சற்று முன்
சினிமா செய்திகள்
நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!
Updated on : 16 September 2025

இந்திய சினிமாவின் பல்வேறு துறைகளிலும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தனது திறமையை நிரூபித்து ஜொலித்து வருகிறார் நடிகர் சித்தார்த். தமிழ், தெலுங்கு சினிமா மட்டுமல்லாது பாலிவுட் ரசிகர்களின் மனதிலும் இட்ம பிடித்துள்ளார் சித்தார்த். பெரிய திரையிலும் டிஜிட்டல் தளத்திலும் தொடர்ந்து வலுவான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் சித்தார்த் தற்போது, ஜும்பா லஹிரியின் விருது பெற்ற சிறுகதை தொகுப்பை அடிப்படையாகக் கொண்ட நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கவுள்ளார்.
நடிகர் சித்தார்த் சமீபத்தில் நடித்த 'சித்தா' மற்றும் '3BHK' ஆகிய படங்கள் உணர்வுப்பூர்வமான கதை சொல்லலுக்காக உலகளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அமெரிக்க கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட லஹரியின் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றான 'Unaccustomed Earth' தொடரில் நடிப்பதன் மூலம் சர்வதேச பார்வையாளர்கள் மத்தியிலும் சித்தார்த் இன்னும் நெருக்கமாகவுள்ளார்.
எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்த ரொமாண்டிக் கதை கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாச்சார ரீதியிலான தொடராகவும் அமையும். மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் இந்திய-அமெரிக்க சமூகத்திற்குள் அமைக்கப்பட்ட இந்தத் தொடர் காதல், ஆசை, அடையாளம், எதிர்பார்ப்பு, கலாச்சாரம் மற்றும் உறவுகளிடையேயான எதிர்பார்ப்புகளை நெருக்கமாகவும், நுணுக்கமாகவும் சொல்கிறது.
பொறுப்பான மனைவியாக குடும்ப வாழ்க்கையில் இருக்கும் பருல் சவுத்ரி (ஃப்ரீடா பிண்டோ) தனது முன்னாள் காதலன் அமித் முகர்ஜியை (சித்தார்த்) நீண்ட நாள் கழித்து சந்திக்கும் போது அவள் வாழ்க்கை தடுமாறுகிறது. கேம்பிரிட்ஜைச் சேர்ந்த அன்பான பெங்காலி-அமெரிக்கரான அமித் தன் நண்பர்களுக்கு மிகவும் நெருக்கமானவர். ஆனால், வேலை - காதல் இரண்டையும் பேலன்ஸ் செய்ய தடுமாறுகிறார். இந்த ஜோடி மீண்டும் இணைந்திருப்பது அவர்கள் சார்ந்த சமூகத்தில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்பதுதான் இந்தத் தொடரின் மையக்கதை.
சமீபத்திய செய்திகள்
தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் “காட்ஸ்ஜில்லா” திரைப்படம்; புதுவிதமான கற்பனையுடன் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு “ரோம்-காம்” வகை. இப்படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில் ‘சரண்டர்’ என்ற படம் மூலம் புகழ் பெற்ற தர்ஷன், மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இயக்குனர் மோகன் குரு செல்வா இயக்கத்தில் பூஜையுடன் தொடங்கிய “காட்ஸ்ஜில்லா” திரைப்படம்;சமீபத்தில் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டை பெற்ற “பிளாக் மெயில்” படத்தின் வெற்றியை தொடர்ந்து வித்யாசமான “ரோம் காம்” படமான “காட்ஸ் ஜில்லா” படத்தை தயாரிக்கும் சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஜி. தனஞ்ஜெயன் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ். பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில் வெளியான 'சரண்டர்' படத்திற்காக நல்ல பாராட்டுகளைப் பெற்ற தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் மோகன் குரு செல்வா இயக்கத்தில் ரோம்-காம் படமான “காட்ஸ் ஜில்லா” படத்தை தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் பூஜை செப்டம்பர் 15ம் தேதி அன்று நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழிவினர், மற்றும் சினிமா துறையை சேர்ந்த பலர் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்: தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு , FEFSI தலைவர் R.K. செல்வமணி, இயக்குனர் விஜய், இயக்குனர் சசி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ்.மோகன் குரு செல்வா இயக்கத்தில் உருவாகும் “காட்ஸ்ஜில்லா” படமானது, ரோம்-காம், புராணக் கற்பனையும், நகைச்சுவையும், காதலையும் ஒருங்கிணைக்கும் வித்தியாசமான கதை சொல்லலாக இருக்கும்.
காதலில் தோல்வியுற்ற இளைஞன் ஒருவரின் வாழ்க்கையில் தெய்வீக தலையீடு நிகழ்வதன் மூலம் சுயஅறிவு, மீட்பு மற்றும் காதலை நோக்கிய பயணம் தான் இப்படத்தின் மையக்கரு என்று படக்குழு தெரிவித்துள்ளது.
தனித்துவமான திரைக்கதைக்கு பெயர் பெற்ற இயக்குநர் மோகன் குருசெல்வா, பொழுதுபோக்கும் உணர்ச்சியும் கலந்த திரைப்படத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.வானுலக கற்பனைக் காட்சிகளும், புவியுலக நிறமிகு காட்சிகளும், ஆன்மீக இசையும், தத்துவம் கலந்த நகைச்சுவையும் இணைந்து, “காட்ஸ்ஜில்லா” இன்றைய இளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் விதமாகவும், குடும்பங்கள் ரசிக்கக்கூடிய விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்த பூஜையுடன் முதன்மை படப்பிடிப்பு துவங்கியுள்ளதோடு, “காட்ஸ்ஜில்லா” புராணம், கற்பனை, நவீன காதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் புதுமையான திரை அனுபவமாக விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!
உணர்வுப்பூர்வமான காதல் கதையாக உருவாகியுள்ள '18 மைல்ஸ்' கடந்த சில வாரங்களாகவே பார்வையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் மிர்ணா நடிப்பில் உருவாகியுள்ள '18 மைல்ஸ்'-ல் இருந்து 14 நிமிடங்கள் கொண்ட புரோலாகை சமீபத்தில் திங்க் மியூசிக் வழங்கியது. இது '18 மைல்ஸ்' மீதான எதிர்பார்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இயக்குநர் மணி ரத்னம் '18 மைல்ஸ்' பார்த்துவிட்டு ஒட்டுமொத்த குழுவினருக்கும் தன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் சதீஷ் செல்வகுமார் பகிர்ந்து கொண்டதாவது, "இயக்குநர் மணி ரத்னம் சார் கொடுத்த பாராட்ட எங்கள் அணியில் உள்ள அனைவருக்குமே மறக்க முடியாதது. மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் புரோலாக் திரையிட்டு காட்டும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. மிக நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததாக மணி சார் பாராட்டினார். கதாநாயகி மிர்னாவில் இருந்து என்னுடைய உதவியாளர் அசோக், எடிட்டர் நாஷ் என அணியில் இருந்த எல்லோரையும் தனித்தனியாக பாராட்டினார். அணியில் ஒவ்வொருவருடைய உழைப்பும் சிறப்பாக உள்ளது என்றார் எங்களுக்கு, இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். நிர்வாக தயாரிப்பாளர் சிவானந்த் சாரும் எங்களை ஊக்கப்படுத்தினார்" என்றார்.
மணி ரத்னம் அவர்களின் 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படம், இயக்குநராக இன்னும் மேம்படுத்திக் கொள்ள தனக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக அமைந்தது என்றார் இயக்குநர் சதீஷ் செல்வகுமார். கடல் மற்றும் எல்லைகளைக் கடந்த உணர்வுகளை அழகியலோடு காட்டவுள்ளது '18 மைல்ஸ்'. தற்போது, இயக்குநர் மணி ரத்னமிடம் இருந்தும் பாராட்டு பெற்றுள்ளது.
சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!
இளைமை, சாதுர்யம் மற்றும் நடிப்புத் திறமை ஆகியவற்றை ஒருங்கே பெற்றவர் நடிகை சான்யா ஐயர். அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் திரை வசீகரத்துடன் தென்னிந்திய சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார்.
விடாமுயற்சி மற்றும் நடிப்பு மீதான ஆர்வத்துடன் கன்னட சினிமாவில் 15 வருடங்களுக்கும் மேலாக தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். 'நம் அம்மா ஷாரதே', 'அரசி', 'புட்டகௌரி மதுவே' போன்ற தொடர்களில் குழந்தை நட்சத்திரமாகவும், 'கஜா', 'முகபுதா' மற்றும் 'விமுக்தி' போன்ற படங்களிலும் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். கன்னட பிக் பாஸ் ஓடிடி சீசன் 1 வெற்றியாளராக அவர் பெற்ற வெற்றியும், 2024 ஆம் ஆண்டில் வெளியான இந்திரஜித் லங்கேஷின் கௌரி திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்ததும் இன்று இந்திய சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் சான்யா.
இதுகுறித்து சான்யா பகிர்ந்து கொண்டதாவது, "கன்னட மொழியில் 2025 ஆம் வருடத்திற்கான சைமாவின் நம்பிக்கை நட்சத்திரம் விருது பெற்றிருப்பது பெருமையான விஷயம். இந்த விருதுக்கு என்னைத் தேர்ந்தெடுத்த சைமாவின் நடுவர் குழுவினர், என்மீது அளவுக்கடந்த அன்பு செலுத்தும் ரசிகர்கள், ஊடகம், என்னுடைய குடும்பம் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் நன்றி! நிச்சயம் கலைக்கும் சினிமா உலகிற்கும் என்னால் முடிந்த சிறந்த பங்களிப்பை தருவேன்" என்றார்.
இந்த விருது சான்யாவின் திறமைக்காக மட்டுமல்லாது அவரின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கான அங்கீகாரமாகவும் அமைந்துள்ளது. நமது பாரம்பரிய மற்றும் சமகால நடனத்தில் வலுவான அடித்தளம் கொண்ட நடிகை சான்யா நம்பிக்கை நட்சத்திரமாக மட்டுமல்லாது கலாச்சார முகமாகவும் இருக்கிறார். தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடிப்பில் புதிய பரிமாணத்தைத் தொடும் சான்யா இந்திய சினிமாவின் முகமாவும் இருக்கிறார்.
இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் மகத்தான எபிக் எண்டர்டெயினர் “விருஷபா” உங்களை மயக்க தயாராகிவிட்டது. இந்திய சினிமாவின் மாபெரும் நட்சத்திரம் லாலேட்டன் மோகன்லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம், தீவிரமான டிராமா, கண்கவர் காட்சிகள், மறக்க முடியாத சினிமா அனுபவம் மற்றும் இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது.
படக்குழு நாளை விருஷபா பயணத்தின் அடுத்த பெரிய படி முன்னெடுக்கப்படுவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், சிறப்பு காட்சிகள், வித்தியாசமான கூட்டணிகள், மேலும் விருஷபா உலகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.
மோகன்லால் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்டதாவது..,“காத்திருப்பு முடிந்தது. கர்ஜனை நாளை தொடங்குகிறது! விருஷபா உலகுக்குள் அடியெடுத்து வையுங்கள்.”
நந்த கிஷோர் எழுதி இயக்கியுள்ள விருஷபா, இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்பாக உருவாகியுள்ளது. கனெக்ட் மீடியா மற்றும் பலாஜி டெலிஃபிலிம்ஸ் இணைந்து அபிஷேக் வியாஸ் ஸ்டுடியோஸ் உடன் வழங்கும் இந்தப் படம், அதிரடி, புராணா கதை மற்றும் ஆழமான உணர்ச்சிகளை ஒன்றாகக் கலந்த பெரும் காட்சிப்படையாக உருவாகிறது.
தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்தப் படம், இந்தி மற்றும் கன்னடத்திலும் வெளியாகவுள்ளது. இது உண்மையான பான்-இந்திய படைப்பாக ரசிகர்களை மயக்கவுள்ளது.
இந்தப்படத்தை ஷோபா கபூர், ஏக்தா R கபூர், CK. பத்மகுமார், வருண் மாதூர், சௌரப் மிஸ்ரா, அபிஷேக் S வியாஸ், ப்ரவீர் சிங், விஷால் குர்னானி மற்றும் ஜுஹி பாரேக் மேத்தா ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.
அசத்தும் காட்சிகள், பரந்து விரிந்த அளவிலான யுத்தக் காட்சிகள், உணர்ச்சி பூர்வமான டிராமா மற்றும் மோகன்லால் தலைமையிலான சக்திவாய்ந்த நடிப்புத் திறமைகளுடன், “விருஷபா”, இந்திய சினிமாவில் புதிய அளவுகோலை அமைத்து, மிகப்பெரிய பிரம்மாண்ட படைப்பாக வரலாற்றில் இடம்பிடிக்கத் தயாராகிவிட்டது.
இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்
Dawn Pictures மற்றும் Wunderbar Films தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், இயக்கி நடித்து வரும் “இட்லி கடை” படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில்...
Wunderbar Films சார்பில் ஷ்ரேயாஸ் பேசியதாவது:
தனுஷ் சார் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். நானும் ஆகாஷும் சேர்ந்து படம் செய்யலாம் எனப் பேசிக்கொண்டு இருந்தோம். தனுஷ் சார் “இட்லி கடை” கதை செய்யலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆகாஷிடம் சொன்ன போதே, “சார் இயக்குகிறார் என்றால் உடனே ஷூட் போகலாம்” என்றார். முழுமையாக எங்களுக்கான சுதந்திரம் தந்தார். தனுஷ் சாருக்கு இது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இப்படத்தில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பிரசன்னா, ஜாக்கி உட்பட அனைவருக்கும் நன்றி. இன்றைய விழா நாயகன் ஜீவி பிரகாஷ் குமார். அவரை 2008 முதல் எனக்குத் தெரியும். அவர் தேசிய விருது வரை எல்லாமே சாதித்துவிட்டார், ஆனால் இன்னும் அப்படியே இருக்கிறார். அவர் தந்த அற்புதமான பின்னணி இசைக்கு நன்றி. இப்படத்தின் ஹீரோ டைரக்டர் தனுஷ் சார், என்னுடைய வாழ்க்கையில் என் ஹீரோ டைரக்டர் அவர்தான். அவரைப்பற்றி என்ன சொன்னாலும் குறைவாகத்தான் இருக்கும். சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரி, "நல்லவனா இரு... ரொம்ப நல்லவனா இருக்காதே!" என்பதை அவரிடம் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் ஹாலிவுட் வரை எவ்வளவோ நடித்து விட்டீர்கள், ஆனால் நடிப்பு மட்டும் போதாது, அதைத்தாண்டி சில விஷயங்கள் வேண்டும். "ஒருத்தனை 10 பேர் எதிர்த்தால், அவன் தலைவன்!" நீங்கள் தலைவன். உங்களை வைத்து வளர்ந்தவர்கள், உங்களால் வாழ்ந்தவர்கள் உங்களைப் பற்றிப் பேசுவது அவர்களுக்குத்தான் இழுக்கு. இந்த “இட்லி கடை” ரசிகர்களுக்கும், அனைத்து குடும்பங்களுக்கும் பிடித்த படமாக இருக்கும்.
கலை இயக்குநர் ஜாக்கி பேசியதாவது:
என் இயக்குநருடன் இது மூன்றாவது படம். இட்லி கடை ஆரம்பித்த போது, “செட் ஒன்றை போடலாம்” என்று அவர் சொன்னார். அத்தனை டீட்டெயிலாக கூறினார். அவர் கூறியதை மனதில் நன்கு வைத்து பார்த்து தான் செட்டுக்கு வருகிறார். அதனால் அவருடன் வேலை செய்யும் போது மிக எளிதாக இருக்கும். அவருடன் மீண்டும் மீண்டும் வேலை செய்ய ஆசைப்படுகிறேன், அனைவருக்கும் நன்றி.
ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் பேசியதாவது:
தனுஷ் பிரதர் இந்த படத்தில் மிக அதிகமான உழைப்பை அளித்துள்ளார். அவருடன் நிறைய முறை வேலை பார்க்க ஆசைப்பட்டேன், இது தான் அந்த வாய்ப்பு கிடைத்த படம். எனக்காக வெயிட் செய்து முழு ஆதரவும் அளித்ததற்கு நன்றி. படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும், நன்றி.
ஒளிப்பதிவாளர் கிரண் பேசியதாவது:
மயக்கம் என்ன படத்திலிருந்து அவருடன் வேலை செய்ய ஆசை பட்டேன், அது இந்த படத்தில் நனவானது. சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் சார்களுடன் வேலை செய்ததில் மகிழ்ச்சி. தனுஷ் சார் உங்களுடன் வேலை செய்ய நான் நிறைய ஆசைப்பட்டேன். எனக்கு இந்த வாய்ப்பு வழங்கியதற்கு மகிழ்ச்சி.
எடிட்டர் பிரசன்னா GK பேசியதாவது:
நான் பல படங்களில் வேலை செய்துள்ளேன், ஆனால் எடிட்டிங் டேபிளில் உட்காராமல் முழுமையாக அங்கு பணியாற்றிய படம் இதுதான். தனுஷ் சார் ஷூட்டிங் நடக்கும் போது அங்கே கூப்பிட்டு எடிட் செய்ய சொன்னார். அங்கேயே மொத்த வேலை முடிந்தது. படம் மிகச்சிறப்பாக உருவாகியுள்ளது. தனுஷ் சாருடன் வேலை செய்தது அற்புதமான அனுபவம். தொடர்ந்து எனக்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி.
உடை வடிவமைப்பாளர் காவ்யா ஸ்ரீராம் பேசியதாவது:
இந்த படத்தில் வாய்ப்பு வழங்கியதற்கு மகிழ்ச்சி. தனுஷ் சாருடன் வேலை செய்தது மிகப்பெரிய அனுபவம், அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அனைத்து நடிகர்களுடனும் வேலை செய்யும் சந்தோஷம் கிடைத்தது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன், நன்றி.
நடிகை ஷாலினி பாண்டே பேசியதாவது:
எல்லோருக்கும் நன்றி. சென்னைக்கு வந்து பல காலம் ஆகிவிட்டது. மீண்டும் வீட்டுக்கு வந்தது போல் உணர்ச்சி. இப்பட வாய்ப்பு வழங்கிய ஷ்ரேயாஸ் அவருக்கும், தனுஷ் சாருக்கும் மனமார்ந்த நன்றி. அவருடன் நடித்தது என் கனவு நனவாகியது. அருண் விஜய் சார், சத்யராஜ் சார் உட்பட அனைவருடனும் நடித்ததில் மகிழ்ச்சி. நித்யா மேனனுடன் நடித்திராத போதும், அவரது நடிப்பு எனக்கு மிக பிடிக்கும். நான் நடித்த முதல் தமிழ் படம் ஜீவி உடன் தான், அவருடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.
இயக்குநர், நடிகர் R. பார்த்திபன் பேசியதாவது:
என் இனிய நண்பர் இயக்குநர்-நடிகர் தனுஷ் அவருக்கும், இந்த அரங்கத்தை கோலாகலமாக வைத்திருக்கும் தனுஷ் ரசிகர்களுக்கும் வணக்கம். ஒரு ஊரில் ஒரு ராஜா. அவருக்கு இரண்டு இளவரசர்கள்—ஒருவர் ஆயிரத்தில் ஒருவன், மற்றவர் பத்தாயிரத்தில் ஒருவன். எந்த வாய்ப்பும் கிடைத்தால் அதில் வித்தகனாக இருப்பவர் இந்த இளையவர் தனுஷ் தான். யாத்ரா, லிங்கா படங்களில் இருவருக்கும் எனக்கு பொறாமை. டப்பிங்கில் தனுஷ் சாருடன் பேசும்போது, அவர் வைத்திருந்த போனை பார்த்து “போன் நம்பர் தர முடியுமா?” என்றேன். அவர் சொன்னார், “இது என் பசங்களிடம் மட்டுமே பேசுவதற்கானது.”
படங்களைப் பற்றி பேச வேறு போன் இருக்கும் போலே! தமிழ் திரையுலகில் கமல் சார் திறமை நிறைந்தவர்; அதற்கு இணையான திறமை கொண்டவர் தனுஷ். அவருக்கு என் வாழ்த்துக்கள். ஜீவி திறமைக்கான படம் இது அல்ல; 10 வருடங்களுக்கு முன்பே ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தை செய்துவிட்டார். அவரது திறமை இன்னும் 50 வருடங்கள் கொண்டாடப்படும். பவர் பாண்டி பார்த்து ராஜ்கிரண் சார் மீது பொறாமை வந்தது! நடிப்பு ராட்சசி நித்யா மேனன் ஏற்கனவே தனுஷ் சாருடன் நடித்தார், தேசிய விருது பெற்றவர். இதிலும் வெற்றி பெறுவார். அருண் விஜய் கடுமையாக உழைத்து இந்த நிலை அடைந்தார்; பிரமாதமான ரோல் செய்துள்ளார். இத்தனை நட்சத்திரங்களுடன் நானும் ஒரு சிறிய ரோல் செய்துள்ளேன். ஷ்ரேயாஸ் தான் என்னை அழைத்து நடிக்க வைத்தவர்; நடிகர்களை பொறுப்புடன் பார்த்துக்கொள்கிறார். அவருக்கும், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் நன்றி. உங்களைப் போன்ற ரசிகர்களின் ஆதரவோடு இந்த படத்தை பார்த்திட ஆவலோடு காத்திருக்கிறேன், நன்றி.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசியதாவது:
நான் தனுஷ் சாரின் தீவிர ரசிகன். என்னை அழைத்ததற்கு நன்றி. கட்சி சேர பாடலை உருவாக்கும்போது, அவரிடம் கருத்துக்களை கேட்க சென்றபோது, பொறுமையாக பேசினார், நிறைய ஆலோசனைகள் தந்தார். அவருக்கு நான் தீவிர ரசிகன்; அவருடன் வேலை செய்ய ஆவலாக உள்ளேன். இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், நன்றி.
நடிகர் ராஜ்கிரண் பேசியதாவது:
தனுஷ் ரசிகர்களுக்கும் திரைப்பிரபலங்களுக்கும் என் நன்றிகள். இப்படத்தை உருவாக்கிய நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் நன்றி. என் அன்பு தனுஷ், நடிப்பில் வித்தைகள் காட்டும் நித்யா மேனன், சகோதரர் சத்யராஜ், பார்த்திபன் ஆகிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். இத்தனை பேருடன் நடித்ததில் மகிழ்ச்சி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள், நன்றி.
நடிகர் சத்யராஜ் பேசியதாவது:
ஒரு நல்ல தயாரிப்பாளரோடு நடிகனாக நான் சௌக்கியமாக இருக்கிறேன். தனுஷ் அவ்வளவு நன்றாகப் பார்த்துக்கொண்டார். நடிப்பு, எழுத்து, இயக்கம் என சகலகலா வல்லவனாக கலக்குகிறார். பவர் பாண்டி படம் பார்த்து ரொம்ப பொறாமைபட்டேன். எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. தனுஷ் சார் நடித்த ‘அசுரன்’, ‘கர்ணன்’ படங்கள் பார்த்து அசந்துவிட்டேன். இவ்வளவு பெரிய ஹீரோ படத்தில் அம்பேத்கர், பெரியார் கருத்துக்கள் பேசிய வெற்றிமாறன், மாரி செல்வராஜுக்கு நன்றிகள். இந்த படம் கதை சொன்ன போது, முதலில் பார்த்திபன் சார் ரோல் தான் நான் நடிக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால், அவர் இதுதான் உங்களுக்கு சரியாக வரும் என்று எனக்கு பாடல் எல்லாம் தந்துள்ளார். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். அருண் விஜய் ஹீரோவாக இருந்தாலும் அடுத்த ஹீரோ படத்தில் நடிப்பதில் தயக்கம் இருக்கும். ஆனால், இதையெல்லாம் விட்டு இந்த கதையை புரிந்து அற்புதமாக நடித்துள்ளார். நான் என் வயது மூத்தவர்களிடமும், தனுஷ் மாதிரி சின்னவர்களிடமும் நல்ல விசயங்கள் இருந்தால் கற்றுக் கொள்வேன். நடிப்பைப் பற்றி அவரிடம் சொல்லிக் கற்றுக் கொண்டேன். அவருடைய இயக்கத்தை பார்த்து அசந்தேன். இந்த படத்தில் எல்லாம் அம்சமாக அமைந்துள்ளது. ஜீவி இசை அற்புதம். எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் அருமையாக உழைத்துள்ளனர். இதற்கெல்லாம் காரணமாக இருந்த தனுஷ் சார் நன்றி. அவர் மாதிரி ஹாலிவுட் படத்தில் நான் நடித்திருந்தால் என் நடையே மாறியிருக்கும். ஆனால் அவரின் அடக்கம் என்னை வியக்க வைக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.
நடிகை நித்யா மேனன் பேசியதாவது:
தனுஷ் சார் முதலில் இந்த படத்திற்காக கேட்டபோது எனக்கு டேட் இல்லை. பிறகு வேறு நடிகை வந்தார், ஆனால் மாறிவிட்டார். மீண்டும் ஷீட்டுக்கு முன்னர் ‘நீ தான் நடிக்க வேண்டும்’ என்று சொன்னார். இந்த படத்தில் தான் நடிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். ‘திருச்சிற்றம்பலம்’ போல நான் இதற்கே செட் ஆகிறேனா? என்று கேட்டேன். அவர் ‘நீ தான் கச்சிதமாக இருப்பாய்’ என்று சொன்னார். எனக்கு இளவரசு, சமுத்திரகனி, தனுஷ் சாருடன் அதிக காட்சிகள் உள்ளன. இங்கு சத்யராஜ் சார், பார்த்திபன் சார் எல்லோரையும் பார்த்ததில் சந்தோசம். இந்த குழு என் குடும்பம் போல. இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி. தனுஷ் சார், நடிகரைத் தாண்டி இயக்குநராக எனக்கு மிகவும் பிடித்திருக்கிறார். இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
நடிகர் இளவரசு பேசியதாவது:
தனுஷ் சார் ஒரு விழாவில் தந்தை கஸ்தூரி ராஜா பட்ட கஷ்டத்தைப் பற்றிப் பேசியது என்னை மிகவும் ஈர்த்தது. அப்படி ஒரு மகன் தன் தந்தை கஷ்டத்தை உணராமல் இருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த ‘இட்லி கடை’ படம். ஷூட்டிங் போது, அங்கே ஒரு இடத்தில் ‘இது தான் எங்கள் மாமா வீடு’ என்று கூறினார். மிகச் சின்ன வீடு. இத்தனை உயரத்தில் இருப்பவர் அங்கு நடந்து கொண்ட விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அது தான் தனுஷ். இந்த படத்தில் ஒரு சின்ன பாத்திரத்தில் என்னையும் நடிக்க வைத்ததற்கு நன்றி. படம் அனைவருக்கும் பிடிக்கும். என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ் பேசியதாவது:
அனைவருக்கும் வணக்கம். கஸ்தூரி ராஜா சார் எனக்கு நண்பர். ‘துள்ளுவதோ இளமை’ படப்பிடிப்பு வேல்ஸ் கல்லூரியில் நடந்தது. அப்போதிலிருந்து 23 வருடமாக தனுஷைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என இதுவரை தமிழ் சினிமாவில் ரஜினி சார் தவிர யாரும் நடித்தது இல்லை; அதை சாதித்தது தனுஷ் சார் தான். தற்போது வேல்ஸ் பிலிம்ஸில் ஒரு படம் நடித்து வருகிறார். காலை ஷூட் முடித்துவிட்டு இரவில் ‘இட்லி கடை’ படத்தின் போஸ்ட் புரடக்ஷன் ஒர்க் செய்கிறார். அவர் மாதிரி உழைப்பாளியைப் பார்த்ததே இல்லை. அவரின் இந்த படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும். பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளார்கள். பெரிய பெரிய கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். எல்லாமும் சேர்ந்து படம் மிகப்பெரிய வெற்றி பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெற்றிமாறன் இயக்கத்தில் விரைவில் ‘வடசென்னை 2’ படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் துவங்கவுள்ளோம், நன்றி.
நடிகர் விஜயகுமார் பேசியதாவது:
இப்படத்தில் பங்குபெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். சினிமாவில் நான் 65 வருடமாக இருக்கிறேன். பல நடிகர்களுடனும், இயக்குநர்களுடனும் பணியாற்றியுள்ளேன். அதில் அருமை நண்பன் கஸ்தூரி ராஜாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் பையனை வைத்துப் படமெடுக்கிறேன் என்று சொன்னார், இன்னொரு பையன் இயக்குகிறார், ‘நீங்கள் நடிக்க வேண்டும்’ என்றார். சம்பளமே வேண்டாம், உங்கள் வீட்டிலிருந்து சாப்பாடு வர வேண்டும் என்று சொல்லி நடித்தேன். இப்போது அந்த இளைஞர்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளனர். என் மகன் அருண் விஜய் அஜித்தோடு இணைந்து புகழ்பெற்றார். இப்போது தனுஷுடன் இப்படத்தில் நடித்துள்ளார். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து பேசியதாவது:
தனுஷ் சார் ரசிகர்களுக்கு வணக்கம். இந்த விழாவிற்கு அழைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என் அடுத்த படத்திற்கு ஆடியோ லாஞ்ச் நடைபெறுகிறது, அதில் தனுஷ் மாதிரி நடிகர் இருக்கலாம். Dawn Pictures தயாரிப்பாளர் இருக்கலாம். அதனால் நான் லொகேஷன் பார்க்க வந்துள்ளேன். எங்களைப் போன்ற சுமரான பசங்களுக்கு கான்ஃபிடென்ஸ் தந்தவர் தனுஷ் சார். சமீபத்தில் சந்தித்த போது அவரது உழைப்பை பார்த்து மிரண்டேன். இத்தனை உயரத்திற்கு வர இவ்வளவு உழைக்க வேண்டுமா எனப் பிரமித்தேன். அவருடன் நானும் இணையக் காத்திருக்கிறேன். நன்றி.
இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசியதாவது:
விஜயகுமார் சார் என்னுடன் மூன்று படம் செய்துள்ளார். ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் நடித்ததற்கு அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். 2002ல் அந்த படம் இரண்டு இளைஞர்களை நம்பி எடுத்தது. இதில் இவர் நடித்தது மிகப்பெரிய மதிப்பைத் தந்தது, நன்றி. நான் இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கும், என் பிள்ளைகள் வளர்ந்ததற்கும் காரணம் ராஜ்கிரண் சார் தான். அவருக்கு என் நன்றி. என் பையனை இவ்வளவு பெரிய ஆளாக வளர்த்த ரசிகர்களுக்கு நன்றிகள்.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியதாவது:
இந்த விழா ஒரு குடும்ப விழா மாதிரி. அனைவரும் தனுஷ் சாரை நேசிப்பதைப் பார்க்க மகிழ்ச்சி. ‘துள்ளுவதோ இளமை’ தான் நான் தனியாகப் போய் பார்த்த முதல் படம். அதிலேயே அவர் யாரிவர் என ஆச்சரியப்பட வைத்தார். அடுத்த வருடம் ‘காதல் கொண்டேன்’ வந்தது, தமிழ் சினிமாவிற்கு ஒரு கலைஞன் வந்துவிட்டார் என அறிவித்தது. நாயகனுக்குப் பிறகு ஒரு ஜெனரேஷனை இம்பிரஸ் செய்த படம் ‘புதுப்பேட்டை’. அப்போது அவருக்கு வெறும் 23 வயது. இப்போது தயாரிப்பாளராக, இயக்குநராக அவர் ஆச்சரியம் தருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் படங்களும், இயக்கும் படங்களும் ஆச்சரியம் தான். ‘திருச்சிற்றம்பலம்’ படம் பார்த்தேன், அதில் நித்யா மேனன் மேடம் நடிப்பு உணர்வுப்பூர்வமாக இருந்தது. அதே கூட்டணி ‘இட்லி கடை’ படத்தில் பார்க்கப்போகிறோம் என்பது மகிழ்ச்சி. ‘இட்லி கடை’ மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பேசியதாவது…
“பொல்லாதவன்” எனக்கு மூன்றாவது படம். அப்போது நான் சின்ன பையன், தனுஷ் என் கைபிடித்து இசை விழாவிற்கு அழைத்துச் சென்றார். அப்போதிருந்து இந்த நட்பு தொடர்கிறது. என்
யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'
யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை “கும்கி 2” படத்தை பென் ஸ்டூடியோஸ் சார்பில் வழங்கும் ஜெயந்திலால் காடா;
பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் வெளியாகும் கும்கி 2;
தமிழ் திரையுலகில் யானையை மையமாக கொண்டு மனதில் நிற்கும் கதை சொல்லப்பட்ட படம் “கும்கி”, பதிமூன்று வருடங்களுக்கு பிறகு அதன் அடுத்த பாகமாக “கும்கி 2” வெளியாகவுள்ளது.
முதல் பாகத்தில் பார்வையாளர்களை உணர்ச்சியால் உருக்கி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்ற “கும்கி” திரைப்படம், இன்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கிறது. அந்த வெற்றியைக் தொடர்ந்து, மேலும் பரபரப்பான கதைக்களத்துடன் “கும்கி 2” உருவாகியுள்ளது.
இந்த படத்தை பிரபு சாலமன் இயக்குகிறார், ஒரு குழந்தைக்கும், சிறிய யானைக்கும் இடையேயான பிணைப்பு தான் இப்படத்தின் மையக்கரு என படக்குழு தெரிவித்துள்ளது. கதாநாயகனாக நடிகர் மதி அறிமுகமாகிறார், அவரது கடினமான உழைப்புக்கும், பொறுமைக்கும் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இயற்கை, மனிதன், மற்றும் யானைகளின் உறவுகளை மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் பிரபு சாலமன். படம் முழுக்க பரபரப்பான சம்பவங்களும், இதமான உணர்வுகளும் இணைந்து நகரும் விதத்தில் அமைந்துள்ளது.
முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைப்பாளராக பணியாற்றியுள்ளார். யானைகளை மையமாகக் கொண்ட காட்சிகள், பரந்த காடு மற்றும் இயற்கை அழகுகளை பதிவு செய்த காட்சியமைப்புகள், “கும்கி 2”-இன் சிறப்பாக இருக்கும்.
பென் ஸ்டூடியோஸ் மற்றும் பென் மருதர் சினி என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜெயந்திலால் காடா மற்றும் தவல் காடா இணைந்து வழங்கும் “கும்கி 2”, விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கும்கி படத்தின் ரசிகர்கள் முதல் Gen z கிட்ஸ்கள் கொண்டாடும் வகையில் “கும்கி 2” திரைப்படம் உருவாகியுள்ளது.
மதி, ஷ்ரிதா ராவ், ஆன்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரிஷ் பேரடி, ஸ்ரீநாத் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் குடும்பத் திரைப்படம் 'கார்மேனி செல்வம்' அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ராம் சக்ரி இயக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.
அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.
"சாந்தீ... பணம் சம்பாதிக்க எவ்ளோ வழி இருக்கு தெரியுமா?" எனும் சமுத்திரக்கனியின் குரலோடு தொடங்கும் டீசர் பின்னர் பலரது குரல்களோடு சம்பாதிப்பதற்கான பல்வேறு வழிகளை வெளிப்படுத்தி பணம் எப்படி வாழ்வின் வெற்றியை தீர்மானிக்கிறது என்று சுவைபட எடுத்துரைக்கிறது.
சீரியஸான விஷயங்களை கூட சிம்பிளாகவும் சிரிப்பு வர வைக்கும் வகையிலும் வெளிப்படுத்தும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர், பணத் தேவை மக்களின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றி அமைக்கிறது என்பதை இன்றைய கிரெடிட் கார்டு மற்றும் இஎம்ஐ கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் சொல்கிறது.
சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா சந்திரமௌலியும் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். மனைவியோடும் மகனோடும் ஒரு குடும்பத் தலைவராக காட்டப்படும் சமுத்திரக்கனி, பின்னர் வெளிநாடுகளில் தனியாக இருப்பது போல் டீசர் காட்டுகிறது கௌதம் வாசுதேவ் மேனனின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்புகளை டீசர் ஏற்றுகிறது.
"பணக்காரன் ஆகணும்னா பணக்காரனா வாழ கத்துக்கணும், காசு இல்லையா கடன் வாங்கி செலவு பண்ணு" என்று சமுத்திரக்கனி சொல்வதோடு நிறைவடையும் டீசர் பார்வையாளர்களை ரசிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கிறது.
சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமிபிரியா, அபிநயா உள்ளிட்ட திறமையான கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ள இப்படம் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களையும், கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பையும் தாங்கி வருகிறது.
'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசர் ஶ்ரீ சரவணன் ஆவார், யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசையை மியூசிக் கிளவுட் டெக்னாலஜிஸ் எனும் நிறுவனம் அமைத்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாண்டுள்ளனர். தயாரிப்பு வடிவமைப்பை ஷங்கர் கவனிக்க, மணி அமுதவன் பாடல்களை எழுத, ஹரிஷ் கார்த்திக் Z6 நடனம் அமைத்துள்ளார். ஸ்டில்ஸ்: வருண் வி, உடைகள் வடிவமைப்பு: ஸ்வேதுலட்சுமி எஸ், உடைகள்: எஸ். நாகசத்யா.
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் 'கார்மேனி செல்வம்' திரைப்படத்தின் டீசர் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் திரைப்படம் அக்டோபர் 17 அன்று தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.
'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!
நடிகர் அதர்வா முரளியின் 'தணல்' படத்தில் நடிகர் அஸ்வின் காகுமனு வில்லனாக நடித்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. செப்டம்பர் 12, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது 'தணல்' திரைப்படம். படம் வெளியாவதற்கு முன்பே பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேகமாகத் திரையிடப்பட்ட ஷோவில் படம் பாராட்டுகளை குவித்தது. படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் பவர்ஃபுல் நடிப்பில் மிரட்டிய அஸ்வின் நடிப்பும் பாராட்டுகள் பெறத் தவறவில்லை.
படம் குறித்து நடிகர் அஸ்வின் காகுமனு பகிந்திருப்பதாவது, "என்னை இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்த இயக்குநர் ரவீந்திர மாதவா சாருக்கே அனைத்து பாராட்டும் தகும்" என்றார்.
இதுவரை மென்மையான, ரொமாண்டிக் ஹீரோ கதாபாத்திரத்தில் அஸ்வினை பார்த்த ரசிகர்களுக்கு 'தணல்' படத்தில் அவரது வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்.
தனது கதாபாத்திரம் பற்றி அஸ்வின் பேசியதாவது, "இயக்குநர் ரவீந்திர மாதவா படத்தின் கதையை என்னிடம் கூறியபோது வில்லனாக நடிக்கப் போகிறோம் என்றே தோன்றவில்லை. கதாநாயகனுக்கு இணையாக ஆண்டி-ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் என்றுதான் தோன்றியது. கான்ஸ்டபிளாக தனது வேலையை தொடங்கும் ஒருவன் மற்றும் தன் வாழ்வில் ஆறாத வடுவை சுமக்கும் மற்றொருவன் என இரு நபர்களை சுற்றி நடக்கும் கதை இது. நிச்சயம் ரசிகர்களுக்கும் பிடிக்கும். என் சினிமா கரியரில் எப்போது வெளியாகும் என நான் எதிர்பார்த்துக் காத்திருக்கும் படங்களில் ஒன்று 'தணல்'. தற்போது, படம் பார்த்திருக்கும் பத்திரியாளர்கள் தரப்பில் இருந்து பாரட்டுகள் குவிவது மகிழ்ச்சியாக உள்ளது. படப்பிடிப்பில், என் நடிப்பைப் பாராட்டி ஊக்கப்படுத்திய அதர்வாவுக்கும் நன்றி! அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்" என்றார்.
நடிகர்கள்: அதர்வா முரளி, அஸ்வின் காகுமனு, லாவண்யா திரிபாதி, ஷா ரா, பாரத், லக்ஷ்மி பிரியா மற்றும் அழகம் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'
G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சரீரம்”. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கடவுள் ஒவ்வொருவருக்கும் தந்த தனிக் கொடை தான் சரீரம். அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை, தன் சரீரத்தை மாற்றிக்கொள்ளும் உரிமை எவருக்குமில்லை, இந்த கருத்தை ஆழமாக பேசும் படைப்பாகவும் இளமை துள்ளும் காதல் படைப்பாகவும் இப்படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள்.
ஒரு காதல் ஜோடி, அவர்களின் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அந்த காதல் ஜோடியை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லையா?. அவர்களின் விதி என்னவானது என்பது தான் இபடத்தின் கதை.
இதுவரை திரையில் காதலுக்காக, பேச்சு, முதல் இதயம் வரை பலவற்றை தியாகம் செய்ததாக பல படங்கள் வந்துள்ளது ஆனால் சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் முதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் J.மனோஜ், பாய்ஸ் புகழ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, லில்லி, மிலா ஆகியோருடன் இயக்குநர் G.V.பெருமாள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர பிரதேசம், சித்தூர், வேலூர், பெங்களூர், பாண்டிச்சேரி மகாபலிபுரம், கோவளம், சென்னை ஆகிய இடங்களில் 65 நாட்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
முழுமையான காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இசையமைப்பாளர் V.T. பாரதிராஜா இசையில், விஜய் ஆனந்த், குமரவேலன் வேதகிரி வரிகளில், ரசிகர்களை மயக்கும் ஏழு அருமையான பாடல்களும், ஸ்டண்ட் மாஸ்டர் தவசி ராஜ் வடிவமைப்பில் 4 சண்டைக்காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!
’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார். ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்து கவனம் ஈர்த்தவர், அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் வில்லனாக நடித்தாலும், ஆட்டம், பாட்டம், ஆக்ஷன், நடிப்பு என தனது நவரச திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.
எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தும் ஒரு சில நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்து வரும் அர்ஜுன் தாஸ், நடிப்பில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாக உள்ள படம் ‘பாம்’. ஆக்ஷன் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்த அர்ஜுன் தாஸ், ‘பாம்’ படம் மூலம் முதல் முறையாக காமெடியில் கலக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படத்தின் மூலம் அர்ஜுன் தாஸ், தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார், என்று படக்குழு தெரிவித்துள்ளது.
’சில நேரங்களில் சில மனிதர்கள்’ பட புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் பொழுது போக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘பாம்’ திரைப்படம் குடும்பத்தோடு பார்க்க கூடிய கலகலப்பான படமாக உருவாகியுள்ளது. குறிப்பாக, தனது மிரட்டலான பார்வை மற்றும் நடிப்பால் மிரட்டிய அர்ஜுன் தாஸ், இந்த படத்தின் மூலம் தனது நகைச்சுவை திறனை வெளிப்படுத்தியிருப்பதோடு, தனது நடிப்பு திறமையால் நகைச்சுவைக் காட்சிகளை கூட, வழக்கமான பாணி இல்லாமல், தனது பாணியில் சற்று புதிதாக கையாண்டிருப்பவர், காதல் காட்சிகள் மற்றும் பாடல்களிலும் பட்டையை கிளப்பியிருக்கிறாராம். நிச்சயம் இந்த படம் அர்ஜுன் தாஸுக்கு மட்டும் இன்றி அவரது ரசிகர்களுக்கும் நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்.
மேலும், வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி பல படங்கள் வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பரங்களை வித்தியாசமான வழியில் மேற்கொண்டு வரும் படக்குழு, படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் சாலையில், போகும் நபர்களை துண்டு பிரசுரங்கள் கொடுத்து, “பாம்...பாம்...பாம்...” என்று கூவி கூவி விளம்பரப்படுத்துவதும், தனது கம்பீரமான காந்த குரல் மூலம் நாயகன் அர்ஜுன் தாஸ், படத்தின் புரோமோஷன் பற்றி கேட்பது, போன்ற வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அவர் முதல் முறையாக கமர்ஷியல் காமெடி படத்தில் நாயகனாக நடித்திருப்பதால் ‘பாம்’ படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா