சற்று முன்
சினிமா செய்திகள்
டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு
Updated on : 06 February 2026
இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
‘குயின்’, ‘ஜன கன மன’ போன்ற கவனம் பெற்ற படங்களை இயக்கிய டிஜோ ஜோஸ் ஆண்டனி, இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக ஒரு பீரியட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். 1950–60 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ‘பள்ளிச்சட்டம்பி’, அவரது இயக்கப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
மோகன்லால் நடித்த ‘ஷிக்கார்’ மூலம் அறியப்பட்ட திரைக்கதை ஆசிரியர் எஸ். சுரேஷ் பாபு, இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய் பணியாற்றியுள்ள நிலையில், இந்த பீரியட் படத்திற்கு அவர் வழங்கும் இசை மீதும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கேரள அரசின் விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் மஞ்சுஷா ராதாகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பையும், ஒளிப்பதிவை டிஜோ டோமியும், படத்தொகுப்பை ஸ்ரீஜித் சரங் மேற்கொண்டுள்ளனர்.
வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படம், ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டொவினோ தாமஸ் இதுவரை காணாத புதிய தோற்றத்தில் தோன்றும் இந்த ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம், தமிழ் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது.
சமீபத்திய செய்திகள்
மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மகேந்திரன், சிறு வயதிலேயே “மாஸ்டர் மகேந்திரன்” என பெயர் பெற்றார். இளம் வயதில் விஜயின் மாஸ்டர் படத்தில் வில்லன் கதாபாத்திரம் (பவானி) மூலம் புகழ் பெற்ற இவர், அதன்பிறகு தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களிலும், இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
மகேந்திரன் நடிப்பில் உருவான நீலகண்டா திரைப்படம், கர்மா மீது அதீத நம்பிக்கை கொண்ட சாதாரண தையல்காரனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் எதிரியை எதிர்கொள்வதை மையமாகக் கொண்டு, அதிரடி ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது.
இந்த படத்தை ராகேஷ் மாதவன் எழுதி இயக்கியுள்ளார். தயாரிப்பு: எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் (M ஸ்ரீனிவாசு & D வேணுகோபர்), நிர்வாக தயாரிப்பு: அனில் இனமடுகு, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: ஸ்ரவன் ஜி குமார், இசை: மார்க் பிரசாந்த்.
படத்தில் மகேந்திரன், யாஷ்னா முத்துலுரி, நேஹா பதன், ஸ்னேஹுலால், ராம்கி, பப்ளு ப்ரித்விராஜ், சுபலேகா சுதாகர், பரத் ரெட்டி, சத்ய பிரகாஷ், சித்ரம் சீனு, சிவகார்த்திக் தன்டா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இது இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’
அனைத்து வயது ரசிகர்களையும் கவரும் நடிகர் அதர்வா முரளி, அடுத்தடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் பாராட்டைப் பெற்ற ‘DNA’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ படங்களில் அவரது திறமையான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
இப்போது, ஜீவா சங்கர் இயக்கும் புதிய ‘வலை’ திரைப்படத்தில் அதர்வா முரளி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறார். சமீபத்தில் வெளியான டீசர் இதற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
திரைப்படம் குறித்து இயக்குநர் ஜீவா சங்கர் கூறுகையில்,
“ராமேஸ்வரத்தை கதைக்களமாகக் கொண்ட இந்த திரைப்படம் சரா மற்றும் குட்டி என இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றி நகர்கிறது. இந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் அதர்வா முரளி நடித்துள்ளார். முழுக்க முழுக்க மீனவர் சமூகத்தின் வாழ்க்கை முறையை பேசும் படமாக இது இல்லாமல் பழிவாங்கல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ரூபா மஞ்சரி மற்றும் வாணி போஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முரளி ஷர்மா, ஆடுகளம் நரேன், அர்ஜாய், ஜெயபிரகாஷ், அருள் டி. சங்கர், துளசி, மயில்சாமி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள நான்கு பாடல்களும் சிறப்பாக உருவாகியுள்ளன. அந்தமான், சென்னை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் தலா ஒரு பாடலை படமாக்கியுள்ளோம்” என்றார்.
இந்த பழிவாங்கல் கதை மற்ற படங்களிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்று இயக்குநர் ஜீவா சங்கர் பகிர்ந்து கொண்டதாவது,
“இதற்கான காரணம் தனித்துவமானது. ‘பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா?’ என்ற கேள்வியை மையமாக வைத்து கதையை படமாக்கியுள்ளோம். கெட்ட மனிதர்கள் செய்யும் அநியாயங்களுக்கு எதிரான பதிலடி கூட பழிவாங்கலாக மாறுமா என்பதையும் பேசுகிறோம். இந்த விஷயங்களை எல்லாம் அறிவுரையாக இல்லாமல் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் சுவாரஸ்யமான திரைக்கதையாக உருவாக்கியுள்ளோம். படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படம் பார்வையாளர்களை மகிழ்விப்பதுடன், ஒரு நல்ல கருத்தையும் எடுத்துச் செல்லும். இதற்கு முன்பு ராமேஸ்வரம் பின்னணியில் பல படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் புதிய மற்றும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” என்றார்.
திரைப்படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’
‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம், வெளியாகும் முன்பே இந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்துள்ளது. ஆந்திரா–தெலுங்கானா (AP–TG) விநியோக உரிமையை தயாரிப்பாளர் தில் ராஜு தலைமையிலான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) நிறுவனம் ரூ.120 கோடி செலுத்தி கைப்பற்றியுள்ளது. இது தெலுங்கு மொழி அல்லாத திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஒப்பந்தம் ஆகும்.
KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிக்கும் இந்த படத்திற்கு, AP–TG உரிமை பெற மூன்று முன்னணி நிறுவனங்கள் போட்டியிட்டன. அந்த போட்டியில் SVC வெற்றி பெற்று, மிகப்பெரிய விநியோக ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது.
ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’, மொழி எல்லைகளை தாண்டும் நட்சத்திர சக்தியை வெளிப்படுத்தும் படம் எனக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ரசிகர்கள் படத்துக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக தெலுங்கு மாநிலங்களில், யாஷ் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். KGF Chapter 2க்குப் பிறகு அவரின் அடுத்த படத்துக்காக நான்கு ஆண்டுகளாக காத்திருந்த எதிர்பார்ப்பு, இப்போது ‘டாக்ஸிக்’ மீது உருவான மாபெரும் முன் வெளியீட்டு வரவேற்பாக வெளிப்படுகிறது.
ஒப்பந்தம் குறித்து தில் ராஜு கூறியதாவது:
"யாஷ் இன்று இந்திய சினிமாவின் ஒரு மாபெரும் சக்தி. KGF 2வுக்குப் பிறகு அவரது மார்க்கெட் உலகம் முழுவதும் மேலும் வளர்ந்துள்ளது. அந்தப் படத்துக்குப் பிறகு அவரது அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு மிகப் பெரியதாக உள்ளது. நான்கு ஆண்டுகள் கழித்து வரும் இந்தப் படத்தை SVC சார்பில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். யாஷுடன் மேலும் பல படங்களில் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்.”
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்திருப்பது, டாக்ஸிக் படத்தின் மீதான மதிப்பை மேலும் உயர்த்துகிறது. தேசிய விருது பெற்ற படங்கள் மற்றும் பல மெகா ஹிட்களை உருவாக்கியுள்ள இந்த நிறுவனம், படத்தின் உள்ளடக்கம், அளவு மற்றும் நீண்டகால வசூல் திறன் மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.
‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம், உலகம் முழுவதும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது. பிரம்மாண்டமான திரையரங்கு வெளியீடு மற்றும் பரவலான புரமோஷன்கள், “அசாதாரணமான, மாபெரும் சினிமா அனுபவம்” என்பதற்கான உறுதியாக விளங்குகின்றன.
யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கும் இந்த படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி, தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித் உள்ளிட்ட வலிமையான தொழில்நுட்பக் குழு படத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹாலிவுட் இயக்குநர் ஜே ஜே பெரி (John Wick), தேசிய விருது பெற்ற சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்டி ஆகியோரின் இயக்கத்தில் அதிரடியான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிக்கும் இந்த படம், வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் தயாரிப்பில், மார்ச் 19, 2026 அன்று ஈத், உகாதி, குடி பட்வா போன்ற பண்டிகைகளுடன் இணைந்து உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!
வீழ்ச்சியை சந்தித்த ஒரு வயதான கேங்க்ஸ்டர், தனது இழந்த அதிகாரத்தையும் குடும்பத்தையும், குறிப்பாக தலைமுறைகளாக கடந்து வந்த பாரம்பரிய மரபையும் மீட்டெடுக்க முயலும் கதையைக் களமாக கொண்டு உருவாகி வரும் பிரம்மாண்டமான வெப் தொடர் ‘லெகஸி’.
‘லெகஸி’ குறித்து படக்குழு பகிர்ந்து கொண்டதாவது,
“‘லெகஸி’ எங்களுக்கெல்லாம் ஒரு முக்கியமான சாப்டர். அதிகாரம், வெற்றி, தோல்வி, குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான மோதல்கள் ஆகியவற்றை ஆழமாக உணர்ந்து இந்தக் கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளோம். குற்ற உலகத்தை பின்னணியாகக் கொண்ட இந்தக் கதையில், கடந்த தலைமுறைகளில் விட்டுச் சென்ற பாரம்பரியம், தற்போதைய ஆசைகளுடனும் விசுவாசத்துடனும் எவ்வாறு மோதுகிறது என்பதே மையமாக இருக்கும்,” என்றனர்.
மேலும், இந்தக் கதையை திரையில் உருவாக்குவது பிரம்மாண்டமான முயற்சியும், பலரின் கூட்டு உழைப்பும் தேவைப்பட்டதாகவும், அந்த நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்கிய நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கு படக்குழு தனது நன்றியை தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள ‘லெகஸி’, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில், அதிகாரம், குடும்பம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு வலுவான க்ரைம் டிராமாவாக உருவாகி இருப்பதாக படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.
சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி
புதிய திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதும், ரசிகர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் கதாபாத்திரங்களையும் நடிகர்களையும் திரையில் அறிமுகப்படுத்துவதும், சமூகத்தை பிரதிபலிக்கும் வலுவான கதைகளை முன்னிலைப்படுத்துவதுமாக ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த ஆண்டுகளில் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருதுகள் வழங்கி கௌரவித்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் வெளியான விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்ற ‘கூழாங்கல் (Pebbles)’ திரைப்படம், சிறந்த திரைப்படத்திற்கான மாநில விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதே திரைப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் செல்லபாண்டி, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றுள்ளார். எந்தவித சமரசமும் இன்றி உணர்வுகளின் வலிமையோடு கதையை திரையில் வடித்த இயக்குநர் பி. எஸ். வினோத்ராஜ் அவர்களுக்கு ரௌடி பிக்சர்ஸ் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
அதேபோல், 2021 ஆம் ஆண்டு வெளியான ‘நெற்றிக்கண்’ திரைப்படம் பெண்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு, சமூகத்திற்கு வலுவான கருத்துகளை எடுத்துரைத்ததற்காக சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றுள்ளது. சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய கருத்தை தாக்கம் ஏற்படுத்தும் வகையில் திரையில் வடிவமைத்த இயக்குநர் மிலிந்த் ராவ் அவர்களுக்கு ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
மேலும், சமூக நெறிமுறைகளை வலியுறுத்திய ‘அறம்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை நயன்தாரா, 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகை விருதை பெற்றிருப்பதும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இப்படத்தை இயக்கிய கோபி நயினார், தயாரிப்பாளர்கள் கோடபாடி ஜே. ராஜேஷ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் ஆகியோருக்கும் நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.
இந்த விருதுகள், இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் கிரியேட்டிவ் குழுக்களின் முழு அர்ப்பணிப்பின் விளைவே என்றும், சமூக பொறுப்புணர்வுடன் கூடிய தரமான திரைப்படங்களை தொடர்ந்து உருவாக்கவும், புதிய திறமையாளர்களுக்கான தளமாகவும் ரௌடி பிக்சர்ஸ் செயல்பட இந்த அங்கீகாரம் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தூய்மை பணியாளர் பத்மாவுக்கு பார்த்திபன் வழங்கிய மரியாதை!
பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் பத்மா, தனது நேர்மை மற்றும் மனிதநேய செயலால் ஒட்டுமொத்த சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். கடந்த மாதம் தி.நகரில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சாலையில் கிடந்த ஒரு பையை கண்டெடுத்த பத்மா, அதில் இருந்த 45 சவரன் தங்க நகைகளை எந்த தயக்கமுமின்றி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் விசாரணையில், அந்த நகைகள் நங்கநல்லூரைச் சேர்ந்த பரமேஷ் என்பவருக்குச் சொந்தமானவை என்பது உறுதி செய்யப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த மனிதநேய செயலுக்கு தமிழ்நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு சமூக அமைப்புகள் வரை பத்மாவை பாராட்டியுள்ள நிலையில், மத்திய அரசின் சார்பில் அவரை கௌரவிக்கும் வகையில் தபால் தலை வெளியிடப்பட்டது. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்மாவை அவரது இல்லத்திற்கு வரவழைத்து தங்க சங்கிலி பரிசளித்து கௌரவித்ததும் கவனம் பெற்றது.
இந்நிலையில், புதுமைகளின் புகலிடமாக விளங்கும் இயக்குநரும் நடிகருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபன், பத்மாவை சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரிக்கு அழைத்து சென்று மாணவிகள் முன்னிலையில் கௌரவித்தார். கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்மாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவிகளுக்கு நேர்மையின் அவசியத்தை தனது வாழ்க்கை அனுபவத்தின் மூலம் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய பார்த்திபன்,
"எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருந்த நிலையில் விருந்தினராக நானும் சிறப்பு விருந்தினராக பத்மா அவர்களும் கலந்து கொண்டால் என்ன என்று தோன்றியது திருவல்லிக்கேணியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அவரை இந்த நிகழ்ச்சியில் என்னுடன் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தேன். அதை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்ட அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எத்திராஜ் கல்லூரியின் மாணவிகளுக்கு ஊக்கம் அளித்தார். தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் இன்றைய சூழ்நிலையில் 45 சவரன் தங்க நகைகளை காவல்துறையிடம் ஒப்படைத்த எளிய மனிதரான அவரது உயர்ந்த உள்ளத்தை பாராட்டும் வகையில் அவருக்கு புதிய காலணிகளையும், புடவையையும் வழங்கி அவரிடம் ஆசி பெற்றேன். இது ஒரு மகிழ்ச்சியான தருணமாக என்றென்றும் நினைவில் நிற்கும் " என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பத்மா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. மேலும், சவாலான வேலையான தூய்மை பணியாளராக பணியாற்றும் பத்மா அவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வரும் ஆட்டோ ஓட்டுநரான அவரது கணவர் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறினார்.
திருவல்லிக்கேணி, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பத்மாவின் இந்த நேர்மையான செயல், “நேர்மை இன்னும் உயிருடன் இருக்கிறது” என்பதற்கான வாழும் உதாரணமாக சமூகத்தில் பேசப்பட்டு வருகிறது.
அரசியல் அல்ல, முழு எண்டர்டெய்னர் - ‘லீடர்’ குறித்து லெஜெண்ட் சரவணன் விளக்கம்
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜெண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. இதனையொட்டி, படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வைக்கான பிரத்யேக காணொலி (First Look Glimpse) சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.
இயக்குநர் R. S. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வருகிறது. லெஜெண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், பிரபாகரன், அமிர்தா ஐயர், VTV கணேஷ், பேபி இயல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை S. வெங்கடேஷ், இசையை ஜிப்ரான் வைபோதா, படத்தொகுப்பை பிரதீப் E. ராகவ், கலை இயக்கத்தை G. துரைராஜ் மேற்கொண்டுள்ளனர். Legend Saravanaa Stores Productions நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘லீடர்’ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. A. M. விக்ரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டைட்டிலை வெளியிட்டார்.
திரு. விக்ரமராஜா பேசுகையில், "லெஜெண்ட் சரவணனின் இரண்டாவது படத்தின் பெயர் வெளியிட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. நாடறிந்த தொழிலதிபர் சரவணன் என்பது அனைவருக்கும் தெரியும்.
தகப்பனார் ஒரு பிரபலமான நிறுவனத்தை ஸ்தாபித்து அதனை பிள்ளைகளின் கைகளில் கொடுக்கும் போது சில பிள்ளைகள் வெற்றி பெறுவதுண்டு, சில பிள்ளைகள் தோற்றுப் போவதுண்டு. ஆனால் இதற்கெல்லாம் மாற்றாக கடுமையாக உழைத்து ஆசியா கண்டத்திலேயே சிறந்த விற்பனையாளர் என்று உயர்ந்து கொண்டிருப்பவர் தான் மரியாதைக்குரிய சகோதரர் லெஜெண்ட் சரவணன். இது அவருடைய இரண்டாவது திரைப்படம். அவருடைய முதல் படத்தை நான் பார்த்திருக்கிறேன். மிக நன்றாக இருக்கும். அதுவும் வெற்றிப்படம் தான். ஆனால் இந்த படம் அதையும் தாண்டி சிறந்த மைல்கல் படமாக திகழும். இது வெற்றி பெறுவது நிச்சயம். இதை யாரும் தடுத்திட இயலாது. இந்த 'லீடர் ' கட்டாயம் வெற்றி பெறுவார்.
இரண்டரை மணி நேர திரைப்படம் என்று சொன்னாலும் மக்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக மக்கள் அதை பார்த்து ரசிக்கக்கூடிய வகையிலும், மன மகிழ்ச்சியோடு வரக்கூடிய சூழலிலும் இந்த படம் அமையவிருக்கிறது.
இந்த திரைப்படத்தை திட்டமிட்டு பணியாற்றி இரவு பகல் பாராது உழைத்திருக்கிறார்கள். இந்த படம் வெற்றி பெறும். இந்த விழாவில் எங்களையும் அழைத்து கௌரவப்படுத்தியதற்காக நன்றி. தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஒரு பெட்டிக்கடை நடத்தும் சாமானிய வணிகர்களை கௌரவப்படுத்தும் வகையில் இந்த மேடை அமைந்திருக்கிறது. ஆகவே இந்த நிகழ்ச்சி எங்களுடைய குடும்ப நிகழ்ச்சி. ஒவ்வொரு வணிகர்களும் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக எப்படி கடுமையாக உழைத்து, முன்னேற வேண்டும் என்பது குறித்து தான் நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் சரவணன் அவர்கள் விவாதிப்பார்.
ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் கம்பெனிகள், இது போன்ற நிறுவனங்களால் சாமானிய வணிகர்கள் பாதிக்கப்படாமல் அவர்களை பாதுகாப்பதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறீர்கள் என்பது குறித்து தான் பேசுவார். ஜிஎஸ்டி பிரச்சினையாக இருந்தாலும், உணவு பாதுகாப்பு துறை சட்டம் சம்பந்தமான விஷயமாக இருந்தாலும் சாமானிய வியாபாரிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அதிக அக்கறையுடன் விவாதிக்க கூடியவர். அவர்கள் மீது உள்ளன்போடு இருப்பவர்தான் லெஜெண்ட் சரவணன்.
லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படம் வெளியான பிறகு உலகம் முழுவதும் சரவணனின் பெயர் கொடி கட்டி பறக்கும்,'' என்றார்.
படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில், "ஒவ்வொரு இயக்குநரும் பல திரைப்படங்களை இயக்கியிருப்பார்கள். அதில் நாம் சிலவற்றை தவறவிட்டிருப்போம். அந்த வகையில் நான் ஒரு இயக்குநரின் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன் என்றால் அது இயக்குநர் ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான படங்களைத் தான். அவருடைய படங்களை பார்க்கும்போது எல்லா தரப்பினருக்கும் ஏற்றதாக இருக்கும். அவரிடம் எல்லா படங்களையும் என்டர்டெய்ன்மென்டாக வழங்கும் மேஜிக் இருக்கிறது. அந்த மேஜிக் இந்த படத்தில் இன்னும் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் ரொம்ப நாளாக இத்தகைய ஜானரிலான படங்களை தவறவிட்டிருக்கிறோம். அதை லீடர் படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களுக்காக உருவாக்கி இருக்கிறோம்.
நான் சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப் படத்தில் பணியாற்றி இருக்கிறேன். லெஜெண்ட் நடிக்கும் படத்தில் பணியாற்றும்போது, என்னை சந்திக்கும் பலரும் சிறப்பான இசையை வழங்குங்கள் என்று உற்சாகப்படுத்தியுள்ளனர். அவருடைய படத்தை குடும்ப ரசிகர்கள் அனைவரும் திரண்டு வந்து பார்ப்பார்கள். அதனால் பாடலையும் பின்னணி இசையையும் சிறப்பாக உருவாக்குங்கள் என அன்பாக வேண்டுகோள் விடுத்தனர். அந்த வகையில் இந்த படத்தில் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி. திங்க் மியூசிக் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனைய விஷயங்களைப் பற்றி தொடர்ந்து பேசுகிறேன். இந்த தருணம் மகிழ்ச்சியானதாக இருக்கிறது. அனைவருக்கும் நன்றி,'' என்றார்.
இயக்குநர் R. S. துரை செந்தில்குமார் பேசுகையில், "இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸை பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் வெளியிடுவோம் என தயாரிப்பாளரான சரவணன் சார் என்னிடம் சொன்னார். ஊடகங்கள் பிள்ளையார் சுழி மட்டுமல்ல, பிள்ளையாரே அவர்கள் தான். மக்கள் என்ற கடவுளை சந்திப்பதற்கு முன் பிள்ளையாரான பத்திரிகையாளர்களை நாங்கள் தற்போது சந்தித்திருக்கிறோம்.
2022ம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் இருந்து லெஜெண்ட் சரவணன் அவர்களை சந்தித்து பேச்சு வார்த்தையை தொடங்கினேன். 5, 6 மாதங்கள் கழித்து தான் இப்படத்திற்கான பணிகளை இறுதி செய்து தொடங்கினோம்.
அந்தத் தருணத்தில் அவரை சந்தித்து பேசும் போதெல்லாம் அவர் ஆசைக்காகத் தான் நடிக்க வந்திருக்கிறார் என்று தான் நான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அவருடனான தொடர் சந்திப்பில் அவரின் பேச்சு மூலம் சினிமாவை பற்றிய அனைத்து விஷயங்களை நுணுக்கமாக பார்க்கக் கூடியவர் அவர் என்பது தெரிந்தது. அதன் பிறகு தான் அவர் நடிக்க வந்தது ஆசையால் அல்ல என்பது புரிந்தது.
சாதாரணமாக அவருடனான சந்திப்பின்போது ஒருமுறை அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருக்கும் போது சில இந்தி நடிகர்களின் போட்டோக்களை வீட்டில் ஒட்டி இருந்தாராம். அது தொடர்பாக அவரது அம்மா கேட்டபோது, 'நான் இவர்களைப் போல் எதிர்காலத்தில் வரவேண்டும், வருவேன்" என்றாராம். அதன் பிறகு அவர் தன்னுடைய குடும்பத்திற்காகவும், கடமைகளுக்காகவும் கடுமையாக உழைத்து உச்சத்தை எட்டி இருக்கிறார். இருந்தாலும் அந்த சிறுவனுடைய ஆசையை, கனவை ஒரு இளைஞனாக- இளைஞர்களுக்கான உத்வேகத்துடன் இந்தப் படத்தை தயாரித்து நடித்திருக்கிறார். இது எனக்கு உண்மையிலேயே சிறந்த முன்னுதாரணமாக இருந்தது.
அவருடன் பழகிய இந்த இரண்டு ஆண்டுகளில் அவருடைய கடும் உழைப்பை நேரில் பார்த்து வியந்து இருக்கிறேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அவரிடம் உள்ள அசாத்தியமான துணிச்சலும் தன்னம்பிக்கையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
படப்பிடிப்பு தளங்களில் அவருடனான அனுபவம் ஒவ்வொன்றும் மறக்க முடியாதது.
ஒவ்வொரு இயக்குநருக்கும் அல்டிமேட் கோல் என்னவென்றால், அவர் நினைத்ததை நினைத்த வகையில் உருவாக்கிட வேண்டும் என்பது தான். அதற்கு முழுமையான சுதந்திரமும், அனுமதியும் வழங்கும் தயாரிப்பாளர் தான் தேவை. அந்த வகையிலான ஒரு நல்ல தயாரிப்பாளராகவும், நான் எதைச் சொன்னாலும் அதனை அப்படியே கேட்டு செய்வதற்கு தயாராக இருக்கக்கூடிய நடிகராகவும் அவர் இருந்தார். அவரின் இந்த துணிச்சலை கண்டு தான் நான் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். இந்த படம் எங்களுக்கு மன நிறைவை அளித்திருக்கிறது. உங்களுடைய ஆதரவிற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். நன்றி,'' என்றார்.
தயாரிப்பாளர் / நடிகர் லெஜண்ட் சரவணன் பேசுகையில், "லீடர்- இந்த படத்தின் டைட்டிலை பார்த்தவுடன் உங்கள் அனைவருக்கும் அரசியல் சார்ந்த படமா, அல்லது எந்த மாதிரி படம் என்ற கேள்வி வரும். இந்தப் படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகளோ, அரசியல் சார்ந்த வசனங்களோ ஒரு துளி கூட கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் என்டர்டெய்னர் ஃபிலிம். தற்போது வெளியாகி இருக்கும் க்ளிம்ப்ஸ் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இருக்கும். இந்த படத்தின் எசன்ஸ் இதுதான். இதே போல் தான் படம் முழுவதும் இருக்கும்.
இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும், பிள்ளையும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். திடீரென்று அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்க் நுழைந்து விடுவார்கள். அதற்குப் பிறகு நடக்கும் விஷயங்களை தான் என்னுடைய இயக்குநர் துரை செந்தில்குமார் அற்புதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினருக்கு பிடித்தமான வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார். இதுதான் முக்கியமானது.
ஏனெனில் கதைகள் ஏராளமாக இருக்கும். ஆனால் திரைக்கதை அமைப்பது தான் சவாலானது. அந்த வகையில் இந்தப் படத்தில் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநர் துல்லியமாக செதுக்கி செதுக்கி உருவாக்கி இருக்கிறார்.
ஜிப்ரானின் பின்னணி இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். அதேபோல் படத்தின் கதையோட்டத்திற்கு தகுந்தாற்போல் பாடல்களுக்கும் அவர் இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்திற்காக தூத்துக்குடியில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அதன் பிறகு ஜார்ஜியா நாட்டில் 15 நாட்கள் படபிடிப்பு நடத்தினோம். ஜெய்ப்பூர், சென்னை , ஊட்டி ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தினோம். ஒவ்வொரு காட்சியிலும் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அற்புதமாக பணியாற்றி இருக்கிறார்.
சமீபத்தில் வெளியான 'டிராகன்' மற்றும் 'ஜனநாயகன்' படங்களில் பணியாற்றிய எடிட்டர் பிரதீப் ராகவ் தான் இப்படத்திற்கும் எடிட்டராக பணியாற்றி இருக்கிறார். இந்த படத்திலும் அவர் நேர்த்தியாக பணியாற்றி இருக்கிறார் அவருக்கும் என் வாழ்த்துக்கள்.
கலை இயக்குநர் துரைராஜுக்கும் என் வாழ்த்துக்கள். படப்பிடிப்பு தளத்திற்கு சண்டை பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூ வந்துவிட்டால் அந்தத் தளமே உற்சாகமடைந்திடும். அந்த அளவிற்கு உத்வேகத்துடன் பணியாற்றுவார்.
சிறிய வயதில் இருந்தே எனக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது. என்னுடைய வீட்டில் உள்ள பிரிட்ஜில் ஒரு பக்கம் சல்மான் கான், ஒரு பக்கம் ஷாருக்கான் ஆகியோரின் புகைப்படங்களை ஒட்டி இருப்பேன். என் தாயிடம் என்றைக்காவது ஒரு நாள் இவர்களைப் போல் நான் ஸ்டார் ஆவேன் என சொல்லி இருக்கிறேன். இதைக் கேட்ட என் தாய் 'சந்தோஷம்' என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்.
நான் என்னுடைய தந்தையார் மீது மிகுந்த பக்தியும், மரியாதையும் வைத்திருக்கிறேன். அதன் காரணமாக குடும்ப தொழிலில் ஈடுபட்டு, என்னுடைய தந்தையாருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். அதன் பிறகு என்னை நம்பி முழு பொறுப்பையும் வழங்கி விட்டார். நான் கடுமையாக உழைக்கத்தொடங்கினேன். என்னுடைய நிறுவனத்தில் காலையில் முதல் ஆளாக உள்ளே நுழைவேன். அனைவரும் சென்ற பிறகு கடைசி ஆளாக வெளியேறுவேன். ஆரம்பம் முதல் இன்று வரை இப்படித்தான் தொடர்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் இதைத்தான் கடைப்பிடித்தேன். படப்பிடிப்பு தளத்திற்கு முதல் ஆளாக செல்வேன். அங்கிருந்து கடைசி ஆளாக வெளியேறுவேன். நான் எந்த வேலையை செய்தாலும் அதில் முழு கவனத்துடன் அர்ப்பணிப்புடன் உழைப்பேன். இதுதான் என்னுடைய கேரக்டர்.
இன்றைக்கு ஒரு பக்கம் கன்டென்ட் உள்ள படங்கள் தான் வெற்றி பெறும் என்கிறார்கள். மறுபக்கம் மாஸான ஆக்ஷன் படங்கள்தான் வெற்றி பெறும் என்கிறார்கள். இந்த படத்தில் நல்ல கதையம்சமுள்ள கன்டென்ட்டும் இருக்கிறது. மாஸான ஆக்ஷன் எலிமெண்ட்டும் இருக்கிறது. இந்த திரைப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
படத்தை பார்த்த நானும் எங்களுடைய படக் குழுவினரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதே மகிழ்ச்சியும், சந்தோஷமும், மன நிறைவும் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் கிடைக்கும் என நினைக்கிறேன்.
சினிமா என்பது ஒரு தனிநபரின் வெற்றி அல்ல. சினிமாவில் பல ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். படத்தை திரையிடும் திரையரங்குகளிலும் பல ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாக நான் ஒவ்வொரு திரைப்படமும் வெற்றியடைய வேண்டும் என நினைப்பேன்.
சினிமா துறை தற்போது கொஞ்சம் இறங்கு முகமாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு சற்று குறைந்திருக்கிறது. புதிதாக வருபவர்களுக்கும் வேலை வாய்ப்பு முழுமையாக கிடைப்பதில்லை. அதனால் தான் நான் எப்போதும் ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி அடைய வேண்டும் என நினைப்பேன். அதேபோல் பத்திரிகையாளர்களாகிய நீங்களும் இந்த சினிமாத்துறை வளர்ச்சி அடைவதற்கும், மீண்டும் எழுச்சி பெறுவதற்கும் உங்களாலான பங்களிப்பை தொடர்ந்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலை பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிடுகிறோம். அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் ஆறாம் தேதி இப்படத்திற்கான க்ளிம்ப்ஸ் வெளியிடுகிறோம்.
இந்த திரைப்படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு முன்னதாக பிரம்மாண்டமான முறையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும். அந்த விழாவில் இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்," என்றார்.
Fire Fox Film House தயாரிப்பில் புதிய போலீஸ் லவ் கமர்ஷியல் படம், படப்பிடிப்பு தொடக்கம்!
Fire Fox Film House நிறுவனம் சார்பில் சரணிகா தயாரிப்பில், இயக்குநர் மணிகண்டன் செல்வராஜ் இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் புரொடக்ஷன் நம்பர் 1 படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இயக்குநர் அறிவழகன் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிகண்டன் செல்வராஜ், இந்தப் படத்தின் மூலம் முழுநீள இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
தமிழ் ரசிகர்கள் புதிய கதைகளையும், வித்தியாசமான திரைக்கதை அமைப்புகளையும் வரவேற்கும் சூழலில், ஒரு போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் உருவாகும் இந்த படம், ஒரு காதல் ஜோடியை மையமாகக் கொண்டு, ஆக்ஷன், உணர்ச்சி மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் சமநிலையில் கலந்த ஒரு முழுமையான எண்டர்டெயினராக உருவாகி வருகிறது. விறுவிறுப்பான கதை நகர்வு மற்றும் சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பு இப்படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில் மணிகண்டன் செல்வராஜ் நாயகனாக நடிக்க, இயக்குநரும் நடிகருமான ஆ. வெங்கடேஷ் கதையின் திருப்புமுனையாக அமையும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். டாக்டர் படத்தின் மூலம் கவனம் பெற்ற ஸ்ரீஜா ரவி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க, டைரி, குற்றம் 23 போன்ற படங்களில் நடித்த தணிகை உட்பட பல புதிய முகங்கள் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 05-02-26 அன்று சென்னையில் தொடங்கப்பட்டு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
Fire Fox Film House தயாரிக்கும் இந்தப் படத்திற்கு கிரி மர்ஃபி ஒளிப்பதிவு செய்ய, புதுமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் உருவாகும் இந்த புதிய காதல்–ஆக்ஷன் கமர்ஷியல் படம், ரசிகர்களிடையே எந்த அளவுக்கு கவனம் பெறும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
ராம் சரண்–புச்சி பாபு சானா கூட்டணியில் ‘பெத்தி’, ஏப்ரல் 30 உலகளாவிய திரையரங்கு வெளியீடு!
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படம் "பெத்தி" யின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஏப்ரல் 30 என்ற முக்கியமான கோடை வெளியீட்டு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறை காலத்தை முழுமையாகப் பயன்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வெளியீட்டு தேதி அறிவிப்பு போஸ்டரில், ராம் சரண் இதுவரை காணாத முற்றிலும் புதிய, மாஸ் தோற்றத்தில் ரசிகர்களை கவர்கிறார். அலங்கோலமான நீளமான முடி, கனமான தாடி, மூக்கில் அணிந்த வளையம் ஆகியவை அவரது கதாபாத்திரத்திற்கு தனித்துவம் சேர்க்கின்றன. புகை சூழ்ந்த இருண்ட பின்னணியில், சோர்வும் கடுமையும் கலந்த முகபாவனையுடன் கூட்டத்தைக் கடந்து முன்னேறும் அவரது தோற்றம், போராட்டம் மற்றும் எதிர்ப்பின் தீவிரத்தை வலுவாக வெளிப்படுத்துகிறது.
‘பெத்தி’யின் புரமோஷன் உள்ளடக்கங்கள் வெளியாகியதிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. முன்னதாக வெளியான க்ளிம்ப்ஸ், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் A.R. ரஹ்மான் இசையமைத்த “சிக்கிரி சிக்கிரி” பாடல் அனைத்து தளங்களிலும் அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடல் இதுவரை 200 மில்லியன் பார்வைகளை கடந்து, பல சாதனைகளை நோக்கி பயணித்து வருகிறது.
படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளதுடன், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். ராம் சரண், தனது திரைப் பயணத்தில் இதுவரை காணாத ஒரு புதிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் உருவாகும் ‘பெத்தி’ படத்திற்கு வலுவான தொழில்நுட்பக் குழு இணைந்துள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற A.R. ரஹ்மான் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு காட்சிகளைப் பிடிக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பை கவனிக்க, அவிநாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பின் மூலம் படத்தின் உலகத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளார்.
கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த ஆக்சன்-ஸ்போர்ட்ஸ் டிராமா, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் இந்தியிலும், பான்-இந்தியா அளவில் ஏப்ரல் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'பராசக்தி' ZEE5-ல், பிப்ரவரி 7 முதல் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு!
இந்தியாவின் முன்னணி உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அரசியல் ஆக்ஷன் டிராமா திரைப்படமான "பராசக்தி"யை 2026 பிப்ரவரி 7 முதல் டிஜிட்டல் பிரீமியராக வெளியிடுகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், Dawn Pictures நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்த திரைப்படம், தமிழ்நாட்டின் சமூக–அரசியல் வரலாற்றிலிருந்து ஒரு முக்கியமான காலகட்டத்தை திரையில் உயிர்ப்பிக்கிறது.
1965 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள பராசக்தி, அடையாளம், சுயமரியாதை மற்றும் எதிர்ப்பின் குரல் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்டு, அந்த காலத்தின் அரசியல் சூழலில் சிக்கிக்கொள்ளும் இரு சகோதரர்களின் உணர்ச்சிபூர்வமான பயணத்தை சித்தரிக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடும், கொள்கை உறுதியான இளைஞரான செழியன் என்ற கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் ஸ்ரீலீலா முக்கிய பெண் கதாபாத்திரமான ரத்னமாலாவாக தோன்றுகிறார்.
திரைப்படத்தின் பின்னணி குறித்து பகிர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா...,
“மரியாதை, மொழி மற்றும் மக்களின் கூட்டுச் சிந்தனையின் சக்தி குறித்து ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற ஆழமான விருப்பத்திலிருந்து பராசக்தி உருவானது. இது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல; ஒருவரின் அடையாளம் கேள்விக்குள்ளாக்கப்படும்போது, சாதாரண மக்களின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை இக்கதை பேசுகிறது. நம் குரல்கள், பண்பாடுகள், வரலாறுகள் குறித்து அறிந்து கோள்ள வேண்டிய அவசியத்தை பேசும் இப்படைப்பை, உலகளாவிய பார்வையாளர்களிடம் ZEE5 கொண்டு செல்கிறது என்பது பெரிய மகிழ்ச்சி என்று கூறினார்.
சிவகார்த்திகேயன் கூறுகையில்,
“செழியன் எனக்கு மிகவும் பிடித்த அழுத்தமான, அர்த்தமுமிக்க கதாபாத்திரங்களில் ஒன்று. நம்பிக்கை, துணிவு மற்றும் உண்மையாக முக்கியமான விஷயங்களுக்காக குரல் கொடுப்பதற்கான பொறுப்பு ஆகியவற்றின் பிரதிநிதியாக செழியன் இருக்கிறான். பராசக்தி என்னை ஒரு நடிகராகவும், ஒரு மனிதராகவும் பல சவாலுக்கு உள்ளாக்கியது. இப்போது இந்த பயணத்தை ZEE5 வழியாக பார்வையாளர்கள் அனுபவிக்கவிருக்கிறார்கள் என்பதில் பெருமை கொள்கிறேன்,” என்றார்.
ஸ்ரீலீலா கூறுகையில்,
“பராசக்தி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மைல்கல்லாகும். ரத்னமாலா கதாப்பாத்திரம் அமைதியான வலிமையும் கருணையும் கொண்ட கதாபாத்திரம். இவ்வளவு கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கதையின் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு பெருமை. இந்த வேடத்தில் என்னை நம்பிய சுதா மேடம் மற்றும் முழு குழுவுக்கும் என் நன்றி,” என்றார்.
எதிர்ப்பு, சகோதரத்துவம் மற்றும் அடையாளத்தின் அரசியல் ஆகியவற்றை தீவிரமாக பேசும் பராசக்தி திரைப்படத்தை, பிப்ரவரி 7 முதல் ZEE5 தளத்தில் காணலாம்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













