சற்று முன்
சினிமா செய்திகள்
பாங்காக் மக்களை ஊக்குவிப்பதற்காக மேடை ஏறிய ஸ்ருதி ஹாசன்!
Updated on : 26 January 2025
உள்ளூர் இசைக் குழுவுடன் எதிர்பாராத விதமாக இணைந்து ஸ்ருதிஹாசன் நடத்திய இசை நிகழ்ச்சி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் படக்குழுவினருடன் ஸ்ருதிஹாசன் முகாமிட்டிருக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன் திட்டமிடப்படாத ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
படப்பிடிப்பில் தன் பங்களிப்பை நிறைவு செய்த பிறகு ஸ்ருதி ஹாசனும், அவருடைய குழுவினரும் நகரத்தை வலம் வந்தனர். அந்தத் தருணத்தில் அங்கு நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்தும் கலை அரங்கத்தை பார்வையிட்டனர். பரபரப்பான சூழ்நிலையும், நேரடியாக இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியை முழுமையாக ரசிக்கும் கூட்டமும் அங்கு இருக்க .. மகிழ்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன் அவர்களை ஊக்குவிப்பதற்காக மேடை ஏறினார்.
அவருடைய இந்த தன்னிச்சையான முடிவிற்கு அங்கு கூடியிருந்த ரசிகர்களிடத்தில் ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. அவரும் மேடை ஏறி பாடல்களை பாடினார். மேலும் அதனை ஒரு மறக்க இயலாத மாலை நேரமாக மாற்றி அமைத்தார்.
அவர்களிடயே பேசும்போது, இந்த ஆண்டில் மேலும் சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டின் பிரம்மாண்டமான பிளாக் பஸ்டர் ஹிட்டாகும் படமாக கருதப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகும் 'கூலி' படத்தில் ஸ்ருதிஹாசன் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகள்
“நேர்மையான செய்திகளில்தான் நம்பிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாக தனது தனித்துவமான செய்தி வெளியீட்டு பாணியால் வாசகர்களின் நம்பிக்கையைப் பெற்ற நம்பிக்கை ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையை சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்த தொடக்க விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்தியாவில் தனது விரிவாக்கப் பயணத்தை ஆரம்பித்துள்ள ‘நம்பிக்கை’, தமிழ் ஊடக உலகில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, “கட்சி சார்புடைய அல்லது தலைவர்கள் கையில் இருக்கும் இன்றைய ஊடகங்களுக்கு மத்தியில் பெரும் நம்பிக்கையாக என் போன்றவர்கள் இந்த ‘நம்பிக்கை’யை தான் பார்க்கிறோம். நம்பிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல! சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ’நம்பிக்கை’ கிளை பரப்புகிறது என்றார்கள். அது ஆழமான வேர் பரப்ப வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தேர்தல் வருகிற காலக்கட்டத்தில் நேர்மையும் உண்மையுமாக செய்திகளை ‘நம்பிக்கை’ கொண்டு போய் சேர்க்கும் என்பது என் நம்பிக்கை. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நம்பிக்கையை இது நிச்சயம் பெறும் என உள்ளன்போடு வாழ்த்துகிறேன்” என்றார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, “நம்பிக்கை விதைக்கூடிய நாளாக இன்று இருக்கிறது. நம்முடைய செயல்பாடுகள் மூலம்தான் நம்பிக்கை பெற முடியும். சோஷியல் மீடியா யுகத்தில் யதார்த்த தன்மையை இழக்கும் சூழலில் உள்ளோம். அதனால், களத்தில் இருந்து உண்மைத்தன்மையுடன் செய்திகளை எந்தளவுக்கு நேர்மையாக கொடுக்கிறோம் என்பதில்தான் நம்பிக்கையை பெற முடியும். மலேசியாவை தொடர்ந்து இங்கும் ‘நம்பிக்கை’ வந்திருக்கிறது. சீமான் அண்ணன் சொன்னதை போல உள்ளது உள்ளபடி சொல்லுங்கள். மக்கள் எங்களை வழிநடத்துவாரகள். தனது பேச்சு, கவர்ச்சி மூலம் முதலில் ஊடகங்கள் முட்டாள்களைத்தான் முதலில் கவரும். பின்பு, புத்திசாலிகளை வாயடைக்க வைத்துவிடும். அப்படி இல்லாமல், தவறு யார் செய்திருந்தாலும் அதை தைரியமாக சுட்டிக்காட்டி சொல்லுங்கள். இன்று வந்திருக்கும் அனைத்து ஆளுமைகளோடு இணைந்து நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் சார்பாக ‘நம்பிக்கை’க்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்”.
நடிகர் சரத்குமார், “மலேசியாவில் தொடங்கி இன்று சென்னை நோக்கி அனைவரின் நம்பிக்கை பெற வந்திருக்கும் ’நம்பிக்கை’ குழுமத்திற்கும் இங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்! என் பெரியப்பா ஆதித்தனார் மிகுந்த உழைப்பைக் கொடுத்து ஆரம்பித்த பத்திரிகைதான் தந்தி. அவருடன் என் அப்பாவும் சில காலம் பயணித்தார். நானும் சில காலம் பத்திரிகை உலகில் இருந்தேன். உண்மைகள் மட்டுமே பேச வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பத்திரிகை இயங்க வேண்டும். 27 ஆண்டுகளாக ’நம்பிக்கை’ இயங்கி வருகிறது. மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூர், இந்தியா, துபாய் செல்ல இருக்கிறார்கள். இன்னும் பல நாடுகளுக்கு சென்று பலரது நம்பிக்கையை இந்த ‘நம்பிக்கை’ பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
நடிகை ராதிகா சரத்குமார், “’நம்பிக்கை’ டிஜிட்டல் லான்ச் இன் இந்தியா’ நிகழ்விற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஒரு குரல், ஒரு பார்வை, ஒரு வாக்குறுதியோடு வந்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். மீடியா என்பது பிரேக்கிங் செய்திகளை தருவது மட்டுமல்லாது, பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். நியாயம், துணிவு, நேர்மையான பார்வையோடு செயல்படுவதுதான் பத்திரிகை தர்மம். பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!” என்றார்.
நடிகர் நாசர், “இன்றைய காலக்கட்டத்தில் ஊடகங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். பரபரப்பாக இருக்க வேண்டும் என்று பல செய்திகள் திரித்து கூறப்படுகிறது. குறிப்பாக, எங்கள் சினிமா துறையில் பல நல்ல படங்கள் திரித்து கூறி காணாமல் போய்விடுகிறது. இதனால் நான் செய்தி சேனல்களை பார்ப்பதையே தவிர்த்து விட்டேன். ஆனால், என்னை மீண்டும் செய்திகள் பார்க்க வைக்கிறது இந்த ‘நம்பிக்கை’. இன்று ஒரு கஷ்டம் வந்தாலும் நாளை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்த மனிதகுலம் இயங்கி வருகிறது. தெளிவான, உண்மையான செய்திகள் ‘நம்பிக்கை’யில் நமக்கு கிடைக்கும். சீமான் அவர்கள் சொன்னது போல நீங்கள் வேர் விட வேண்டும். உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு துவக்கம், சிவராத்திரி நாளில் பிரம்மாண்ட பூஜை!
2017ஆம் ஆண்டு வெளியாகி நகைச்சுவை கலந்த ஃபாண்டசி கதைக்களத்தால் ரசிகர்களை கவர்ந்த மரகத நாணயம் திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 16, 2026 அன்று சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி கிளாப்போர்டை அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் வெங்கட்பிரபு “கேமரா ரோலிங், ஆக்ஷன்!” என்று அறிவித்து படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார். திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Passion Studios, Thinkal TV, RTC Media, Axess Film Factory மற்றும் Good Show ஆகிய பேனர்களின் கீழ் சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சௌத்ரி, தேவ் மற்றும் கேவி துரை இணைந்து தயாரிக்கின்றனர். முதல் பாகத்தை இயக்கிய ஏஆர்கே சரவன், இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.
‘மரகத நாணயம் 2’ அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் பாகத்தை விட அதிக நகைச்சுவை, மேஜிக் மற்றும் சுவாரஸ்ய திருப்பங்களுடன் இந்த இரண்டாம் பாகம் உருவாகும் என கூறப்படுகிறது.
தற்போது தொடங்கியுள்ள படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும், நடிகர் பட்டியல் மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த ஃபாண்டசி-காமெடி தொடர்ச்சி, மீண்டும் ஒரு முறை வெற்றி நாணயமாக மாறுமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

‘ஜாக்கி’ நான்கு வார வெற்றி!, மதுரையின் மண் மணத்தை கொண்டாடும் டாக்டர் பிரகபல் படைப்பு
மழைக்காடுகளில் நடைபெறும் மட் ரேஸ் போட்டியை மையமாக கொண்டு உருவான மட்டி மூலம் கவனம் பெற்ற இயக்குநர் டாக்டர் பிரகபல், தனது அடுத்த படைப்பான ‘ஜாக்கி’ மூலம் மீண்டும் பாராட்டுகளை குவித்து வருகிறார். கடந்த ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஜாக்கி’, தொடர்ந்து நான்கு வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
PK7 Studios தயாரித்து வழங்கியுள்ள ‘ஜாக்கி’, மதுரையை களமாகக் கொண்டு நடைபெறும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக வைத்து உருவான முதல் திரைப்படமாக திகழ்கிறது. மண் மணத்தையும், மண்ணின் மைந்தர்களின் வீரத்தையும் திரையில் உணர்த்தும் வகையில் படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
படம் குறித்து பேசிய டாக்டர் பிரகபல், “இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் சில நாட்கள் ஓடுவதற்கே சவால். ஆனால் ‘ஜாக்கி’ நான்கு வாரங்களாக வெற்றிநடை போடுகிறது. ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் அளிக்கும் ஆதரவு எங்களுக்கு பெரிய ஊக்கமாக உள்ளது,” என்று தெரிவித்தார்.
‘மட்டி’ படத்தில் நடித்த யுவான் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணாஸ் இந்த படத்திலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்துள்ளார். மேலும் பல திரைப் பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
இப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், படத்தொகுப்பை ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். கிரியேட்டிவ் ப்ரொடியூசராக ஆர்.பி. பாலா பணியாற்றியுள்ளார். தொழில்நுட்பக் குழுவின் ஒத்துழைப்பும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மதுரையின் கலாச்சாரத்தை திரையில் உயிர்ப்பிக்கும் ‘ஜாக்கி’, உள்ளூர் விளையாட்டை தேசிய அளவில் பேசப்படும் வகையில் மாற்றியுள்ள திரைப்படமாக திகழ்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிநடை போடும் இப்படம், தரமான உள்ளூர் கதைகளுக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
‘வித் லவ்’ வெற்றி கொண்டாட்டம், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற படக்குழு!
திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வித் லவ் (With Love)’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இன்று மரியாதை நிமித்தமாக மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவான இப்படம், வெளியான நாளிலிருந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வெற்றியின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில், தயாரிப்பாளர்கள் முதல்வரைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின், படக்குழுவினருடன் சிறிது நேரம் உரையாடி, ‘வித் லவ்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், இன்றைய தலைமுறையின் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தியதற்காக படக்குழுவினரை பாராட்டினார். இந்த சந்திப்பு, படத்தினருக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ள ‘வித் லவ்’, 2026 பிப்ரவரி 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய இளைஞர்களின் காதல், கனவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவான இப்படம், ரசிகர்களும் விமர்சகர்களும் பாராட்டும் படமாக அமைந்துள்ளது.
லவ்வர் மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தனது நேர்த்தியான கதை சொல்லல் மூலம் கவனம் பெற்றுள்ளார்.
இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், K. சுரேஷ் குமார் எடிட்டிங் செய்துள்ளார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளதுடன், ப்ரியா ரவி உடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றி நடைபோடும் ‘வித் லவ்’, இன்றைய இளைஞர்களின் மனதை தொட்ட காதல் கதையாக திகழ்கிறது.
விஜய் சேதுபதியுடன் தியாகராஜன் குமாரராஜா மீண்டும் இணைவு! ‘பாக்கெட் நாவல்’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதை சொல்லல் பாணிக்காக பிரபலமான இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் மூன்றாவது திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’ தற்போது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு, தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணையுவது இந்தப் படத்தின் மிகப்பெரிய சிறப்பாக பார்க்கப்படுகிறது. இவர்களுடன் கன்னட முன்னணி நட்சத்திரம் ராஜ் B ஷெட்டி, நடிகர் கிஷோர், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பது இசைஞானி இளையராஜா. அவரது இசை இப்படத்திற்கு முக்கிய பலமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார். தற்போது இசைப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘பாக்கெட் நாவல்’ படத்தை தியாகராஜன் குமாரராஜா தனது தயாரிப்பு நிறுவனமான Tyler Durden And Kino Fist (TDKF) மூலம் தயாரிக்கிறார். கொலைகாரன் மற்றும் வதந்தி போன்ற படைப்புகளை இயக்கிய Andrew Louis இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ளார்.
ஒளிப்பதிவை Nirav Shah கவனிக்கிறார். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் எடிட்டிங் மூலம் கவனம் பெற்ற சத்யராஜ் நடராஜன் இந்தப் படத்திலும் இணைந்துள்ளார். கலை இயக்குநராக வே. சண்முகராஜா பணியாற்றுகிறார்.
இப்படத்தின் இசை உரிமையை Think Music கைப்பற்றியுள்ளது. மேலும் டிஜிட்டல் உரிமைகள் தொடர்பாக முன்னணி ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் இறுதிக்கட்டத்தில் ‘பாக்கெட் நாவல்’ வெளியிடப்பட உள்ளது. வித்தியாசமான கதை சொல்லல், பலம் வாய்ந்த நடிப்பு அணியும், இசைஞானியின் இசையும் இணையும் இந்த படம், தியாகராஜன் குமாரராஜாவின் திரைப்பட பயணத்தில் இன்னொரு முக்கிய மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.
.jpeg)
சென்னை கிளாம்பாக்கத்தில் ‘கலர் பென்சில்’ அனுபவ கல்வி மையம் தொடக்கம்
குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றும் நோக்கில் ‘கலர் பென்சில்’ கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்வகை அனுபவ அடிப்படையிலான கல்வி ஸ்டோர் அறிமுகமாகுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனர் நாராயணன் நிகழ்வில் பேசியபோது, “கல்வி என்பது திணிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல; அது ஒரு கலை. குழந்தைகள் ‘ஏன்?’ என்று கேள்வி கேட்கும் மனப்பாங்கை ஊக்குவிக்க வேண்டும். அதற்காகவே ‘Joy of Y’ என்ற கருத்தை உருவாக்கியுள்ளோம். இங்கு படிப்பதால் நூற்றுக்கு நூறு மதிப்பெண் அல்லது ஐஐடி சேர்க்கை என எதையும் நாங்கள் உறுதி செய்யவில்லை. ஆனால் குழந்தைகளின் அடிப்படை அறிவு வலுவாக உருவாகும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்,” என்றார்.
தலைமை செயல் அதிகாரி மீனா சப்ரியா, “கோடைக்கால சிறப்பு வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. ஜப்பான் மொழி, ஆரிகாமி போன்ற பாடங்கள் டிப்ளமோ வகுப்புகளாக, குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக நடத்தப்படும். தனி கட்டணம் எதுவும் இல்லை; சுமார் ரூ.400 மதிப்புள்ள புத்தகத்தை வாங்கி அதில் பயிற்சி பெறலாம். 34-க்கும் அதிகமான புத்தகங்களும், சிறப்பு பயிற்சி மாடலும் இங்கு உள்ளது. 3300 சதுர அடியில் அமைந்துள்ள இந்த ஸ்டோர், குழந்தைகளின் கல்விக்கான பொருட்கள் விற்பனையாகும் இந்தியாவின் முதல் முயற்சி. அடுத்த ஆண்டு இந்தியாவில் மேலும் ஐந்து கிளைகள் தொடங்க திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வாணி போஜன், குழந்தைகள் உற்சாகமாக ஈடுபட்டதை பாராட்டி, இந்த முயற்சி தொடர்ந்து வளர வேண்டும் என வாழ்த்தினார்.
மேலும், பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்ட மைக்செட் ஸ்ரீராம், “அறிவும் மொழியும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அடிப்படை. அனுபவத்தின் மூலம் கற்றல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று தெரிவித்தார்.
கற்றலும் மகிழ்ச்சியும் ஒன்றிணையும் புதிய கல்வி அனுபவ மையமாக ‘கலர் பென்சில்’ உருவெடுத்துள்ளது.
'அரிசி என்பது உணவு மட்டுமல்ல, உரிமையும் கூட' – உதயநிதி ஸ்டாலின் உணர்வுபூர்வப் பேச்சு
மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் P. சண்முகம் தயாரிப்பிலும், இணை தயாரிப்பாளர்கள் S.M. பிரபாகரன் மற்றும் மகேந்திர பிரசாத் இணை தயாரிப்பிலும் உருவாகியுள்ள ‘அரிசி’ திரைப்படம், அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் தயாராகியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் இரா. முத்தரசன் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளனர். ஜான்ஸ் வி ஜெரின் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கே. எஸ். நதிஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படம், விவசாயத்தையும் விவசாயிகளின் வாழ்க்கை போராட்டத்தையும் மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையின் வள்ளுவர் கோட்டம்வில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி, ‘அரிசி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் தலைவர் வைகோ பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வு அரசியல் மற்றும் கலைத் துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களின் கலந்துகொள்ளுதலால் சிறப்பிக்கப்பட்டது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ' அண்ணன் இரா முத்தரசன் - சமுத்திரக்கனி நடிப்பில் தயாராகி இருக்கும் அரிசி திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கும் செல்வ பெருந்தகை, வைகோ, திருமாவளவன், வீரபாண்டியன், பேராசிரியர் காதர் மைதீன், புதுமடம் அலி, பழ. ஆசைத்தம்பி, செல்வராஜ், சண்முகம் , வன்னியரசு, எஸ். எஸ். பாலாஜி, மாரிமுத்து , ரூபி மனோகரன், கனகராஜ், திருமுருகன் காந்தி, மருத்துவர் ஷர்மிளா, சிற்றரசு, முகமத் அபுபக்கர் - தயாரிப்பாளர் சண்முகம், இயக்குநர் விஜயகுமார், ஆர் கே செல்வமணி மற்றும் இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் காலை வணக்கம்.
முதலில் இந்த திரைப்பட குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் இது போன்ற திரைப்படங்களின் இசை மற்றும் முன்னோட்ட விழாவை மிகப் பெரிய நட்சத்திர ஹோட்டலில் நடத்துவார்கள். மிகப்பெரிய திரையரங்கத்தில் நடத்துவார்கள். ஆனால் அரிசி திரைப்படக் குழுவினர் இந்த நிகழ்ச்சியை கலைஞர் கட்டிய இந்த வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியதற்கு முதலில் என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சராக பொறுப்பேற்ற இந்த நான்காண்டு காலங்களில் திரைப்படம் தொடர்பான எந்த நிகழ்விலும் கலந்து கொண்டதில்லை. இது அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நன்கு தெரியும். யார் கேட்டாலும் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று உறுதியாக சொல்லிவிடுவேன். ஆனால் அண்ணன் முத்தரசன் கேட்கும்போது என்னால் தட்டிக் கழிக்க முடியவில்லை. நீங்கள் தேதியை சொல்லுங்கள் நான் உறுதியாக வந்து விடுகிறேன் என்று சொன்னேன். அதன் பிறகு நேரம் கேட்டார். அதையும் நீங்களே சொல்லுங்கள் என்று சொன்னேன்.
பல வருடங்களாக கொடுக்காமல் இருந்த திரைப்படத் துறையினருக்கான தமிழக அரசின் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழக அரசின் விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இதற்காக குழு அமைக்கப்பட்டது . 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை திரைப்பட விருதுகளை வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
நான் திரை துறையில் இருந்து வெளியேறி, மக்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்று நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான அண்ணன் முத்தரசன் அவர்கள் மக்கள் பணியில் இருந்து சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவர் சினிமா துறைக்கு வந்திருந்தாலும் எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றாலும் அவர் மக்கள் பணிக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். அவர் சினிமாவில் உச்சத்திற்கு போனாலும் அவர் எப்போதும் விரும்புவது மக்களோடு மக்களாக இருப்பதைத்தான். இது தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். அரசியலில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கும் அண்ணன் முத்தரசனுக்கு திரைத்துறையில் முன்னால் இருந்தவர் என்ற வகையில் என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மக்களுக்காக பல்லாண்டு காலம் களத்தில் போராடியவர் தான் அண்ணன் முத்தரசன். திரையிலும் மக்களுடைய உரிமைகளை.. உரிமையுடன் பேச வந்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் அவர் விவசாயியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் போஸ்டர் ,ட்ரெய்லர், பாடல்களை பார்க்கும் போது அவர் விவசாயியாக நடித்திருக்கிறார் என்பதை விட விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் நிச்சயமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ள முடியும்.
முத்தரசன் மட்டுமல்ல அண்ணன் சமுத்திரக்கனியும் கம்யூனிஸ்ட் கொள்கைகளை தொடர்ந்து பேசக்கூடியவர். விவசாயிகளுகாக கம்யூனிஸ்ட்கள் களத்தில் இறங்கி போராடினால் நிச்சயம் அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த முறையும் வெற்றி பெறுவார்கள். அதேபோல் இந்த படமும் நிச்சயமாக வெற்றி படமாக அமையும்.
இந்தப் படத்தின் தலைப்பு அரிசி உயிரின் மறு பெயர் என வைத்திருக்கிறார்கள். இந்த அரிசிக்காக ஒரு காலத்தில் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள். பண்ணையார்களிடம் வாழ்க்கை முழுவதும் அடிமையாக இருந்தார்கள். காலமெல்லாம் வயலில் வேலை பார்த்தாலும் அவர்களுக்கு என்று ஒரு நேர சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் இருந்தது. அப்படிப்பட்ட விவசாய தொழிலாளர்களின் உரிமைக்காக களத்தில் இறங்கி கம்யூனிஸ்டுகள் எத்தனையோ போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
அதனால் டாக்டர் கலைஞர் அடிக்கடி சொல்வார். நான் மட்டும் தந்தை பெரியாரையும், அண்ணாவையும் என் வாழ்க்கையில் சந்திக்காமல் இருந்திருந்தால்... நானும் ஒரு கம்யூனிஸ்ட் தோழனாக மாறி இருப்பேன் என அடிக்கடி சொல்வார்.
அப்படிப்பட்ட கலைஞர் தான் 1969 ஆம் ஆண்டில் ஆட்சி கட்டிலில் ஏறிய பிறகு ஏழைகளுக்கு அரிசி கிடைப்பதற்கான எல்லா வழிவகைகளையும் செய்து கொடுத்தார். ஒரு படி அரிசிக்காக யாரும் மற்றவர்களின் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருக்கக் கூடாது எனும் நிலைமையை தமிழகத்தில் ஏற்படுத்தியவர் டாக்டர் கலைஞர்.
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2006 சட்டமன்ற தேர்தலில் கலைஞர் அவர்கள் தேர்தல் வாக்குறுதி ஒன்றை அளித்தார். 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என முதன் முதலில் அறிவித்தார். இது மக்களிடத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஏனெனில் அந்த காலத்தில் பல குடும்பங்களுக்கு அரிசி சோறு என்பது மிகப்பெரிய கனவாக இருந்தது. அந்தக் கனவை நனவாக்கியவர் டாக்டர் கலைஞர் . பின்னர் அந்த ரெண்டு ரூபாயை ஒரு ரூபாயாக குறைத்தார். அதற்கு அடுத்த கட்டமாகத்தான் இன்று விலையில்லா அரிசியும் வந்திருக்கிறது. மக்களுடைய அடிப்படைத் தேவையான இந்த அரிசி பிரச்சனையை போக்கியவர் டாக்டர் கலைஞர். அந்த வகையில் விவசாயிகளின் உரிமையை பேசும் இந்த படம் நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அண்ணன் முத்தரசனின் அரசியல் களப்பணியும், கலைப் பணியும் மென்மேலும் சிறக்கட்டும் என உங்கள் அனைவரின் சார்பாக நான் வாழ்த்துகின்றேன். '' என்றார்.
நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், ''நிறைய மேடைகளில் ஏறி இருக்கிறேன். இது எனக்கு ஸ்பெஷலான மேடை. படைப்பாளிகளை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன். சமூகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்த படைப்பை வழங்குபவர்கள் ஒருவகை. இந்த சமூகத்திற்கு தேவையான படைப்பை கொடுப்பவர்கள் மற்றொரு வகை. இது சமூகத்திற்கு தேவையான படைப்பு.
இப்போது இருக்கும் சூழலில் மருத்துவம் போல் படைப்புகள் எப்பவாவது வரும். இதனை அப்படிப்பட்டதொரு படைப்பாகத்தான் பார்க்கிறேன். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்த இயக்குனர் விஜயகுமாருக்கு மனமார்ந்த நன்றி.
பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒரு போன் கால் வந்தது. முத்தரசன் என்ற பெயரை சொன்னவுடன் எதுவும் பேசாமல் வாருங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வோம் என்று கூறினேன். இது சிவப்பு வண்ண துண்டிற்கு நான் கொடுக்கும் மரியாதை. இந்த சிவப்புத் துண்டில் அனைத்தும் அடங்கும் பேரன்பு இருக்கும். பெரும் கருணை இருக்கும் பெரும் கோபம் இருக்கும் மக்களுக்கான அர்ப்பணிப்பு இருக்கும் இப்படித்தான் நான் சிவப்பு வண்ணத்தை பார்க்கிறேன்.
அவருடன் நிற்கும்போது அவருடன் பணியாற்றும் போது.. இப்படி எல்லாம் கூட மனிதர்கள் இருக்கிறார்களா..! என்ற ஆச்சரியத்தையும் வியப்பையும் கொடுத்தார். அவரை நான் அப்பா என்று தான் அழைப்பேன். மிக்க மகிழ்ச்சி.
அவருக்குத் துணையாக ஒரு பெண்மணி நடித்தார். அவரது பெயர் ரஷ்யா என்றார்கள். அதுவும் எனக்கு வியப்பாக இருந்தது. அவரிடம் கேட்டபோது எங்கள் ஊரில் நிறைய பேருக்கு அவருடைய பெயருக்கு முன்னால் ரஷ்யா இருக்கும் என்றார்.
இப்படி இந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் பேரன்பு கொண்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய படைப்பு தான் இது. இனி வரும் காலங்களில் உணவுக்காக தான் சண்டை. காசு பணத்திற்காக அல்ல. நல்ல உணவை வைத்திருப்பவன் பெரும் செல்வந்தனாக இருப்பான். பணக்காரன் வேறு. செல்வந்தன் வேறு.
நல்ல காற்று நல்ல குடிநீர் நல்ல உணவு வைத்திருப்பவன் தான் செல்வந்தன். இதை நோக்கித்தான் இந்த சமூகம் ஓடும் அவரிடம் சென்று தான் கைகட்டி நிற்க வேண்டும். அந்த சூழல்தான் வரப்போகிறது. இதற்கு முந்தைய தலைமுறை பாதுகாத்துக் கொடுத்த இயற்கை வளங்களை நாம் பத்திரமாக பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். அந்த பொறுப்பு நமக்கு நிறைய இருக்கிறது. அப்படிப்பட்ட பொறுப்புடன் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அரிசி . இது அடுத்த தலைமுறையினருக்கு பெரிய ஆவணமாக இருக்கும். காலம் காலமாக பேசப்படும். இதை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து நல்ல ஒரு அங்கீகாரம் கொடுத்தீர்கள் என்றால் இதுபோன்ற நல்லதொரு படைப்பு உங்களை தேடி வரும். வெல்வோம். '' என்றார்.
இயக்குநர் விஜயகுமார் பேசுகையில், ''இந்தப் படம் நீண்ட கால ப்ராஜெக்ட். இதை கஷ்டப்பட்டு உருவாக்கினோம் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கு உதவி செய்த தயாரிப்பாளர்கள் சண்முகம் - பிரபாகரன் - மகேந்திரன்- ஆகியோருக்கு நன்றி. இந்த விழா இந்த அளவிற்கு பிரம்மாண்டமாக நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது நடைபெற்றதற்கு இறைவனுக்கு நான் நன்றி சொல்கிறேன்.
இதில் நடித்த இரா முத்தரசன், சமுத்திரக்கனி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி. இந்த திரைப்படம் ஒரு உணர்வுபூர்வமான படமாக இருக்கும். இந்த திரைப்படம் எனக்கு மிகப்பெரிய அடையாளமாக இருக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் நெய் குப்பை எனும் கிராமத்திற்கு சென்ற போது கிடைத்த அனுபவத்தால் தான் இந்தப் படம் உருவானது ''என்றார்.
தயாரிப்பாளர் சண்முகம் பேசுகையில்,'' இந்த படத்தின் கதையை இயக்குநர் விஜயகுமார் என்னிடம் சொல்லி முதலில் ஒரு மேக்கிங் வீடியோ செய்ய வேண்டும் என்று தான் சொன்னார். அதற்கு எவ்வளவு செலவாகும்? என்று கேட்டேன் ஒரு தொகையை சொன்னார் அதை கொடுத்தேன். அதன் பிறகு முத்தரசன் அவர்களை சந்தித்து அவருடைய ஒப்புதலுடன் மேக்கிங் வீடியோவை உருவாக்கினோம். இதைப் பார்த்த பிறகு இதை இன்னும் விரிவுபடுத்தலாம் விரிவு படுத்தலாம் என்று சொல்லி சொல்லி பேசி பேசி இவ்வளவு பெரிய படமாக உருவாகி இருக்கிறது. இது இவ்வளவு பெரிய படமாக வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி'' என்றார்.
இரா. முத்தரசன் பேசுகையில், '' இயக்குனர் விஜயகுமாரும் இளங்கோவும் முதலில் என்னை சந்தித்து விவசாயம் தொடர்பான ஆவணப்படம் ஒன்று உருவாக்குகிறோம் அதில் நீங்கள் இரண்டு நாட்கள் வந்து வருகை தந்து நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். நான் உடனடியாக கையைக் கூப்பி நான் வரமாட்டேன் என்று உறுதியாக சொல்லி விட்டேன். அதன் பிறகு கதையை சொன்னார். கதை எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. கிராமத்திற்கு சென்று படப்பிடிப்பு நடத்துங்கள். எங்களுடைய தோழர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள் என்று சொன்னேன்.
இயக்குனர் விஜயகுமார் மிகப்பெரிய கெட்டிக்காரர். சாதிக்க கூடிய ஆற்றல் படைத்தவர். அதன் பிறகு இது குறித்து தோழர் வீரபாண்டியனிடம் விவாதித்தேன். ஆவணப்படத்தில் இரண்டு நாட்கள் நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்கள் என்று சொன்னேன். இதைக் கேட்டதும் வீரபாண்டியன் இது ஒன்றும் தப்பில்லை தாராளமாக நடிக்கலாம். அதை விருதிற்காக அனுப்புவார்கள். என்றார்.
அதன் பிறகு தோழர் பெரியசாமி இடமும் இதைப்பற்றி சொன்ன போது அவரும் நடிக்கலாம் என்று சொன்னார். அதன் பிறகு இரண்டு நாள் என்பதை மூன்று நாளாக நான் கணக்கிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். எனக்கு அப்போது ஆவணப்படம் என்றால் என்ன? நீண்ட படம் என்றால் என்ன? எதுவும் தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. அதன் பிறகு உங்களுக்கு எப்போது ஓய்வு நேரம் கிடைக்கிறதோ அப்போது சொல்லுங்கள் படப்பிடிப்பு நடத்தலாம் என மெதுவாக இயக்குநர் சொன்னார்.
அதன் பிறகு 40 நாட்கள் ஆனது. அதன் பிறகு உங்களுடன் சமுத்திரக்கனியையும் சேர்த்து நடிக்க வைக்க வேண்டும் என்று சொன்னார். அப்போது என்னுடன் சமுத்திரக்கனி நடிக்கவில்லை சமுத்திரக்கனியுடன் நான் நடிக்கிறேன் என்று சொன்னேன்.இது என்ன ஆனது என்றால் அரசியலை விட்டு நான் சினிமாவுக்கு சென்று விட்டேனோ.. என்ற நிலை உருவாகிவிட்டது. ஆனால் உண்மையை சொல்கிறேன் இது ஒரு விபத்து போன்றது தான் .என்னுடைய முழு நேரமும் அரசியல் தான். அதை இங்கு தெளிவுபடுத்துகிறேன்.
விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும். அனைவரும் பார்க்க வேண்டும். படம் எப்படி என்பதை உங்களின் முடிவுக்கு விட்டு விடுகிறேன். என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நெய் குப்பை கிராம மக்களுக்கும் நன்றி'' என்றார்
டீசர் வெளியீட்டில் கவனம் ஈர்த்த ‘காதல் ரீசெட் ரிபீட்’ – மார்ச் 6 உலகம் முழுவதும் ரிலீஸ்!
Malali Manvi Movie Makers, D Studios மற்றும் Denvi Productions நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘காதல் ரீசெட் ரிபீட்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், இயக்குநர் விஜய் இயக்கியுள்ள இந்த படம், காதல் கதையை புதுமையான கோணத்தில் சொல்லும் முயற்சியாக உருவாகியுள்ளது.
முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முன்பே வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், டீசரும் அதே அளவிலான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ‘ரீசெட்’ – ‘ரிபீட்’ என்ற தலைப்புக்கேற்றபடி, காதல், நினைவுகள், எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவை கலந்த காட்சிகளுடன் டீசர் அமைந்துள்ளது. இது வழக்கமான காதல் கதை அல்ல என்பதைக் காட்டும் வகையில் சஸ்பென்ஸும் உணர்ச்சியும் இணைந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இப்படத்தில் மதும்கேஷ் மற்றும் ஜியா சங்கர் முதன்மை ஜோடியாக அறிமுகமாக, மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பல புதுமுகங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி வரும் இயக்குநர் விஜய், இந்தப் படத்தின் மூலம் புதிய நட்சத்திர ஜோடியை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்.
ஒளிப்பதிவை அரவிந்த் கிருஷ்ணா கவனித்திருக்க, படத்தொகுப்பை ஆண்டனி மேற்கொண்டுள்ளார். கலை இயக்கம் – சரவணன் வசந்த், சண்டை இயக்கம் – மனோகர் வர்மா, உடை வடிவமைப்பு – ருச்சி முனோத் ஆகியோர் தொழில்நுட்ப அணியில் இணைந்துள்ளனர். பாடல் வரிகளை வைரமுத்து, கார்கி, ஆர்கஸ் ஆர்யன் எழுதியுள்ளனர். இப்படத்தின் இசை உரிமையை T-Series நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
டீசர் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வைகளைப் பெற்று, ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. தற்போது படக்குழு, மார்ச் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைப்படத்தை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழக வெளியீட்டை Romeo Pictures நிறுவனம் மேற்கொள்கிறது.
இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. காதலின் புதிய பரிமாணத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
‘நாக பந்தம்’ டீசர் வெளியீடு: மகா சிவராத்திரியில் தொடங்கிய காவியப் பயணம்
நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த புராண ஆக்ஷன் திரைப்படமான ‘நாக பந்தம்’ படத்தின் டீசர், மகா சிவராத்திரி புனித நாளில் வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரிப்பில், அபிஷேக் நாமா இயக்கத்தில், விராட் கர்ணா நடிப்பில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, உலகத் தரத்தில் உருவாக்கப்பட்ட மாபெரும் முயற்சியாக அமைந்துள்ளது.
டீசரை ‘டோலிவுட் பிரின்ஸ்’ என அழைக்கப்படும் மகேஷ்பாபு வெளியிட்டது, படத்திற்கான எதிர்பார்ப்பை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. வெளியீட்டுக்குப் பிறகு நாடு முழுவதும் பெரும் வரவேற்பும், சமூக வலைதளங்களில் ஆர்வ அலையும் உருவாகியுள்ளது.
இமயமலையின் பனிமூட்டம் சூழ்ந்த மர்மப் பரப்பில் தொடங்கும் டீசர், காலத்தை விடப் பழமையான ரகசியம் புதைந்து கிடக்கும் உலகின் கதவுகளைத் திறக்கிறது. ஒரு மனிதனின் பேராசை பிரபஞ்ச ரகசியத்தை அச்சுறுத்தும் தருணத்தில், விதி தனது போர்வீரனைத் தேர்ந்தெடுக்கிறது என்பதைக் காட்சிமொழியால் வலிமையாக உணர்த்துகிறது.
வரலாற்றில் அப்தாலி தலைமையிலான ஆப்கானிய படையெடுப்பின் தாக்கத்தால் ஓரளவு ஈர்க்கப்பட்ட இந்தக் கதை, புராணம், வரலாறு மற்றும் ஆன்மீகப் போர் ஆகியவற்றை இணைக்கிறது. காவியத்தின் மையமாக ‘நாகபந்தம்’ கோயில் அமைந்துள்ளது. வான சக்திகளால் பாதுகாக்கப்படும் பண்டைய அண்ட சக்தியை தாங்கி நிற்கும் இந்தக் கோயில், தவறான கைகளில் விழுந்தால் பேரழிவை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாகக் காட்சிப்படுத்தப்படுகிறது.
“பிரம்மாவின் படைப்பிலிருந்து பிறந்து, விஷ்ணுவின் தர்மத்தால் பாதுகாக்கப்பட்டு, மகாதேவின் கோபத்தால் இயக்கப்படுகிறது” என்ற வரிகள், படத்தின் ஆன்மாவை சுருக்கமாக வெளிப்படுத்துகின்றன. தெய்வீகம், விதி, அழிவு ஆகியவை மோதும் காவியப் போரின் முன்அறிவிப்பாக டீசர் அமைகிறது.
இயக்குநர் அபிஷேக் நாமா தனது தெளிவான பார்வையையும் துணிச்சலான இலட்சியத்தையும் டீசர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். உரையாடல் இல்லாமல் காட்சிகளின் வலிமையால் மட்டுமே பரபரப்பை உருவாக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட டீசர், தொழில்நுட்ப ரீதியாகவும் உயர்ந்த தரத்தை நிரூபிக்கிறது.
ஒளிப்பதிவாளர் சௌந்தரராஜன் S இமயமலையின் இயற்கைக் காட்சிகளை பிரம்மாண்டமாக பதிவு செய்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பில் அசோக் குமார், பின்னணி இசையில் ஜுனைத்குமார், எடிட்டிங்கில் R. C. பிரணவ் ஆகியோர் இணைந்து டீசருக்கு சக்திவாய்ந்த திரை அனுபவத்தை வழங்கியுள்ளனர்.
விராட் கர்ணா கதாநாயகனாக மட்டுமல்லாமல் சிவனாக காட்சியளிக்கும் தருணங்கள் டீசரின் முக்கிய அம்சமாகத் திகழ்கின்றன. தீவிரம், உடல் மொழி, உணர்ச்சி ஆழம் ஆகியவற்றுடன் அவர் வழங்கும் நடிப்பு, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மேலும் விராட் கர்ணா , நபா நடேஷ் , ஐஸ்வர்யா மேனன், ரிஷப் சாவ்னி, ஜெகபதி பாபு , கருடா ராம், மகேஷ் மஞ்சரேக்கர் , ஜெயப்பிரகாஷ் ,முரளி சர்மா, அனுசுயா பரத்வாஜ், பி. எஸ் .அவினாஷ் மற்றும் பலர்உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஹைதராபாத்திலுள்ள பிரசாத் PCX திரையரங்கில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் டீசர் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டிய இந்த டீசர், ‘நாக பந்தம்’ படத்தை மிகுந்த எதிர்பார்ப்புள்ள பான் இந்திய படமாக நிலைநிறுத்தியுள்ளது.
இந்த கோடையில் தர்மம் உயர்ந்து, அழிவு நடுங்கும் காவியப் போரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இன்றைய தலைமுறைக்கான பாடல் எழுதுவது எனக்கு பெருமை - இயக்குநர் சரண்
JB Films சார்பில் தயாரிப்பாளர் P. ரகு தயாரிப்பில், இயக்குநர் R. மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையமாகக் கொண்டு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” படம், வரும் பிப்ரவரி 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு நடைபெற்ற இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினரும் பல திரைப் பிரபலங்களும் கலந்துகொண்ட நிலையில், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்...
இசையமைப்பாளர் அஷ்வமித்ரா பேசியதாவது..,
எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாடலாசிரியர் சினேகன் அவர்கள் மிக அழகான பாடல் வரிகள் தந்தார். அருண் பாரதி அவர்களும் அற்புதமான பாடல் வரிகள் தந்தார். மிக நல்ல படம், அனைவரும் திரையரங்கில் வந்து படம் பாருங்கள். அனைவருக்கும் நன்றி.
ப்ரமோ பாடல் இசையமைப்பாளர் அகத் மகேந்திரன் பேசியதாவது..,
இந்த பாடலை தந்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்த பாடலுக்கு பல பேரை அணுகி, இறுதியில் இயக்குநர் சரண் சாரை அணுகினோம். அவர் படத்தில் எப்போதும் எல்லாப்பாடல்களும் மிகப்பெரிய ஹிட் ஆகிவிடும். அவர் அழகான பாடலை எழுதித்தந்தார். பாடல் உங்கள் எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் சரண் பேசியதாவது..,
இந்த படத்தில் எனக்கு ஒரு பாடலாசிரியராக (Lyric Writer) பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு முன், என் இயக்கத்தில் உருவான வட்டாரம் படத்தில் இடம்பெற்ற “யார் தருவார் இந்த அரியாசனம்” என்ற பாடலை நான் எழுதியிருந்தேன். அதன் பிறகு தொடர்ந்து பாடல்கள் எழுதும் வாய்ப்பு அமையவில்லை. காரணம், என் படங்களில் பெரும்பாலும் வைரமுத்து அவர்களே பாடல்களை எழுதுவார்.
இந்த படத்தின் இயக்குநரை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் மிகுந்த சுறுசுறுப்பும், தெளிவான சிந்தனையும் கொண்ட இளம் படைப்பாளி. இசை மற்றும் சினிமா உலகின் பல முக்கிய ஆளுமைகளுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது. அதனால் அவரிடம் ஒரு தெளிவான கலை நோக்கு (Vision) இருக்கிறது. ஒரு கட்டத்தில், அவர் என்னிடம் “இன்றைய காலத்திற்கேற்ற, ஒரு பாடல் வேண்டும்” என்று கேட்டார். அதனை நான் ஒரு சிறந்த வாய்ப்பாக எடுத்துக் கொண்டு இந்தப் பாடலை எழுதினேன்.
இந்த பாடல், இன்றைய சமூகச் சூழ்நிலையை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பின்னணியில் ஒரு வரலாற்றுச் சாயலையும் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக, 1900களில் சென்னை உருவாகிய காலகட்டத்தில், குறிப்பாக பிளாக் டவுன் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட சொற்கள், அவற்றின் அர்த்தங்கள் மற்றும் அகராதி குறிப்புகளை ஆராய்ச்சி செய்தேன். அந்த காலத்துச் சொற்களைப் பாடலின் பின்னணியில் இணைத்தால் தனித்துவமான அழகு கிடைக்கும் என்பதால், அந்த ஆய்வின் அடிப்படையில் இந்த பாடலை உருவாக்கினேன்.
இந்த பாடல் ஒரு ப்ரமோஷனல் சாங்காக இருந்தாலும், அதை மனதார ஏற்றுக் கொண்டு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, அகத் மகேந்திரன் மற்றும் முழு படக்குழுவினருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள். குறிப்பாக இந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குநருக்கு என் சிறப்பு நன்றி.
புதிய நாயகி சிம்ரன் அத்வானி படத்தில் மிக அழகாக நடித்துள்ளார். அவரது கண்கள் நிறையப் பேசுகின்றன. அவர் இன்னும் பல சிறந்த படங்களில் நடிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். நாயகன் ஆதவ் கிருஷ்ணா அவர்களுக்கும் என் வாழ்த்துகள். அவரது முகத்தில் ஒரு இயல்பான குறும்பும், தனித்துவமும் தெரிகிறது. Next-door boy கதாபாத்திரங்களுக்கு அவர் மிகவும் பொருத்தமானவர். வருங்காலத்தில் அவர் மேலும் பல படங்களில் நடித்து உயர்ந்த இடத்தை அடைவார் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் கதிரேசன் பேசியதாவது..,
எனக்கு நெருக்கமான நண்பரும், குடும்ப உறுப்பினருக்குச் சமமானவருமான பாலகோபி அவர்களின் மகனின் அறிமுக விழாவில் கலந்துகொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. பல தயாரிப்பாளர்களுக்குப் பக்கபலமாக இருந்து, பல வெற்றிப் படங்களுக்குப் பின்னால் உழைத்தவர் அவர். அந்த வெற்றிகளில் ஒரு சிறிய பங்கு இருந்தாலும், அவருடன் இணைந்து பயணித்த அனுபவம் எனக்குப் பெருமை. அந்த வெற்றிகளுக்காக அவருடைய மகனுக்கு நேரடியாக வாழ்த்துச் சொல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காத நிலையில், இன்று இந்த விழாவில் கலந்துகொண்டு என் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இங்கு குறிப்பாக சரண் அவர்கள் இப்படத்திற்குப் பாடல் எழுதியிருப்பது பெரும் மகிழ்ச்சி. அவருக்கு நான் ரசிகன், அவர் போன்ற ஆளுமை புதுமுகங்கள் பட்டதிற்குப் பாடல் எழுதுவது மகிழ்ச்சி. நல்ல கதைகள் கொண்ட சின்ன பட்ஜெட் படங்கள் தான் ஜெயிக்கிறது, அந்த வகையில் இந்தப்படம் ஜெயிக்க வாழ்த்துக்கள்.
மேனேஜர் யூனியன் பிரஸிடெண்ட் ராஜேந்திரன் பேசியதாவது..,
இந்த படத்தில் ஆதவ் கிருஷ்ணாவை பார்க்கும் போது, இது ஒரு புதுமுகம் போலவே இல்லை. நன்றாக நடித்துள்ளார். ஏற்கனவே பத்து படங்கள் செய்து அனுபவம் பெற்ற ஒரு இயக்குநர் எடுத்த படத்தின் தரத்தில் இந்த டீசர் இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளாகட்டும், பாடல் காட்சிகளாகட்டும் அனைத்தும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாகவே இந்த படம் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே பாராட்ட வேண்டிய முயற்சி. குறிப்பாக, லவ்வர்ஸ் டேயை முன்னிட்டு சரியான நேரத்தில் ஒரு அழகான காதல் பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். அதோடு டீசரும் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு ஒரு கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கிறது. டீசரை பார்த்தவுடன் படம் மீது நல்ல எதிர்பார்ப்பு உருவாகிறது. இந்த முயற்சிக்குப் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
நடிகர் இளவரசு பேசியதாவது..,
இந்த விழாவில் கலந்துகொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. மரியாதைக்குரிய இயக்குநர் மகாலட்சுமி முருகன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். “மகாலட்சுமி” என்ற பெயர் எனக்குத் தனிப்பட்ட முறையில் நெருக்கமானது. அந்த பெயருடன் நீங்கள் ஒரு இயக்குநராக உயர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. நாயகி சிம்ரன் அத்வானி அவர்களுக்கு என் வாழ்த்துகள். அவரின் நடிப்பு இயல்பாகவும் அழகாகவும் உள்ளது.
நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும் மார்க்கெட் இருக்கும். ஆனால் மேனேஜர் என்ற பொறுப்பு மிகப் பெரியது. ஒரு படத்தில் பணம் இருக்கிறதோ இல்லையோ, ஒட்டுமொத்த பொறுப்பையும் சுமந்து, பிரச்சினைகளை கையாள்ந்து, தயாரிப்பாளருக்கும் படக்குழுவிற்கும் துணை நிற்பது சாதாரண விஷயம் அல்ல. அந்த பணியை மிக நேர்மையாகவும், பாசிட்டிவாகவும் செய்து வருபவர் பாலகோபி. அவருடைய மகன் இன்று இந்த திரைப்படத்தில் அறிமுகமாகிறார். நீ நல்ல பையன். நல்ல வளர்ப்பு. ஆனால் உன் அப்பா யார் என்பதைக் காட்டிலும், பாலகோபி என்ற மனிதர் யார் என்பதை நீ புரிந்து கொண்டு, அந்த பண்புகளை உன் வாழ்க்கையில் எடுத்துச் செல்ல வேண்டும். உன் அப்பாவின் உழைப்பும், நற்பெயரும் இந்த திரைப்படத்தின் மூலம் உனக்கு நல்ல அடையாளத்தைத் தர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். நன்றி.
நடிகர் பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் பேசியதாவது..,
இந்த படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் பேசுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. எனக்கும் இந்த படத்திற்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருப்பதால் கூடுதல் சந்தோஷம். தம்பி ஆதவ் கிருஷ்ணா இந்த படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படம் அவருடைய உழைப்பை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான முயற்சி. அந்த உழைப்புக்கு உரிய வெற்றி இந்த படத்திற்குக் கிடைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் குழு, இயக்குநர், நடிகர்கள் என அனைவரின் உழைப்பும் நல்ல பலனைத் தர வேண்டும். ரசிகர்கள் இந்த படத்தைப் பார்த்து ஆதரித்து, வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
இந்த விழா இசை வெளியீட்டு நிகழ்வாக இருந்தாலும், இதில் பங்கெடுத்த அனைத்து கலைஞர்களுக்கும் முதலில் என் மனமார்ந்த வணக்கங்கள். இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்–நடிகைகள், நடன இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் இந்த படத்திற்கு மிக முக்கிய பங்காற்றியுள்ளனர். இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடக நண்பர்களுக்கும் என் முதல் நன்றி.
S M ராஜ்குமார் பேசியதாவது..,
பாலகோபி சார் எப்போதுமே எங்களுக்கு ஒரு தலைவரைப் போலத்தான். நாயகன் ஆதவ் கிருஷ்ணா – இவர் நடிப்பைப் பார்க்கும்போது, இது முதல் படம் போலவே தெரியவில்லை. காதல் காட்சிகள், நடனம், ஆக்ஷன் என அனைத்திலும் அவர் நல்ல திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். சினிமாவை உண்மையாக நேசிக்கும் ஒருவராக, எதிர்காலத்தில் நீண்ட பயணம் இவருக்காக காத்திருக்கிறது. இது அவருடைய முதல் படம். இதிலிருந்து தொடங்கி அவர் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன். அதற்காக ஊடகங்களும், ரசிகர்களும் நல்ல ஆதரவு தர வேண்டும். அனைவரும் திரையரங்கில் சென்று இந்த படத்தைப் பாருங்கள்.
நாயகி சிம்ரன் அத்வானி பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம். முதலில் இங்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம். என் தயாரிப்பாளர்கள் பாலகோபி சார், ரகு சார், என் இயக்குநர் முருகன் சார், என்னுடன் பணியாற்றிய சக நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இங்கு வந்திருக்கும் அனைத்து மூத்த கலைஞர்களுக்கும் என் நன்றி. படம் நன்றாக இருக்கிறது என்று அனைவரும் சொல்கிறார்கள். அதைக் கேட்கும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என்ன சொல்வது என்று தெரியவில்லை. அனைவரும் திரையரங்குகளில் இந்த படத்தைப் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
நடிகர் ஆதவ் கிருஷ்ணா பேசியதாவது..,
அனைவருக்கும் வணக்கம்.இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள தயாரிப்பாளர்கள், மேலாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த படத்தில் என்னை நடிக்க வைத்த அப்பாவிற்கும் மற்றும் ரகு சார் ஆகியோருக்கு என் முதல் நன்றி. என்னை நம்பி இந்த வாய்ப்பை கொடுத்ததால்தான் இன்று நான் இங்கு நிற்க முடிகிறது.
என் இயக்குநர் முருகன் சார் ஒரு மிகப்பெரிய உழைப்பாளி . கதை விவாதம் முதல் பாடல்கள் வரை ஒவ்வொரு விஷயத்திலும் அவர் எனக்கு மிகச் சிறந்த வழிகாட்டுதலை அளித்தார். அந்த ஆதரவு எனக்குப் பெரிய பலம். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, நடன இயக்குநர், ஸ்டண்ட் மாஸ்டர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிக அருமையாக பணியாற்றியுள்ளனர். குறிப்பாக பாடல்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளன. இது என் முதல் படம் என்றாலும், அனைவரின் உழைப்பும் ஆதரவும் காரணமாக ஒரு நல்ல முயற்சியாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஊடகங்களின் ஆதரவும், ரசிகர்களின் அன்பும் மிக அவசியம். அனைவரும் திரையரங்குகளில் இந்த படத்தைப் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மிக்க நன்றி.
இயக்குநர் முருகன் மாகாலட்சுமி பேசியதாவது..,
இந்த மேடையில் நிற்கும் போது, என்னுடைய சினிமா பயணத்திற்குத் துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக கேப்டன் விஜயகாந்த், பிரேமலதா மேடம் இருவரும் தான் இந்த நிலைக்கு நான் வர காரணமாக இருந்தவர்கள். அவர்கள் இல்லையெனில் இன்று நான் இங்கு நிற்பது சாத்தியமில்லை.
சின்ன வயதில் ஊரில் டெய்லர் வேலை பார்த்துக்கொண்டே நாடகங்கள், கதைகள் எழுதத் தொடங்கினேன். அந்த கனவுக்குத் தைரியம் கொடுத்து என்னைச் சென்னைக்கு அனுப்பிய என் தந்தைக்கு நான் என்றும் கடமைப்பட்டவன். கேப்டன் ஆபிஸிலிருந்து தான் என் திரைப் பயணம் தொடங்கியது. வழிகாட்டி, ஊக்கம் கொடுத்த பல மூத்த கலைஞர்களுக்கும் என் நன்றி.
இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் குழு, நண்பர்கள், குறிப்பாக நாயகன் ஆதவ் கிருஷ்ணா உள்ளிட்ட அனைவரும் முழு மனதுடன் உழைத்திருக்கிறார்கள். ஒரு நண்பராகவும், ஒரு குழுவாகவும் இணைந்து வேலை செய்ததே இந்த படத்தின் பெரிய பலம். லவ்வர்ஸ் டே-யை முன்னிட்டு இந்த படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி. புதிய இயக்குநர்களுக்கும், புதிய முயற்சிகளுக்கும் ஊடகங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும். நல்ல கதைகள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவும், ஆசீர்வாதமும் வேண்டும். மிக்க நன்றி.
இப்படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களிலும் யூடியூப் தளங்களிலும் வெளியாகி, குறுகிய நேரத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. டிரெய்லரில் இடம்பெறும் காட்சிகள், கதாபாத்திரங்களின் வித்தியாசமான அறிமுகங்கள், பரபரப்பான எடிட்டிங் மற்றும் இசை ஆகியவை இணைந்து, கல்லூரி பின்னணியில் நகரும் ஒரு அழகான காதல் கலந்த கமர்ஷியல் திரைப்படமாக இது உருவாகியிருப்பதை உணர்த்துகின்றன.
ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்” திரைப்படம், வரும் பிப்ரவரி 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













