சற்று முன்
சினிமா செய்திகள்
லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!
Updated on : 16 September 2024
பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்த முதல் திரைப்படமான 'தி லெஜெண்ட்' திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில் தனது இரண்டாவது படத்தை அவர் தொடங்கினார்.
தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'காக்கி சட்டை', 'கொடி', உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'கருடன்' திரைப்படத்தின் இயக்குநருமான ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.
புதுமையான கதைக் களத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதையோடு உருவாகும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, 'பாகுபலி' பிரபாகர், சந்தோஷ் பிரதாப், 'லியோ' புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் நடிக்க, இதர முக்கிய பாத்திரங்களில் முன்னணி நட்சத்திரங்கள் இணைய உள்ளனர்.
இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள லெஜெண்ட் சரவணனின் சொந்த ஊரான பணிக்க நாடார் குடியிருப்பில் தற்போது தொடங்கி அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. தேனியை மையமாக வைத்து துரை செந்தில்குமார் உருவாக்கிய 'கருடன்' பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தூத்துக்குடியை மையமாக வைத்து உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் பரபரப்பான ஆக்ஷன் திரில்லராக இந்த படத்தை அவர் இயக்கி வருகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டிலும், மும்பை, டில்லி உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெற உள்ளது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய பிரதீப் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கம்: துரைராஜ், நிர்வாக தயாரிப்பு: அம்பிகாபதி, உடைகள் வடிவமைப்பு: தீப்தி, புகைப்படங்கள் சுரேஷ், போஸ்டர் வடிவமைப்பு: தினேஷ், சண்டை காட்சிகள்: மேத்யூ மகேஷ், தயாரிப்பு நிர்வாகி: சின்னமனூர் சதீஷ், புரொடக்ஷன் மேலாளர்கள்: முனுசாமி, ஆர் எஸ் கோவிந்தராசு.
பிரபல தொழிலதிபர் லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தை தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்திய செய்திகள்
டார்க் சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் ‘மண்டவெட்டி’ – படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு
டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் பேனரின் கீழ் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி தயாரித்துள்ள ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடிகை கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் தீவிரமான கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டதால் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றது. நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்பு காரணமாக தற்போது படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
‘மண்டவெட்டி’ திரைப்படம் டார்க், சூப்பர்நேச்சுரல் கிரைம் திரில்லர் வகையில் உருவாகியுள்ளது. இழப்பு, அடையாளம் மற்றும் சர்வைவல் ஆகிய அம்சங்களை மையமாகக் கொண்டு, ஒரு பெண்ணின் உளவியல் மற்றும் உணர்வுப்பூர்வமான பயணத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் அதன் பின்னாலுள்ள மர்மத்தையும் பரபரப்பான களத்தில் இந்தப் படம் பேசுகிறது.
கதையின் தேவைக்கேற்ப, படத்தின் சுமார் 80 சதவீத காட்சிகள் வெளிப்புற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன. கதையின் இயல்பை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக முழு படப்பிடிப்பும் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. கடும் வெப்பம் மற்றும் குளிர் உள்ளிட்ட பல சவால்களை கடந்து, தினமும் சுமார் 100 கிலோமீட்டர் பயணம் செய்து படக்குழு படப்பிடிப்பு தளத்தை சென்றடைந்துள்ளது. முள் நிறைந்த கடினமான நிலப்பரப்பும் கடும் வெயிலும் சவாலாக இருந்தாலும், அவை கதைக்கு கூடுதல் வலிமையை அளித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பல கிராம மக்கள் இந்தத் திரைப்படத்தில் முதன்முறையாக நடித்திருப்பது கதையின் உண்மைத்தன்மையை மேலும் உயர்த்தியுள்ளது. அவர்களின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் படக்குழுவிற்கு கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கிராம மயானத்தில் முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கியது படக்குழுவிற்கு சவாலான அனுபவமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், கதையில் முக்கிய அங்கமாக வரும் கற்பனையான உள்ளூர் தெய்வ கதாபாத்திரமான ‘செஞ்சி’ ஆன்மிக அம்சத்தையும் தனித்துவமான மர்மத்தையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் அந்தத் தெய்வம் தங்களை பாதுகாப்பாக வழிநடத்தியதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தற்போது ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வலுவான கதை மற்றும் அர்ப்பணிப்புள்ள படக்குழுவுடன் இந்தப் படம் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான மற்றும் ஈர்க்கக்கூடிய திரை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Insomniac’s Dream Creations தயாரிக்கும் புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பூஜையுடன் தொடங்கியது!
‘இறுதிப்பக்கம்’ மற்றும் ‘டியர் ரதி’ ஆகிய கவனிக்கத்தக்க திரைப்படங்களைத் New!Click to editதொடர்ந்து, Insomniac’s Dream Creations நிறுவனம் தனது மூன்றாவது தயாரிப்பான (Production No.3) புதிய படத்தை பிரம்மாண்டமான பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
முன்னதாக ‘இறுதிப்பக்கம்’ திரைப்படத்தின் மூலம் சுவாரஸ்யமான மர்டர் மிஸ்டரி கதையை திரையில் கொண்டுவந்த இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், இந்தப் புதிய படத்தின் மூலம் மீண்டும் திரில்லர் பாணிக்குத் திரும்பியுள்ளார். ஆனால் இது வழக்கமான திரில்லர் கதை அல்ல. தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய தளத்தில் அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களுக்கு முற்றிலும் புதுவிதமான அனுபவத்தை தரும் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகவுள்ளது.
இந்தப் படத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘குமார சம்பவம்’ புகழ் குமரன் தங்கராஜன், ஸ்மேகா மற்றும் ராஜேஷ் பாலசந்திரன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் அபிஷேக் ஜோசப் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க எமோஷனல் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்ட இந்தக் கதையின் நிகழ்வுகள் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சுற்றியே நடைபெறுகின்றன. இதனால், அந்தப் பகுதிகளின் இயல்பான சூழலை உணர்த்தும் வகையில் படப்பிடிப்பையும் அங்கிருந்தே நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்திற்கு லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ராம் பாண்டியன் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இசையை ஜோன்ஸ் ரூபர்ட் அமைக்கிறார். படத்தில் இணையும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.
மகளிர் தினத்தில் வெளியான ‘பேட்ரியாட்’ நயன்தாரா கேரக்டர் போஸ்டர்!
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் மிகப்பெரிய மல்டி ஸ்டார்ரர் திரைப்படமான ‘பேட்ரியாட்’ படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர், மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் நேற்று காலை 10 மணி முதல் ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் வெளியிடப்பட்டன. அதில் நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது.
இந்த படத்தில் நயன்தாரா வலுவான மற்றும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரேவதி, கிரேஸ் ஆண்டனி, கீதீ சங்கீதா, ஸ்ரீ பார்வதி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் செரின் ஷிஹாப் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாராவின் கேரக்டர் போஸ்டர் மகளிர் தினத்தில் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.
முன்னதாக வெளியான செகண்ட் லுக் போஸ்டரில் மம்முட்டி, மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் மாஸ் ஆக்ஷன் தோற்றத்தில் இடம்பெற்றிருந்தனர். அந்த காட்சிகளின் பின்னணி (BTS) வீடியோவும் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த ஸ்பை த்ரில்லர் திரைப்படத்தில் மம்முட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா மற்றும் ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம் 2026 ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படம் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, அசர்பைஜான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் 18 ஆண்டுகளுக்கு பிறகு மம்முட்டி மற்றும் மோகன்லால் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிப்பதும், அதில் நயன்தாரா இணைந்திருப்பதும் படத்தின் முக்கிய சிறப்பாகக் கருதப்படுகிறது.
இந்த திரைப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளதுடன், ஒளிப்பதிவை மனுஷ் நந்தன் மேற்கொண்டுள்ளார். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி மற்றும் கிச்சப்பு பிலிம்ஸ் நிறுவனங்களின் சார்பில் ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இந்த படம், மலையாள சினிமாவில் சர்வதேச தரத்தில் உருவாகும் மிகப்பெரிய ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது.
‘காளிதாஸ் 2’ ஏப்ரல் 3 வெளியீடு… பரத் நடிக்கும் திரில்லர் தொடருக்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
2019-ம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் எதிர்பாராத கிளைமாக்ஸ் மூலம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘காளிதாஸ் 2’ உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தை இயக்கி பாராட்டுகளை பெற்ற இயக்குநர் ஸ்ரீ செந்தில், இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். நடிகர் பரத் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் அஜய் கார்த்தி நடித்துள்ளார். ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை சங்கீதா, நீண்ட இடைவேளைக்குப் பிறகு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர்களுடன் பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணதி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகளும் அதிரடியும் கலந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான போஸ்டரில் நடிகர்களின் தோற்றம், படம் ஒரு விறுவிறுப்பான திரில்லர் அனுபவத்தை வழங்கும் என்பதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளதுடன், புரொடக்ஷன் டிசைனை G. துரைராஜ் கவனித்துள்ளார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த திரைப்படத்தை SKY PICTURES நிறுவனம் சார்பில் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் K. செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இவர்களது வெளியீட்டில் ‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’ போன்ற வெற்றி படங்கள் வெளியானதால், ‘காளிதாஸ் 2’ திரைப்படத்திற்கும் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள இந்த திரைப்படம், கோடை விடுமுறை ஆரம்பத்தில் வெளியாகவுள்ளதால் திரில்லர் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்குமார் – கயல் ஆனந்தி இணையும் ‘அறிவு’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம்
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘அறிவு’. கழுகு திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இப்படத்தை இயக்குகிறார். உறியடி படத்தின் மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி இப்படத்தில் நாயகன்–நாயகியாக இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.
Movietron Production நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், பெண் உரிமைகளை மையமாகக் கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் உருவாக உள்ளது. சமூக அக்கறையும் விறுவிறுப்பும் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் I.M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கதையும், திரைக்கதையும் எழுதி இயக்கும் சத்யசிவா, சமூக கருத்துகளை விறுவிறுப்பான சினிமா மொழியில் சொல்லும் திறமையால் அறியப்பட்டவர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் D. இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை தில் ராஜு மேற்கொள்ள, படத்தொகுப்பை வெற்றி கிருஷ்ணன் கவனிக்கிறார். கலை இயக்குநராக S.K. பணியாற்ற, கிரியேட்டிவ் ஹெட்டாக ராமு M. செயல்படுகிறார். இணை தயாரிப்பாளராக சாய்பிரபு ஜெயக்குமார் உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இடுக்கி, தேனி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. இயற்கை அழகும் நகர வாழ்க்கையின் நிஜங்களும் இணையும் வகையில் காட்சிகள் வடிவமைக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சமூகப் பொறுப்புணர்வும் விறுவிறுப்பும் இணையும் இந்த திரைப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!
'முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பத்திரிகையாளர்களுக்கான திரையிடல் மற்றும் சிறப்பு திரையிடல்களில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தை பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் படத்தை Sakthi Film Factory நிறுவனம் சார்பில் சக்திவேலன் பி வெளியிடுகிறார். மாநிலம் முழுவதும் 150-க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் பிரதீப் மகாதேவன் பகிர்ந்து கொண்டதாவது,
“ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் உருவாகியுள்ள ‘முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் அதிகளவில் பார்வையாளர்களை சென்றடைவது மிகவும் முக்கியம். அதற்கு அனுபவம்மிக்க விநியோகஸ்தர்களின் ஆதரவு அவசியம். சக்திவேலன் சார் போன்ற முன்னணி விநியோகஸ்தர்களின் ஆதரவு கிடைப்பது எந்த திரைப்பட இயக்குநரும் விரும்பும் விஷயம். சக்தி பிலிம் பேக்டரி பல தனித்துவமான கதைக்களம் கொண்ட, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய திரைப்படங்களை தொடர்ந்து ஊக்குவித்து, அவற்றை தமிழ்நாடு முழுவதும் மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. எங்கள் திரைப்படத்தை வெளியிட அவர் முன்வந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. அவருடைய ஆதரவு ’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படத்தை மேலும் பல பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பி பகிர்ந்து கொண்டதாவது,
“’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக, முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இளைஞர்களை கவரும் பல தருணங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. படத்தின் திரைக்கதை பார்வையாளர்களை கட்டிப்போடும் விதமாக அமைந்துள்ளது என என்னுடன் படம் பார்த்தவர்களும் ரசித்து பாராட்டினர். முழு அணியும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தப் படத்திற்காக உழைத்துள்ளது. இந்த படம் திரையரங்குகளில் பார்வையாளர்களை நிச்சயம் மகிழ்விக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்றார்.
’முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் மார்ச் 6, 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!
இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில், Rise East Entertainment சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் மார்ச் 12 முதல் Netflix தளத்தில் ப்ரீமியராகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டு அனுபவங்களை பகிர்ந்தனர்.
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர்,
“கொரியாவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் இது. ஒரு பெண்ணின் கனவு நனவாவதை பற்றி உணர்வுப்பூர்வமான திரைக்கதையை கார்த்திக் படமாக்கியுள்ளார். அவருடன் எனக்கு இது இரண்டாவது படம். கொரியாவில் படமாக்கும்போது சில சவால்களை சந்தித்தோம். ஆனால், அதையும் தாண்டி நடிகர்களின் நடிப்பு, படமாக்கப்பட்ட சூழல் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது.
பிரியங்கா மோகனின் பக்கத்துவீட்டு பெண் போன்ற எளிய தோற்றமே அவரை இந்த கதைக்குள் கொண்டு வந்தது. தமிழ்நாடு மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி ரசிகர்களுக்கும் பிரியங்கா பரிச்சியம் என்பதும் அவரை நாங்கள் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம். உங்களுக்கு ஒரு கனவு இருந்தால் அதற்காக கடுமையான உழைப்பை கொடுத்தால் நிச்சயம் அது ஒருநாள் நிறைவேறும் என்பதுதான் இதில் சொல்லியிருக்கிறோம்” என்றார்.
இயக்குநர் கார்த்திக், “என்னுடைய முதல் படமான ‘நித்தம் ஒரு வானம்’ படத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. ’மேட் இன் கொரியா’ என்னுடைய இரண்டாவது படம். சரியான திட்டமிடுதல் இல்லை என்றால் கொரியாவில் படமாக்குவது கஷ்டம். இது நான் அங்கு கற்றுக்கொண்ட பெரிய விஷயம். திரையரங்குகளை விட நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘நித்தம் ஒரு வானம்’ படம் வெளியானபோது இன்னும் அதிக ரசிகர்கள் பார்த்துவிட்டு வாழ்த்தினார்கள். திரைத்துறையிலும் எனக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைத்தது.
அதனால், நெட்ஃபிலிக்ஸ் உடன் அடுத்த படம் என்றதும் உடனே ஒப்புக்கொண்டு ‘மேட் இன் கொரியா’ ஆரம்பித்தேன். 13 மொழிகளில் இந்தப் படத்தை டப் செய்தும் 36 மொழிகளில் சப்டைட்டில் உடனும் நெட்ஃபிலிக்ஸ் இந்தப் படத்தை வெளியிடுவதால் அதிக ரீச் கிடைக்கும். அதனால், ஓடிடியில் நேரடியாக இந்தப் படம் வெளியாவது மகிழ்ச்சி. இன்றைய தலைமுறையினர் பலரும் கே-டிராமா ரசிகர்கள். அவர்களுக்கு எல்லாம் ஒருமுறையாவது கொரியா போக வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள்தான் இந்தப் படத்தின் மெயின் ஆடியன்ஸ்” என்றார்.
நடிகை பிரியங்கா மோகன் பேசியதாவது, “’மேட் இன் கொரியா’ படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால் கொரியன் டிராமா பார்ப்பது, சில வார்த்தைகள் கற்றுக் கொண்டது என தயாரானேன். இயக்குநர் கார்த்திக் கொடுத்த இன்புட்ஸூம் உதவியாக இருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் அங்கு படமாக்கினோம். கணிக்க முடியாத காலநிலைதான் அங்கு பெரும் சவாலாக இருந்தது. காலையில் படப்பிடிப்பிற்கு செண்பாவாக சென்று மாலையில் செண்பாவாக திரும்புவேன்.
நாங்கள் அங்கு சென்று கொரிய வார்த்தைகள் நிறைய கற்றுக்கொண்டது போல, ‘தளபதி’ படத்தின் சுந்தரி பாடலையும் நிறைய தமிழ் வார்த்தைகளையும் அங்குள்ளவர்களுக்கு சொல்லி கொடுத்திருக்கிறோம். இயக்குநரின் மனைவி கொரியன் டிராமா ரசிகை. அவரை இன்ஸ்பிரேஷனாக வைத்துதான் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார். செண்பா தன்னை யார் என்று கண்டுபிடிப்பதுதான் ‘மேட் இன் கொரியா’” என்றார்.
ரசிகர்களை கவர்ந்த ஆக்ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!
நடிகர் லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்குவில் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் படக்குழுவினரும் ரசிகர்களும் கலந்து கொண்டனர். வெளியான டீசர் சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை Legend Saravana Stores Productions பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம்பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளதோடு, சமூக ஊடகங்களில் பாராட்டுகளையும் குவித்துள்ளது. டீசர் வெளியானதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார்,
"அசாதாரண சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனின் உணர்ச்சிப் பயணம் தான் லீடர். தனது மகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணியும் ஒரு தந்தையை சுற்றி கதை சுழல்கிறது. இன்றைய பார்வையாளர்களை மனதில் கொண்டு, சிலிர்ப்பூட்டும் உணர்ச்சிபூர்வமான படமாக இதை உருவாக்கி உள்ளோம். டீசர் ஒரு சாம்பிள் மட்டுமே; படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. முதல் பார்வை மற்றும் கிளிம்ப்சுக்கு கிடைத்த அமோக வரவேற்பளித்த ரசிகர்கள் டீசரையும் பாராட்டி வருகிறார்கள், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. 'லீடர்' அனைவரையும் கவரும் என்று நம்புகிறேன்," என்றார்.
இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஷாம், ஆண்ட்ரியா ஜெரேமியா, லால், பிரபாகர், அம்ரிதா ஐயர் மற்றும் VTV கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக எஸ். வெங்கடேஷ் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பை பிரதீப் இ. ராகவ் மேற்கொண்டுள்ள நிலையில், சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ வடிவமைத்துள்ளார்.
தூத்துக்குடி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்பட்ட ‘லீடர்’ திரைப்படம் ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான படமாக உருவாகி, வரும் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான Amazon Prime Video தனது தமிழ் ஒரிஜினல் காமெடி–டிராமா தொடர் ‘லோக்கல் டைம்ஸ்’ சீரிஸின் உலகளாவிய வெளியீட்டை அறிவித்துள்ளது. மார்ச் 13 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த சீரிஸ் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த தொடர், வேகமாக மாறிவரும் டிஜிட்டல் செய்தி சூழலில் தன் மரபை காக்கப் போராடும் ஒரு உள்ளூர் வார இதழை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. Anekdotes உருவாக்கியுள்ள இந்த தொடரை நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கியுள்ளார். Fanboy Production நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார்.
இந்த சீரிஸில் ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடரை பிரவீன் முத்துரங்கன் எழுதியுள்ளார். மேலும் அபிநவ் கஸ்தூரா, பிரவீன் முத்துரங்கன், சாத்விக் கதே, தாமஸ் மானுவல் மற்றும் விஷ்வக் சென் பி இணைந்து இந்த சீரிஸை உருவாக்கியுள்ளனர்.
‘லோக்கல் டைம்ஸ்’ கதை, ஏழ்மையில் இருந்தாலும் அளவற்ற நம்பிக்கையுடன் வாழும் நான்கு நண்பர்கள் – வீரா, அழகு, வள்ளி மற்றும் முத்து – ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி நகர்கிறது. வீராவின் தாத்தாவுக்கு சொந்தமான ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த ‘நம்ம செய்தி’ என்ற உள்ளூர் பத்திரிகையை காப்பாற்ற நால்வரும் முயற்சி செய்கிறார்கள். அவர்களின் குழப்பமான வாழ்க்கை, நகைச்சுவையான சாகசங்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் அவர்களை வீழ்த்த முயலும் ஒரு வலுவான எதிரி ஆகியவற்றைச் சுற்றியே இந்த தொடரின் கதை நகர்கிறது.
பிரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் தலைவர் நிகில் மதோக் கூறுகையில்..,
“லோக்கல் டைம்ஸ் என்பது உணர்ச்சி ரீதியாக மனதைத் தொடும் கதை. ஒரு உள்ளூர் வார இதழின் செய்தியை மையமாகக் கொண்டிருந்தாலும், இதன் மைய கருக்கள் நட்பு மற்றும் உறுதியான மனப்பாங்கு என்பதால் அவை உலகளவில் அனைவரும் உணரக்கூடியவை. திறமையான நடிகர்கள் மற்றும் படைப்பாற்றல் கொண்ட குழுவுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸ், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பார்வையாளர்களைக் கவரும் பிராந்திய கதைகளை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது,” என்றார்.
தயாரிப்பாளர் ஜித்தின் துரை கூறுகையில்..,
“லோக்கல் டைம்ஸ் மூலம், நம்பிக்கையை காப்பாற்ற முயலும் சாதாரண மனிதர்களின் எளிய மற்றும் இலகுவான வாழ்க்கை கதையை சொல்ல நினைத்தோம். ஒரு உள்ளூர் பத்திரிகை அமைப்பு நமக்கு பரிச்சயமான உலகை கொடுத்தாலும், இந்த சீரிஸின் உண்மையான இதயம் இந்த நான்கு கதாபாத்திரங்களின் நட்பே. டிரெய்லர் அவர்கள் பயணத்தின் ஒரு சின்ன முன்னோட்டம் மட்டுமே. இந்த சீரிஸ் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் 'இன்ஸ்பெக்டர் ரிஷி'க்கு பிறகு பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.
படைப்பாளர்களான அபிநவ் மற்றும் பிரவீன் கூறுகையில்..,
“ஆரம்பத்திலிருந்தே தமிழ் பார்வையாளர்களுக்காக இலகுவான, மகிழ்ச்சியான ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. லோக்கல் டைம்ஸ் ஒரு எளிமையான, மனநிறைவு தரும் சீரிஸ். சிறிய அலுவலகம், பெரிய கனவுகள், மற்றும் ஈகோ மோதல்களுக்கு இடையே நடக்கும் ஒரு கலகலப்பான பயணம், இவை அனைத்தும் இதில் இடம் பெற்றுள்ளன. இது டிராமா காமெடி என இரண்டையும் இணைத்து சொல்லும், எளிமையான இதயம் தொடும் சீரிஸ். இதைப் பார்வையாளர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறோம்.
இயக்குநராக அறிமுகமாகும் நவீன் ஜார்ஜ் தாமஸ் கூறுகையில்..,
“லோக்கல் டைம்ஸ் கதை, தங்கள் கனவுகளை துரத்திக்கொண்டு நிற்கும் யாருடைய கதையாகவும் இருக்கலாம். நமது கதாநாயகர்கள் வழக்கமான ஹீரோக்கள் அல்ல, அவர்கள் குறைகளுடன் இருப்பவர்கள், பிடிவாதம் கொண்டவர்கள், சில நேரங்களில் முட்டாள்களாக கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் ஆழமான அன்பை கொண்டவர்கள். அவர்களின் அவசர குடுக்கைத் தனம் காமெடியாக இருக்கும். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது உணர்வுப்பூர்வமாக இருக்கும். இந்த சீரிஸ் இயக்குநராக என் முதல் படைப்பு. இந்த சீரிஸ் பிரைம் வீடியோவில் வெளியாவது பெரும் மகிழ்ச்சி என்றார்.”
நட்பு, கனவுகள் மற்றும் நகைச்சுவை கலந்த இந்த ‘லோக்கல் டைம்ஸ்’ சீரிஸ் மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில் தமிழ் மொழியில் ஆங்கில சப் டைட்டில்களுடன் உலகம் முழுவதும் வெளியாகிறது.
பண மிஷின் ரகசியம்… ‘கான் சிட்டி’ டைட்டில் டீசர் வெளியீடு!
புதுமையான கதைக்களத்தில் உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் ஏற்கனவே ஆர்வத்தை தூண்டியிருந்த இந்த படம், தற்போது வெளியான டீசர் மூலம் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையோடு தொடங்கும் டீசர், அடுத்தடுத்து ஆச்சரியம் அளிக்கும் காட்சிகளால் சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக, அவர்களுக்கு கிடைக்கும் ஒரு பண மிஷின் – பட்டன் அழுத்தினால் கொட்டும் பணம் – என்ற புதுமையான கருத்து கதையை வித்தியாசமான பாதைக்கு இட்டுச் செல்கிறது. உணர்வுப்பூர்வமாக தொடங்கும் இந்த டீசர் பின்னர் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான திருப்பங்களுடன் முடிகிறது.
இந்த படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Power House Pictures தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கியுள்ளார். மங்களூர், சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்து வரும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பதும் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் நகர வாழ்க்கையின் நிஜங்களை இணைத்து உருவாகும் ‘கான் சிட்டி’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது வெளியான டைட்டில் டீசர், இந்த படம் முழுமையான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













