சற்று முன்
சினிமா செய்திகள்
ஜோக்கர் படத்தை பாராட்டிய தொல்.திருமாவளவன்
Updated on : 18 August 2016
குக்கூ படத்தை இயக்கிய ராஜு முருகன் இயக்கியுள்ள "ஜோக்கர்" திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு, ரசிகர்களின் பேராதரவால் திரையிடப்படும் திரையரங்குகளும், காட்சிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சிறப்பு காட்சியாக, ராஜூமுருகன் மற்றும் பாடலாசிரியர் யுகபாரதியுடன் ஜோக்கர் படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பார்த்து பாராட்டியுள்ளார்.
ஜோக்கர் படம் குறித்து தொல்.திருமாவளவன் கூறியதாவது: "ஜோக்கர் என்னும் இந்த சிறந்த படைப்பை இளம் இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நாயகியை காதலிக்கும் நாயகனின் வீட்டில் கழிப்பறை வசதி இருக்கிறதா என்று அந்த நாயகி ஆய்வு செய்கிறாள். அதன் அடிப்படையில் தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். இந்தியாவில் எத்தனை கோடி மக்கள் கிராமப்புறங்களில் கழிப்பறை வசதி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்று நாம் இதில் பார்க்கிறோம். ஆண்கள் இதை எப்படியோ சமாளித்து கொள்கிறார்கள். பெண்கள் இதை வேதனையாகவே, வலியாகவே ஏற்றுகொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு அவலத்தை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கிலும், இதற்காக அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் அதிலும் ஊழல் நடைபெறுகிறது என்று அதை சுட்டிக்காட்டி அந்த ஊழலையும் உடைத்தெறிய வேண்டும் என்றும் இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார்.
இதிலே கதாநாயகனாக வருகிற குரு சோம சுந்தரம் சராசரி மனிதனாக இல்லாமல் மனநலம் பாத்திக்கப்பட்ட மனிதன் போல் நடந்து கொள்கிறார். இது தான் இப்படத்தின் மிக முக்கிய அம்சமாகும். மனநலம் பாதிக்கப்படவனாக அல்லது பிறரால் இவன் ஒரு ஜோக்கர் என்று பார்க்ககூடிய வகையில் அந்த கதாபாத்திரத்தை படைத்திருப்பது தான் இயக்குநர் ராஜு முருகன் அவர்களின் செயல் தந்திரம். அப்படி ஒரு கதாபாத்திரத்தை அமைத்ததால் தான் அவரால் இப்படி ஒரு செய்தியை பேச முடிந்தது. அரசாங்கத்தை, அரசாங்க செயல்பாடுகளையும் அதனால் விளைகிற ஊழல் போன்ற தீங்குகளையும் மிகத் துணிச்சலாக இதிலே பேசி இருக்கிறார்.
ராஜு முருகனின் தந்திரத்தை நாம் நெஞ்சார பாராட்ட வேண்டும். அவருடைய அந்த யுக்தி பாராட்டுதலுக்குரியது. ஒரு ஜோக்கரின் மூலம் பல செய்திகளை இயக்குநர் கூறுகிறார். அவர் தன்னை தானே ஜனாதிபதி என்று கூறுவதும், அவர் இராணுவ ஆட்சியை இங்கே அமல்படுத்துவதாக அறிவித்து கொள்வதும் அதன் அடிப்படையில் அவர் செய்கிற வேலைகள் எல்லாம் இந்த சமூகத்தில் தேவையாக உள்ளன. இப்படிப்பட்ட போராட்டம் தேவையாக உள்ளது.
ஆனால் அவர்கள் ஒரு தனி கட்சியாக ஒரு மாபெரும் அமைப்பாக இருந்து போராடாமல் உதிரியாக இருந்து ஓரிருவர் போராடுவதாக இந்த படம் விரிகிறது. அகவே தனி நபராக இருந்து எவ்வளவு பெரிய விஷயத்துக்காக போராடினாலும் அது நகைப்புக்கூரியதாக பார்க்கப்படும் என்று இப்படம் சொல்லுகிறது.
எனவே மக்கள் போர் குணத்தோடு இருந்தால் போதாது ஒரு அமைப்பாக திரள வேண்டும். அமைப்பாக திரண்டால் தான் சமூகத்தில் நடைபெறுகின்ற அனைத்து சீர்கேடுகளையும் சரி செய்வதற்கு, மக்களை நல்வழிப்படுத்துவதற்கு, நெறிபடுத்துவதற்கு முடியும். அமைப்பால் மட்டும் தான் மாற்றங்களை கொண்டு வர முடியும். இயக்குநருக்கு மிகச்சிறந்த அரசியல் புரிதலும், தொலைநோக்கு பார்வையும், சமூக சிந்தனையும், மக்கள் நலனும் இருக்கிறது என்பதை இப்படத்தின் மூலமாக பதிவு செய்துள்ளார்.
இந்த இளம் இயக்குநர் இன்னும் பல மகத்தான சாதனைகளை படைக்க வேண்டும். ‘ஜோக்கர்’ செய்திகளை பேசும் ஒரு படம். இந்த படம் ஒரு மௌன புரட்சியை செய்து கொண்டு இருக்கிறது. மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படம் சமூக தளத்தில், அரசியல் தளத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. வாழ்க இளம் இயக்குநர் ராஜு முருகன் மற்றும் அவரோடு கைகோர்த்து களமாடிய அனைத்து கலைஞர்களும்" என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகள்
- உலக செய்திகள்
- |
- சினிமா