சற்று முன்

'பிளாக்’ படம் குறித்து சஸ்பென்ஸை உடைத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு   |    காதலும் ஆன்மீகமும் கலந்த படம் 'ஆலன்' - இயக்குநர் கே. பாக்யராஜ்   |    அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு   |    ZEE5 இல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ள 'டிமான்டி காலனி 2'   |    ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |   

சினிமா செய்திகள்

'பிளாக்’ படம் குறித்து சஸ்பென்ஸை உடைத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு
Updated on : 08 October 2024

ஒவ்வொரு படத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி எடுத்துக் கொண்டாலும் நல்ல தரமான, கருத்தாழம் மிக்க அதேசமயம் ரசிகர்களுக்கு பிடித்தவகையில்  பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்ட படங்களை மட்டுமே தர வேண்டும் என்கிற நோக்கில் படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘பிளாக்’.



 



அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில்  ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, கோகுல் பதிவை மேற்கொள்ள, பிலோமின் ராஜ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். 



 



வரும் அக்டோபர் 11ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து ‘பிளாக்’ படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களையும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.



 



இந்த நிகழ்வில் 



நடிகர் விவேக் பிரசன்னா பேசும்போது, 



“சயின்ஸ் பிக்சன் படம் என்பது இந்திய சினிமாவில் அதிலும் தமிழ் சினிமாவில் ரொம்ப ரொம்ப குறைவு. பத்து வருடத்திற்கு முன்பு இயக்குநர் பாலசுப்ரமணியன் இயக்கிய ஒரு குறும்படத்தில் நடித்தேன். அதில் நடித்த பத்து பதினைந்து நாட்கள் கழித்து ஹாலிவுட்டில் ‘இன்டர்ஸ்டெல்லர்’  படம் வெளியானது. நம்ம ஊரில் ஒரு ஷார்ட் பிலிம் மூலமாக குறைந்த செலவில் இன்டர்ஸ்டெல்லர்’  பார்க்கும்போது ஏற்பட்ட அதே திருப்தியை கொடுத்தவர் பாலசுப்ரமணியம். அதன்பிறகு பத்து வருடமாக எந்தவித தொடர்பும் கூட அவரிடம் இல்லை. அறிவில் சார்ந்த படம் வருவது என்பது ரொம்பவே கஷ்டம். அதற்கு அந்த அளவுக்கு அறிவு இருந்தால் மட்டுமே கதையை உருவாக்குவதுடன் திரைக்கதையும் எழுத முடியும்.. அவர் பேசும்போது கூட இயற்பியல் சம்பந்தப்பட்ட புழக்கத்தில் இல்லாத பல அறிவியல் வார்த்தைகளை பேசுவார். அந்த வகையில் அறிவுள்ள ஒரு அறிவியல் தெரிந்த ஒரு இயக்குநர் நம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளார் என்பதில் பெருமகிழ்ச்சி. 



 



சிறுவயதிலேயே ராம் போன்ற படங்களில் நடித்த ஜீவாவை பார்த்து இப்போதும் ஆச்சரியமாக இருக்கும். இந்த பிளாக் படத்திற்கு அவர் ரொம்பவே பொருத்தமாக நம்பிக்கையான ஒரு ஹீரோவாக இருக்கிறார். படம் பார்க்கும்போது உங்களுக்கே அது புரியும். இந்த படத்தில் இதுவரைக்கும் நான் நடித்திராத ரொம்ப ரொம்ப வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்துள்ளார் இயக்குனர் பாலா. இப்படி ஒரு கதாபாத்திரம் வளர்ந்து வரும் ஒரு நடிகனுக்கு கிடைப்பது ரொம்பவே அபூர்வம். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி தான். சாம் சி.எஸ் எப்போதுமே தனது பின்னணி இசை மூலம் படத்தின் டெம்போவை ஏற்றிக்கொண்டே அதே சமயம் ரசிகர்களின் கவனம் சிதறாதவாறு கொண்டு செல்வார். இந்த படத்திலும் அதுதான் நடக்க இருக்கிறது” என்று கூறினார். 



