சற்று முன்
சினிமா செய்திகள்
திருவனந்தபுரம் கிரிக்கெட் அணியின் இணை உரிமையாளரான நடிகை கீர்த்தி சுரேஷ் !!
Updated on : 22 August 2024
முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ், கேரளாவில் நடைபெறவுள்ள KCL கேரள லீக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளாராகியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இப்போட்டிகள் கேரளாவில் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் திரைத்துறைக்கு இணையாக கிரிக்கெட்டுக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். ஐபில் போட்டிகள் மீதான மோகத்தை தொடர்ந்து, கேரளத்தில் கேரள ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், கேரளாவிற்கென தனித்த கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது.
ஐபில் போட்டி அணிகளில், நட்சத்திர நடிகர்கள் உரிமையாளர்களாக செயல்பட்டு வருவது போல், கேரள திருவனந்தபுரம் அணிக்கு உரிமையாளராக மாறி அசத்தியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
கேரளாவில் கிரிக்கெட் விளையாட்டினை ஊக்கிவிக்கும் வகையிலும், திறமையான இளைஞர்களை இந்தியாவிற்கு அடையாளம் காட்டும் நோக்கிலும் இந்த KCL
போட்டிகள் நடக்கவுள்ளது. 6 அணிகள் கலந்துகொள்ளும் 33 போட்டிகளுக்கான அட்டவணை விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
KCL கேரளா கிரிக்கெட் போட்டிகளுக்கான அம்பாஸிடராக, முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் செயல்படுகிறார்.
கேரளாவின் முக்கிய நகரங்களிலிருந்து மொத்தமாக 6 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளன. மொத்தமாக 33 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மொத்த போட்டிகளும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்படவுள்ளது. ஐபில் போலவே பல நட்சத்திரங்களும், பிஸினஸ் ஐகான்களும் இப்போட்டிகளில் கலந்துகொண்டு ஊக்குவிக்கவுள்ளனர். விரைவில் போட்டி அணிகள், போட்டி அட்டவணைகள், வீரர்கள் அறிமுகம், மற்றும் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இந்த போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1ல் நேரலையில் ஒளிபரப்பாகவுள்ளது, முதல் போட்டி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மட்டும் ஏசியாநெட் சேனலில் ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள்
Fire Fox Film House தயாரிப்பில் புதிய போலீஸ் லவ் கமர்ஷியல் படம், படப்பிடிப்பு தொடக்கம்!
Fire Fox Film House நிறுவனம் சார்பில் சரணிகா தயாரிப்பில், இயக்குநர் மணிகண்டன் செல்வராஜ் இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் புரொடக்ஷன் நம்பர் 1 படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இயக்குநர் அறிவழகன் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிகண்டன் செல்வராஜ், இந்தப் படத்தின் மூலம் முழுநீள இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
தமிழ் ரசிகர்கள் புதிய கதைகளையும், வித்தியாசமான திரைக்கதை அமைப்புகளையும் வரவேற்கும் சூழலில், ஒரு போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் உருவாகும் இந்த படம், ஒரு காதல் ஜோடியை மையமாகக் கொண்டு, ஆக்ஷன், உணர்ச்சி மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் சமநிலையில் கலந்த ஒரு முழுமையான எண்டர்டெயினராக உருவாகி வருகிறது. விறுவிறுப்பான கதை நகர்வு மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பு இப்படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில் மணிகண்டன் செல்வராஜ் நாயகனாக நடிக்க, இயக்குநரும் நடிகருமான ஆ. வெங்கடேஷ் கதையின் திருப்புமுனையாக அமையும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். டாக்டர் படத்தின் மூலம் கவனம் பெற்ற ஸ்ரீஜா ரவி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க, டைரி, குற்றம் 23 போன்ற படங்களில் நடித்த தணிகை உட்பட பல புதிய முகங்கள் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 05-02-26 அன்று சென்னையில் தொடங்கப்பட்டு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
Fire Fox Film House தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கிரி மர்ஃபி ஒளிப்பதிவு செய்ய, புதுமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் உருவாகும் இந்த புதிய காதல்–ஆக்ஷன் கமர்ஷியல் படம், ரசிகர்களிடையே எந்த அளவுக்கு கவனம் பெறும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
ராம் சரண்–புச்சி பாபு சானா கூட்டணியில் ‘பெத்தி’, ஏப்ரல் 30 உலகளாவிய திரையரங்கு வெளியீடு!
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் "பெத்தி" யின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஏப்ரல் 30 என்ற முக்கியமான கோடை வெளியீட்டு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறை காலத்தை முழுமையாகப் பயன்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வெளியீட்டு தேதி அறிவிப்பு போஸ்டரில், ராம் சரண் இதுவரை காணாத முற்றிலும் புதிய, மாஸ் தோற்றத்தில் ரசிகர்களை கவர்கிறார். அலங்கோலமான நீளமான முடி, கனமான தாடி, மூக்கில் அணிந்த வளையம் ஆகியவை அவரது கதாபாத்திரத்திற்கு தனித்துவம் சேர்க்கின்றன. புகை சூழ்ந்த இருண்ட பின்னணியில், சோர்வும் கடுமையும் கலந்த முகபாவனையுடன் கூட்டத்தைக் கடந்து முன்னேறும் அவரது தோற்றம், போராட்டம் மற்றும் எதிர்ப்பின் தீவிரத்தை வலுவாக வெளிப்படுத்துகிறது.
‘பெத்தி’யின் புரமோஷன் உள்ளடக்கங்கள் வெளியாகியதிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. முன்னதாக வெளியான க்ளிம்ப்ஸ், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் A.R. ரஹ்மான் இசையமைத்த “சிக்கிரி சிக்கிரி” பாடல் அனைத்து தளங்களிலும் அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடல் இதுவரை 200 மில்லியன் பார்வைகளை கடந்து, பல சாதனைகளை நோக்கி பயணித்து வருகிறது.
படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளதுடன், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். ராம் சரண், தனது திரைப் பயணத்தில் இதுவரை காணாத ஒரு புதிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் உருவாகும் ‘பெத்தி’ படத்திற்கு வலுவான தொழில்நுட்பக் குழு இணைந்துள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற A.R. ரஹ்மான் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு காட்சிகளைப் பிடிக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பை கவனிக்க, அவிநாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பின் மூலம் படத்தின் உலகத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார்.
கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த ஆக்சன்-ஸ்போர்ட்ஸ் டிராமா, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் இந்தியிலும், பான்-இந்தியா அளவில் ஏப்ரல் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'பராசக்தி' ZEE5-ல், பிப்ரவரி 7 முதல் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு!
இந்தியாவின் முன்னணி உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அரசியல் ஆக்ஷன் டிராமா திரைப்படமான "பராசக்தி"யை 2026 பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராக வெளியிடுகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், Dawn Pictures நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்த திரைப்படம், தமிழ்நாட்டின் சமூக–அரசியல் வரலாற்றிலிருந்து ஒரு முக்கியமான காலகட்டத்தை திரையில் உயிர்ப்பிக்கிறது.
1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள பராசக்தி, அடையாளம், சுயமரியாதை மற்றும் எதிர்ப்பின் குரல் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்டு, அந்த காலத்தின் அரசியல் சூழலில் சிக்கிக்கொள்ளும் இரு சகோதரர்களின் உணர்ச்சிபூர்வமான பயணத்தை சித்தரிக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடும், கொள்கை உறுதியான இளைஞரான செழியன் என்ற கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் ஸ்ரீலீலா முக்கிய பெண் கதாபாத்திரமான ரத்னமாலாவாக தோன்றுகிறார்.
திரைப்படத்தின் பின்னணி குறித்து பகிர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா...,
“மரியாதை, மொழி மற்றும் மக்களின் கூட்டுச் சிந்தனையின் சக்தி குறித்து ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற ஆழமான விருப்பத்திலிருந்து பராசக்தி உருவானது. இது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல; ஒருவரின் அடையாளம் கேள்விக்குள்ளாக்கப்படும்போது, சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை இக்கதை பேசுகிறது. நம் குரல்கள், பண்பாடுகள், வரலாறுகள் குறித்து அறிந்து கோள்ள வேண்டிய அவசியத்தை பேசும் இப்படைப்பை, உலகளாவிய பார்வையாளர்களிடம் ZEE5 கொண்டு செல்கிறது என்பது பெரிய மகிழ்ச்சி என்று கூறினார்.
சிவகார்த்திகேயன் கூறுகையில்,
“செழியன் எனக்கு மிகவும் பிடித்த அழுத்தமான, அர்த்தமுமிக்க கதாபாத்திரங்களில் ஒன்று. நம்பிக்கை, துணிவு மற்றும் உண்மையாக முக்கியமான விஷயங்களுக்காக குரல் கொடுப்பதற்கான பொறுப்பு ஆகியவற்றின் பிரதிநிதியாக செழியன் இருக்கிறான். பராசக்தி என்னை ஒரு நடிகராகவும், ஒரு மனிதராகவும் பல சவாலுக்கு உள்ளாக்கியது. இப்போது இந்த பயணத்தை ZEE5 வழியாக பார்வையாளர்கள் அனுபவிக்கவிருக்கிறார்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்,” என்றார்.
ஸ்ரீலீலா கூறுகையில்,
“பராசக்தி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மைல்கல்லாகும். ரத்னமாலா கதாப்பாத்திரம் அமைதியான வலிமையும் கருணையும் கொண்ட கதாபாத்திரம். இவ்வளவு கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கதையின் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு பெருமை. இந்த வேடத்தில் என்னை நம்பிய சுதா மேடம் மற்றும் முழு குழுவுக்கும் என் நன்றி,” என்றார்.
எதிர்ப்பு, சகோதரத்துவம் மற்றும் அடையாளத்தின் அரசியல் ஆகியவற்றை தீவிரமாக பேசும் பராசக்தி திரைப்படத்தை, பிப்ரவரி 7 முதல் ZEE5 தளத்தில் காணலாம்.
கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி
சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில், எம்.ஆர். பாரதி கதை எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ட்ரீம் கேர்ள்’. மசாலா கலப்பில்லாத, முழுக்க முழுக்க காதலும் கனவுகளும் மையமாக அமைந்த இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தி மற்றும் நடிகை பபிதாவின் மகளான ஹரிஷ்மிதா அறிமுகமாகிறார். இவர்களுடன் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநர் எம். ஆர். பாரதி பேசும்போது,
" இது ஒரு காதல் கதை.கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு.கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டும் என்று கனவு. இப்படி இருவரும் கனவைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.மற்றபடி இருவருமே ஜாலியாக வாழ்க்கையை, அதன் போக்கில் போகவிட்டு மகிழ்ச்சியின் தருணங்களை ஒரு சொட்டு கூட வீணடிக்காமல் வாழத் துடிப்பவர்கள்.
நவீன உலகத்தின் சமகாலப்பிரதியாகவும் பிரதிநிதியாகவும் அந்த இருவரும் இருக்கிறார்கள்.அவர்களுக்குள் காதல் வருகிறது. கனவைத் துரத்தும் அவர்களுக்குள் ஒரு கனவும் வருகிறது.அது சில மாயங்களைச் செய்கிறது.அதன் வர்ணஜால விளைவுகளைச் சொல்வதுதான் 'ட்ரீம் கேர்ள்' படம்.
இது மசாலா கலப்பில்லாத ஒரு முழுமையான காதல் கதை.படத்தில் வில்லனே கிடையாது, வேண்டுமானால் கனவு தான் வில்லன் என்று கூறலாம்.
கதையில் குளுமை இருப்பதால் இதன் படப்பிடிப்பை முழுக்க முழுக்க ஊட்டியிலேயே நடத்த திட்டமிட்டேன். அதன்படியே நடைபெற்றுள்ளது "என்கிறார்.
படப்பிடிப்பு அனுபவத்தைக் கேட்டபோது,
"இது 20 நாட்களில் முழுப் படப்பிடிப்பும் நடத்தி முடிக்கப்பட்ட படம்.'சில்ட்ரன் ஆப் ஹெவன்' மிகக்குறைந்த நாளில் எடுக்கப்பட்ட படம்.ஆறு - ஏழு லட்சத்தில் முடிந்த படம். பெரிய படமான 'ப்ரேவ் ஹார்ட் 'கூட 80 கால்ஷீட்டில் முடிக்கப்பட்ட படம் என்றால் நம்ப முடியாது அல்லவா?
இன்று வருகிற மிகச் சாதாரண படங்களுக்குக் கூட 60 நாட்கள் 70 நாட்கள் என்று படப்பிடிப்பு நடைபெறுகின்றன. ஒரு கோடி இரண்டு கோடி என்று செலவு செய்கிறார்கள்.
இது மிகவும் தவறான போக்கு. சரியான திட்டமிடல் இல்லாதது, சினிமாவைப் புரிந்து கொள்ளாதது , தொழில்நுட்பங்களைக் கையாளத் தெரியாதது போன்றவைதான் இதற்கெல்லாம் காரணம்.
சரியாகத் திட்டமிட்டால் 25 லட்ச ரூபாயில் ஒரு நல்ல படம் எடுக்க முடியும் .
நல்ல படம் ஓடினால் அது பெரிய படம். ஆனால் அதே படத்துக்கு இரண்டு கோடி செலவழிக்கிறார்கள் .சில லட்சங்கள் என்றால் ஒரு தயாரிப்பாளர் தாங்குவார். ஆனால் கோடி ரூபாய் இழப்பு என்றால் அவர் எப்படித் தாங்க முடியும்? இப்படிப்பட்ட திட்டமிடாத சிலரால் தான் சினிமா நெருக்கடியில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது.
வணிக மதிப்புள்ள கதாநாயகர்களுக்குக் கோடிக்கணக்கில் செலவு செய்வதைக் குறை சொல்ல முடியாது. எப்படியாவது வியாபாரம் ஆகிவிடும். சமாளித்துக் கொள்வார்கள். ஆனால் இப்படியான சிறு முதலீட்டுப் படங்களுக்குச் சில லட்சங்களைத் தாண்டினால் தயாரிப்பாளரால் இழப்பைத் தாங்க முடியாது" என்றார்.
இதைத் தடுப்பதற்குரிய வழியாக அவர் கூறுவது என்ன?
"சரியாகத் திட்டமிட்டு நன்றாக நடிக்கத் தெரிந்த புதுமுகங்களை வைத்து எடுத்தால் அந்தப் படம் நிச்சயமாக கவனிக்கப்படும். அதிக திரையரங்களில் வெளியிடாமல் குறைந்த திரையரங்குகளில் வெளியிட்டு நல்ல படம் என்று பெயர் பெற்றால் போதும். படம் தப்பித்து விடும். நல்ல படம் ஓடினால் அது பெரிய படமாக மாறிவிடும்.அந்தப் படம்
வெளியான முதல் காட்சி - அந்த ஒரு காட்சியே படத்தின் தலைவிதியைச் சொல்லிவிடும். இப்போது படம் நன்றாக உள்ளது என்று சொன்னால் போதும் .செய்தி தீ போல பரவிவிடும். ஒரு காட்சியை வைத்தே அதன் தலைவிதி தெரிந்து விடும்.
