சற்று முன்
சினிமா செய்திகள்
47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!
Updated on : 21 February 2026
இந்திய திரையுலகம் மறக்க முடியாத வரலாற்று தருணத்தை எதிர்நோக்குகிறது. இந்திய சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்கள் — ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் — 47 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரே படத்தில் இணைகின்றனர். தற்காலிகமாக “KHxRK” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாபெரும் திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரே முறை கிடைக்கும் அபூர்வ திரை அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1970களின் இறுதியில் கடைசியாக இணைந்து நடித்த இந்த இரு திரை ஜாம்பவான்கள், தங்கள் தனித்துவமான கலைப் பயணங்களால் தலைமுறைகளை தாண்டி ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். தற்போது மீண்டும் ஒரே திரையில் தோன்றுவது, இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
இந்த வரலாற்றுச் சந்திப்பை Red Giant Movies தயாரிக்கிறது. படத்தை அளவிலும், கதை சொல்லுதலிலும், தொழில்நுட்பத் தரத்திலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு புரட்சிகர கலைஞர்களை 47 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படத்தில் இணைப்பது எங்களுக்கு பெருமையான தருணம். அவர்களின் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வலுவான திரை அனுபவத்தை உருவாக்க முழு அர்ப்பணிப்புடன் இந்த முயற்சியை தொடங்குகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை ‘ஜெயிலர்’ வெற்றிப் படத்தை வழங்கிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். படத்தின் இசையை இன்றைய தலைமுறையின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் அமைக்கிறார். அவரது இசை, சமீப கால பிரம்மாண்ட படங்களுக்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது.
படம் குறித்த கதைக்களம், நடிப்பு குழு மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. ‘KHxRK’ இந்திய திரையுலகில் புதிய வரலாற்றை படைக்கும் படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
சமீபத்திய செய்திகள்
இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்
ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள ‘அந்தோனி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. மார்ச் மாதம் வெளியாக உள்ள இப்படம் இலங்கையின் வாழ்வியல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு ரிஷி செல்வம், எடிட்டிங் சுரேஷ் ஏ. பிரசாத், கலை இயக்கம் கலா மோகன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். கலைவளரி சகா, ரமணதாஸ், சுகந்தினி ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஜய் பாலசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, விக்கி இணைத் தயாரிப்பாளர்களாக செயல்பட்டுள்ளனர்.
விழாவில் திருமதி அகிலா பாலுமகேந்திரா, இயக்குநர்கள் சீனு ராமசாமி, லெனின் பாரதி மற்றும் ‘உலக சினிமா’ பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இலங்கையின் மண், மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக பதிவு செய்யும் முயற்சியாக உருவாகியுள்ள ‘அந்தோனி’, போருக்குப் பிந்தைய மனித உணர்வுகளையும் காதலையும் மையமாகக் கொண்டதாக ட்ரெய்லர் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. இளையராஜாவின் இசை இப்படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். மார்ச் மாத வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விழாவில் இணைத்தயாரிப்பாளர் விக்கி பேசும்போது,
" இந்திய -இலங்கை கூட்டுத் தயாரிப்பில்1980 வரை பல படங்கள் வந்துள்ளன. போர் தொடங்குவதற்கு முன்பு கூட இதே சாலிகிராமத்தில் சிங்களப் படங்கள் கூட விழா நடத்தப்பட்டு வெளியாகி இருக்கின்றன.போர் தொடங்கிய பிறகு எந்த தமிழரின் நிறுவனமும் இந்தக் கூட்டுத் தயாரிப்பில் ஈடுபடவில்லை.டிஜிட்டல் காலத்திலாவது ஏதாவது செய்யலாமே என்கிற ஏக்கம் இருந்தது. ஜெனோசனும் சுகிர்தனும் இந்தப் பட முயற்சியில் வாய்ப்பைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். ரமணன் அவர்கள் தயாரிக்க வந்தார். பிறகு அவருடன் பலரும் சேர்ந்து தயாரிக்க முன்வந்தார்கள். போர் நினைவுக் கதைகளைப் படமாக எடுத்தது மாறி மறுவாழ்வுக் கதைகள் எடுக்கலாம் என்று,இயக்குநர்கள் விரும்பினார்கள். அப்படித்தான் இந்தப் படம் உருவாகி உள்ளது .பாலு மகேந்திரா சார் ஈழத்தில் எப்படியாவது ஒரு படம் எடுக்க வேண்டும் என்பதைக் கனவாக வைத்திருந்தார். அவரது அந்தக் கனவு நனவானதில் எனக்கு மகிழ்ச்சி. இது போரைத் தாண்டிய ஒரு கதை என்பது மகிழ்ச்சி." என்றார்.
தயாரிப்பாளர் ரமணதாஸ் பேசும்போது,
" இலங்கை என்கிற நாட்டிலிருந்து உலகத் தரத்திற்கு ஒரு படம் கொடுக்க வேண்டும் என்பது நீண்ட காலம் ஏக்கமாக இருந்தது.சின்னச் சின்ன படைப்புகளைச் செய்து கொண்டிருந்தோம்.அன்புத் தம்பி சுகிர்தனின் கதையைக் கேட்ட போது அந்தப் படத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தோம்.பல தமிழ் நாட்டு சினிமாவைப் பார்த்தே நாங்கள் வளர்ந்து வந்திருக்கிறோம். இப்படி ரத்தத்திலேயே கடத்தப்பட்ட சினிமா தான் தமிழ்நாட்டு சினிமா .உலக தரத்திற்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். தம்பி சுகிர்தன் 'மழைக்கால இரவுகள்' என்ற குறும்படத்தைக் காட்டினார். அதைப் பார்த்து இந்தப் படத்தைத் தயாரித்து இருக்கிறோம். ஈழத்திலிருந்து பெரும் பொருட் செலவிலே வருகிற படம் என்று இதைக் கூறலாம்.தமிழ்நாடு என்பது எங்கள் ரத்தத்தோடும் சதையோடும் கலந்து இருப்பதால் தமிழ்நாட்டு மக்கள் , எங்கள் கதைகளை எங்கள் ஜன்னல் வழியாகப் பார்க்காமல் வீட்டுக்குள் வந்து பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாக இருக்கிறது. இப்படம் உங்களது சக உறவுகள் எப்படிப் புது இடத்தில் வாழ்கிறார்கள் என்பதைப் பார்ப்பதாகவே இருக்கும்.
இந்தப் படத்திற்கு முதலீட்டாளர்களாகப் லண்டன்,சுவிஸ், பிரான்ஸ், நார்வே , இலங்கை போன்று பல்வேறு நாடுகளில் இருந்து எங்களுக்கு உதவி இருக்கிறார்கள்.இவ்வளவு பேர் சேர்ந்தா இந்தப் படத்தை எடுத்தீர்கள் என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும். போன வருடம் மார்ச் மாதம் 5 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம், இப்போது மூன்று மொழிகளில் தயாராகி இருக்கிறது.
இது பிரபஞ்சம் தந்திருக்கும் படம் .இதற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்திற்கு அவரால்தான் இதற்கான இசையைக் கொடுக்க முடியும். ஆமாம் இளையராஜா அவர்கள் இதற்குள் வந்த பிறகு இது உலக சினிமாவிற்கான பயணத்தில் ஒரு கல் எடுத்து வைத்த உணர்வைத் தருகிறது .
இதில் தமிழகம் மட்டுமல்ல இலங்கை மட்டுமல்ல ஐரோப்பிய நாட்டுக் கலைஞர்களும் பங்கேற்று நடித்து இருக்கிறார்கள் .
அந்த அளவில் இது ஒரு பிரபஞ்சத்துக்கான படம் போல் அமைந்திருக்கிறது "என்றார்.
சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது,
" இந்த 'அந்தோனி' படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து நான் கண்கலங்கினேன் .
இந்த பட விழாவிற்காக என்னை அழைப்பதற்காக இந்த இளைஞர்கள் வந்து என்னிடம் பேசிய போது, எந்த ஊர் என்று கேட்டேன் இலங்கை என்றார்கள். அந்த ஒரே காரணத்திற்காகத் தான் இந்த விழாவிற்கு நான் வந்தேன். எனக்கு மற்றபடி இளையராஜா இசை என்பது மட்டும் தெரியும். தயாரிப்பாளர் யார் படத்தில் மற்றவர்கள் யார் என்று தெரியாது.
அழிக்கப்பட்ட ஒரு நாட்டிலிருந்து இரண்டு இளைஞர்கள் இப்போது படம் எடுப்பதற்காக வந்துள்ள, அந்த ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் நான் இங்கு வந்தேன்.
ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்த்தேன். இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பது, அவர் இசை அமைத்தார் என்பதை விட அவர் ஆசிர்வதித்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.என் உள் ளுணர்வு அதைத்தான் கூறியது.இளையராஜா ஆசீர்வதித்த படம் என்றுதான் நான் இதைச் சொல்ல வேண்டும். இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஒரு நாடு சிதிலமடைந்த பிறகு, போர் முடிந்த பிறகு, அல்லது போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு எப்படி இருக்கும் ?வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கும்.அந்த நாடு அழிவில் இருக்கும். போர் முடிவுக்குப் பிறகு அந்த நாட்டில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு தனியனின் இருப்பு எப்படி இருக்கும்? எல்லாமே கேள்விக்குறிதான். எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எதற்காக வேண்டுமானாலும் கேள்வி கேட்பார் இன்றிக் கைது செய்யப்படலாம். அப்படி ஓர் அச்சம் எப்போதும் இருக்கும். அப்படிப்பட்ட மண்ணிலிருந்து வந்த இளைஞர்களின் நினைவுகளில் குண்டு விழுந்த சத்தம் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். இதை யாரும் மறுக்க முடியுமா?
உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதிகாரத்தின் மூலம் அடக்குமுறையைச் சந்தித்து வருகிற மக்களின் கலை வடிவமாகத்தான் அந்தோனியை நான் பார்க்கிறேன். அப்படிப்பட்ட நாட்டில் இருந்து இங்கு வந்திருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகள் மீது ஏன் இன்னும் தடையை நீக்கவில்லை? விடுதலைப் புலிகள் தான் இல்லை என்று தெரிந்து விட்டதே. புலிகள் யாரும் உயிரோடு இல்லை என்ற பிறகும் ஏன் அந்தத் தடையை நீக்காமல் இருக்கிறார்கள்?நான் இதற்கு முன்பு சொன்னேன் அல்லவா? யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் அதற்காகத்தான். அதனால்தான் நீக்காமல் இருக்கிறார்கள். நான் யாரோடும் உடன்பட்டோ முரண்பட்டோ இங்கே இதைப் பேசவில்லை.என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன்.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளரை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.அந்தக் கடலையும் அந்த அலையையும் அந்த வாழ்க்கையையும் தத்ரூபமாக நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நடித்த கயல் வின்சென்ட் இனி அந்தோனி வின்சென்ட் என்று அழைக்கப்படுவார்.அந்த அளவிற்கு அவர் நடித்துள்ளார்.
நான் வின்சென்டிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.நீ இவ்வளவு சிறந்த நடிகன் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது.என்னை மன்னித்துவிடு. நான் சந்திக்க வேண்டும் என்று எனக்குத் தேவைப்படும் போது எங்காவது வெளிநாட்டில் இருப்பாய். நடிக்க வைக்க முடியாமல் போய்விட்டது .
வின்சென்ட் இதில் ஒரு முழுமையான நடிகனாக வெளிப்பட்டுள்ளார்.
நவயுக இலங்கை சினிமாவில் இருந்து ஒரு புது சக்தியாக வந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எல்லாம் நேர்த்தியாக இருக்கிறது.
இந்த அந்தோனியில் ஒரு தோணி இருக்கிறது. அதனால் கண்டிப்பாக கரை சேரும். எப்போது படம் பார்க்கப் போகிறோம் என்று ஆர்வமாக இருக்கிறது .
ஒரு திரைப்படம் என்பது மறப்பதற்கு அல்ல, நினைப்பதற்கு என்று உருவாகி உள்ளது .
எதையோ ஒன்றை மறைப்பதற்கு எதையோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பேசினாலும் காசு, பார்த்தாலும் காசு, தாகம் வந்து தண்ணீர் குடித்தாலும் காசு, கழிப்பறை சென்றாலும் காசு. மனித வாழ்க்கையில் எல்லாமே பணம் சம்பந்தப்பட்டதாக ஆகிவிட்டது.
நீங்கள் பார்க்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் கேட்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள்.ஒட்டுமொத்த மனித வர்க்கத்தையே அபிப்ராயங்களை உருவாக்குவதும்,அபிப்ராயங்களை அழிப்பதும் , அதை வேடிக்கை பார்ப்பதும் என்று தான் வைத்திருக்கிறார்கள்.இதுதான் இன்றைய உலகம்.அப்படி இருக்கிற இன்றைய உலகத்தில் ஈழத்து மக்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக,போருக்குப் பின்னாலான வாழ்க்கையை அவர்களுக்குள் இருக்கும் பரிந்தவிப்பைக் காட்டுகிற இந்த 'அந்தோனி' திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும்.
எனக்கு 'நீர்ப்பறவை' கால கட்டம் நினைவுக்கு வந்தது.இந்தப் படத்தை ஊடகங்கள் சுமந்து கொண்டு போய் மக்களிடம் சேருங்கள். ஒவ்வொரு சிறிய படத்திற்கும் எழுத்தாளரும் பத்திரிகையாளரும் தான் துணை.வேறு யாருமே கிடையாது.தரமான படத்தை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் ரமணனுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே அம்மா அகிலா பாலு மகேந்திரா வந்து இருப்பது மகிழ்ச்சி.
அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அவர் இங்கே வந்திருப்பது பெருமை.
எனது ஒவ்வொரு படத்தையும் அவருக்குப் போட்டுக் காண்பிப்பேன். ஆனால் இடி முழக்கத்தை மட்டும் போட்டுக் காண்பிக்கவில்லை - அது கமர்சியலாக இருப்பதால் போட்டுக்காட்டவில்லை. விழாக்களுக்காக மட்டும் படம் எடுத்தால் நம் வாழ்க்கையில் விழா என்பதே இல்லாமல் போய்விடும். எனவே அதை கமர்சியலாக எடுத்துள்ளேன்"என்று கூறினார்.
இயக்குநர் லெனின் பாரதி பேசும்போது,
"இந்தக் கரையில் இருந்து கொண்டு அந்தக் கரையைப் பார்த்திருக்கிறோம். நாம் எடுக்கும் படங்களில் கடலின் இந்தக் கரையைத் தான் பார்த்து இருக்கிறோம். அந்தக் கரையைப் பார்க்கும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தங்கள் மண் சார்ந்த படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து அதன் தாக்கத்தில் உருவாக்காமல் அவர்கள் தன்னிச்சையாக உருவாக்க வேண்டும். அப்படி ஒரு தன்னிச்சையான திரை உலகமாக இலங்கைத் தமிழ்த் திரையுலகம் உருவாக வேண்டும் .வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்" என்றார்.
இயக்குநர்களில் ஒருவரான ஜெனோசன் ராஜேஷ்வர் பேசும்போது,
" நான் இங்கே இருப்பதை உணர்வு பூர்வமாக நினைக்கிறேன்.நான் பல ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதே அரங்கில் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்த அனுபவம் கொண்டவன் நான். தயாரிப்பாளர் முதலீடு செய்து உதவி கொண்டிருக்கிறார் என்றால் இந்த பிரபஞ்சம் கண்ணுக்குத் தெரியாமல் எவ்வளவோ உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறது.
சுகிர்தன் எடுத்த 'மழைக்கால இரவுகள்' குறும்படம் தயாரிப்பாளருக்குப் பிடித்துப் போய் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.இந்தப் படத்திற்காக பல அண்ணன்கள் தங்களை அறியாமலேயே உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.கேமராவை சொந்தமாக வாங்கிக் கொண்டு போய்தான் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தினோம். நாங்கள் நினைத்தபடியே படத்தை எடுத்திருக்கிறோம்.
வழக்கமான படமாக இல்லாமல் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை எடுத்திருக்கிறோம். இது ஒரு கடலோரக் காதல் காவியம்.
இது இலங்கை மண் சார்ந்த ஒரு காதல் கதை.அனைத்து சமூகத்தினரும் பார்க்க வேண்டும், ஆதரிக்க வேண்டும். அனைவரும் ஊக்கமளித்து வெற்றி பெற வைக்க வேண்டும்" என்றார்.
இன்னொரு இயக்குநர் சுகிர்தன் கிறிஸ்துராஜா பேசும்போது,
"நல்ல மழை பெய்து எந்தன் காடு இங்கு கனிந்தது.நான் நினைத்த எண்ணம் கல்வெட்டாக வளர்ந்தது.கொம்புத்தேனை பார்த்து நின்றேன் கையில் வந்து விழுந்தது. கூட்டத்தோடு நின்ற என்னை கொஞ்சும் அன்னம் அழைத்தது,என்ற மாதிரியான நிகழ்வு எனக்கு.
ஒரு படத்தில் சொல்லி இருப்பார்கள் 'காதலும் கடலும் எப்போது பார்த்தாலும் சலிக்காது' என்று.எங்கள் ஊரில் உள்ள காதலையும் கடலையும் இந்தப் படத்தில் காட்டி இருக்கிறோம். இந்தப் படம் எப்படி ஒரு அனுபவமாக இருக்கும் என்றால், காசு செலவழித்து இலங்கை வரத் தேவையில்லை. இந்த படத்திற்கு ஒரு டிக்கெட் எடுங்கள் ,யாழ்ப்பாணம் நகரத்தில் இறங்கி அழகான கிராமத்தில் ஒரு பஸ்ஸில் போகும்போது இளையராஜா பாடல்களை கேட்டுக் கொண்டு காற்று வீசும் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருக்கும்போது ஏற்படும் உணர்வை இந்தப் படம் கொடுக்கும்' என்றார்.
'உலக சினிமா' பாஸ்கரன் பேசும்போது,
'' நான் உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு படங்களைப் பார்ப்பவன். அதே உலகத் தரத்தோடு இந்த 'அந்தோனி' திரைப்படம் இருப்பதைப் பார்த்தேன். இந்த இயக்குநர்கள் இருவரும் கிருஷ்ணன் -பஞ்சு, தேவராஜ் - மோகன் போல வெற்றிகரமாக விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தப் படத்தின் கதாநாயகன் வின்சென்ட் என் ராசாவின் மனசிலே ராஜ்கிரண் போல இருந்தார். கதாநாயகி உதிரிப்பூக்கள் அஸ்வினி போல ஒரு மோனாலிசா தன்மையுடன் இருந்தார்.இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.
கதையின் நாயகனாக நடித்துள்ள 'கயல்' வின்சென்ட் பேசும்போது,
"நான் முதல் படமாக நடித்திருக்க வேண்டிய படம் 'நீர்ப்பறவை'. அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு என் குரு நாதர் பிரபு சாலமன் 'கயல்' படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் கதாநாயகனாக இல்லாமல் கதை நாயகனாக நடித்திருக்கிறேன்.இது எனக்கு முக்கியமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப் படத்தின் நாயகி டிஜே பானு 50 லட்சம் ரூபாய் கொடுத்து தெலுங்குப் படத்தில் அழைத்தபோது அதை மறுத்துவிட்டு இங்கே வந்திரு
“It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு
2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்களில் முன்னணியில் திகழ்கிறது ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’. கடந்த சில மாதங்களாக வெளியான ஒவ்வொரு அப்டேடும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை படிப்படியாக உயர்த்தி வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ டீசர் அந்த பரபரப்பை உச்சக்கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
ராக்கிங் ஸ்டார் Yash பிறந்தநாளில் வெளியான “ராயா அறிமுகம்” வீடியோவே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து Nayanthara கங்காவாக, Kiara Advani நாடியாவாக, Huma Qureshi எலிசபெத்தாக, Rukmini Vasanth மெலிசாவாக, Tara Sutaria ரெபெக்காவாக வெளியான கேரக்டர் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இப்போது டீசர் வெளியாகி, அந்த உலகத்தை முழுமையாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
‘டாக்ஸிக்’ டீசர் வண்ணமயமானதோடு ரத்தம் தெறிக்கும் ஒரு பிரம்மாண்ட சினிமா உலகத்தை வெளிப்படுத்துகிறது. சர்க்கஸ் பின்னணியிலிருந்து கிழக்கு ஆசியத் தாக்கம் கொண்ட காட்சிகளுக்கு நகரும் இந்தக் கதை, வெவ்வேறு காலகட்டங்களை இணைக்கும் இருண்ட மற்றும் பரபரப்பான பிரபஞ்சத்தை உருவாக்குகிறது. அதிரடி காட்சிகள் மட்டுமல்லாமல், கதாபாத்திரங்களின் உளவியல் அடுக்குகளும் ஆழமான நடிப்பும் இந்த உலகத்தின் உண்மையான இதயத் துடிப்பாக இருப்பதை டீசர் உணர்த்துகிறது.
இந்த புயலின் மையத்தில் பிரமாண்டமாக நிற்பவர் யாஷ். அவரது இந்த மாற்றம் ஒரு முழுமையான புதிய அவதாரம் என ரசிகர்கள் பாராட்டுகின்றனர். ஒல்லியான, தீவிரமான தோற்றத்திலிருந்து போர்க்களத்தில் உருவான வலிமையான உடலமைப்பு வரை, ஒவ்வொரு லுக்கும் அவரது அர்ப்பணிப்பையும் கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. அதைவிட முக்கியமாக, உடல் மொழி, பார்வை, நடையின் நுணுக்கம் ஆகியவற்றின் மூலம் பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரத்தை அவர் உயிர்ப்பித்துள்ளார்.
டீசர் குறித்து தயாரிப்பாளர்கள் ஒரு வரியில் கூறியிருப்பது: “It’s gonna get crazyyyy.” திரையில் காணப்படும் வேகமும் காட்சிகளின் அதிர்வும் பார்த்தால், அந்த வாக்குறுதி வெறும் விளம்பர வசனம் அல்ல என்பது தெளிவாகிறது.
இந்த திரைப்படத்தை Geetu Mohandas இயக்கியுள்ளார். யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் இணைந்து எழுதியுள்ள இந்த படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகளாவிய வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. டீசர் தற்போது தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘டாக்ஸிக்’, ஈத், உகாதி, குடி பட்வா போன்ற பண்டிகைகளுடன் இணைந்து 2026 மார்ச் 19 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இருண்ட காட்சியமைப்பு, சர்வதேச தரம் வாய்ந்த தயாரிப்பு, மற்றும் ராக்கிங் ஸ்டார் யாஷின் தீவிரமான புதிய அவதாரம்—‘டாக்ஸிக்’ 2026-இன் மிகப்பெரிய சினிமா அனுபவமாக மாறத் தயாராக உள்ளது. மார்ச் 19, 2026 – அந்த “கிரேஸி” உலகம் திரையரங்குகளில் வெடிக்கத் தயாராகிறது!
‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன் அறிவிப்பு
இந்திய திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படத்தின் டீசர் அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 20 காலை 9.35 மணிக்கு டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போஸ்டரில், ரத்தம் கசியும் பனிப்புயல் சூழலில் நடுவில் ராயாவாக நிற்கும் Yash தீவிரமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். முகம் தெளிவாக தெரியாத நிலையில், பாட்டிலிலிருந்து நேரடியாக குடிக்கும் அவர், இருண்ட வன்முறை உலகில் தனிமையாக நிற்பது போன்ற காட்சி, படத்தின் மொத்த மனநிலையை வெளிப்படுத்துகிறது. கண்ணுக்கு புலப்படாத ஆபத்துகள் சூழ்ந்த அந்த பிரபஞ்சம், ஒரு சாதாரண கதை அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறது.
‘டாக்ஸிக்’ திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்ட மார்க்கெட்டிங் மூலம் கவனம் ஈர்த்துள்ளது. கதாபாத்திரங்களை ஒவ்வொரு கட்டமாக வெளியிடும் உத்தி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இதுவரை கதைக்களம் குறித்த தகவல்கள் மிகக் குறைவாகவே வெளியிடப்பட்டுள்ளதால், படத்தின் காட்சியமைப்பு மற்றும் கதாபாத்திர உறவுகள் குறித்து ரசிகர்கள் பல்வேறு யூகங்களில் ஈடுபட்டு வருகின்றனர். டீசர் ஒரே மொழியில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. காட்சிகளும் பின்னணி இசையும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நட்சத்திர அணியும் படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது. Kiara Advani நாடியாவாக உணர்ச்சி சுமை கொண்ட கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். Huma Qureshi அதிகாரமும் அபாயமும் கலந்த எலிசபெத் வேடத்தில் அறிமுகமாகிறார். Nayanthara கங்காவாக வலுவான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். Tara Sutaria ரெபெக்காவாகவும், Rukmini Vasanth மெலிசாவாகவும் நடித்துள்ளனர். இறுதியாக ராயாவாக யாஷ் அறிமுகமாகும் போது அவர் கூறும் “Daddy’s home…” வசனம், கதையின் திருப்புமுனையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த திரைப்படத்தை Geetu Mohandas இயக்கியுள்ளார். யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.
தொழில்நுட்பக் குழுவிலும் வலுவான பெயர்கள் இணைந்துள்ளனர். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் Rajeev Ravi, இசையமைப்பாளர் Ravi Basrur, படத்தொகுப்பாளர் Ujwal Kulkarni மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P. அபித் ஆகியோர் இணைந்துள்ளனர். ஹாலிவுட் அதிரடி இயக்குநர் J. J. Perry (John Wick) மற்றும் அதிரடி சண்டை இயக்குநர்கள் அன்பறிவ், Kecha Khamphakdee ஆகியோரின் வடிவமைப்பில் பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள் உருவாகியுள்ளன.
KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிக்கும் ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஈத், உகாதி, குடி பட்வா பண்டிகைகளுடன் இணைந்து 2026 மார்ச் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இருண்ட காட்சியமைப்பு, உலகளாவிய அணுகுமுறை, மற்றும் வலுவான நட்சத்திர அணியுடன் ‘டாக்ஸிக்’ இந்திய சினிமாவின் அடுத்த பெரிய அதிரடியாக உருவெடுக்கத் தயாராக உள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த “முதல் பார்வை” – பிப்ரவரி 20 காலை 9.35 மணி!
சசிகுமார் மக்கள்மீது வைத்த நம்பிக்கை தான் ‘மை லார்ட்’ வெற்றியின் காரணம்!
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், Raju Murugan இயக்கத்தில், Sasikumar கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘மை லார்ட்’ (My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமூக அக்கறை மிக்க கருவை வலுவாக பேசுவதுடன், ரசிகர்களை ஈர்க்கும் திரைக்கதையால் பார்வையாளர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை குவித்துள்ள இப்படம் பல இடங்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையிடப்படுகிறது.
இந்த வெற்றியின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில், இன்று படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, அவர்களின் ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
இந்நிகழ்வினில்…
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியதாவது..,
மறுபடியும் நன்றி சொல்ல வந்திருக்கிறேன் இம்முறை மை லார்ட் படத்திற்காக....
சில படங்கள்...நாம் ஒரு பணி எடுத்திருக்கிறோம் ,நாம் அதை நன்றாக செய்ய வேண்டும் என தோன்றும். ஒரு சில படங்கள் மட்டுமே இது வெறும் படம் கிடையாது ஒரு இசையமைப்பாளராகவும் சரி ஒரு மனிதனாகவும் இது நமக்கு ஒரு பெரிய பொறுப்பு... இதில் வேலையை மட்டும் முடித்தால் பத்தாது, இதை நாம் பதிவாகவும் அமைக்க வேண்டும் என்பது இரு பொறுப்புகள் ஆகிவிடும். எப்போதுமே ராஜூ முருகன் சார் எனக்கு பாட்டு எழுதும் போதோ இல்லை அவரோட படத்துக்கு நான் இசையமைக்கும்போதோ அந்தப் பொறுப்பை நான் உணர்ந்திருக்கிறேன்.
அவர் ஒரு ஸ்பெஷலான கிரியேட்டர், மை லார்ட் படத்துல ஒரு புதுவிதமான சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
அவருக்கே உரித்தான பொலிட்டிக்கல் satire ஐ ரொம்ப ஜனரஞ்சகமாக எல்லோரும் ரசிக்கும்படி கொண்டு வந்தது சர்ப்ரைசிங்கா இருந்தது.மை லார்ட் படத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி.டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்குப் பிறகு இந்த படம் தொடர்ச்சியாக சசி சாருடன் வெற்றியில் பங்கேற்பது ஒரு ஸ்பெஷலான தருணமாய் உணர்கிறேன்.
அம்பேத் சாருடன் நேரில் சந்தித்து பேசியதை விட போனில் பேசியது தான் அதிகம்...
இந்தப் படம் சமூகத்துக்கு ஒரு நல்ல விஷயத்தை செய்யக்கூடிய படம் . இந்தப் படத்தை நான் எடுத்து பண்றேன்னு அவர் எடுத்த அந்த முயற்சி இன்று வெற்றி என்ற புள்ளியில் வந்து நின்றதற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சத்யராஜ் சாருக்கு மை லார்ட் படம் கண்டிப்பாக ஒரு மைல்கல்லாக இருக்கும் என நம்புகிறேன். சத்யராஜ் சார் மியூசிக் ல சில இன்புட்ஸ் கொடுத்தாரு. படங்களின் கலெக்ஷனை நாம் கம்பேர் பண்ணலாம் ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே காலத்தைத் தாண்டி மனதில் நிற்கும். அப்படிப்பட்ட ஒரு படமாக மை லார்ட் இருக்கும். இப்படத்தில் வேலை செய்த இசை கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நல்ல படங்களுக்கு ஒரு பலமாக இருந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்ப நன்றி
தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசியதாவது..,
படம் வெளியாகி இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் ‘தேங்க்ஸ் மீட் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்று சொல்லி, எனக்கு ஒரு பெரிய ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தவர் சசிகுமார் சார். இந்தப் படம் ரிலீஸுக்கு முன்னாலிருந்து இன்று வரைக்கும், ‘இந்த படத்தை மக்களிடம் எப்படியாவது கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தோடு தொடர்ந்து உழைத்து வருகிற இந்த மாதிரியான ஹீரோவை, உண்மையிலேயே நான் இதுவரை பார்த்ததே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல; மனிதநேயமும், மனிதாபிமானமும் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர் சசிகுமார் சாருக்கு என்னோட மனப்பூர்வமான நன்றிகள். அதேபோல், இந்த படத்தின் இயக்குநர்—என்னோட அருமையான நண்பர் ராஜுமுருகன் சாருக்கும் என் நன்றி. இந்த படத்தைப் பற்றி முன்வந்து பேசின வார்த்தைகளில் மட்டும் இல்லாமல், உள்ளத்திலேயே மனிதநேயத்தை சுமந்து பேசின—அருமையான நண்பர் ஷான் ரோல்டன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், ‘மை லார்ட்’ ஒரு நல்ல படம், சிறந்த படம், பிரியமான படம் என்று மக்களிடம் தொடர்ந்து கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பத்திரிகை நண்பர்களுக்கும் என்னோட அன்பும், மரியாதையும், வணக்கமும். இப்படம் எனக்கு ஜிப்ஸியை விட இந்தப் படம் எனக்கு வெற்றி படம்தான்.நான் திருப்தியாக இருக்கிறேன்.எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் ராஜுமுருகன் பேசியதாவது..,
இந்த படத்தை சரியாகப் புரிந்து கொண்டு, அது உங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்புகளை தொடர்ந்து எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
‘மை லார்ட்’ படத்தை தொடங்குவதற்கு முதன்மையான காரணமாக இருந்த அம்பேத்கர் சாருக்கு என் சிறப்பு நன்றிகள். ஷான் —தொடர்ந்து ஒரு வாத்தியார் மாதிரி, பல விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டு, என்னுடைய இசை பயணத்திலும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருவதற்காக அவருக்கும் என் நன்றிகள். எடிட்டர் சத்யராஜ் சார், நீரவ் ஷா சார், இந்த படத்தில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் என் மனப்பூர்வமான நன்றி.நான் சினிமாவுக்கு வந்ததிலிருந்து இன்றுவரை, இந்த உலகம் ரொம்ப மாறியிருக்கிறது. ஒரு படத்தை எழுதத் தொடங்கும் இடத்தில் ஒரு எழுத்தாளரின் வேலை ஆரம்பிக்கிறது. ஷூட்டிங் நேரத்தில் இயக்குநரின் வேலை வருகிறது. அதற்குப் பிறகு ரிலீஸ், போஸ்ட்-புரடக்சன் என்று தொடர்கிறது. ஆனால் இன்றைக்கு, படம் ரிலீஸான பிறகும்—ப்ரமோஷன் வரைக்கும்—நிறைய விஷயங்களை நாமே கவனிக்க வேண்டிய ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. ஒரு ரைட்டிங்குக்கு எவ்வளவு உழைப்போ, ஒரு படத்தை உருவாக்க எவ்வளவு உழைப்போ, அதே அளவு உழைப்பை இன்றைக்கு அந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் கொடுக்க வேண்டியிருக்கிறது.நான் அடிப்படையில் ஒரு ஜர்னலிஸ்டாக இருந்ததால், முன்பெல்லாம் ப்ரமோஷன், இன்டர்வியூஸ் இதிலெல்லாம் அதிக ஆர்வம் காட்டியதே இல்லை. ஆனால் இப்போ அது ஒரு பெரிய சவாலாக மாறியிருக்கிறது
ஒரு படத்துக்கு எப்படி முழு மனசோடு வேலை செய்கிறோம், அதே தீவிரத்தோடு ப்ரமோஷனுக்கும் வேலை பண்ண வேண்டிய ஒரு சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இது நல்லதா, கெட்டதா என்ற விவாதத்தை தாண்டி—இந்த உலகம் மாறிக்கிட்டே இருக்கிறது என்பதையும், அதுக்கேற்ற மாதிரி நாமும் மாற வேண்டியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நாம் படத்தில் எதைப் பற்றி பேசினாலும், அந்த படத்தை எடுத்துக் கொண்டு போய் ஆடியன்ஸிடம் சேர்ப்பது ஒரு மிகப் பெரிய வேலை. அந்த இடத்தில் உறுதுணையாக நிற்பது ஊடகங்களான நீங்கள் தான்.உங்களுடைய பாசிட்டிவான அணுகுமுறை, பாசிட்டிவான வார்த்தைகள் எப்போதுமே எனக்கு பெரிய ஊக்கமாக இருந்திருக்கிறது. அதற்காக உங்களுக்கெல்லாம் என் மனப்பூர்வமான நன்றி. இந்த படைப்பில் எப்போதும் கூடவே இருந்து துணைநின்ற ஜேம்ஸ் சார், திங்க் மியூசிக் சந்தோஷ் சார்,இந்த படம் உருவாகுவதற்கு உறுதுணையாக இருந்த இரா. சரவணன் உட்பட அத்தனை நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.
நடிகர் சசிக்குமார் பேசியதாவது..,
இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததற்கு முதலில் உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.என்னுடைய நடிப்பை எல்லாருமே பாராட்டியதை கேட்கும்போது எனக்கு உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னோட நடிப்பும், சைத்ரா நடிப்பும், அதுக்கப்புறம் குருசசோமசுந்தரம் உள்ளிட்ட பல சிறிய சிறிய கேரக்டர்ஸும் — முதல் காட்சியிலிருந்தே பாராட்டப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.
ஒரு நடிகராக, என்னை இன்னொரு விதமாக அழகாக மாற்றிக் காட்டியிருக்கிறார் ராஜுமுருகன். அதுக்காக அவருக்கு நான் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார், எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என சொல்லக்கூடிய அவரது மனது தான் பெரிய விஷயம். ராஜு முருகன் கொடுத்து வைத்தவர். ஒரு நல்ல இயக்குநரும், ஒரு நல்ல தயாரிப்பாளரும் எப்போதும் தோற்றுப் போகக் கூடாது. எப்போதும் ஜெயிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.
முதல் நாள் கலெக்ஷனை பார்த்துவிட்டு எல்லோருக்கும் கொஞ்சம் பயம் வந்தது, ஆனால் எனக்கு தைரியமாக இருந்தது. ஏனென்றால் எல்லாருமே படம் நல்ல படம் எனச் சொன்னார்கள். அது கண்டிப்பா மக்களிடம் இன்னும் போய் சேரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது நடந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. ‘அயோத்தி’படத்தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு இந்த தைரியத்தை கொடுத்தது. அந்தப்படமும் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் தான் கலெக்ஷனை எடுத்தது. அதே மாதிரி இந்தப் படமும் கண்டிப்பாக எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள்மேல் இருக்கிறது. இப்படம் போய் சேர வேண்டிய இடத்திற்கு கண்டிப்பா போய்ச் சேரும். படம் பார்த்து விஜய் டிவி ரிலீஸுக்கு அப்புறம் வாங்கியதும், ஓடிடியிலும் வாங்கியதும்—இதெல்லாமே ஒரு பெரிய வெற்றிதான். அதே போல சூர்யா சார் படம் பார்த்து, இந்த படத்தை ப்ரெசென்ட் பண்ணுறோம் என சொன்னதுக்கும், அவருக்கும் அவரோட டீமுக்கும் என் மனப்பூர்வமான நன்றி.
சந்தோஷ், ஜேம்ஸ்—ஆரம்பத்திலிருந்தே கூடவே நின்ற எல்லாருக்கும் நன்றி. ஷான் மியூசிக் படம் முடிந்தும் மனதுக்குள் நின்றது. சத்யராஜ் எடிட்டிங் நன்றாக இருந்தது. இறுதியாக, எங்களை வாழ்த்திய, எங்களை பாராட்டிய அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”
மை லார்ட் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் எம். சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளதுடன், ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனித்துள்ளார். ஆடை வடிவமைப்பை டி. ஆர். பூர்ணிமா செய்துள்ளதுடன், நடன அமைப்பை எம். ஷெரீப் மற்றும் சண்டைக் காட்சிகளை பி. சி. ஸ்டண்ட் வடிவமைத்துள்ளனர்.
வெற்றி நடிக்கும் ஆக்சன் திரில்லர் ‘பிளாக் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவு!
எம்.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படமான “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. “தீர்ப்புகள் விற்கப்படும்” படத்தின் மூலம் கவனம் பெற்ற Theeran Arun Kumar இந்தப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
Ettu Thotta மற்றும் Jiivi படங்களின் மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த Vettri இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியாலயா நடித்துள்ளார்.
ஒரு சாதாரண இளைஞனுக்கும், நிழல் உலக வணிக மாபியாக்களுக்கும் இடையே வெடிக்கும் மோதலே இப்படத்தின் மையக்கரு. நம் அன்றாட வாழ்க்கையில் கவனிக்கப்படாமல் கடந்து செல்லும் ஒரு விஷயம், எவ்வாறு உலகளாவிய வணிக சதியாக மாறுகிறது என்பதை புதுமையான திரைக்கதையில் இப்படம் வெளிப்படுத்துகிறது. அதிரடி காட்சிகளும், பரபரப்பான திருப்பங்களும் நிறைந்த இந்த படம் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது.
தயாரிப்பாளர் எம். மூர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், Livingston, Tulasi, Abhirami Venkatachalam (பிக்பாஸ் அபிராமி), A. Venkatesh, Jeeva Ravi, Vijay TV Ramar உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் முழுமையாக படமாக்கப்பட்டுள்ள “பிளாக் கோல்டு” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் டிரெய்லர் மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
அதிரடி மற்றும் சஸ்பென்ஸ் கலந்த வித்தியாசமான களத்துடன் உருவாகும் “பிளாக் கோல்டு” திரையரங்குகளில் புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வெற்றிமாறன் வெளியிட்ட ‘அண்டர் 18’ டைட்டில் லுக் – சமூக யதார்த்தத்தை பேசும் புதிய முயற்சி!
‘மெட்ராஸ்காரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, SR PRODUCTIONS நிறுவனம் தனது அடுத்த முக்கிய முயற்சியாக “அண்டர் 18” (Under 18) திரைப்படத்தை அறிவித்துள்ளது. B. ஜெகதீஸ் தயாரிப்பில், Karthik Perumal Samy இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் டைட்டில் லுக், தேசிய விருது பெற்ற இயக்குநர் Vetrimaaran அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
வெற்றிமாறன் பள்ளியில் பணியாற்றிய அசோசியேட் இயக்குநராகத் திகழ்ந்த கார்த்திக் பெருமாள் சாமி, தனது புதிய படைப்பில் சமூகத்தின் அடித்தள உண்மைகளை மையமாகக் கொண்டு ஒரு வலுவான கதை சொல்லவுள்ளார். குற்ற உலகின் இருண்ட முகத்தையும், அதனால் சிதைந்துபோகும் ஒரு குடும்பத்தின் உணர்ச்சி போராட்டத்தையும் எமோஷனல் டிராமா வடிவில் “அண்டர் 18” வெளிப்படுத்தவுள்ளது.
உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன், தமிழகத்தின் அறியப்படாத குற்றப் பின்னணிகளை நேரில் ஆய்வு செய்து கதையை வடிவமைத்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். சமூக யதார்த்தமும், குடும்ப பாசமும் கலந்த இந்த படம், பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் Aishwarya Rajesh, Vikranth மற்றும் Kishore முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பல முன்னணி நடிகர்கள் விரைவில் இணைவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஓசூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை பகுதிகளில் நிஜமான இடங்களைத் தேர்வு செய்து, இயல்பான காட்சியமைப்புடன் படம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. சமூகத்தின் மறுபக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முயற்சியாக “அண்டர் 18” திரைப்படம் திரையுலகில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘ஹாட்ஸ்பாட் 2’ வெற்றி கொண்டாட்டம், இயக்குநருக்கு சொகுசு கார்!
KJP Talkies தயாரிப்பில், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், அஸ்வின் குமார் நடிப்பில் உருவான ‘ஹாட்ஸ்பாட் 2’, கடந்த ஜனவரி 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. Vishnu Vishal Studioz வழங்கியுள்ள இப்படம், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் சுவாரசியமான கதாபாத்திரங்களால் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர்கள் சுரேஷ்குமார், அனில் ரெட்டி, ராபின் ஆகியோர் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கிற்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கினர். இந்த நிகழ்வு படக்குழுவினருக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘ஹாட்ஸ்பாட் 2’ தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக, படம் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் Prime Video டிஜிட்டல் தளத்தில் வெளியாகவுள்ளது.
முன்னதாக வெளியான ‘ஹாட்ஸ்பாட்’ முதல் பாகம் திரையரங்குகளிலும், பின்னர் ஓடிடியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல் ‘ஹாட்ஸ்பாட் 2’யும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து புதிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“நேர்மையான செய்திகளில்தான் நம்பிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு
மலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாக தனது தனித்துவமான செய்தி வெளியீட்டு பாணியால் வாசகர்களின் நம்பிக்கையைப் பெற்ற நம்பிக்கை ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையை சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்த தொடக்க விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்தியாவில் தனது விரிவாக்கப் பயணத்தை ஆரம்பித்துள்ள ‘நம்பிக்கை’, தமிழ் ஊடக உலகில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, “கட்சி சார்புடைய அல்லது தலைவர்கள் கையில் இருக்கும் இன்றைய ஊடகங்களுக்கு மத்தியில் பெரும் நம்பிக்கையாக என் போன்றவர்கள் இந்த ‘நம்பிக்கை’யை தான் பார்க்கிறோம். நம்பிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல! சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் ’நம்பிக்கை’ கிளை பரப்புகிறது என்றார்கள். அது ஆழமான வேர் பரப்ப வேண்டும் என்பதுதான் என் விருப்பம். தேர்தல் வருகிற காலக்கட்டத்தில் நேர்மையும் உண்மையுமாக செய்திகளை ‘நம்பிக்கை’ கொண்டு போய் சேர்க்கும் என்பது என் நம்பிக்கை. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நம்பிக்கையை இது நிச்சயம் பெறும் என உள்ளன்போடு வாழ்த்துகிறேன்” என்றார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, “நம்பிக்கை விதைக்கூடிய நாளாக இன்று இருக்கிறது. நம்முடைய செயல்பாடுகள் மூலம்தான் நம்பிக்கை பெற முடியும். சோஷியல் மீடியா யுகத்தில் யதார்த்த தன்மையை இழக்கும் சூழலில் உள்ளோம். அதனால், களத்தில் இருந்து உண்மைத்தன்மையுடன் செய்திகளை எந்தளவுக்கு நேர்மையாக கொடுக்கிறோம் என்பதில்தான் நம்பிக்கையை பெற முடியும். மலேசியாவை தொடர்ந்து இங்கும் ‘நம்பிக்கை’ வந்திருக்கிறது. சீமான் அண்ணன் சொன்னதை போல உள்ளது உள்ளபடி சொல்லுங்கள். மக்கள் எங்களை வழிநடத்துவாரகள். தனது பேச்சு, கவர்ச்சி மூலம் முதலில் ஊடகங்கள் முட்டாள்களைத்தான் முதலில் கவரும். பின்பு, புத்திசாலிகளை வாயடைக்க வைத்துவிடும். அப்படி இல்லாமல், தவறு யார் செய்திருந்தாலும் அதை தைரியமாக சுட்டிக்காட்டி சொல்லுங்கள். இன்று வந்திருக்கும் அனைத்து ஆளுமைகளோடு இணைந்து நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் சார்பாக ‘நம்பிக்கை’க்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்”.
நடிகர் சரத்குமார், “மலேசியாவில் தொடங்கி இன்று சென்னை நோக்கி அனைவரின் நம்பிக்கை பெற வந்திருக்கும் ’நம்பிக்கை’ குழுமத்திற்கும் இங்கு குழுமியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்! என் பெரியப்பா ஆதித்தனார் மிகுந்த உழைப்பைக் கொடுத்து ஆரம்பித்த பத்திரிகைதான் தந்தி. அவருடன் என் அப்பாவும் சில காலம் பயணித்தார். நானும் சில காலம் பத்திரிகை உலகில் இருந்தேன். உண்மைகள் மட்டுமே பேச வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பத்திரிகை இயங்க வேண்டும். 27 ஆண்டுகளாக ’நம்பிக்கை’ இயங்கி வருகிறது. மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூர், இந்தியா, துபாய் செல்ல இருக்கிறார்கள். இன்னும் பல நாடுகளுக்கு சென்று பலரது நம்பிக்கையை இந்த ‘நம்பிக்கை’ பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
நடிகை ராதிகா சரத்குமார், “’நம்பிக்கை’ டிஜிட்டல் லான்ச் இன் இந்தியா’ நிகழ்விற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. ஒரு குரல், ஒரு பார்வை, ஒரு வாக்குறுதியோடு வந்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். மீடியா என்பது பிரேக்கிங் செய்திகளை தருவது மட்டுமல்லாது, பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். நியாயம், துணிவு, நேர்மையான பார்வையோடு செயல்படுவதுதான் பத்திரிகை தர்மம். பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!” என்றார்.
நடிகர் நாசர், “இன்றைய காலக்கட்டத்தில் ஊடகங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். பரபரப்பாக இருக்க வேண்டும் என்று பல செய்திகள் திரித்து கூறப்படுகிறது. குறிப்பாக, எங்கள் சினிமா துறையில் பல நல்ல படங்கள் திரித்து கூறி காணாமல் போய்விடுகிறது. இதனால் நான் செய்தி சேனல்களை பார்ப்பதையே தவிர்த்து விட்டேன். ஆனால், என்னை மீண்டும் செய்திகள் பார்க்க வைக்கிறது இந்த ‘நம்பிக்கை’. இன்று ஒரு கஷ்டம் வந்தாலும் நாளை நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்த மனிதகுலம் இயங்கி வருகிறது. தெளிவான, உண்மையான செய்திகள் ‘நம்பிக்கை’யில் நமக்கு கிடைக்கும். சீமான் அவர்கள் சொன்னது போல நீங்கள் வேர் விட வேண்டும். உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு துவக்கம், சிவராத்திரி நாளில் பிரம்மாண்ட பூஜை!
2017ஆம் ஆண்டு வெளியாகி நகைச்சுவை கலந்த ஃபாண்டசி கதைக்களத்தால் ரசிகர்களை கவர்ந்த மரகத நாணயம் திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 16, 2026 அன்று சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி கிளாப்போர்டை அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் வெங்கட்பிரபு “கேமரா ரோலிங், ஆக்ஷன்!” என்று அறிவித்து படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார். திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Passion Studios, Thinkal TV, RTC Media, Axess Film Factory மற்றும் Good Show ஆகிய பேனர்களின் கீழ் சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சௌத்ரி, தேவ் மற்றும் கேவி துரை இணைந்து தயாரிக்கின்றனர். முதல் பாகத்தை இயக்கிய ஏஆர்கே சரவன், இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.
‘மரகத நாணயம் 2’ அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் பாகத்தை விட அதிக நகைச்சுவை, மேஜிக் மற்றும் சுவாரஸ்ய திருப்பங்களுடன் இந்த இரண்டாம் பாகம் உருவாகும் என கூறப்படுகிறது.
தற்போது தொடங்கியுள்ள படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும், நடிகர் பட்டியல் மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்த ஃபாண்டசி-காமெடி தொடர்ச்சி, மீண்டும் ஒரு முறை வெற்றி நாணயமாக மாறுமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

‘ஜாக்கி’ நான்கு வார வெற்றி!, மதுரையின் மண் மணத்தை கொண்டாடும் டாக்டர் பிரகபல் படைப்பு
மழைக்காடுகளில் நடைபெறும் மட் ரேஸ் போட்டியை மையமாக கொண்டு உருவான மட்டி மூலம் கவனம் பெற்ற இயக்குநர் டாக்டர் பிரகபல், தனது அடுத்த படைப்பான ‘ஜாக்கி’ மூலம் மீண்டும் பாராட்டுகளை குவித்து வருகிறார். கடந்த ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஜாக்கி’, தொடர்ந்து நான்கு வாரங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
PK7 Studios தயாரித்து வழங்கியுள்ள ‘ஜாக்கி’, மதுரையை களமாகக் கொண்டு நடைபெறும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக வைத்து உருவான முதல் திரைப்படமாக திகழ்கிறது. மண் மணத்தையும், மண்ணின் மைந்தர்களின் வீரத்தையும் திரையில் உணர்த்தும் வகையில் படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
படம் குறித்து பேசிய டாக்டர் பிரகபல், “இன்றைய சூழலில் ஒரு திரைப்படம் சில நாட்கள் ஓடுவதற்கே சவால். ஆனால் ‘ஜாக்கி’ நான்கு வாரங்களாக வெற்றிநடை போடுகிறது. ரசிகர்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் அளிக்கும் ஆதரவு எங்களுக்கு பெரிய ஊக்கமாக உள்ளது,” என்று தெரிவித்தார்.
‘மட்டி’ படத்தில் நடித்த யுவான் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணாஸ் இந்த படத்திலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்துள்ளார். மேலும் பல திரைப் பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
இப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், படத்தொகுப்பை ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார். கிரியேட்டிவ் ப்ரொடியூசராக ஆர்.பி. பாலா பணியாற்றியுள்ளார். தொழில்நுட்பக் குழுவின் ஒத்துழைப்பும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மதுரையின் கலாச்சாரத்தை திரையில் உயிர்ப்பிக்கும் ‘ஜாக்கி’, உள்ளூர் விளையாட்டை தேசிய அளவில் பேசப்படும் வகையில் மாற்றியுள்ள திரைப்படமாக திகழ்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிநடை போடும் இப்படம், தரமான உள்ளூர் கதைகளுக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













