சற்று முன்
சினிமா செய்திகள்
மலையாள திரைஉலகில் அடியெடுத்து வைக்கும் சுபாஸ்கரனின் 'லைக்கா நிறுவனம்'
Updated on : 30 September 2023
மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் பொருட் செலவில் ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் ஆகியோர் இணைந்து 'எம்புரான்' எனும் பெயரில் புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் நடிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 'லூசிபர்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தின் அடுத்த பாகம் குறித்த எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் இருந்தது.
இந்நிலையில் இந்திய திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம்- மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் தயாராகும் ' எம்புரான் ' எனும் புதிய திரைப்படத்தை மலையாள திரையுலகின் பாரம்பரியமிக்க பட தயாரிப்பு நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. 'எம்புரான்' என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
ஜி.கே.எம் தமிழ் குமரன் லைக்காவின் தலைமை பொறுப்பு வகிக்க இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்கிறார்.
சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் ஃபயஸ் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.
ஆசீர்வாத் சினிமாஸ் ஆண்டனி பெரும்பாவூர் - லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் - மோகன் லால் - பிருத்விராஜ் சுகுமாறன் என முன்னணி திரை ஆளுமைகளின் கூட்டணியில் தயாராகும் 'எம்புரான்' திரைப்படத்திற்கு, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
சமீபத்திய செய்திகள்
ரூ.50 கோடி வசூல் – 480 திரைகளில் வெற்றிகரமாக ஓடும் ‘தாய் கிழவி’
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றி விழா நிகழ்வு இன்று நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் கலையரசு பேசியதாவது,
“படத்தின் ரஷ்ஷஸ் பார்த்தபோதே வெற்றி விழா கொண்டாட்டத்தை எங்கு நடத்த வேண்டும் என்று யோசித்தேன். படத்தில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. குறிப்பாக படத்தை தயாரித்த சிவாவுக்கும் படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்ற ராதிகா மேமுக்கும் நன்றி! படத்தின் ரிலீஸ்க்கு முன்பு 250 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டோம். ஆனால் படத்திற்கு வந்த வரவேற்பை அடுத்து கிடைத்தட்ட 340 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பின்பு, ரிலீஸ் ஆனதும் முதல் நாள் கிடைத்த வரவேற்பை அடுத்து இப்போது 480 திரைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. புக் மை ஷோவில் மட்டும் 825K புக்கிங் ஆகியிக்கிறது. ஒரு மில்லியன் நிச்சயம் தாண்டும் என ஏஜிஎஸ் தெரிவித்துள்ளது. படம் ரூ. 50 கோடி வசூலித்துள்ளது. தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி இந்த படத்திற்காக இறங்கி வேலை பார்த்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படத்தின் மீது நம்பிக்கை வைத்த ரசிகர்களுக்கும் நன்றி" என்றார்.
ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார்,
"குடும்பம், கடவுள், இயற்கை என இவர்கள் ஆதரவால்தான் இந்தப் படத்தை உங்களுக்கு கொடுக்க முடிந்தது. எஸ்.கே. சார், நடிகர்கள் மற்றும் என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நன்றி. நல்ல படத்தை கொண்டாடிய உங்கள் அனைவருக்கும் நன்றி”.
எடிட்டர் சான் லோகேஷ்,
"வியாபார ரீதியாகவும் மக்களுக்கு பிடித்த படமாகவும் இது மாறியிருக்கிறது. மிகுந்த அர்ப்பணிப்போடும் எனர்ஜியாகவும் நாங்கள் பணியாற்றினோம். என்னுடைய அணிக்கும் நன்றி. நான் சிறுவயதில் முதன் முறையாக திரையரங்குகளில் பார்த்த படம் ‘கிழக்கு சீமையிலே’. இப்போது, ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா மேமுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. நிறைய நல்ல நினைவுகளை இந்தப் படம் கொடுத்திருக்கிறது”.
கலை இயக்குநர் ராமு தங்கராஜ்,
"நான் வேலை பார்த்ததில் இந்தப் படம் புது அனுபவமாக இருந்தது. மக்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி”.
பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ்,
”சிவகார்த்திகேயனை யாராவது அன்புடன் அணுகினால் அவர் யாரையும் கைவிட மாட்டார் என்பதை உணர்ந்துள்ளேன். எங்களைப் போன்ற எளிய பிள்ளைகளுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இயக்குநர் சிவாவுக்கும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவுக்கும் நன்றி. படத்தின் தொழில்நுட்பக்குழுவினருக்கும் அன்பும் நன்றியும்”.
பாடலாசிரியர் கருமாத்தூர் மணிமாறன்,
“’தாய் கிழவி’ படத்தின் வெற்றியை தீபாவளி கொண்டாட்டமாக கொண்டாடி வருகிறேன். இன்னும் பல படங்களை தயாரிப்பாளர் சிவாவும் இயக்குநர் சிவாவும் தர வாழ்த்துக்கள்”.