அந்த நம்பிக்கையில் தான் நான் இந்தப் படத்தை சில லட்சங்களில் எடுத்து இருக்கிறேன்.ஏழு லட்ச ரூபாயுடன் ஊட்டிக்குச் சென்றேன் .சரியாகத் திட்டமிட்டோம். அதனால் ஒருநாளும் படப்பிடிப்பு தடை பட்டதில்லை. நண்பர்கள் உதவினார்கள் இயற்கை உதவியது. பனியும் மழையும் நாங்கள் எதிர்பார்த்த நேரத்தில் வந்து உதவி செய்தன.சரியாகத் திட்டமிட்டுப் படப்பிடிப்பு நடக்கும் இயற்கை நிலைகளைத் தேர்வு செய்தோம் .ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்து நேரத்தை வீணடிக்கவில்லை.எல்லாமே சுமுகமாக நடந்தது"என்றவர், நடிகர்கள் தேர்வு பற்றிப் பேசும்போது,
"நான் இந்தக் கதையை வைத்துக் கொண்டு தயாரிப்பாளரைத் தேடி அலையவில்லை. திறமைசாலிகளை மட்டுமே தேடினேன் .அதற்குரிய பலன் கிடைத்தது. இதில் நடித்திருக்கும் நாயகனும் சரி, நாயகியும் சரி, பிறபாத்திர நடிகர்களும் சரி அருமையாக நடித்திருக்கிறார்கள். நான் அவர்களை -அழகையும் தோற்றத்தையும் வைத்து தேர்வு செய்யவில்லை. நடிப்புத் திறமையை மட்டுமே வைத்து தேர்வு செய்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.இதில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் அனைவரும் திறமையின் வழியாகத்தான் இந்தப் படத்திற்குள் வந்தார்கள்.
நான் இதற்கு முன்பு 'அழியாத கோலங்கள் 2 'என்ற படத்தை இயக்கி இருந்தேன்.அதன் படப்பிடிப்பை 12 நாள்களில் முடித்திருந்தேன். நான் செலவு செய்த தொகையை கலைஞர் டிவியிலிருந்தே எனக்குக் கொடுத்து விட்டார்கள். தேவையில்லாமல் செய்த சில செலவுகள்தான் எனக்கு இழப்பு .மற்றபடி இன்று ஏராளமான வியாபார வழிகள் உள்ள சினிமாவில் சரியாகப் புரிந்து கொண்டு திட்டமிட்டுப் படமெடுத்து வெளியிட்டால் இழப்புக்கு வழியே இல்லை என்பது என் கருத்து" என்கிறார்.
விஜய் நடித்த 'ஜனநாயகன்' பிரச்சினைக்குப் பிறகு திரைப்படத் தணிக்கைத் துறை படைப்புக்கு எதிராக இருப்பது போல் ஒரு கருத்து நிலவுகிறது. இதற்கு இவர் என்ன பதில் கூறுகிறார்?
" தணிக்கைத் துறை நல்ல படைப்புக்கு எதிராக இருப்பதாக நான் நினைக்கவில்லை.சென்சார் போர்டு எனப்படும் தணிக்கைத் துறைக்கென்று சில விதிகள் உள்ளன. அதன்படி அவர்கள் பார்க்கிறார்கள் .உரிய முறையில் சமூகத்தில் பொறுப்புள்ள உறுப்பினர்கள் சேர்ந்து படம் பார்க்கிறார்கள்.
அந்த விதிகளுக்கு முரணாக உள்ளவற்றுக்கு அவர்கள் வெட்டு கொடுப்பார்கள். சினிமா எடுப்பதற்குப் பல விஷயங்களைப் புரிந்து கொள்வது போல சென்சார் விதிகளையும் புரிந்து கொள்ளவேண்டும் .தணிக்கைத் துறையின் வெட்டு என்பது எம்ஜிஆர் நாடோடி மன்னன் எடுத்த காலத்திலிருந்து இருக்கிறது. அப்போது கூட வெட்டுகளுக்குப்பின் அந்த காட்சிகளுக்கு மறுபடியும் படப்பிடிப்பு நடத்திய வரலாறு உண்டு. அந்த விதிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என் படத்திலும் சில வெட்டுகள் கொடுத்தார்கள். . அதைச் சரி செய்து கொடுத்தேன், பிரச்சினை முடிந்தது. சென்சாருக்கென்று ஒரு பொறுப்புள்ள அதிகாரி இருக்கிறார். சமூகத்தில் பொறுப்பானவர்கள் படம் பார்க்க வருகிற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களே படத்தைப் பார்க்கிறார்கள்.
எனவே அந்த விதிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே சென்சார் மீது குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. இங்கே பட்ஜெட் பற்றி நட்சத்திர நடிகர்கள் பற்றியும் பேசப்படுகிறது. ஆனால் கடந்து போன 2025-ல் எவ்வளவு பெரிய பட்ஜெட், எவ்வளவு பெரிய நடிகர் நடித்த படம் என்றெல்லாம் மக்கள் பார்க்காமல் நிராகரித்து விட்டார்கள். .நல்ல கதை அம்சம் உள்ள சிறிய பட்ஜெட் படங்கள் ஓடி இருக்கின்றன மக்களை ஏமாற்ற முடியாது ஓடுகிற படம் நல்ல படம் பெரிய படம் அவ்வளவுதான்" என்றார்.
லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்துள்ள புதிய பிரம்மாண்ட படத்திற்கு ‘லீடர்’ என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான R.S. துரை செந்தில்குமார் எழுதி இயக்கும் இந்த படம், மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் அம்சங்களை ஒருங்கிணைத்த நவீன கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது.
படக்குழு தரப்பில் கூறியதாவது, “நிழல் உலகத்துக்கும் காவல் துறைக்கும் இடையே நடைபெறும் கடும் யுத்தத்தில், ஒரு சாமானிய மனிதன் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்கிறான். அந்த சூழ்நிலையில் இருந்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக்கொள்ள அவன் மேற்கொள்ளும் போராட்டமே ‘லீடர்’.”
சாதாரண மனிதன் ஒரு சூழ்நிலையால் ‘லீடர்’ ஆக மாறும் பயணத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா உள்ளிட்ட பல்வேறு பிரம்மாண்ட லொகேஷன்களில் நடைபெற்று, சென்னையில் நிறைவடைந்துள்ளது. தற்போதைய சினிமா டிரெண்டுக்கு ஏற்ற வகையில், ஆக்ஷன் காட்சிகளும், பரபரப்பான திரைக்கதையும் படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
‘லீடர்’ படத்தில், பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி பிரபாகர், அமிர்தா ஐயர், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா, அறந்தாங்கி நிஷா, குழந்தை நட்சத்திரம் இயல் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைக்க, S. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் E. ராகவ் படத்தொகுப்பை கையாள, ஆக்ஷன் காட்சிகளை மகேஷ் மேத்யூ வடிவமைத்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாக உயர்தரமான காட்சியமைப்புடன், விஎஃப் எக்ஸ் மற்றும் அனிமேஷன் அம்சங்களும் படத்தில் முக்கிய இடம் பெறுகின்றன.
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், லெஜெண்ட் சரவணன் நடிப்பில், R.S. துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படம், லெஜெண்ட் சரவணனின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சாத்தியமற்றதை மேடையில் சாத்தியமாக்கிய முரளிதரன்” - இயக்குநர் K. பாக்யராஜ்
மருது சகோதரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் இயல்–இசை–நடன ஒருங்கிணைந்த வடிவில் மேடையேற்றும் கலைமாமணி மதுரை R. முரளிதரனின் கனவு முயற்சியான ‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7, 2026 (சனி) அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெற உள்ளது.
இந்தப் பெருநிகழ்ச்சியை முன்னிட்டு, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்ற அறிமுக விழாவில், இயக்குநர் K. பாக்யராஜ், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் மற்றும் செயலாளர் விஜயா தாயன்பன், பத்திரிகையாளர் மக்கள் குரல் ராம்ஜி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கலைமாமணி மதுரை R. முரளிதரன் பேசியதாவது…
உலக வரலாற்றில் முதல் முறையாக மருது சகோதரர்களின் கதையை இயல்–இசை–நடன வடிவமாக மேடையேற்ற உள்ளேன். இதை அறிமுகப்படுத்த வந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். தமிழக மண்ணில் தோன்றிய இந்த இரு சகோதரர்கள் ஆங்கிலேய அரசையே அதிர வைத்தவர்கள். கொரில்லா போர்முறையை கையாண்டு ஆங்கிலேய படைகளை திணறடித்தனர். தமது வீரத்தால் 16 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களை நடுங்க வைத்த விடுதலை வீரர்கள் அவர்கள். கி.பி. 1801 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று, “இந்த தேசத்தின் பிறவி எதிரிகள்” என அறிவிக்கப்பட்ட அவர்கள், மக்களிடம் அச்சம் விளைவிக்க இருவரும் தூக்கிலிடப்பட்டனர். ஆனால் அதற்குப் பதிலாக மக்களிடையே புரட்சி எழுந்தது. இந்த வரலாற்றை இயல், இசை, நாடக வடிவில் மேடையேற்ற உள்ளோம். இதில் 70 பேர் பங்கேற்க உள்ளனர். குதிரை, மாடு போன்றவை கூட மேடையேற உள்ளன. இந்த மேடை நாடகத்தை அனைவரும் கண்டு ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் பேசியதாவது…
முரளிதரன் அவர்களின் மகள் காவ்யாவின் நடனத்திற்கு நான் பெரிய ரசிகை. ஒரு நாட்டிய நாடகத்திற்கான அறிமுக விழாவை பார்க்கும் முதல் அனுபவம் இது. முரளிதரன் எப்போதும் வித்தியாசமாக செயல்படுவார். நாட்டிய மேடையில் புலிகேசியாகவும், நாகநந்தியாகவும் ஒரே நேரத்தில் சந்திக்கும் வகையில் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேடையில் நிகழ்த்தியவர் அவர். அவரது திறமைக்கு என் வணக்கங்கள். அவரது அர்ப்பணிப்புக்கு என் வாழ்த்துக்கள். பல்வேறு மேடைகளில் அவர் கலை ஒளிவீசுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு மிகச் சிறந்த கலைஞர். ‘மருதிருவர்’ என்ற தலைப்பே அருமையாக உள்ளது. முரளிதரன் அவர்களின் முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தாயன்பன் பேசியதாவது…
இன்று அறிஞர் அண்ணாவின் நினைவு நாள். “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்று அவர் கூறினார். ஏனெனில் மருது சகோதரர்கள், குயிலி உள்ளிட்ட பலரின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டது. அந்த மறைக்கப்பட்ட வரலாற்றை இங்கு முரளிதரன் எடுத்துச் சொல்கிறார். இயல், இசை, நடனம், நாட்டியம், நாடகம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து, மொசார்ட் இசையையும் இணைத்து இந்த மேடை நாடகத்தை உருவாக்கியுள்ளார். எல்லாக் கலைஞர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் முரளிதரன் அவர்களின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஒரு சக கலைஞனாக வாழ்த்துகிறேன். நன்றி.
மக்கள் குரல் ராம்ஜி பேசியதாவது…
இந்த மேடை நிகழ்ச்சி வெறும் ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல, நடனம், இசை, நாடகம், சிந்தனை, சமூகப் பொறுப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைத்த ஒரு முயற்சி. தமிழ் கலாச்சாரம், கலைஞர்கள், மருத்துவர்கள், சமூக சேவையாளர்கள் என பல தரப்பினரின் பங்களிப்பு இதில் உள்ளது. சிறுவயதிலிருந்தே கலைக்கு ஊக்கம் அளித்த பெற்றோர்கள், ஆசான்கள், நடனம், இசை, நாடகம் போன்ற துறைகளில் தங்களை அர்ப்பணித்தவர்களின் உழைப்பு இந்த மேடையில் வெளிப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒருவருக்கானது அல்ல — அவரது குடும்பத்தார் நான்கு பேரின் உழைப்பு, பலரின் கனவு, அனைவரின் ஆதரவு. அதனால் இதன் வெற்றி அனைவருக்கும் உரியது. இவ்வளவு அர்த்தமுள்ள நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றிகள். இது அவரது குடும்பத்திற்கே உரித்தானது. அவர்களோடு தொடர்புடையவன் என்ற முறையில், இந்த மேடையில் நானும் இருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி. மருது சகோதரர்களின் வரலாற்றை சொல்லும் முரளிதரனின் இந்த புதிய முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இயக்குநர் K. பாக்யராஜ் பேசியதாவது…
முரளிதரன் அவர்களைப் பற்றி இத்தனை நாளாகத் தெரியாமல் இருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கும் நடனத்திற்கும் அவ்வளவு பொருத்தம் இல்லை. ஆனால் முரளிதரன் இத்தனை சாதனைகள் செய்துள்ளார் என்பதே எனக்கு இன்றுதான் தெரிய வந்தது. அவர் செய்த சாதனைகள் அனைத்தையும் கேட்கும் போது பிரமிப்பாக உள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ள அவரது நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது. மேடையில் அவர் டூயல் ரோலை நிகழ்த்திய விதம் அபாரம். சினிமாவிலேயே டூயல் ரோல் எடுப்பது கடினம். ‘கைதியின் டைரி’ கதையை எழுதினேன். ஆனால் அதை அமிதாப் பச்சனை வைத்து இந்தியில் எடுக்கும்போது நான் மாட்டிக்கொண்டேன். டூயல் ரோல் ஷூட்டிங் எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். பின்னர் அமிதாப் சொன்னபடியே மாஸ்க் ஷாட்டை எடுத்தேன். அதை என் குரு பாரதிராஜா பாராட்டினார். எம்.ஜி.ஆர். அவர்களும் பாராட்டினார். அத்தனை சிரமமான விஷயத்தை முரளிதரன் மேடை நாடகத்தில் செய்திருக்கிறார் என்பதே ஆச்சரியம். இதில் இசையும் அவரே அமைத்துள்ளார். வசனம், பாடல், சண்டைக் காட்சிகள் என அனைத்தும் உள்ளதாகச் சொல்கிறார்கள். இத்தனையும் மேடையில் எப்படி நிகழப்போகிறது என்பதை காண ஆவலாக இருக்கிறது. மருது சகோதரர்களின் தெரியாத பல வரலாறுகளை இந்த நாடகம் வெளிக்கொண்டு வருகிறது. முரளிதரன் அவர்களின் இந்த புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். நன்றி.
இந்த மேடை நிகழ்ச்சியில், மருது சகோதரர்களாக கலைமாமணி மதுரை R. முரளிதரன் மற்றும் சிவக்குமார் நடிக்கின்றனர். வீர வேலு நாச்சியாராக முரளிதரனின் மகள் காவ்யா மேடையேறுகிறார். கவிஞர் வைரமுத்து தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
வரலாறு, கலை, புரட்சி மூன்றையும் ஒரே மேடையில் சந்திக்க வைக்கும் ‘மருதிருவர் – A Dance Musical’, தமிழ்க் கலை மேடைகளில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
எல்லைகளை கடந்த மாஸ் - ஜப்பானில் ‘புஷ்பா 2’ 14 நாளில் ரூ.6.1 கோடி வசூல்!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம், ஜப்பானில் வெளியான வெறும் 14 நாட்களிலேயே ரூ.6.1 கோடி (¥105 மில்லியன்) வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றி, உலகளாவிய அளவில் அல்லு அர்ஜுன் கொண்டுள்ள ரசிகர் செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
உலகெங்கிலும் தனித்துவமான, தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வரும் ஜப்பான் சந்தை, தற்போது அல்லு அர்ஜுனையும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தையும் உற்சாகமாக கொண்டாடி வருகிறது. ஜப்பான் திரைப்படங்களின் வழக்கமான ரன்டைமை விட மாறுபட்டு, 3 மணி 40 நிமிடங்கள் நீளமுள்ள இந்த படம், வெளியான குறுகிய காலத்திலேயே பெற்றுள்ள வரவேற்பும் வசூலும், அங்கு அல்லு அர்ஜுனுக்கு உருவாகியிருக்கும் புதிய ரசிகர் பட்டாளத்தைக் காட்டுகிறது.
கடந்த சில ஆண்டுகளில், இந்திய சினிமாவின் மிகச் சக்திவாய்ந்த நடிகர்களில் ஒருவராக அல்லு அர்ஜுன் உருவெடுத்துள்ளார். அவரது படங்கள் தொடர்ந்து சர்வதேச கவனத்தை ஈர்த்து, சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி வருகின்றன. குறிப்பாக ‘புஷ்பா’ தொடர், இந்திய சினிமாவை உலக அரங்கில் புதிய உயரத்திற்கு கொண்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தியாவிலிருந்து ஜப்பான் வரை மாஸ் வணிகத் திரைப்படங்கள் மூலம் கொண்டாடப்படும் சில இந்திய நடிகர்களில் ஒருவராக, ‘புஷ்பா 2’ திரைப்படம் மூலம் அல்லு அர்ஜுன் மாறியுள்ளார். மொழி, கலாச்சாரம் போன்ற எல்லைகளைத் தாண்டியும் ரசிகர்களுடன் அவர் இணைந்திருக்க முடிகிறது என்பதை இந்த படம் தெளிவாக நிரூபித்துள்ளது.
உலகளாவிய சினிமாவில் இந்திய நட்சத்திரங்களின் வருகை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த வரிசையில் முன்னணியில் அல்லு அர்ஜுன் இருப்பதை ஜப்பானில் ‘புஷ்பா 2’ படத்தின் வசூல் நிலவரமும், அங்கு கிடைக்கும் கொண்டாட்டமும் வெளிப்படுத்துகிறது என்று வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜப்பானில் ‘புஷ்பா 2’ திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியாவின் பல முன்னணி இயக்குநர்களுடன் அல்லு அர்ஜுன் இணைந்து பணியாற்றவுள்ள அடுத்தடுத்த திரைப்படங்கள், சர்வதேச அளவில் அவரின் அந்தஸ்தை இன்னும் உயர்த்தி, ஒரு இந்திய நடிகருக்கான இதுவரை இல்லாத உலக அங்கீகாரத்திற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Hotstar Specials-ஆக ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'லக்கி' திரைப்படம் JioHotstar-ல்
நேரடி ஓடிடி ஒரிஜினல் திரைப்படமான ‘லக்கி’ (Lucky), Hotstar Specials ஆக பிப்ரவரி 20, 2026 அன்று பிரத்யேகமாக JioHotstar தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை JioHotstar, தனது சவுத் அன்பவுண்ட் நிகழ்வில் வெளியிட்டு, ‘லக்கி’ திரைப்படத்தின் தனித்துவமான உலகத்தை முதன்முறையாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
வெளியாகியுள்ள டீசர், பார்ப்பதற்கு அப்பாவியாக இருக்கும் ஒரு நாய்க்குட்டி அரசியல் அதிகார மையங்களின் கவனத்தை ஈர்க்கும் போது உருவாகும் குழப்பங்களே கதையின் மையம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், ‘லக்கி’ திரைப்படம் நகைச்சுவை, குழப்பம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் நிறைந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது.
உதய் மகேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை தேவதர்ஷினி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை, அரசியல், ஆக்ஷன் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், அப்பாவித்தனமும் அதிகாரமும் மோதும் போது கட்டுப்பாட்டை மீறி நடைபெறும் சம்பவங்களை இந்த திரைப்படம் பேசுகிறது.
புதிய கதைக்களம், திறமையான நடிகர் குழாம் மற்றும் குடும்பங்கள், இளைஞர்கள், செல்லப்பிராணி பிரியர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலான பொழுதுபோக்கு அம்சங்களுடன் ‘லக்கி’ ஒரு முழுமையான எண்டர்டெய்னராக உருவாகியுள்ளது.
Hotstar Specials ‘லக்கி’ திரைப்படம், தமிழ் மொழியில் பிப்ரவரி 20, 2026 அன்று பிரத்யேகமாக JioHotstar தளத்தில் வெளியாகிறது.
விஜய் அரசியல் குறித்த அனு மோகன் கருத்துகள் தனிப்பட்டவை - ‘ரெட் லேபிள்’ தயாரிப்பாளர் விளக்கம்!
சமீபத்தில் நடைபெற்ற ‘ரெட் லேபிள்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அனு மோகன் அவர்களிடம் நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில், குறிப்பாக நடிகர் விஜயின் அரசியல் தொடர்பான கருத்துகள், பல ஊடகங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக பேசப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, ‘ரெட் லேபிள்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் இதுகுறித்து தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார்.
அவர் கூறியதாவது, “அனு மோகன் பேசிய கருத்துக்கள் அனைத்தும் அவரது தனிப்பட்ட கருத்துகளே. தயாரிப்பாளராகவும், நடிகராகவும் எனக்கு அந்த கருத்துகளில் எந்தவித உடன்பாடும் இல்லை. சொல்லப்போனால், நானும் விஜய் ரசிகர்தான்,” என்று தெரிவித்தார்.
மேலும், ஃபிலிம் சேம்பர் மற்றும் பெப்சி குறித்து அவர் முன்பு பேசிய கருத்துக்கள் முழுமையாக உண்மையிலானவை என்றும், அதில் இருந்து எப்போதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் உறுதியாக கூறினார்.
இந்த சர்ச்சைகளுக்கு இடையிலும், படத்தை அதன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பார்ப்பதையே ரசிகர்கள் விரும்புவார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், “வரும் பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் எங்கள் ‘ரெட் லேபிள்’ திரைப்படத்தை பார்த்து அனைவரும் மகிழுங்கள்,” என்று ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.
இதன்மூலம், அனு மோகன் கருத்துகளால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், படக்குழு தரப்பில் இருந்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் திரையரங்குகளில் STR-ன் ‘சிலம்பாட்டம்’!
நடிகர் சிலம்பரசன் (STR) பிறந்தநாளைத் தொடர்ந்து, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘சிலம்பாட்டம்’ மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. முன்னணி வெளியீட்டு நிறுவனமான எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.
மறுவெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வினில்…
விநியோகஸ்தர் எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ் பேசியதாவது..,
ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை அனைவரும் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன் நன்றி.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் பேசியதாவது..,
இந்தப்படத்தை மீண்டும் வெளியிடுவதாக வந்த தகவல் பெரும் உற்சாகத்தைத் தந்தது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இப்படத்தை விஜய் சாரும் அஜித் சாரும் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். இப்படத்தில் பல சுவாரஸ்யமான விசயங்கள் உள்ளது. யுவன் இசையில் இப்படத்தில் ஐந்து பாடல்களுமே பிளாக்பஸ்டர். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸுக்கு பெரிய லாபம் தந்த படம். இப்படத்தை எல்மா பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்குவது பெருமை. ரசிகர்களுக்கு இப்படம் பெரிய விருந்தாக இருக்கும்.
இயக்குநர் சரவணன் பேசியதாவது..,
”சிம்புவுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். சிம்புவுக்கு பின்னால் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நாம் ஒரு மாஸ் சீனை எழுதுவோம், அதை சிம்பு நடிப்பில் திரையரங்கில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது. சிம்பு என் குடும்பம் மாதிரி, அவருக்கு கொடுத்த வெற்றி நான் எனக்கே தந்துகொண்ட வெற்றி. அப்போது போலவே இப்போதும் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடுவார்கள். இந்நேரத்தில் இப்படத்தில் நடித்த சினேகா, பிரபு உட்பட அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்தார்கள். படத்தை ரசிகர்கள் இப்போதும் கொண்டாடுவார்கள் நன்றி.”
இயக்குநர் Tராஜேந்தர் பேசியதாவது..,
என் மகன் சிலம்பரசன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை, சிலம்பாட்டம் படத்தோடு கொண்டாடும் அனைவருக்கும் நன்றி. எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் ஆகிய இருவருக்கும் என் நன்றி. இயக்குநர் சரவணன் காலம் கடந்து நிற்கும் அருமையான ஆக்சன் படத்தை தந்துள்ளார். நான் என் பையன் நடித்ததில் வியந்து பார்த்த காதல் படம், விண்ணைத் தாண்டி வருவாயா!, நானும் பல காதல் படங்களை எடுத்திருக்கிறேன். ஆனால் என்னையே வியக்க வைத்த படம், விண்ணைத் தாண்டி வருவாயா.
அதே போல ஆக்சன் படம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனையோ படங்கள் ரீரிலீஸ் ஆகிறது. ஆனால், மங்காத்தா மட்டும் தான் வெற்றி பெற்றது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஏன் வேறுபடங்களுக்கு கூட்டம் வரவில்ல.? அது போல இந்த சிலம்பாட்டமும் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு ஏற்றாற் போல மீண்டும் டிஜிட்டல் செய்துள்ளார்கள். ஒவ்வொரு ஃப்ரேமும் அவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கிறது. சரவணன் அடிப்படையில் கேமராமேன். அத்தனை அற்புதமாக எடுத்துள்ளார். இந்தப்படத்தில் நடித்த பிரபு, சந்தானம், சினேகா என எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். என் உயிருள்ள உஷா படமும் ரீ ரிலிஸுக்கு தயாராகிவிட்டது. ஆனால், சிலம்பாட்டம் வருவதால் என் படத்தை தள்ளி வைத்துவிட்டேன். தம்பி, என் நண்பர் விஜய்யின் ஜனநாயகன் படம் வந்தாலும் தள்ளிப்போவேன் அது நான் தரும் மரியாதை. தமிழ் சினிமா ரீ-ரிலீஸில் என் பையனின் சிலம்பாட்டம் பெரிய வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன். அனைவருக்கும் நன்றி.
2008ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’, நல்ல வசூலையும் ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது. காலப்போக்கில், STR-யின் கல்ட் படங்களில் ஒன்றாக இந்த படம் மாறியது. இப்போது, மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புத்தம் புதிய பொலிவில் மீண்டும் திரைக்கு வருவது ரசிகர்களுக்கு ஒரு பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் STR, “தமிழரசன்” மற்றும் “விச்சு” என இரு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தது பெரிதும் பேசப்பட்டது. கிராமத்து பின்னணியில் சிலம்பக் கலையை மையமாகக் கொண்டு அமைந்த ஆக்ஷன் காட்சிகள், அவரது உடல் மொழி மற்றும் டயலாக் டெலிவரி ஆகியவை படத்திற்கு தனித்த அடையாளத்தைத் தந்தன. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, மாஸ் ஆக்ஷன், உணர்ச்சிப் பூர்வமான அம்மா–மகன் சென்டிமெண்ட், கிராமத்து அரசியல் என பல அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தன.
மாஸ் சிம்பு, ஆக்ஷன் சிம்பு, கிராமத்து சிம்பு – அனைத்தையும் ஒரே படத்தில் காண விரும்பும் ரசிகர்களுக்கு, ‘சிலம்பாட்டம்’ ரீ-ரிலீஸ் ஒரு திருவிழா அனுபவமாக இருக்கும்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













