சற்று முன்
சினிமா செய்திகள்
ஒரு கமர்ஷியல் படத்தில் நான் நடிப்பது இதுவே முதல்முறை - நடிகை மடோனா செபாஸ்டியன்
Updated on : 19 November 2024
நடிகை மடோனா செபாஸ்டியன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் முன்பே பிரேமம் படத்தில் 'செலின்' என்ற அற்புதமான கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். எவர்கிரீன் ஃபீல் குட் ரொமாண்டிக் திரைப்படமான ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் அவரது அற்புதமான நடிப்பு கோலிவுட்டில் பாராட்டுகளை வாங்கித் தந்தது. அதேபோல, தனுஷின் ’பா. பாண்டி’ திரைப்படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. நடிகர் விஜயின் ‘லியோ’ படத்தில் அவரது ஆக்ஷன் அவதாரம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. இப்போது நடிகர் பிரபுதேவாவுடன் அவர் நடித்திருக்கும் 'ஜாலி ஓ ஜிம்கானா' திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.
நடிகை மடோனா செபாஸ்டியன் கூறும்போது, “இதுவரை தமிழ் சினிமாவில் நான் நடித்த கதாபாத்திரங்கள் தனித்துவமானது. ஆனால், ஒரு கமர்ஷியல் படத்தின் கதாநாயகியாக நான் நடித்திருப்பது இதுவே முதல்முறை. பல கமர்ஷியல் படங்கள் ஹீரோக்களை மட்டுமே மையப்படுத்தி இருக்கும். ஆனால், இயக்குநர் சக்தி சிதம்பரம் சார் இந்தப் படத்தில் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். எனக்கும் மட்டுமல்ல நடிகர்கள் அபிராமி, யாஷிகா ஆனந்த் உட்பட மற்ற அனைத்து பெண் நடிகைகளுக்கும் சிறப்பான கதாபாத்திரம் இதில் இருக்கிறது.
’ஜாலி ஓ ஜிம்கானா’ திரைப்படம் சிரித்து மகிழும் வகையில் கமர்ஷியல் என்டர்டெயினராக இருக்கும். டார்க் காமெடி, மிஸ்ட்ரி மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என எல்லாமே இதில் உள்ளது. பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்கவும் அவருடன் நடனமாடவும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது” என்றார்.
’ஜாலி ஓ ஜிம்கானா’ திரைப்படத்தை ட்ரான்சிண்டியா மீடியா & என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் ராஜன் மற்றும் நீலா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகள்
சென்னையில் இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்ப கருத்தரங்கம்!
இந்திய திரைப்படத் துறையின் எதிர்காலத்தை நோக்கி தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றல் எவ்வாறு ஒன்றிணைய வேண்டும் என்பதைக் குறித்து ஆராயும் வகையில், ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப் மற்றும் புரொடியூசர் பஜார் ஆகிய நிறுவனங்கள் இணைந்து “ஃபிலிம் இன்டஸ்ட்ரி 5.0: தி ஃபியூச்சர் ஆஃப் இந்தியன் சினிமா” எனும் கருத்தரங்கை சென்னையில் புதன்கிழமை (ஜனவரி 7) நடத்தின. இந்த நிகழ்வு கிண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள புரொடியூசர் பஜார் அலுவலகத்தில் நடைபெற்றது.
திரைப்படத் துறையின் எதிர்கால வளர்ச்சி, தொழில்நுட்பத்தின் தாக்கம், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அலசி ஆராயும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கருத்தரங்கில், திரைப்படம், தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் அறிவுசார் உரிமைகள் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டு, படைப்பாற்றலை தொழில்நுட்பத்துடன் இணைத்து புதிய உயரங்களை எட்டுவது குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.
இந்நிகழ்வில், சிங்கப்பூரைச் சேர்ந்த ரிவர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலரான டாக்டர் விவேகா காளிதாசன், தொழில்நுட்பம் திரைப்படப் படைப்பாற்றலுக்கு எவ்வாறு துணை நிற்கிறது என்பது குறித்து முக்கிய உரையாற்றினார். கதை எழுதுதல், படத்தொகுப்பு, காட்சி கதைசொல்லல் ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த திரைத்துறை பொருளாதார சூழலில் உரிமைகள், வருமானம் மற்றும் உலகளாவிய தாக்கங்களை எவ்வாறு மறு உருவாக்கம் செய்யலாம் என்பதைக் குறித்து வட்டமேசை கலந்துரையாடலும் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில், பிக்ஸ் ஸ்டோன் இமேஜஸ் பிரைவேட் லிமிடெட் வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர் உஜ்வல் தன்குட்டே, தேஜ் என்டர்டெயின்மென்ட் இயக்குநர் நாகராஜன் வைத்தியநாதன், சக்தி குளோபல் டிவி ஓடிடி தலைவர் மற்றும் மகாராஜ குழுமத்தின் திரைப்பிரிவு தலைவர் சம்மந்த்ராஜ் கோதண்ட்ராம், பாக்கெட் எஃப்.எம் கிரியேட்டிவ் புரொடியூசர் அசாருதீன் ஜெ, ஐபிஆர்எஸ் தென் மண்டல உறவுகள் பிரிவின் உறுப்பினர் பாலமுரளி திருமுருகன், கிறிஸ் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கிறிஸ்டி எஸ், சிங்கப்பூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பின் செயல் இயக்குநர் ஜமுனராணி கோவிந்தராஜூ, பிராண்ட் எக்சேஞ்ச் நிறுவன இயக்குநர் ரமேஷ் குமார் மல்லேலா, பியூர் சினிமா நிறுவனர் அருண் மோ, புரொடியூசர் பஜார் சட்டப்பிரிவு தலைவர் அர்ச்சனா கவில், ஓஓ ஸ்டூடியோ இன்க் இணை நிறுவனர் சிந்துஜா ராஜமாறன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கருத்தாழம் மிக்க உரைகள் மற்றும் சிந்தனைகள், கலந்து கொண்ட திரைத்துறையினரிடையே தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தி வர்த்தக எல்லைகளை விரிவுபடுத்துதல், படைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் அறிவுசார் உரிமைகளை பாதுகாத்தல் குறித்த புரிதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர். இதற்காக ஏற்பாட்டாளர்களான ஃபிப்செயின், ரிவர் வென்ச்சர்ஸ், பியூர் சினிமா, பிராண்ட் சேஞ்ச், ஐபி கிளைம்ப் மற்றும் புரொடியூசர் பஜார் நிறுவனங்களுக்கு அவர்கள் நன்றியை தெரிவித்தனர்.
100 நாட்கள் வெற்றி… உலகத் திரையரங்குகளை நோக்கி 'காந்தாரா சேப்டர் 1'
“காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அதன் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், கலாச்சார தாக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்திய மக்கள் மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் பூர்வகுடி கதைகளில் ஆழமாக வேரூன்றிய இந்தத் திரைப்படம், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம், இன்றைய இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக “காந்தாரா சேப்டர் 1 ” தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
ரிஷப் ஷெட்டி எழுத்து இயக்கத்தில், விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவான இப்படம், அதன் ஆழமான கதையமைப்பு, காட்சித் தன்மை மற்றும் பிரம்மாண்டமான காட்சிப்படுத்தலுக்காக பரவலான அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
வெளியீட்டின் 100 நாட்களை கொண்டாடும் இந்நேரத்தில், “காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் “அகாடமி அவார்ட்ஸ்” விருதுகளுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது, பண்பாட்டுச் செழுமையும் உண்மையான உள்ளூர் கதையாக்கமும் கொண்ட இந்திய திரைப்படங்களுக்கு, உலகளாவிய அளவில் கிடைக்கும் அங்கீகாரத்தை பிரதிபலிக்கிறது.
“காந்தாரா சேப்டர் 1” தற்போது இந்திய எல்லையைக் கடந்து, உலகளாவிய அளவில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது.

’மெல்லிசை’ நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நினைவூட்டியது - நடிகர் கிஷோர்!
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும். இந்த வரிசையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ‘மெல்லிசை’ இணைய உள்ளது. பல திரைப்படங்களில் காவல்துறை அதிகாரியாகவும் தீவிரமான கதாபாத்திரங்களிலும் பார்த்து பழகிய நடிகர் கிஷோர் இந்தப் படத்தில் உடற்கல்வி ஆசிரியராக நடித்துள்ளார். அன்றாட வாழ்க்கை, அமைதியான கனவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான உண்மைகள் ஆகியவற்றை ’மெல்லிசை’ பேசுகிறது. படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் இசை ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
’மெல்லிசை’ தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நடிகர் கிஷோர் பகிர்ந்து கொண்டார், “நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண வாழ்க்கையைப் பற்றிய கதையாக ‘மெல்லிசை’ என்னிடம் சொல்லப்பட்டது. எந்தவிதமான சமரசங்களும் இல்லாமல் கதை நேர்மையாக இருந்தது. வாழ்க்கையுடன் நெருக்கமாக இருக்கும் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை எனக்கு நினைவூட்டியது. எங்கள் இயக்குநர், தயாரிப்பாளர்கள், என் சக நடிகர்கள் மற்றும் இந்தப் பயணத்தை உண்மையாக கொடுத்த ஒவ்வொரு தொழில்நுட்ப வல்லுநருக்கும் என்னுடைய நன்றி. இந்தப் படத்தில் அனைவருமே மனப்பூர்வமாக வேலை பார்த்திருக்கிறோம் என்பதே இந்தப் படத்தை இன்னும் ஸ்பெஷலாக்கியது” என்றார்.
திரவ் எழுதி இயக்கியுள்ள ’மெல்லிசை’ படத்தில் நடிகர் கிஷோருடன் சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், புதுமுகங்கள் தனன்யா, ஜஸ்வந்த் மணிகண்டன், புரோக்டிவ் பிரபாகரன் மற்றும் கண்ணன் பாரதி ஆகியோர் நடிக்கின்றனர். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'வெப்பம் குளிர் மழை' படத்தை தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்ஷன்ஸ் ’மெல்லிசை’ படத்தையும் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் சங்கர் ரங்கராஜன் இசையும், தேவராஜ் ஒளிப்பதிவும் இந்தக் கதைக்கான ஆன்மாவை திரையில் கொண்டு வந்துள்ளது. ’மெல்லிசை’ 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை ‘மெல்லிசை’ கொடுக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் தயாரித்திருக்கும் புதிய படம் மூலம் பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான பல தருணங்களைக் கொண்ட இந்தப் படத்தை பிரீத்தி கரிகாலன் இயக்கியுள்ளார். குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் படத்தின் காட்சிகள், இசை, கதை என அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
இது பற்றி தயாரிப்பாளர் திலகவதி கரிகாலன் பேசுகையில், “ஒரு படத்தை திட்டமிட்டபடி முடிக்க ஒவ்வொரு துறையும் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும். அந்தவகையில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் எங்கள் இயக்குநர் என அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி உள்ளனர். படத்தை வெளியிடுவதற்கான சரியான தருணத்தை திட்டமிட்டு வருகிறோம். பார்வையாளர்களிடம் படம் சரியாக சென்றடைய வேண்டும் என்பதற்கான மார்க்கெட்டிங், புரோமோஷன் பணிகள் போன்றவற்றையும் தெளிவாக திட்டமிடுவோம்” என்றார்.
படத்தின் டைட்டில், டீசர், டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீடு குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர்கள்: ரொமாண்டிக் எண்டர்டெயினரான இந்தப் படத்தில் விக்ரமன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுப்ரிதா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜென்சன் திவாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட் - மூன்று வில்லன்கள் அறிமுகம்!
ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் மூன்று வில்லன்களை அறிமுகப்படுத்துகிறது. அதில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானி நடித்துள்ளார்.
இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை பல மொழிகளில் திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து சமீபத்தில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடமிருந்து (CBFC) U/A சான்றிதழைப் பெற்றுள்ளது ‘திரெளபதி2’ திரைப்படம். ரிச்சர்ட் ரிஷியின் கவர்ந்திழுக்கும் வசீகர தோற்றம், அற்புதமான பாடல்கள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் ஆகியவை படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று வலுவான வில்லன் கதாபாத்திரங்களில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானியை அறிமுகப்படுத்துகிறது படக்குழு.
நடிகர் சிராக் ஜானியை தேர்ந்தெடுத்தது குறித்து இயக்குநர் மோகன் ஜி கூறுகையில், “முகமது பின் துக்ளக் கதாபாத்திரத்தில் நடிகர் சிராக் நடித்துள்ளார். வெறும் வில்லனாக மட்டுமல்லாது புத்திசாலித்தனம் நிறைந்த தனது சொந்த முடிவுகளின் விளைவுகளை தைரியமாக எதிர்கொள்ளும் நபராக வருவார். உடல் ரீதியாக வலுவாகவும் அதேசமயம், புத்திசாலித்தனத்தையும் நடிப்பில் கொண்டு வரும் வகையிலான நடிகரை நாங்கள் எதிர்பார்த்தோம். துக்ளக்கை புத்திசாலித்தனமான முட்டாள் என்று வரலாறு நினைவு கூறுகிறது. அந்த முரண்பாட்டைப் படம்பிடிக்க மிகப்பெரிய கட்டுப்பாடு தேவை. சிராக் முழு ஈடுபாட்டுடன் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான அச்சுறுத்தல், கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ளார். அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்” என்றார்.
இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசுதன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் Y.G. மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராக் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோழ சக்ரவர்த்தி, ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த 'திரௌபதி 2' திரைப்படத்தின் தொழில்நுட்பக்குழுவில் பிலிப் ஆர். சுந்தர் (ஒளிப்பதிவு), ஜிப்ரான் வைபோதா (இசை), ஆக்ஷன் சந்தோஷ் (ஸ்டண்ட்ஸ்), தணிகா டோனி (நடன அமைப்பு), தேவராஜ் (எடிட்டிங்), மற்றும் கமல்நாதன் (தயாரிப்பு வடிவமைப்பு) ஆகியோர் உள்ளனர். வசனங்களை பத்மா சந்திரசேகர் மற்றும் மோகன் ஜி எழுதியுள்ளனர்.
சென்சார் பணிகள் முடிவடைந்த நிலையில் ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் மார்க்கெட்டிங் பணிகள் தொடங்கியுள்ளது. படத்தின் டிரெய்லர் மற்றும் இசை விரைவில் வெளியிடப்படும், அதைத் தொடர்ந்து உலகளவில் திரையரங்க வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படும்.
பல சவால்களை தாண்டி 'பராசக்தி' படத்தை படமாக்கினேன் - இயக்குநர் சுதா கொங்கரா!
இயக்குநர் மணி ரத்னத்தின் சினிமா பட்டறையில் இருந்து வந்தவரான இயக்குநர் சுதா கொங்கரா, தனது அழுத்தமான கதைகள் மூலம் தமிழ் சினிமாவை தொடர்ந்து உயர்த்தியுள்ளார். அந்தவகையில், அவரது வெளியாகவிருக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே வர்த்தக வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டான் பிக்சர்ஸ், ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜனவரி 10, 2026 அன்று வெளியாகிறது.
படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பகிர்ந்து கொண்டதாவது, “’பராசக்தி’ கதை நான் எழுதிய பின்பு பாராட்டுகளை பெற்ற அதேசமயம் கதையை சுற்றி பல சந்தேகங்களும் எழுந்தது. திரைக்கதை உருவாக்கமே கடினமாக இருந்தது. இந்தக் கதையை படமாக்குவது மிகவும் சவாலானதும் என்றும் படம் வெளியானதும் பல விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்றும், பலர் எச்சரித்தனர். இருப்பினும், மணி ரத்னம் சார் பின்பற்றும் 'சாத்தியமற்றதை சாத்தியமாக்க வேண்டும்' என்பதின் அடிப்படையில் பல சவால்களை தாண்டி இதை படமாக்கினேன்” என்றார்.
மேலும் பேசியதாவது, “படம் உருவாக்கத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சாருக்கு நன்றி. அவரது ஆதரவு இல்லாமல் ’பராசக்தி’ இல்லை. இந்தப் படத்தின் முதுகெலும்பு நடிகர் சிவகார்த்திகேயன். அவரது அர்ப்பணிப்பும், கதாபாத்திரத்திற்காக அவர் கொடுத்திருக்கும் உழைப்பும் நிச்சயம் பார்வையாளர்கள் மத்தியில் பேசப்படும்.
ரவி மோகனின் திரை ஆளுமை ‘பராசக்தி’ படத்தின் அசைக்க முடியாத பெரும்பலம். இந்தப் படத்தில் நடிக்கவேண்டும் என அவர் முடிவெடுத்ததற்கு நன்றி. திரைக்கதை எழுதும் போதே அதர்வா முரளியின் கதாபாத்திரம் என்னை உற்சாகப்படுத்தியது. அதர்வாவின் அர்ப்பணிப்பால் நான் எதிர்பார்த்ததைவிட திரையில் அவர் கதாபாத்திரம் இன்னும் நன்றாக வந்துள்ளது. நடிகை ஸ்ரீலீலாவை இந்தப் படத்தில் முற்றிலும் வேறொரு கோணத்தில் பார்ப்பீர்கள். அற்புதமான நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.
எனது படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை பெரும் பலம். ’பராசக்தி’ படத்தில் அவரது இசையை நிச்சயம் ரசிப்பீர்கள். ’பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவிலும் ரசிகர்களின் மனதிலும் நிச்சயம் தனியிடம் பிடிக்கும்” என்றார்.
விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பல வெற்றி படங்கள் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரு காலகட்டத்தை மறுஉருவாக்கும் செய்திருக்கும் ‘பராசக்தி’திரைப்படம் ஜனவரி 10, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும்.
அதர்வாவின் அர்ப்பணிப்பு இன்னும் அவரை பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும் - நடிகை ஸ்ரீலீலா!
வசீகரமான தோற்றம், திறமையான நடிப்பு மற்றும் துள்ளலான நடனம் என பான் இந்திய ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறார் நடிகை ஸ்ரீலீலா. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள ’பராசக்தி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவரது வலுவான கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். படம் குறித்தான தனது மகிழ்வான அனுபவங்களை ஸ்ரீலீலா பகிர்ந்து கொண்டுள்ளார்.
”’பராசக்தி’ திரைப்படம் எனக்கு ஆழமான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை மட்டும் கொடுக்கவில்லை மறக்க முடியாத பல அழகான நினைவுகளையும் பரிசளித்துள்ளது. படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும் எல்லோரும் மகிழ்வுடன் பணியாற்றினோம். என் சினிமா கரியரில் மறக்க முடியாத கதாபாத்திரத்தை கொடுத்ததற்காகவும் என் மீது வைத்த நம்பிக்கைக்கும் இயக்குநர் சுதா கொங்கரா மேடத்திற்கு நன்றி” என்றார்.
மேலும், “சிவகார்த்திகேயன் சாரின் வெற்றி வெறும் விடாமுயற்சியால் மட்டுமே வந்தது அல்ல, அவரின் நல்ல எண்ணங்களும் இதில் உள்ளது. நடிகர்களிடம் மட்டுமல்லாது படக்குழுவில் உள்ள ஒவ்வொருவரிடமும் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். இந்த குணம்தான் அவரை கோடிக்கணக்கானவருக்கு பிடித்தமானவராக மாற்றியிருக்கிறது.
ரவி மோகனின் நடிப்பு எப்போதும் எனக்கு இன்ஸ்பிரேஷன். ‘பராசக்தி’ படத்தில் அவரின் நடிப்பை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். இவர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது.
”நடிகர் அதர்வாவின் அர்ப்பணிப்பு இன்னும் அவரை பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும்” என்றார்.
”நான் நடனமாடிய பல பாடல்களில், ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ஆர்யமாலா’வுக்கு என் மனதில் எப்போதும் ஸ்பெஷல் இடம் உண்டு. ’பராசக்தி’ படத்தில் இந்த பொன்னான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சாருக்கு மிகவும் நன்றி. ’பராசக்தி’ திரைப்படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும்” என்றார்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள 'பராசக்தி' படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘பராசக்தி’திரைப்படம் ஜனவரி 10, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும்.
பல தருணங்களில் சிவகார்த்திகேயனை பார்த்து வியந்திருக்கிறேன் - நடிகர் ரவி மோகன்!
வில்லனாக அறிமுகமாகும் நடிகர் ரவி மோகனின் ’பராசக்தி’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பல பிளாக்பஸ்டர் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் படங்களைக் கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் நடிகர் ரவி மோகன் ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படம் பற்றி ரவி மோகன் பகிர்ந்து கொண்டதாவது, "’பராசக்தி’ சாதாரண படம் அல்ல! எண்ணற்ற கடின உழைப்பாளிகளின் அர்ப்பணிப்பால் உருவான தலைசிறந்த படைப்பு இது. என் மீது நம்பிக்கை வைத்து மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். என் சினிமா பயணத்தின் இந்த தருணத்தில் நான் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என பலர் கேள்வி எழுப்பினர். நான் ’பராசக்தி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ள முக்கிய காரணம் சுதா கொங்கரா மேடம் தான். அவரது படங்கள் எனக்கு எப்போதும் உத்வேகம் கொடுக்கும். அவருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம்” என்றார்.
”அதர்வா முரளி ஒரு அற்புதமான சக நடிகர். அவரது பாசிட்டிவ் எனர்ஜியை செட்டில் எல்லோரும் உணர்ந்தோம். இந்தப் படத்தில் அவரது நடிப்பும் கதாபாத்திரமும் பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பது உறுதி. ஸ்ரீலீலா அற்புதமான நடிகை. ‘பராசக்தி’ படத்திற்கு பிறகு அவருக்கு தமிழ்நாட்டில் இன்னும் நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள்”.
”சிவகார்த்திகேயன் மீது எனக்கு அளவுக்கடந்த அன்பு உள்ளது. பல தருணங்களில் அவரைப் பார்த்து வியந்திருக்கிறேன். படத்தில் அவர் மற்றவர்களை ஓவர்ஷேடோ (overshadowed) செய்கிறார் என்று ஒரு செய்தி உலவி வருகிறது. அது முற்றிலும் தவறானது. என்னுடைய கதாபாத்திரம் ஆழமானதாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதா என்பதை அவர் உறுதிப்படுத்தினார். இப்போதுள்ள முன்னணி கதாநாயகர்கள் அப்படி செய்வார்களா என தெரியவில்லை. சிவகார்த்திகேயனின் அன்பு, ஒழுக்கம், அர்ப்பணிப்பு இவை எல்லாம்தான் அவரது வளர்ச்சிக்கு காரணம்” என்றார்.
”குறுகிய காலத்திலேயே நூறு படங்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ‘பராசக்தி’ படத்தில் அவரது அற்புதமான இசையை நிச்சயம் விரும்புவீர்கள்”.
”’பராசக்தி’ திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். படம் வெளியாவதை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்துள்ளேன். படம் பார்த்த பெருமையிலும் சந்தோஷத்திலும் சொல்கிறேன், நிச்சயம் ‘பராசக்தி’ உங்கள் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும். படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை ’பராசக்தி’ திரைப்படம் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள 'பராசக்தி' படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும்.
யாஷ் பிறந்தநாளில் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் யாஷ் கதாபாத்திரத்திர அறிமுக முன்னோட்டம்!
' 'டாடி'ஸ் ஹோம் (‘Daddy’s Home’)!!' யாஷ்ஷின் பிறந்தநாளில் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் தனது முதல் துணிச்சலான முன்னோட்டத்தின் மூலம் அவரது ராயா (Raya) கதாபாத்திரம் அறிமுகமாகிறது.
'ராக்கிங் ஸ்டார்' யாஷ் பிறந்த நாளை ஒரு பிரம்மாண்டமான வெளியீட்டுடன் கொண்டாடும் வகையில் 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ் (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் கதாபாத்திர அறிமுக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் யஷ் நடித்துள்ள ராயா (Raya) கதாபாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து கவனத்தை ஈர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த துணிச்சலான மற்றும் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட இந்த கதாபாத்திர அறிமுகம் ஒரு கொண்டாட்டமாக வெளியாகி உள்ளது.
யாஷ் 'டாக்ஸிக்' திரைப்படத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் போது முதலில் அதன் பெண் கதாபாத்திரங்களான கியாரா அத்வானி -நயன்தாரா - ஹூமா குரேஷி- ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகியோரை அறிமுகப்படுத்த தேர்ந்தெடுத்தார். இந்த நடவடிக்கை படத்தின் பன்முகத்தன்மை கொண்ட கதை களத்தையும், பல நட்சத்திரங்களைக் கொண்ட குழுவின் பார்வையையும் அடிக்கோடிட்டு காட்டியது. தன்னை வெளிப்படுத்துவதற்கு முன்பு பெண்களின் மீது கவனத்தை ஈர்ப்பதன் மூலம் 'டாக்ஸிக்' திரைப்படம் சாதாரண பிரம்மாண்டத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல.. மாறாக அதன் உலகத்தை வடிவமைக்கும் ..சக்தி வாய்ந்த கதாபாத்திரங்களை சுற்றி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை யஷ் உணர்த்தி இருக்கிறார்.
அந்த அடித்தளம் வலிமையாக அமைக்கப்பட்ட நிலையில்.. இத்திரைப்படம் இப்போது அதன் மைய ஆற்றலான யாஷ் நடித்த ராயா கதாபாத்திரத்தின் மீது தனது கவனத்தை திருப்புகிறது.
ஒரு மயானத்தில் அமைதி நிலவ.. திடீரென குழப்பமாக வெடிக்கும் பின்னணியில் இந்த முன்னோட்டம் ஒரு அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் தொடங்குகிறது. துப்பாக்கி சூடு அமைதியை கிழிக்கிறது. உடல்கள் சிதறுகின்றன. புகைக்கு மத்தியில் ராயா வெளிப்படுகிறார். அமைதியுடனும்... அசைக்க முடியாத உறுதியுடனும்... முழுமையான கட்டுப்பாடுடனும்... ஒரு டாமி துப்பாக்கியுடன் ( tommy gun) அவர் அந்த தருணத்தை அவசரப்படுத்தவில்லை.. அதை தன்வசப்படுத்துகிறார்.
அவரது ஒவ்வொரு அசைவும் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது. அவரது ஒவ்வொரு பார்வையும் ஒரு நோக்கத்தை கொண்டுள்ளது. ராயா அங்கீகாரத்தை தேடும் ஒரு கதாபாத்திரம் அல்ல... அவர் நோக்கம் - தன்னம்பிக்கை மற்றும் ஆளுமையுடன் இயங்கும் ஒரு சக்தி.
அதன் முதல் காட்சியிலிருந்து' டாக்ஸிக்' ஒரு இருண்ட சமரசமற்ற சூழலில் நிறுவுகிறது. இது பழக்கமான அல்லது வசதியான பாதையை தேடவில்லை. மாறாக துணிச்சல், பிரம்மாண்டம் மற்றும் சமரசமற்ற காட்சி மொழியை நிறுவுகிறது. திரையில் இருந்து மறைந்த பிறகும் நீண்ட காலத்திற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு திரைப்படம் இது.
இந்த கதாபாத்திர அறிமுகம் ஒரு விசயத்தை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவு படுத்துகிறது... 'டாக்ஸிக்' ஒரு வழக்கமான திரைப்படம் அல்ல... அதை இயக்கும் ராயாவும் அப்படியானவர் அல்ல.
பல ஆண்டுகளாக யாஷ் ஒரு பயமற்ற .. ரிஸ்க் எடுப்பவர் என்ற நற்பெயரை உருவாக்கியுள்ளார். அவர் பாதுகாப்பிற்கு பதிலாக இலட்சியத்தையும்... சூத்திரங்களுக்கு பதிலாக தொலைநோக்குப் பார்வையையும் தொடர்ந்து தேர்ந்தெடுக்கும் ஒரு நடிகர் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தி வருகிறார். ஒரு காலத்தில் துணிச்சலான... அபாயகரமான முயற்சிகளாக கருதப்பட்ட படைப்புகளை.. புதிய அளவுகோல்களை வரையறுத்து, அதன் அளவு மற்றும் கதை சொல்லலில் அவரது உள்ளுணர்வு தாக்கத்தை மட்டுமல்ல வெற்றியையும் தருகிறது என்பதை நிரூபித்துள்ளன.
'டாக்ஸிக்' அந்த பாரம்பரியத்தை தொடரும் ஒரு படைப்பு.
நடிகர் -இணை எழுத்தாளர் மற்றும் இணை தயாரிப்பாளராக யாஷ் மீண்டும் ஒருமுறை புதிய களத்தில் அடி எடுத்து வைக்கிறார். சிக்கலான தன்மைகளையும்... இருண்ட பக்கங்களையும் ஒரு சர்வதேச அளவிலான கதை சொல்லும் பாணியையும் ராயா கதாபாத்திரம் மூலம் பின்பற்றுகிறார். அவர் தனது கடந்த காலத்தின் வெற்றிகளை போலவே படைப்பு துணிச்சலையும், நம்பிக்கையையும் நம்பி, முழுமையாக பரிசோதனை முயற்சியில் ஈடுபடுகிறார்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அவரது பிறந்தநாள் முன்னோட்டத்தின் தொடர்ச்சியாக புதிதாக வெளியிடப்பட்ட இந்த வீடியோ 'டாக்ஸிக்' திரைப்படத்தின் உலகத்தை மேலும் விரிவு படுத்துகிறது. அதன் அதிரடி நிறைந்த கதைக்களம் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சி இந்த உலகத்தை ஆழமாகவும், இன்னும் முழுமையாகவும் காணும் வாய்ப்பை வழங்குகிறது.
யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கிய 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. இது படத்தின் உலகளாவிய லட்சியத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி - தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) - தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்- கெச்சா காம்பக்டி (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.
கே வி என் புரொடக்ஷன்ஸ் ( KVN Productions )மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் (Monster Mind Creations)ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட 'டாக்ஸிக்' திரைப்படம் - ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒன்று மட்டும் மாறாமல் இருக்கிறது. யாஷ் ஒரு சவாலை முன்னெடுக்கும் போது.. சினிமா அதற்கு பதிலளிக்கிறது. மேலும் 'டாக்ஸிக்' படத்துடனான பந்தயம் முன் எப்போதையும் விட அதிகமாகவே உள்ளது.
இப்படம் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது
“ரவி மோகன் என்னுடைய நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன் - நடிகர் அதர்வா முரளி!
வசீகரமும், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி நடிப்பதில் ஆர்வம் கொண்டவருமான நடிகர் அதர்வா முரளி பல்வேறு வெற்றிப்படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் இருந்து தனது மனதுக்கு நெருக்கமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“ஆகாஷ் பாஸ்கரன் சாரை இயக்குநராக எனக்கு முன்பே தெரியும். தற்போது அவர் படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ‘பராசக்தி’ கதையையும் அதில் என்னுடைய கதாபாத்திரம் குறித்தும் என்னிடம் முதலில் சொன்னவர் ஆகாஷ்தான். ‘பராசக்தி’ படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து இத்தகைய வலுவான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. ஸ்ரீலீலாவும் உற்சாகமான நடிப்பை கொடுத்துள்ளார். ஸ்ரீலீலாவின் திறமையான நடிப்பும் நடனமும் இந்தப் படம் வெளியான பிறகு இந்திய சினிமாத்துறையில் நிச்சயம் பேசுபொருளாகும்” என்றார்.
மேலும் பேசுகையில், “ரவி மோகன் என்னுடைய நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன். ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தில் அவரது நடனத்தை என் குடும்பத்தினருடன் பார்த்தது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. மழையில் அவர் தனியாக நடனமாடும் ஒரு குறிப்பிட்ட காட்சியை மிகவும் ரசித்து பார்த்தோம். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது தன்னை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார் என என் அம்மா அடிக்கடி சொல்வார். ரவியின் நடிப்பும் நடனமும் எனக்கு அதைத்தான் நினைவூட்டியது. நானும் அதை பின்பற்ற வேண்டும் என முடிவு செய்தேன்” என்றார்.
”சுதா மேடத்தை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். பல கல்ட் மாஸ்டர் பீஸ் படங்களை உருவாக்கிய சுதா கொங்கரா தன்னை மேடம் என அழைக்க வேண்டாம் என்றுதான் முதலில் சொன்னார். அவரது பெருந்தன்மை என்னை வியக்க வைத்தது”.
”வெள்ளித்திரையிலும் நிஜத்திலும் இப்போது சிவகார்த்திகேயன் என் சகோதரர். சினிமாவில் அவரது வளர்ச்சியை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன். சினிமாவில் அவர் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார். அவரின் வெற்றிகளைப் பார்த்து பல தருணங்களில் மகிழ்ந்திருக்கிறேன். நமது மாநிலத்தை வடிவமைத்த மாணவர் இயக்கத்தை பிரதிபலிக்கும் வரலாற்றின் ஒரு பகுதியாக ‘பராசக்தி’ உருவாகியுள்ளது. உங்கள் அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும் படமாக இருக்கும்” என்றார்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள 'பராசக்தி' படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும்.
- உலக செய்திகள்
- |
- சினிமா