நடிகர் முனீஷ்காந்த்,
“ராதிகா மேமின் ‘கிழக்கு சீமையிலே’ படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தவன் இன்று அவரது படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் சிவா வெற்றியடைந்திருக்கிறார். இந்தப் படத்தில் புதுமுகங்கள் என பலரது வாழ்க்கை அடங்கி இருக்கிறது. அனைவரையும் ஒருங்கிணைத்து படத்தை வெற்றிகரமாகக் கொண்டு வந்த இயக்குநர் சிவாவுக்கும் நன்றி. என் கரியரில் முக்கியமான படம் இது”.
நடிகர் ஜார்ஜ் மரியான்,
“இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கும் ராதிகா மேமுக்கும் அனைத்து நடிகர்களுக்கும் நன்றி”.
நடிகர் முத்துக்குமார்,
“என்னை இந்த கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்த இயக்குநர் சிவாவுக்கும் தயாரிப்பாளர் சிவாவுக்கும் நன்றி. என்னை இந்த கதாபாத்திரம் வேறு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. ’தாய் கிழவி’ படத்தில் அனைத்து கனிகளும் பழுத்திருக்கிறது. அதற்கு காரணமான இரண்டு சிவாக்களுக்கும் நன்றி”.
நடிகை ரேச்சல்,
“தியேட்டரில் நிறைய பெண்கள் இந்தப் படத்தைப் பார்த்து அழுது, கொண்டாடி இருக்கிறார்கள். இது அடிக்கடி நடக்காது. அப்படியான படத்தில் நானும் ஒரு பங்கு என்பதை நினைத்து மகிழ்கிறேன். இதற்கு காரணமான தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் சிவாவுக்கும் நன்றி. ‘தாய் கிழவி’ படத்தில் என் சுருளி கதாபாத்திரம் எனக்கு மிகப்பெரிய தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்திருக்கிறது. எல்லா கதாபாத்திரங்களிலும் இது கிடைக்குமா என தெரியாது. படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி”.
நடிகர் சிங்கம்புலி,
“படத்தை வெற்றிப் படமாக்கிய தம்பி சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் தம்பி சிவகுமாருக்கும் படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘மகாராஜா’ படங்களுக்குப் பிறகு ’தாய் கிழவி’ படத்தில் இந்த கதாபாத்திரத்திற்குதான் எனக்கு அதிக ஃபோன்கால் வந்தது. படம் வெளியாவதற்கு முன்பு கமல் சாரை பார்க்க வேண்டும் என்ற ஆசையை மேடையில் வெளிப்படுத்தியிருந்தேன். இரண்டு நாட்களில் கமல் சார் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவ்வளவு பிஸி ஷெட்யூலிலும் எனக்கு நேரம் ஒதுக்கி கமல் சார் என்னிடம் பேசினார். நன்றி”.
நடிகர் அருள்தாஸ்,
“’தாய் கிழவி’ படம் ஆரம்பித்ததில் இருந்து இதுநாள் வரை உழைத்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. இளைஞர்கள் இந்தப் படம் பார்த்துவிட்டு வீட்டில் இருக்கும் தங்கள் பாட்டியையும் கூட்டி வந்தார்கள். அப்படியான டிரெண்ட் செட்டர் படம் இந்த ‘தாய் கிழவி’. எளிய மக்களின் குரலாக எனக்கு இந்தப் படத்தில் அமைந்த கதாபாத்திரம் பலருக்கும் பிடித்திருந்தது. இந்தியில் ஒரு வயதுக்கு பிறகு அமிதாப் எப்படி வேறு ஒரு கோணத்தில் பயணித்தாரோ அதுபோலதான் ராதிகா மேம் நீங்களும். உங்களை லேடி அமிதாப் எனலாம்”.
நடிகர் பால சரவணன்,
“ரொம்ப வருடங்கள் கழித்து இந்த படத்தை பார்த்த பாட்டி ஒருவர் அந்த வயதிற்கு மேல் தைரியமாகவும் வாழ்க்கையை கொண்டாடப் போவதாகவும் சொன்னார். அது நெகிழ்ச்சியாக இருந்தது. செல்வம் கதாபாத்திரம் மூலம் என்னையும் உணர்வுப்பூர்வமாக நடிக்க வைத்த இயக்குநர் சிவாவுக்கு நன்றி. எனக்கு சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி”.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா,
“எல்லோருடைய முகத்திலும் சந்தோஷமும் நிம்மதியும் பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் ‘தாய் கிழவி’ வெற்றிதான். பேஷன் ஸ்டுடியோஸ், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், இயக்குநர் சிவகுமார். என்னுடைய டீம் மற்றும் அனைவருக்கும் நன்றி”.
இயக்குநர் சிவகுமார் முருகேசன்,
“இந்தப் படத்தை நம்பி வாய்ப்பு கொடுத்த சிவகார்த்திகேயன் சார், சுதன் சார் அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர் அணிக்கும் கிரியேடிவ் அணிக்கும் கோல்ட் வார் என்பது நிச்சயம் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் எங்களுக்கு அதுபோன்ற எந்தவொரு பிரச்சினையும் வரவில்லை. அதற்கு காரணம் எங்களைப் போலவே தயாரிப்பாளர் ஆர்வத்துடன் இந்தப் படத்தை எதிர்பார்த்து உழைத்தார்கள். என்னுடைய குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் நன்றி. என்னுடைய தயாரிப்பாளர், ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு நன்றி. என்னுடன் சேர்ந்து ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸை அவ்வளவு ஆர்வமுடன் கவனித்தார். நான் ‘விருமாண்டி’ படம் பார்த்துதான் சினிமாவுக்கு வந்தேன். எங்கோ இருந்து கமல் சாரை பார்த்துக் கொண்டிருந்த எங்களை இப்போது அவருடனேயே பணிபுரிய வைத்த சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி”.
நடிகை ராதிகா பேசியதாவது,
“உண்மையான வெற்றியைக் கொண்டாட பெருமையாக இந்த மேடையில் நிற்கிறேன். சினிமாவின் நெளிவு சுழிவுகளை பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ஆனால், எந்த விஷயத்தையும் சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டேன். இந்தப் படத்தின் டிக்கெட் 150 ரூபாய்க்கு விற்று ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது. ஆனால், சில பெரிய ஹீரோக்களின் படங்கள் ரூ. 1500- ரூ. 2000க்கு டிக்கெட் விற்று பெறும் கலெக்ஷனை விட ‘தாய் கிழவி’ வசூல் பெரியது என்பேன். தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் அப்டேட்டடாக இருக்கிறார். படம் பார்த்துவிட்டு கமல்ஹாசன் அவர்கள் என்னிடம் சொன்னார், “ராதிகா இந்தப் படம் நிச்சயம் ஜெயிக்க வேண்டும். ஏனெனில், ராதிகா நல்ல நடிகை, சினிமாவில் ஜெயித்துவிட்டார். அதுபோல இயக்குநர் சிவகுமார், தொழில்நுட்பக்குழுவினர், புதுமுக நடிகர்கள் என அனைவரும் ஜெயிக்க வேண்டும். அதற்காக இந்தப் படம் ஜெயிக்க வேண்டும்” என்றார். அது நடந்துவிட்டது.
ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு இயக்குநர் சினிமாவை மாற்றுவார். அதுபோல, இப்போது சிவகுமாரின் காலம். இயக்குநர் பாரதிராஜா சினிமாவில் புரட்சி செய்ததை போல, சிவகுமாரும் செய்வார். ஒவ்வொரு கேரக்டரையும் அழகாக கொண்டு போய் சேர்த்துள்ளார். ஒவ்வொரு கதாநாயகிக்கும் அடுத்த படம் என்ன என்ற ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். வயதையும் அழகையும் அடுத்தவர்களுக்கு நாம் நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? தேவையில்லை. நம்மை நமக்கு தெரிந்தால் போதும். பெண்களுக்கான வெற்றியாக ‘தாய் கிழவி’ படத்தைப் பார்க்கிறேன். கதைதான் இங்கு கிங். பெண்களின் குரலை கேட்கும் ஆண்கள் இருக்கும்வரை இந்த சமுதாயம் என்றும் கெடாது. தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஹீரோயினுக்கு லாபத்தில் பங்கு உண்டு என்று தயாரிப்பாளர்கள் சிவாவும் சுதனும் சொன்னார்கள். அந்த பெருமை எனக்கு உண்டு. சினிமாவில் இது நல்ல முன்னுதாரணம். நடிகைகள் சார்பாக நன்றி சொல்கிறேன். இந்த மகிழ்ச்சி பணத்திற்காக இல்லை, நம்பிக்கைக்காகதான். படத்தில் மட்டும் கருத்து சொல்லாமல் அதை நிஜத்திலும் செய்திருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் அவர்களும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இந்தப் படத்திற்கு வரிச்சலுகை தரவேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறேன். இதனால், இன்னும் நிறைய பெண்கள் இந்தப் படம் பார்ப்பார்கள்” என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன், “இந்தப் படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தின் கதை சிவகுமார் முருகேசன் சொல்லும்போது சிரித்து மகிழ்ந்தேன். ஆனாலும், தாய் கிழவி ஞாயிற்றுக்கிழமை ஆனால் மதுரைக்கு போய்வருவார். அதைப்பற்றி எல்லோரும் கேள்வி கேட்பார்கள். எனக்கும் அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது. அதற்கான பதில் தெரிந்ததும் படம் நிச்சயம் வெற்றி பெறும், இந்தப் படத்தை தயாரித்தே ஆகவேண்டும் என முடிவெடுத்தேன். நான் ரசித்த எமோஷனலான விஷயங்களை ரசிகர்களும் கைத்தட்டி வரவேற்றது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்குள் இருந்த ரசிகன் சரியாக இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன். இந்தப் படத்தை என் குழந்தை போலதான் பார்த்துக் கொண்டேன். சினிமாத்துறையில் தனக்கு இருந்த அனுபவம், வலி இவை எல்லாவற்றையும் சேர்த்துதான் இந்த கதாபாத்திரத்திற்கு ராதிகா மேம் உயிர் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோ இல்லை என்ற உணர்வே எனக்கு வரவில்லை. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என் வாழ்க்கையில் நிறைய பேரை நியாபகப்படுத்துவதற்காக செய்யப்பட்ட படம்தான் இது. முதலில் என் அம்மா. அப்பா இறந்தபிறகு வீட்டில் காசு சேர்த்துவைத்து என்னையும் அக்காவையும் படிக்க வைத்து கல்யாணம் செய்து வைத்து ஆளாக்கினார். பிறகு என் அக்கா. ’படைக்க, காக்க, அழிக்க என ஆண்களை கடவுளாக காட்டியவன், படிப்புக்கும் பணத்துக்கும் பொம்பளையைதான் காட்டி கும்பிட சொன்னான்’ என படத்தில் ஒரு வசனம் வரும். அதை நான் முன்பே உணர்ந்துவிட்டேன் என நினைக்கிறேன். இதுநாள் வரை என் வரவு, செலவு அனைத்தையும் ஆர்த்தி தான் பார்த்துக் கொள்கிறார். அவர் இல்லை என்றால் புரொடக்ஷன் எல்லாம் நான் செய்திருக்க முடியாது. இவர்கள் எல்லாரும்தான் என் பவுனுத்தாயி. இதுபோல, உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பவுனுத்தாயிகளுக்கும்தான் இந்தப் படம்.
இந்தப் படத்தை மொத்தம் 12 முறை பார்த்திருக்கிறேன். என் படத்தைக் கூட அத்தனை முறை பார்த்ததில்லை. நிறைய விஷயங்கள் இந்தப் படத்தில் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தின் ப்ரீமியர் முடிந்ததும் இயக்குநர் சிவகுமாரின் அப்பா வந்து எங்கள் இரண்டு பேரையும் கட்டிப்பிடித்துக் கொண்டார். அந்த நொடியில் என் அப்பா இன்னும் இறக்கவில்லை என்பதை உணர்ந்தேன். இதெல்லாம்தான் எனக்கு நிறைவை கொடுக்கிறது. வெற்றி என்பது விளையாட்டில் கூட விளையாட்டாக வராது என்பதை இந்த படக்குழு மீண்டும் உணர்த்தியிருக்கிறது. அடுத்து ‘சேயோன்’ படமும் சிவாவுடன் தான். ’தாய் கிழவி’ படத்தின் லாபம் நிச்சயம் தேவைப்படுபவர்களுக்கு உதவும். எஸ்.கே. புரொடக்ஷன்ஸின் பத்தாவது படத்தை புதுமுக இயக்குநர்தான் இயக்குகிறார். அவர் பெயர் அம்மாமுத்து சூர்யா. மற்றபடி, படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.
டார்க் சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் ‘மண்டவெட்டி’ – படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு
டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் பேனரின் கீழ் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி தயாரித்துள்ள ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடிகை கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் தீவிரமான கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டதால் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்பு காரணமாக தற்போது படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
‘மண்டவெட்டி’ திரைப்படம் டார்க், சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் வகையில் உருவாகியுள்ளது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் ஆகிய அம்சங்களை மையமாகக் கொண்டு, ஒரு பெண்ணின் உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் அதன் பின்னாலுள்ள மர்மத்தையும் பரபரப்பான களத்தில் இந்தப் படம் பேசுகிறது.
கதையின் தேவைக்கேற்ப, படத்தின் சுமார் 80 சதவீத காட்சிகள் வெளிப்புற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. கதையின் இயல்பை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக முழு படப்பிடிப்பும் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. கடும் வெப்பம் மற்றும் குளிர் உள்ளிட்ட பல சவால்களை கடந்து, தினமும் சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்து படக்குழு படப்பிடிப்பு தளத்தை சென்றடைந்துள்ளது. முள் நிறைந்த கடினமான நிலப்பரப்பும் கடும் வெயிலும் சவாலாக இருந்தாலும், அவை கதைக்கு கூடுதல் வலிமையை அளித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பல கிராம மக்கள் இந்தத் திரைப்படத்தில் முதன்முறையாக நடித்திருப்பது கதையின் உண்மைத்தன்மையை மேலும் உயர்த்தியுள்ளது. அவர்களின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் படக்குழுவிற்கு கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிராம மயானத்தில் முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கியது படக்குழுவிற்கு சவாலான அனுபவமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், கதையில் முக்கிய அங்கமாக வரும் கற்பனையான உள்ளூர் தெய்வ கதாபாத்திரமான ‘செஞ்சி’ ஆன்மிக அம்சத்தையும் தனித்துவமான மர்மத்தையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் அந்தத் தெய்வம் தங்களை பாதுகாப்பாக வழிநடத்தியதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தற்போது ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வலுவான கதை மற்றும் அர்ப்பணிப்புள்ள படக்குழுவுடன் இந்தப் படம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான மற்றும் ஈர்க்கக்கூடிய திரை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Insomniac’s Dream Creations தயாரிக்கும் புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பூஜையுடன் தொடங்கியது!
‘இறுதிப்பக்கம்’ மற்றும் ‘டியர் ரதி’ ஆகிய கவனிக்கத்தக்க திரைப்படங்களைத் New!Click to editதொடர்ந்து, Insomniac’s Dream Creations நிறுவனம் தனது மூன்றாவது தயாரிப்பான (Production No.3) புதிய படத்தை பிரம்மாண்டமான பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
முன்னதாக ‘இறுதிப்பக்கம்’ திரைப்படத்தின் மூலம் சுவாரஸ்யமான மர்டர் மிஸ்டரி கதையை திரையில் கொண்டுவந்த இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், இந்தப் புதிய படத்தின் மூலம் மீண்டும் திரில்லர் பாணிக்குத் திரும்பியுள்ளார். ஆனால் இது வழக்கமான திரில்லர் கதை அல்ல. தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய தளத்தில் அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு முற்றிலும் புதுவிதமான அனுபவத்தை தரும் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகவுள்ளது.
இந்தப் படத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘குமார சம்பவம்’ புகழ் குமரன் தங்கராஜன், ஸ்மேகா மற்றும் ராஜேஷ் பாலசந்திரன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் அபிஷேக் ஜோசப் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க எமோஷனல் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்ட இந்தக் கதையின் நிகழ்வுகள் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சுற்றியே நடைபெறுகின்றன. இதனால், அந்தப் பகுதிகளின் இயல்பான சூழலை உணர்த்தும் வகையில் படப்பிடிப்பையும் அங்கிருந்தே நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்திற்கு லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் பாண்டியன் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இசையை ஜோன்ஸ் ரூபர்ட் அமைக்கிறார். படத்தில் இணையும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.
மகளிர் தினத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ நயன்தாரா கேரக்டர் போஸ்டர்!
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் மிகப்பெரிய மல்டி ஸ்டார்ரர் திரைப்படமான ‘பேட்ரியாட்’ படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர், மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் நேற்று காலை 10 மணி முதல் ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் வெளியிடப்பட்டன. அதில் நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது.
இந்த படத்தில் நயன்தாரா வலுவான மற்றும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரேவதி, கிரேஸ் ஆண்டனி, கீதீ சங்கீதா, ஸ்ரீ பார்வதி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் செரின் ஷிஹாப் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் மகளிர் தினத்தில் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.
முன்னதாக வெளியான செகண்ட் லுக் போஸ்டரில் மம்முட்டி, மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் மாஸ் ஆக்ஷன் தோற்றத்தில் இடம்பெற்றிருந்தனர். அந்த காட்சிகளின் பின்னணி (BTS) வீடியோவும் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த ஸ்பை த்ரில்லர் திரைப்படத்தில் மம்முட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா மற்றும் ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் 2026 ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படம் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, அசர்பைஜான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் 18 ஆண்டுகளுக்கு பிறகு மம்முட்டி மற்றும் மோகன்லால் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிப்பதும், அதில் நயன்தாரா இணைந்திருப்பதும் படத்தின் முக்கிய சிறப்பாகக் கருதப்படுகிறது.
இந்த திரைப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளதுடன், ஒளிப்பதிவை மனுஷ் நந்தன் மேற்கொண்டுள்ளார். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி மற்றும் கிச்சப்பு பிலிம்ஸ் நிறுவனங்களின் சார்பில் ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இந்த படம், மலையாள சினிமாவில் சர்வதேச தரத்தில் உருவாகும் மிகப்பெரிய ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது.
‘காளிதாஸ் 2’ ஏப்ரல் 3 வெளியீடு… பரத் நடிக்கும் திரில்லர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் எதிர்பாராத கிளைமாக்ஸ் மூலம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தை இயக்கி பாராட்டுகளை பெற்ற இயக்குநர் ஸ்ரீ செந்தில், இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். நடிகர் பரத் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் அஜய் கார்த்தி நடித்துள்ளார். ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை சங்கீதா, நீண்ட இடைவேளைக்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர்களுடன் பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணதி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகளும் அதிரடியும் கலந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான போஸ்டரில் நடிகர்களின் தோற்றம், படம் ஒரு விறுவிறுப்பான திரில்லர் அனுபவத்தை வழங்கும் என்பதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளதுடன், புரொடக்ஷன் டிசைனை G. துரைராஜ் கவனித்துள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த திரைப்படத்தை SKY PICTURES நிறுவனம் சார்பில் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் K. செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இவர்களது வெளியீட்டில் ‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’ போன்ற வெற்றி படங்கள் வெளியானதால், ‘காளிதாஸ் 2’ திரைப்படத்திற்கும் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள இந்த திரைப்படம், கோடை விடுமுறை ஆரம்பத்தில் வெளியாகவுள்ளதால் திரில்லர் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்குமார் – கயல் ஆனந்தி இணையும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘அறிவு’. கழுகு திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இப்படத்தை இயக்குகிறார். உறியடி படத்தின் மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி இப்படத்தில் நாயகன்–நாயகியாக இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.
Movietron Production நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், பெண் உரிமைகளை மையமாகக் கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் உருவாக உள்ளது. சமூக அக்கறையும் விறுவிறுப்பும் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் I.M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதையும், திரைக்கதையும் எழுதி இயக்கும் சத்யசிவா, சமூக கருத்துகளை விறுவிறுப்பான சினிமா மொழியில் சொல்லும் திறமையால் அறியப்பட்டவர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் D. இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை தில் ராஜு மேற்கொள்ள, படத்தொகுப்பை வெற்றி கிருஷ்ணன் கவனிக்கிறார். கலை இயக்குநராக S.K. பணியாற்ற, கிரியேட்டிவ் ஹெட்டாக ராமு M. செயல்படுகிறார். இணை தயாரிப்பாளராக சாய்பிரபு ஜெயக்குமார் உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இடுக்கி, தேனி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. இயற்கை அழகும் நகர வாழ்க்கையின் நிஜங்களும் இணையும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சமூகப் பொறுப்புணர்வும் விறுவிறுப்பும் இணையும் இந்த திரைப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!
'முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பத்திரிகையாளர்களுக்கான திரையிடல் மற்றும் சிறப்பு திரையிடல்களில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தை பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் படத்தை Sakthi Film Factory நிறுவனம் சார்பில் சக்திவேலன் பி வெளியிடுகிறார். மாநிலம் முழுவதும் 150-க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் பகிர்ந்து கொண்டதாவது,
“ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் உருவாகியுள்ள ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் அதிகளவில் பார்வையாளர்களை சென்றடைவது மிகவும் முக்கியம். அதற்கு அனுபவம்மிக்க விநியோகஸ்தர்களின் ஆதரவு அவசியம். சக்திவேலன் சார் போன்ற முன்னணி விநியோகஸ்தர்களின் ஆதரவு கிடைப்பது எந்த திரைப்பட இயக்குநரும் விரும்பும் விஷயம். சக்தி பிலிம் பேக்டரி பல தனித்துவமான கதைக்களம் கொண்ட, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய திரைப்படங்களை தொடர்ந்து ஊக்குவித்து, அவற்றை தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. எங்கள் திரைப்படத்தை வெளியிட அவர் முன்வந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. அவருடைய ஆதரவு ’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படத்தை மேலும் பல பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி பகிர்ந்து கொண்டதாவது,
“’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக, முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் பல தருணங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. படத்தின் திரைக்கதை பார்வையாளர்களை கட்டிப்போடும் விதமாக அமைந்துள்ளது என என்னுடன் படம் பார்த்தவர்களும் ரசித்து பாராட்டினர். முழு அணியும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தப் படத்திற்காக உழைத்துள்ளது. இந்த படம் திரையரங்குகளில் பார்வையாளர்களை நிச்சயம் மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.
’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் மார்ச் 6, 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!
இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில், Rise East Entertainment சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் மார்ச் 12 முதல் Netflix தளத்தில் ப்ரீமியராகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டு அனுபவங்களை பகிர்ந்தனர்.
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர்,
“கொரியாவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது. ஒரு பெண்ணின் கனவு நனவாவதை பற்றி உணர்வுப்பூர்வமான திரைக்கதையை கார்த்திக் படமாக்கியுள்ளார். அவருடன் எனக்கு இது இரண்டாவது படம். கொரியாவில் படமாக்கும்போது சில சவால்களை சந்தித்தோம். ஆனால், அதையும் தாண்டி நடிகர்களின் நடிப்பு, படமாக்கப்பட்ட சூழல் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது.
பிரியங்கா மோகனின் பக்கத்துவீட்டு பெண் போன்ற எளிய தோற்றமே அவரை இந்த கதைக்குள் கொண்டு வந்தது. தமிழ்நாடு மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி ரசிகர்களுக்கும் பிரியங்கா பரிச்சியம் என்பதும் அவரை நாங்கள் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம். உங்களுக்கு ஒரு கனவு இருந்தால் அதற்காக கடுமையான உழைப்பை கொடுத்தால் நிச்சயம் அது ஒருநாள் நிறைவேறும் என்பதுதான் இதில் சொல்லியிருக்கிறோம்” என்றார்.
இயக்குநர் கார்த்திக், “என்னுடைய முதல் படமான ‘நித்தம் ஒரு வானம்’ படத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. ’மேட் இன் கொரியா’ என்னுடைய இரண்டாவது படம். சரியான திட்டமிடுதல் இல்லை என்றால் கொரியாவில் படமாக்குவது கஷ்டம். இது நான் அங்கு கற்றுக்கொண்ட பெரிய விஷயம். திரையரங்குகளை விட நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘நித்தம் ஒரு வானம்’ படம் வெளியானபோது இன்னும் அதிக ரசிகர்கள் பார்த்துவிட்டு வாழ்த்தினார்கள். திரைத்துறையிலும் எனக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது.
அதனால், நெட்ஃபிலிக்ஸ் உடன் அடுத்த படம் என்றதும் உடனே ஒப்புக்கொண்டு ‘மேட் இன் கொரியா’ ஆரம்பித்தேன். 13 மொழிகளில் இந்தப் படத்தை டப் செய்தும் 36 மொழிகளில் சப்டைட்டில் உடனும் நெட்ஃபிலிக்ஸ் இந்தப் படத்தை வெளியிடுவதால் அதிக ரீச் கிடைக்கும். அதனால், ஓடிடியில் நேரடியாக இந்தப் படம் வெளியாவது மகிழ்ச்சி. இன்றைய தலைமுறையினர் பலரும் கே-டிராமா ரசிகர்கள். அவர்களுக்கு எல்லாம் ஒருமுறையாவது கொரியா போக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள்தான் இந்தப் படத்தின் மெயின் ஆடியன்ஸ்” என்றார்.
நடிகை பிரியங்கா மோகன் பேசியதாவது, “’மேட் இன் கொரியா’ படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால் கொரியன் டிராமா பார்ப்பது, சில வார்த்தைகள் கற்றுக் கொண்டது என தயாரானேன். இயக்குநர் கார்த்திக் கொடுத்த இன்புட்ஸூம் உதவியாக இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் அங்கு படமாக்கினோம். கணிக்க முடியாத காலநிலைதான் அங்கு பெரும் சவாலாக இருந்தது. காலையில் படப்பிடிப்பிற்கு செண்பாவாக சென்று மாலையில் செண்பாவாக திரும்புவேன்.
நாங்கள் அங்கு சென்று கொரிய வார்த்தைகள் நிறைய கற்றுக்கொண்டது போல, ‘தளபதி’ படத்தின் சுந்தரி பாடலையும் நிறைய தமிழ் வார்த்தைகளையும் அங்குள்ளவர்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறோம். இயக்குநரின் மனைவி கொரியன் டிராமா ரசிகை. அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார். செண்பா தன்னை யார் என்று கண்டுபிடிப்பதுதான் ‘மேட் இன் கொரியா’” என்றார்.
ரசிகர்களை கவர்ந்த ஆக்ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!
நடிகர் லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்குவில் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் படக்குழுவினரும் ரசிகர்களும் கலந்து கொண்டனர். வெளியான டீசர் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை Legend Saravana Stores Productions பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம்பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடகங்களில் பாராட்டுகளையும் குவித்துள்ளது. டீசர் வெளியானதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார்,
"அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிப் பயணம் தான் லீடர். தனது மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஒரு தந்தையை சுற்றி கதை சுழல்கிறது. இன்றைய பார்வையாளர்களை மனதில் கொண்டு, சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிபூர்வமான படமாக இதை உருவாக்கி உள்ளோம். டீசர் ஒரு சாம்பிள் மட்டுமே; படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. முதல் பார்வை மற்றும் கிளிம்ப்சுக்கு கிடைத்த அமோக வரவேற்பளித்த ரசிகர்கள் டீசரையும் பாராட்டி வருகிறார்கள், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 'லீடர்' அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்," என்றார்.
இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர் மற்றும் VTV கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக எஸ். வெங்கடேஷ் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பை பிரதீப் இ. ராகவ் மேற்கொண்டுள்ள நிலையில், சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ வடிவமைத்துள்ளார்.
தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்ட ‘லீடர்’ திரைப்படம் ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக உருவாகி, வரும் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான Amazon Prime Video தனது தமிழ் ஒரிஜினல் காமெடி–டிராமா தொடர் ‘லோக்கல் டைம்ஸ்’ சீரிஸின் உலகளாவிய வெளியீட்டை அறிவித்துள்ளது. மார்ச் 13 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த சீரிஸ் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த தொடர், வேகமாக மாறிவரும் டிஜிட்டல் செய்தி சூழலில் தன் மரபை காக்கப் போராடும் ஒரு உள்ளூர் வார இதழை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. Anekdotes உருவாக்கியுள்ள இந்த தொடரை நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கியுள்ளார். Fanboy Production நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார்.
இந்த சீரிஸில் ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடரை பிரவீன் முத்துரங்கன் எழுதியுள்ளார். மேலும் அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே, தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி இணைந்து இந்த சீரிஸை உருவாக்கியுள்ளனர்.
‘லோக்கல் டைம்ஸ்’ கதை, ஏழ்மையில் இருந்தாலும் அளவற்ற நம்பிக்கையுடன் வாழும் நான்கு நண்பர்கள் – வீரா, அழகு, வள்ளி மற்றும் முத்து – ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி நகர்கிறது. வீராவின் தாத்தாவுக்கு சொந்தமான ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ‘நம்ம செய்தி’ என்ற உள்ளூர் பத்திரிகையை காப்பாற்ற நால்வரும் முயற்சி செய்கிறார்கள். அவர்களின் குழப்பமான வாழ்க்கை, நகைச்சுவையான சாகசங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அவர்களை வீழ்த்த முயலும் ஒரு வலுவான எதிரி ஆகியவற்றைச் சுற்றியே இந்த தொடரின் கதை நகர்கிறது.
பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் நிகில் மதோக் கூறுகையில்..,
“லோக்கல் டைம்ஸ் என்பது உணர்ச்சி ரீதியாக மனதைத் தொடும் கதை. ஒரு உள்ளூர் வார இதழின் செய்தியை மையமாகக் கொண்டிருந்தாலும், இதன் மைய கருக்கள் நட்பு மற்றும் உறுதியான மனப்பாங்கு என்பதால் அவை உலகளவில் அனைவரும் உணரக்கூடியவை. திறமையான நடிகர்கள் மற்றும் படைப்பாற்றல் கொண்ட குழுவுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸ், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பார்வையாளர்களைக் கவரும் பிராந்திய கதைகளை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது,” என்றார்.
தயாரிப்பாளர் ஜித்தின் துரை கூறுகையில்..,
“லோக்கல் டைம்ஸ் மூலம், நம்பிக்கையை காப்பாற்ற முயலும் சாதாரண மனிதர்களின் எளிய மற்றும் இலகுவான வாழ்க்கை கதையை சொல்ல நினைத்தோம். ஒரு உள்ளூர் பத்திரிகை அமைப்பு நமக்கு பரிச்சயமான உலகை கொடுத்தாலும், இந்த சீரிஸின் உண்மையான இதயம் இந்த நான்கு கதாபாத்திரங்களின் நட்பே. டிரெய்லர் அவர்கள் பயணத்தின் ஒரு சின்ன முன்னோட்டம் மட்டுமே. இந்த சீரிஸ் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் 'இன்ஸ்பெக்டர் ரிஷி'க்கு பிறகு பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.
படைப்பாளர்களான அபிநவ் மற்றும் பிரவீன் கூறுகையில்..,
“ஆரம்பத்திலிருந்தே தமிழ் பார்வையாளர்களுக்காக இலகுவான, மகிழ்ச்சியான ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. லோக்கல் டைம்ஸ் ஒரு எளிமையான, மனநிறைவு தரும் சீரிஸ். சிறிய அலுவலகம், பெரிய கனவுகள், மற்றும் ஈகோ மோதல்களுக்கு இடையே நடக்கும் ஒரு கலகலப்பான பயணம், இவை அனைத்தும் இதில் இடம் பெற்றுள்ளன. இது டிராமா காமெடி என இரண்டையும் இணைத்து சொல்லும், எளிமையான இதயம் தொடும் சீரிஸ். இதைப் பார்வையாளர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறோம்.
இயக்குநராக அறிமுகமாகும் நவீன் ஜார்ஜ் தாமஸ் கூறுகையில்..,
“லோக்கல் டைம்ஸ் கதை, தங்கள் கனவுகளை துரத்திக்கொண்டு நிற்கும் யாருடைய கதையாகவும் இருக்கலாம். நமது கதாநாயகர்கள் வழக்கமான ஹீரோக்கள் அல்ல, அவர்கள் குறைகளுடன் இருப்பவர்கள், பிடிவாதம் கொண்டவர்கள், சில நேரங்களில் முட்டாள்களாக கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆழமான அன்பை கொண்டவர்கள். அவர்களின் அவசர குடுக்கைத் தனம் காமெடியாக இருக்கும். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது உணர்வுப்பூர்வமாக இருக்கும். இந்த சீரிஸ் இயக்குநராக என் முதல் படைப்பு. இந்த சீரிஸ் பிரைம் வீடியோவில் வெளியாவது பெரும் மகிழ்ச்சி என்றார்.”
நட்பு, கனவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த இந்த ‘லோக்கல் டைம்ஸ்’ சீரிஸ் மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில் தமிழ் மொழியில் ஆங்கில சப் டைட்டில்களுடன் உலகம் முழுவதும் வெளியாகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