 



படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் பேசும்போது,



சயின்ஸ் என்றாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி. அதனால்தான் இன்ஜினிரிங் படிக்க ஆசை இருந்தாலும் பயந்து கொண்டு பதிலாக விஸ்காம் படித்தேன். அப்படிப்பட்ட என்னிடம் ஒரு சயின்ஸ் கதையை சொன்னார் பாலா. அப்போது அவரிடம், எனக்குப் புரிந்தாலே.. படம் பார்ப்பவர்களுக்கும் புரிந்துவிடும். நான் அவர்களுக்கு புரிய வைத்து விடுவேன் என்று கூறினேன். எனக்கு இந்த கதை நன்றாகவே புரிந்திருக்கிறது. அதை உங்களுக்கு புரிய வைத்திருக்கிறேன். சயின்ஸ் பிக்சன் கம் திரில்லர் உணர்வை இந்த படம் கொடுக்கும்” என்றார்.



 



ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் பேசும்போது, 



இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு  முன்பான முன்கட்ட தயாரிப்பு பணிகளின் போது  இது சயின்ஸ் பிக்சர் திரில்லர் என்பதுடன் மக்களுக்கு புரிய வேண்டும் என்பதால் இயக்குனர் பாலா, தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர். பிரபு,, தங்க பிரபாகரன் ஆகியோருடன் இணைந்து இந்த கதை குறித்து விவாதித்து ஒரு முழு வடிவத்தை கொண்டு கொண்டு வருவதற்கான அந்த விவாதமே சுவாரசியமாக இருந்தது. இதற்கு முன்பு பண்ணிய படங்களில் இது இருந்ததில்லை” என்று கூறினார்.



 



இயக்குநர் பாலசுப்பிரமணி பேசும்போது,



“இந்த கதையை ஒளிப்பதிவாளர் பி.வி சங்கர் மூலமாக முதலில் தயாரிப்பாளர் SR.பிரகாஷிடம் சொன்னபோது அவருக்கு அதில் பெரிய ஈடுபாடு இல்லாதது போல தான் தெரிந்தது. மேலும் இன்னும் கதையில் சில அம்சங்கள் தேவைப்படுகிறது என்று கூறினார். ஒருவேளை நம்மை தவிர்ப்பதற்காக தான் அப்படி சொல்கிறாரோ என நினைத்து வந்து விட்டேன். ஆனால் பத்து நாட்கள் கழித்து என்னை அழைத்து நான் கேட்ட விஷயத்தை பற்றி யோசித்தீர்களா அதை சரி செய்யுங்கள் என்று மீண்டும் கூறியபோது தான் அவர் இந்த கதையில் உண்மையிலேயே ஆர்வமாக இருக்கிறார் என்பது அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர் கூறிய விஷயங்களை எல்லாம் திருத்தம் செய்து அவரிடம் இந்த முறை ஸ்கிரிப்ட் ஆகவே கொடுத்துவிட்டேன். மீண்டும் அவர் என்னை அழைத்தபோது இன்னும் ஏதாவது சில திருத்தங்கள் சொல்லப் போகிறார் என நினைத்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என்று சொன்னபோது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் இந்த உதவியை செய்த பி.வி.சங்கருக்கு நன்றி.



 



ஒளிப்பதிவாளர் கோகுல் இந்த படத்திற்கு அழகாக கணக்கீடுகள் செய்து படப்பிடிப்பை நடத்தினார். நான் ஆரம்பத்தில் இருந்து வேண்டாம் என்று சொன்ன ஒரு நபர் இந்த படத்தின் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ். எனக்கு நாளைய இயக்குனர் காலத்திலிருந்து ஒரு படத்தொகுப்பாளர் நண்பராக இருக்கிறார். இருவரும் ஒன்றாக தான் பயணித்து வந்தோம். அவர்தான் வேண்டுமென கேட்டேன். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கும் சொந்த பிரச்சனை காரணமாக இந்த படத்திற்குள் வர முடியவில்லை. அதன் பிறகுதான் பிலோமின் ராஜ் இதற்குள் வந்தார். அவருக்கும் எனக்கும் முதல் நாளில் இருந்தே சண்டைதான். ஆனால் அது ஆரோக்கியமாக இருக்கும். போக போக எங்களுக்குள் படம் தொடர்பான விவாதங்கள், சண்டைகள். படம் முடியும்போது எங்களுக்குள் ஒரு நட்பு உருவாகிவிட்டது.



 



விவேக் பிரசன்னா நான் நாளைய இயக்குநர் சமயத்தில் குறும்படம் இயக்கிய போதிருந்தே என்னுடன் பணியாற்றியவர். சொல்லப்போனால் அப்போது இதே போன்ற ஒரு கதையை வேறு வெர்சனில் நான் படமாக்கிய போது என்ன கதாபாத்திரத்தில் நடித்தாரோ அதேபோன்ற இன்னொரு கதாபாத்திரத்தில் தான் இந்த வெர்ஷனில் நடித்திருக்கிறார். பிலோமின் ராஜூக்கு நேர் எதிராக இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உடன் எனக்கு எந்த ஒரு விவாதமும் ஏற்பட்டது இல்லை. அவரிடம் சென்றாலே இன்னும் சிறிது நேரம் உட்கார்ந்து பேசலாம் என்பது போல நாம் என்ன சொன்னாலும் அவர் கேட்பார். என்னை ஒரு முதல் பட இயக்குனர் என்பது போலவே அவர் உணர வைக்கவில்லை.



 



இந்த கதையை கேட்கும் ஹீரோக்கள் அனைவருக்குமே ஆரம்பத்தில் இது பிடித்து விடும். ஆனால் சில நாட்கள் கழித்து அதில் சில சந்தேகங்களை, லாஜிக்குகளை கேட்க ஆரம்பிப்பார்கள். மற்ற மாநில வெளியீடுகள் வரை கணக்கு போட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் ஜீவா சாரை பொருத்தவரை ஒன்றை முடிவு செய்து விட்டால் அதில் உறுதியாக இருக்கிறார். அவரும் ஆரம்பத்தில் மற்றவர்களைப் போல் தான் பிடித்திருக்கிறது என்று சொல்கிறாரோ என நினைத்தேன். அதன்பிறகு இந்த படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறார் என்று தெரிய வந்தபோது தான் நிச்சயமாகவே இந்த கதையின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை உணர முடிந்தது.  எப்படி படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜூக்கு சயின்ஸ் பிக்சன் கதைகள் பெரிய விருப்பமில்லையோ அதேபோல் தான் பிரியா பவானி சங்கருக்கும். முதலில் கதையைக் கேட்டார். பின் ஸ்கிரிப்ட்டையும் வாங்கி படித்தார். அப்படியும் அவருக்கு புரியவில்லை என்றார். ஆனாலும் அவருக்கு தயாரிப்பாளர் பிரபு சார் இருக்கிறார் என்கிற நம்பிக்கை இருந்ததால் இந்த படத்தில் ஒப்புக்கொண்டார்” என்று கூறினார்.



 



தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது,



 “இந்த படம் வெளியாவதற்கு முன்பே இது அந்த படத்தின் ரீமேக், இந்த படத்தின் ரீமேக் என செய்திகள் வெளியாகி வந்தன. கிட்டத்தட்ட 20 படங்கள் வரை பண்ணி விட்டோம். எவ்வளவோ ரீமேக்குகள் தேடி வந்தாலும் கூட எப்போதுமே இங்கிருக்கிறவர்களை வைத்து ஒரிஜினல் கதைகளை மட்டுமே பண்ண வேண்டும் என்பதை ஒரு கொள்கையாக வைத்திருக்கிறோம். ஆனால் முதன்முறையாக ஒரு ஆங்கில படத்தின் உரிமையை முறையாக வாங்கி இந்த ‘பிளாக்’ படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அது எந்த ஆங்கில படம் என்பதை பட வெளியீட்டுக்கு பின்பு பேசலாம் என நினைக்கிறேன். முதல் படத்திலேயே இப்படி ஒரு கதையை அழகாக படமாக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையுடன் பாலா (பாலசுப்ரமணி) இருந்தார். அந்த வகையில் ஸ்கிரிப்ட் படித்ததும் எல்லோருக்குமே ரொம்பவும் பிடித்தது.



 



இப்படி ஒரு அறிமுக இயக்குநர் வரும்போது அவர் மூலமாக இந்த கதையை ரசிகர்களுக்கு அழகாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக எங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகின்ற, எங்களுக்கு வசதியாக இருக்கின்ற அதே சமயம் ஒரு அறிமுக இயக்குநரின் எண்ணங்கள், பிரச்சனைகளை உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்படுகின்ற ஏற்கனவே எங்களிடம் உள்ள ஒரு திறமை வாய்ந்த தொழில்நுட்பக் குழுவை இந்த படத்தில் பயன்படுத்தினோம்.



 



கதையில் உள்ள சவால்களை சரியாக புரிந்து கொண்டு அதை அழகாக கையாண்ட கேமராமேன் கோகுல், இந்தக் கதை நடக்கும் இடத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த மாதிரி இடத்தில் நடக்கிறது என்று சரியாக சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்து பணியாற்றிய கலை இயக்குநர் சதீஷ்குமார், மக்களுக்கு எந்தவித குழப்பமும் இன்றி இந்த கதை சென்று சேர வேண்டும் என உழைத்த படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், இதுபோன்ற திரில்லர் படங்களுக்கு மிகப்பெரிய தூணாக இருக்கும் பின்னணி இசையை கொடுத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ் என இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே தங்களது முழு உழைப்பை கொடுத்துள்ளனர்.



 



இந்தக் கதையை இயக்குநர் பாலா பலரிடம் கூறியுள்ளார். அதேசமயம் ஜீவாவிடம் முயற்சித்து பார்க்கலாம் என நினைத்தோம். அவர் கொஞ்சம் லைட்டான கதைகளை தேடிக் கொண்டிருந்தபோது, இருந்தாலும் முயற்சித்து பார்க்கலாமே என அவரிடம் இந்த கதையை சொன்னோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததுக்கு மாறாக இந்த ஜானர் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இதை நான் பண்றேன் என உடனடியாக ஒப்புக்கொண்டார். இவ்வளவு வலுவான ஒரு கதையை ஒரு புதுமுக இயக்குநரை நம்பி அவர் ஒப்புக்கொண்டு வந்தது மிகப்பெரிய விஷயம்.



 



நாயகி பிரியா பவானி சங்கர் இந்த கதையின் ஸ்கிரிப்ட்டை வாங்கி படித்துவிட்டு, எனக்கு ஒன்றும் பெரிதாக புரியவில்லை, இருந்தாலும் உங்களை நம்பி வருகிறேன் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உடனே கிளம்பி வந்தார். அவரது நம்பிக்கை வீண் போகாத அளவிற்கு இந்த படம் வந்திருக்கிறது. படம் பார்ப்பவர்களை நிச்சயம் இந்தப் படம் குழப்பாது. அனைவருக்குமே இந்த படம் புரியும். ஆனால் படம் பார்த்துவிட்டு வருபவர்களுக்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணத்தில் இந்த கதை சென்று சேர்ந்து இருக்கும்”  என்று கூறினார்.



 



நாயகன் ஜீவா பேசும்போது, 



“இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது உடனே பிடித்து விட்டது. காரணம் பல ஹீரோக்களிடம் சொல்லி அதில் சின்ன சின்ன மாறுதல்களை அழகாக செய்து என்னிடம் வரும்போது ஒரு முழுமையான கதையாக வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதனால் இதில் எந்த திருத்தமோ மாறுதலோ சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை. இது ஒரு மைண்ட் ட்விஸ்ட்டிங் ஆன கதை. வலது மூளை இடது மூளை என இந்த படத்தில் சொல்வதைப் பார்க்கும்போது மக்களுக்கு அவர்களது மூன்றாவது கண்ணே திறந்து விடும் என நினைக்கிறேன். குறிப்பாக இளைஞர்களை இந்த படம் ரொம்பவே கவர்வதுடன் அவர்களது மூளைக்கும் வேலை வைக்கும். இதை சைக்காலஜிக்கல் திரில்லர் என சொல்லலாம். ஒரு கட்டத்தில் இது ஹாரர் படமோ என்கிற சந்தேகம் கூட படம் பார்ப்பவர்களுக்கு தோணும்.



 



விவேக் பிரசன்னாவின் காட்சிகள் தான் இந்த படத்தில் ரொம்பவே முக்கியமானவை. படம் பற்றி ரசிகர்களுக்கு எழும் கேள்விகளுக்கான விடைகள் அவரது கதாபாத்திரத்தில் தான் இருக்கின்றன. இது ஒரு ஆங்கில படத்தின் ரீமேக் என்றார்கள். ஆனால் அந்த படத்தை நான் இதுவரை பார்க்கவில்லை. காரணம் அதை பார்த்துவிட்டு இன்னும் ஏதாவது இம்ப்ரூவ் பண்ணுவோம் என நினைத்து தேவையில்லாமல் எதுவும் பண்ணி விடக்கூடாது என்பதால் தான். இந்த படம் பெரும்பாலும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களிலும் இரவு நேர படப்பிடிப்பாகத்தான் நடத்தினோம்.



 



நான் சினிமாவிற்கு வந்து 21 வருடம் ஆனது பற்றி பேசி என்னை வயதான ஆள் போல காட்டி விட வேண்டாம். என்னுடைய முதல் பத்து வருடங்களில் நான் கொஞ்சம் பரிசோதனை முயற்சிகளான படங்களை நிறைய பண்ணினேன். அந்த வகையில் அடுத்து வர இருக்கும் எனது படங்களில் இது ஒரு புதுமையான படமாக இருக்கும். பொதுவாகவே நான் திரில்லர் படங்களின் ரசிகன். பாலா இந்த கதையை அற்புதமாக கையாண்டு உள்ளார். படத்தில் மிக சில கதாபாத்திரங்கள் தான். ஆனாலும் ரசிகர்களை நன்றாக பொழுது போக்க செய்வார்கள். பல படங்களை தியேட்டர்களில் பார்க்கும்போது படம் ஒரு பக்கம் திரையில் ஓடிக்கொண்டிருக்கும்.. ரசிகர்களின் செல்போன்கள் வெளிச்சமாக இருக்கும். அப்படி அவர்கள் கவனத்தை சிதற விடாமல், ஒரு காட்சியை தவறவிட்டாலும் அடுத்து இது ஏன் நடந்தது என தெரியாமல் போய்விடுமோ என்பதற்காக தொடர்ந்து பார்க்கும் விதமாக இந்த படம் இருக்கும்.



 



எடிட்டர் பிலோமின் ராஜூக்கு ஒரே நேரத்தில் இந்த படத்துடன் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அவர் இந்த ‘பிளாக்’ படத்தை எப்படி சொல்லி இருப்பார் என பார்ப்பதற்கு நானே ஆர்வமாக இருக்கிறேன். பிரியா பவானி சங்கரை அவர் என்னை பேட்டி எடுத்த காலத்திலிருந்து தெரியும். படப்பிடிப்பு தளத்தில் கூட இந்த வசனத்தை எப்படி பேசுவது என இயக்குநருடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. தயாரிப்பாளர் பிரபு சார் தரப்பிலேயே சூர்யா, கார்த்தி என ஹீரோக்கள் இருக்கும்போது என்னை நம்பி இப்படி ஒரு வலுவான கதையை கொடுத்ததற்கு அவருக்கு நன்றி. அவருடன் இணைந்து இதுபோன்று இன்னும் பல படங்கள் பணியாற்ற விரும்புகிறேன்” என்று கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா