது பயணத்தில் முக்கியமான கட்டமாக அமைந்தது. அதில் அவர் தனது நடிப்பின் வேறு பரிமாணத்தை காட்டினார். அதன் பிறகு சினிமாவில் ஹீரோவாக கவனம் செலுத்திய குமரன், ‘குமார சம்பவம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். பிளாக் காமெடி மற்றும் த்ரில்லர் கலந்த அந்த படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை என்று குமரன் கூறுகிறார். பல்வேறு வகையான கதைகளில் நடித்துப் பார்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என அவர் தெரிவிக்கிறார். நல்ல கதையாக இருந்தால் நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் நடிக்க தயாராக உள்ளதாகவும் கூறுகிறார். தற்போது இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர், காமெடி, ரியாலிட்டி போன்ற பல வகை கதைகளில் அவர் நடித்து வருகிறார்.
எதிர்காலத்தில் ஒரு நல்ல காதல் கதையில் நடிக்க வேண்டும் என்பது குமரனின் ஆசையாகும். அதேபோல் காதல், குடும்ப உணர்வு, காமெடி, டான்ஸ் ஆகிய அனைத்தும் கலந்து இருக்கும் முழுமையான கமர்ஷியல் படத்திலும் நடிக்க விருப்பம் உள்ளதாக அவர் கூறுகிறார்.
சின்னத்திரையில் தொடங்கிய தனது பயணத்தை பெரிய திரையிலும் வெற்றிகரமாக தொடர வேண்டும் என்ற இலக்குடன் குமரன் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். புதிய கதைகள் மற்றும் புதிய முயற்சிகளுடன் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்க்கும் இளம் நடிகராக அவர் முன்னேறி வருகிறார்.
“முத்து என்கிற காட்டான்” டிரெய்லர் வெளியீடு , மர்மத்தை அதிகரிக்கும் புதிய காட்சிகள்
சென்னை, மார்ச் 13, 2026: JioHotstar தளத்தில் மார்ச் 27 முதல் வெளியாக உள்ள “முத்து என்கிற காட்டான்” வெப் சீரிஸின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி -யின் துண்டிக்கப்பட்ட தலையை மையமாக வைத்து வெளியான டீசர் இணையத்தில் பெரும் பேசுபொருளாக இருந்தது. தற்போது வெளியான டிரெய்லர் அந்த மர்மத்தை இன்னும் அதிகரித்துள்ளது.
முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றிய மர்மத்தை டீசர் அறிமுகப்படுத்திய நிலையில், டிரெய்லர் கதையை மேலும் விரிவாக காட்டுகிறது. இதில் பல கதாபாத்திரங்கள் முத்துவைப் பற்றி வெவ்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர். முத்து ஒரு பயங்கர குற்றவாளியா? அல்லது தவறாக புரிந்துகொள்ளப்பட்ட ஒரு மனிதரா? என்ற கேள்விகளை எழுப்பும் விதமாக டிரெய்லர் அமைந்துள்ளது.
கதையின் முன்னேற்றத்துடன் முத்துவின் உண்மையான வாழ்க்கையும், அவர் செய்த சில கடுமையான சம்பவங்களும் மெதுவாக வெளிப்படுகின்றன.
இந்த தொடரில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் Milind Soman, Sudev Nair மற்றும் Muthukumar உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டிரெய்லர் குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது, “மணிகண்டன் முதன்முதலில் காட்டான் கதையை எனக்கு சொன்னபோது, ஆறு பக்கங்களைக் கொண்ட ஒரு சுருக்கக் குறிப்பை பகிர்ந்தார். அவர் கற்பனை செய்த கதாபாத்திரமும் அதன் உலகமும் என்னை உடனே ஈர்த்துவிட்டது. இந்தத் தொடரில் பணியாற்றிய அனுபவம், ஒரு நடிகராக எனக்கு உண்மையான மனநிறைவை அளித்தது. இதைப் பார்ப்போர் அனைவரும் இதன்
மூலம் சிந்திக்கத் தூண்டும் ஏதாவது அர்த்தமுள்ள ஒன்றை எடுத்துச் செல்வார்கள் என்று நான் மனமார நம்புகிறேன்”, என்றார்.
தேசிய விருது பெற்ற இயக்குநர் எம். மணிகண்டன் இந்தத் தொடரை உருவாக்கியுள்ளார். அவர் பி. அஜித் குமார் உடன் இணைந்து இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை மதுநீலகண்டன் மற்றும் N . ஷண்முக சுந்தரம் செய்துள்ளனர். இசையை ராஜேஷ் முருகேசன் அமைத்துள்ளார்.
“முத்து என்கிற காட்டான்” தொடர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் JioHotstar தளத்தில் மார்ச் 27 முதல் வெளியாகிறது.
“நீ Forever” – Gen Z காதலை பேசும் புதிய லவ் டிராமா மார்ச் 27 முதல் திரையரங்குகளில்!
ZHEN Studios தயாரிப்பில், இன்றைய நவீன காதலை மையமாகக் கொண்டு இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கியுள்ள “நீ Forever” திரைப்படம் வரும் மார்ச் 27 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. “தருணம்” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் இணைந்து தயாரித்திருக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.
இன்றைய Gen Z தலைமுறையின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. ஒரு டேட்டிங் ஆப் மூலம் சந்திக்கும் இளம் ஜோடியின் வாழ்க்கையில் அதன் மூலம் என்னென்ன மாற்றங்கள் மற்றும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதையே படம் சொல்லுகிறது. காமெடி மற்றும் ரொமான்ஸ் கலந்து ஒரு அழகான காதல் கதையாக படம் உருவாகியுள்ளது.
நாளைய இயக்குநர் சீசன் 6 பட்டம் வென்ற சுதர்ஷன் கோவிந்த் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் பெற்ற கேரளாவைச் சேர்ந்த அர்ச்சனா ரவி நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஒய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே. ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர் வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படம் சென்னையின் பல முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையின் 20 முக்கிய அடையாளமான இடங்களில் நேரடியாக படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மேலும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
படத்தின் பாடல்களின் உரிமையை பிரபல இசை நிறுவனம் SaReGaMa பெற்றுள்ளது. மேலும், திரையரங்குகளில் வெளியான பிறகு இந்த படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை Netflix வாங்கியுள்ளது.
தற்போது படத்தின் இறுதி பணிகள் முடிவடைந்து, விளம்பரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் மார்ச் 27 முதல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது “நீ Forever.”
முனீஸ்காந்த் நடிக்கும் புதிய ஃபேண்டஸி காமெடி படம் – பூஜையுடன் தொடங்கியது
ஜே பி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிப்பில், நடிகர் முனீஸ்காந்த் நடிப்பில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கும் இந்தப் படத்தின் தொடக்க விழாவில் ‘மகாராஜா’ படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தில் முனீஸ்காந்த் உடன் ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்னா, கல்கி, ஜென்சன் திவாகர், வினோத் முன்னா, அனன்யா ராவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்திற்கு ஸ்ரீதர் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்ய, ஆனந்த் காசிநாத் இசையமைக்கிறார். படத்தொகுப்பை என். பி. ஸ்ரீகாந்த் கவனிக்கிறார். கலை இயக்கத்தை வி. சண்முகராஜா மேற்கொள்கிறார். சண்டைப் பயிற்சியை ராம் குமார், ஆடை வடிவமைப்பை ஸ்ரீ நிஷா பாலாஜி, நடன அமைப்பை சந்ததோஸ் கவனிக்கின்றனர்.
ஃபேண்டஸி காமெடி ஜானரில் உருவாகும் இந்தத் திரைப்படத்தை ஜே பி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் தயாரிக்கிறார்.
படம் குறித்து இயக்குநர் அசோக் ராம் பேசுகையில், “பழைமையான கேமரா ஒன்றை மையமாகக் கொண்டு இந்த ஃபேண்டஸி காமெடி திரைப்படம் உருவாகிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து அதில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
.jpeg)
ரூ.50 கோடி வசூல் – 480 திரைகளில் வெற்றிகரமாக ஓடும் ‘தாய் கிழவி’
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றி விழா நிகழ்வு இன்று நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் கலையரசு பேசியதாவது,
“படத்தின் ரஷ்ஷஸ் பார்த்தபோதே வெற்றி விழா கொண்டாட்டத்தை எங்கு நடத்த வேண்டும் என்று யோசித்தேன். படத்தில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. குறிப்பாக படத்தை தயாரித்த சிவாவுக்கும் படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்ற ராதிகா மேமுக்கும் நன்றி! படத்தின் ரிலீஸ்க்கு முன்பு 250 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டோம். ஆனால் படத்திற்கு வந்த வரவேற்பை அடுத்து கிடைத்தட்ட 340 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பின்பு, ரிலீஸ் ஆனதும் முதல் நாள் கிடைத்த வரவேற்பை அடுத்து இப்போது 480 திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. புக் மை ஷோவில் மட்டும் 825K புக்கிங் ஆகியிக்கிறது. ஒரு மில்லியன் நிச்சயம் தாண்டும் என ஏஜிஎஸ் தெரிவித்துள்ளது. படம் ரூ. 50 கோடி வசூலித்துள்ளது. தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி இந்த படத்திற்காக இறங்கி வேலை பார்த்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படத்தின் மீது நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கும் நன்றி" என்றார்.
ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார்,
"குடும்பம், கடவுள், இயற்கை என இவர்கள் ஆதரவால்தான் இந்தப் படத்தை உங்களுக்கு கொடுக்க முடிந்தது. எஸ்.கே. சார், நடிகர்கள் மற்றும் என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நன்றி. நல்ல படத்தை கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் நன்றி”.
எடிட்டர் சான் லோகேஷ்,
"வியாபார ரீதியாகவும் மக்களுக்கு பிடித்த படமாகவும் இது மாறியிருக்கிறது. மிகுந்த அர்ப்பணிப்போடும் எனர்ஜியாகவும் நாங்கள் பணியாற்றினோம். என்னுடைய அணிக்கும் நன்றி. நான் சிறுவயதில் முதன் முறையாக திரையரங்குகளில் பார்த்த படம் ‘கிழக்கு சீமையிலே’. இப்போது, ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா மேமுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நிறைய நல்ல நினைவுகளை இந்தப் படம் கொடுத்திருக்கிறது”.
கலை இயக்குநர் ராமு தங்கராஜ்,
"நான் வேலை பார்த்ததில் இந்தப் படம் புது அனுபவமாக இருந்தது. மக்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி”.
பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ்,
”சிவகார்த்திகேயனை யாராவது அன்புடன் அணுகினால் அவர் யாரையும் கைவிட மாட்டார் என்பதை உணர்ந்துள்ளேன். எங்களைப் போன்ற எளிய பிள்ளைகளுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இயக்குநர் சிவாவுக்கும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவுக்கும் நன்றி. படத்தின் தொழில்நுட்பக்குழுவினருக்கும் அன்பும் நன்றியும்”.
பாடலாசிரியர் கருமாத்தூர் மணிமாறன்,
“’தாய் கிழவி’ படத்தின் வெற்றியை தீபாவளி கொண்டாட்டமாக கொண்டாடி வருகிறேன். இன்னும் பல படங்களை தயாரிப்பாளர் சிவாவும் இயக்குநர் சிவாவும் தர வாழ்த்துக்கள்”.
நடிகர் முனீஷ்காந்த்,
“ராதிகா மேமின் ‘கிழக்கு சீமையிலே’ படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவன் இன்று அவரது படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் சிவா வெற்றியடைந்திருக்கிறார். இந்தப் படத்தில் புதுமுகங்கள் என பலரது வாழ்க்கை அடங்கி இருக்கிறது. அனைவரையும் ஒருங்கிணைத்து படத்தை வெற்றிகரமாகக் கொண்டு வந்த இயக்குநர் சிவாவுக்கும் நன்றி. என் கரியரில் முக்கியமான படம் இது”.
நடிகர் ஜார்ஜ் மரியான்,
“இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கும் ராதிகா மேமுக்கும் அனைத்து நடிகர்களுக்கும் நன்றி”.
நடிகர் முத்துக்குமார்,
“என்னை இந்த கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்த இயக்குநர் சிவாவுக்கும் தயாரிப்பாளர் சிவாவுக்கும் நன்றி. என்னை இந்த கதாபாத்திரம் வேறு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. ’தாய் கிழவி’ படத்தில் அனைத்து கனிகளும் பழுத்திருக்கிறது. அதற்கு காரணமான இரண்டு சிவாக்களுக்கும் நன்றி”.
நடிகை ரேச்சல்,
“தியேட்டரில் நிறைய பெண்கள் இந்தப் படத்தைப் பார்த்து அழுது, கொண்டாடி இருக்கிறார்கள். இது அடிக்கடி நடக்காது. அப்படியான படத்தில் நானும் ஒரு பங்கு என்பதை நினைத்து மகிழ்கிறேன். இதற்கு காரணமான தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் சிவாவுக்கும் நன்றி. ‘தாய் கிழவி’ படத்தில் என் சுருளி கதாபாத்திரம் எனக்கு மிகப்பெரிய தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்திருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களிலும் இது கிடைக்குமா என தெரியாது. படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி”.
நடிகர் சிங்கம்புலி,
“படத்தை வெற்றிப் படமாக்கிய தம்பி சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் தம்பி சிவகுமாருக்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘மகாராஜா’ படங்களுக்குப் பிறகு ’தாய் கிழவி’ படத்தில் இந்த கதாபாத்திரத்திற்குதான் எனக்கு அதிக ஃபோன்கால் வந்தது. படம் வெளியாவதற்கு முன்பு கமல் சாரை பார்க்க வேண்டும் என்ற ஆசையை மேடையில் வெளிப்படுத்தியிருந்தேன். இரண்டு நாட்களில் கமல் சார் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவ்வளவு பிஸி ஷெட்யூலிலும் எனக்கு நேரம் ஒதுக்கி கமல் சார் என்னிடம் பேசினார். நன்றி”.
நடிகர் அருள்தாஸ்,
“’தாய் கிழவி’ படம் ஆரம்பித்ததில் இருந்து இதுநாள் வரை உழைத்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. இளைஞர்கள் இந்தப் படம் பார்த்துவிட்டு வீட்டில் இருக்கும் தங்கள் பாட்டியையும் கூட்டி வந்தார்கள். அப்படியான டிரெண்ட் செட்டர் படம் இந்த ‘தாய் கிழவி’. எளிய மக்களின் குரலாக எனக்கு இந்தப் படத்தில் அமைந்த கதாபாத்திரம் பலருக்கும் பிடித்திருந்தது. இந்தியில் ஒரு வயதுக்கு பிறகு அமிதாப் எப்படி வேறு ஒரு கோணத்தில் பயணித்தாரோ அதுபோலதான் ராதிகா மேம் நீங்களும். உங்களை லேடி அமிதாப் எனலாம்”.
நடிகர் பால சரவணன்,
“ரொம்ப வருடங்கள் கழித்து இந்த படத்தை பார்த்த பாட்டி ஒருவர் அந்த வயதிற்கு மேல் தைரியமாகவும் வாழ்க்கையை கொண்டாடப் போவதாகவும் சொன்னார். அது நெகிழ்ச்சியாக இருந்தது. செல்வம் கதாபாத்திரம் மூலம் என்னையும் உணர்வுப்பூர்வமாக நடிக்க வைத்த இயக்குநர் சிவாவுக்கு நன்றி. எனக்கு சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி”.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா,
“எல்லோருடைய முகத்திலும் சந்தோஷமும் நிம்மதியும் பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் ‘தாய் கிழவி’ வெற்றிதான். பேஷன் ஸ்டுடியோஸ், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார். என்னுடைய டீம் மற்றும் அனைவருக்கும் நன்றி”.
இயக்குநர் சிவகுமார் முருகேசன்,
“இந்தப் படத்தை நம்பி வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன் சார், சுதன் சார் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் அணிக்கும் கிரியேடிவ் அணிக்கும் கோல்ட் வார் என்பது நிச்சயம் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் எங்களுக்கு அதுபோன்ற எந்தவொரு பிரச்சினையும் வரவில்லை. அதற்கு காரணம் எங்களைப் போலவே தயாரிப்பாளர் ஆர்வத்துடன் இந்தப் படத்தை எதிர்பார்த்து உழைத்தார்கள். என்னுடைய குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் நன்றி. என்னுடைய தயாரிப்பாளர், ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு நன்றி. என்னுடன் சேர்ந்து ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸை அவ்வளவு ஆர்வமுடன் கவனித்தார். நான் ‘விருமாண்டி’ படம் பார்த்துதான் சினிமாவுக்கு வந்தேன். எங்கோ இருந்து கமல் சாரை பார்த்துக் கொண்டிருந்த எங்களை இப்போது அவருடனேயே பணிபுரிய வைத்த சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி”.
நடிகை ராதிகா பேசியதாவது,
“உண்மையான வெற்றியைக் கொண்டாட பெருமையாக இந்த மேடையில் நிற்கிறேன். சினிமாவின் நெளிவு சுழிவுகளை பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ஆனால், எந்த விஷயத்தையும் சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டேன். இந்தப் படத்தின் டிக்கெட் 150 ரூபாய்க்கு விற்று ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது. ஆனால், சில பெரிய ஹீரோக்களின் படங்கள் ரூ. 1500- ரூ. 2000க்கு டிக்கெட் விற்று பெறும் கலெக்ஷனை விட ‘தாய் கிழவி’ வசூல் பெரியது என்பேன். தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் அப்டேட்டடாக இருக்கிறார். படம் பார்த்துவிட்டு கமல்ஹாசன் அவர்கள் என்னிடம் சொன்னார், “ராதிகா இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்க வேண்டும். ஏனெனில், ராதிகா நல்ல நடிகை, சினிமாவில் ஜெயித்துவிட்டார். அதுபோல இயக்குநர் சிவகுமார், தொழில்நுட்பக்குழுவினர், புதுமுக நடிகர்கள் என அனைவரும் ஜெயிக்க வேண்டும். அதற்காக இந்தப் படம் ஜெயிக்க வேண்டும்” என்றார். அது நடந்துவிட்டது.
ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு இயக்குநர் சினிமாவை மாற்றுவார். அதுபோல, இப்போது சிவகுமாரின் காலம். இயக்குநர் பாரதிராஜா சினிமாவில் புரட்சி செய்ததை போல, சிவகுமாரும் செய்வார். ஒவ்வொரு கேரக்டரையும் அழகாக கொண்டு போய் சேர்த்துள்ளார். ஒவ்வொரு கதாநாயகிக்கும் அடுத்த படம் என்ன என்ற ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். வயதையும் அழகையும் அடுத்தவர்களுக்கு நாம் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? தேவையில்லை. நம்மை நமக்கு தெரிந்தால் போதும். பெண்களுக்கான வெற்றியாக ‘தாய் கிழவி’ படத்தைப் பார்க்கிறேன். கதைதான் இங்கு கிங். பெண்களின் குரலை கேட்கும் ஆண்கள் இருக்கும்வரை இந்த சமுதாயம் என்றும் கெடாது. தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஹீரோயினுக்கு லாபத்தில் பங்கு உண்டு என்று தயாரிப்பாளர்கள் சிவாவும் சுதனும் சொன்னார்கள். அந்த பெருமை எனக்கு உண்டு. சினிமாவில் இது நல்ல முன்னுதாரணம். நடிகைகள் சார்பாக நன்றி சொல்கிறேன். இந்த மகிழ்ச்சி பணத்திற்காக இல்லை, நம்பிக்கைக்காகதான். படத்தில் மட்டும் கருத்து சொல்லாமல் அதை நிஜத்திலும் செய்திருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் அவர்களும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இந்தப் படத்திற்கு வரிச்சலுகை தரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறேன். இதனால், இன்னும் நிறைய பெண்கள் இந்தப் படம் பார்ப்பார்கள்” என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன், “இந்தப் படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தின் கதை சிவகுமார் முருகேசன் சொல்லும்போது சிரித்து மகிழ்ந்தேன். ஆனாலும், தாய் கிழவி ஞாயிற்றுக்கிழமை ஆனால் மதுரைக்கு போய்வருவார். அதைப்பற்றி எல்லோரும் கேள்வி கேட்பார்கள். எனக்கும் அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. அதற்கான பதில் தெரிந்ததும் படம் நிச்சயம் வெற்றி பெறும், இந்தப் படத்தை தயாரித்தே ஆகவேண்டும் என முடிவெடுத்தேன். நான் ரசித்த எமோஷனலான விஷயங்களை ரசிகர்களும் கைத்தட்டி வரவேற்றது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்குள் இருந்த ரசிகன் சரியாக இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன். இந்தப் படத்தை என் குழந்தை போலதான் பார்த்துக் கொண்டேன். சினிமாத்துறையில் தனக்கு இருந்த அனுபவம், வலி இவை எல்லாவற்றையும் சேர்த்துதான் இந்த கதாபாத்திரத்திற்கு ராதிகா மேம் உயிர் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோ இல்லை என்ற உணர்வே எனக்கு வரவில்லை. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என் வாழ்க்கையில் நிறைய பேரை நியாபகப்படுத்துவதற்காக செய்யப்பட்ட படம்தான் இது. முதலில் என் அம்மா. அப்பா இறந்தபிறகு வீட்டில் காசு சேர்த்துவைத்து என்னையும் அக்காவையும் படிக்க வைத்து கல்யாணம் செய்து வைத்து ஆளாக்கினார். பிறகு என் அக்கா. ’படைக்க, காக்க, அழிக்க என ஆண்களை கடவுளாக காட்டியவன், படிப்புக்கும் பணத்துக்கும் பொம்பளையைதான் காட்டி கும்பிட சொன்னான்’ என படத்தில் ஒரு வசனம் வரும். அதை நான் முன்பே உணர்ந்துவிட்டேன் என நினைக்கிறேன். இதுநாள் வரை என் வரவு, செலவு அனைத்தையும் ஆர்த்தி தான் பார்த்துக் கொள்கிறார். அவர் இல்லை என்றால் புரொடக்ஷன் எல்லாம் நான் செய்திருக்க முடியாது. இவர்கள் எல்லாரும்தான் என் பவுனுத்தாயி. இதுபோல, உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பவுனுத்தாயிகளுக்கும்தான் இந்தப் படம்.
இந்தப் படத்தை மொத்தம் 12 முறை பார்த்திருக்கிறேன். என் படத்தைக் கூட அத்தனை முறை பார்த்ததில்லை. நிறைய விஷயங்கள் இந்தப் படத்தில் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தின் ப்ரீமியர் முடிந்ததும் இயக்குநர் சிவகுமாரின் அப்பா வந்து எங்கள் இரண்டு பேரையும் கட்டிப்பிடித்துக் கொண்டார். அந்த நொடியில் என் அப்பா இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்ந்தேன். இதெல்லாம்தான் எனக்கு நிறைவை கொடுக்கிறது. வெற்றி என்பது விளையாட்டில் கூட விளையாட்டாக வராது என்பதை இந்த படக்குழு மீண்டும் உணர்த்தியிருக்கிறது. அடுத்து ‘சேயோன்’ படமும் சிவாவுடன் தான். ’தாய் கிழவி’ படத்தின் லாபம் நிச்சயம் தேவைப்படுபவர்களுக்கு உதவும். எஸ்.கே. புரொடக்ஷன்ஸின் பத்தாவது படத்தை புதுமுக இயக்குநர்தான் இயக்குகிறார். அவர் பெயர் அம்மாமுத்து சூர்யா. மற்றபடி, படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.
டார்க் சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் ‘மண்டவெட்டி’ – படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு
டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் பேனரின் கீழ் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி தயாரித்துள்ள ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடிகை கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் தீவிரமான கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டதால் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்பு காரணமாக தற்போது படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
‘மண்டவெட்டி’ திரைப்படம் டார்க், சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் வகையில் உருவாகியுள்ளது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் ஆகிய அம்சங்களை மையமாகக் கொண்டு, ஒரு பெண்ணின் உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் அதன் பின்னாலுள்ள மர்மத்தையும் பரபரப்பான களத்தில் இந்தப் படம் பேசுகிறது.
கதையின் தேவைக்கேற்ப, படத்தின் சுமார் 80 சதவீத காட்சிகள் வெளிப்புற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. கதையின் இயல்பை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக முழு படப்பிடிப்பும் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. கடும் வெப்பம் மற்றும் குளிர் உள்ளிட்ட பல சவால்களை கடந்து, தினமும் சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்து படக்குழு படப்பிடிப்பு தளத்தை சென்றடைந்துள்ளது. முள் நிறைந்த கடினமான நிலப்பரப்பும் கடும் வெயிலும் சவாலாக இருந்தாலும், அவை கதைக்கு கூடுதல் வலிமையை அளித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பல கிராம மக்கள் இந்தத் திரைப்படத்தில் முதன்முறையாக நடித்திருப்பது கதையின் உண்மைத்தன்மையை மேலும் உயர்த்தியுள்ளது. அவர்களின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் படக்குழுவிற்கு கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிராம மயானத்தில் முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கியது படக்குழுவிற்கு சவாலான அனுபவமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், கதையில் முக்கிய அங்கமாக வரும் கற்பனையான உள்ளூர் தெய்வ கதாபாத்திரமான ‘செஞ்சி’ ஆன்மிக அம்சத்தையும் தனித்துவமான மர்மத்தையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் அந்தத் தெய்வம் தங்களை பாதுகாப்பாக வழிநடத்தியதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தற்போது ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வலுவான கதை மற்றும் அர்ப்பணிப்புள்ள படக்குழுவுடன் இந்தப் படம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான மற்றும் ஈர்க்கக்கூடிய திரை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- உலக செய்திகள்
- |
- சினிமா













