சற்று முன்
சினிமா செய்திகள்
புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை கே.ராஜன் சந்தித்தார்
Updated on : 20 May 2022
புதுவை மாநில ஆளுநர் மேதகு தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை தமிழ் திரைப்படப் பாதுகாப்புக்கழகத் தலைவர் நடிகர் கே.ராஜன் மற்றும் கர்ஜனை, கன்னித்தீவு படங்களின் இயக்குனர் ப.சுந்தர் பாலு ஆகியோர் சந்தித்தனர்.
புதுவையில் திரைப்பட நகர் உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு கே.ராஜன் வேண்டுகோள் வைத்தார்.
.jpeg)

சமீபத்திய செய்திகள்
லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், லெஜெண்ட் சரவணன் நாயகனாக நடித்துள்ள புதிய பிரம்மாண்ட படத்திற்கு ‘லீடர்’ என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான R.S. துரை செந்தில்குமார் எழுதி இயக்கும் இந்த படம், மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் அம்சங்களை ஒருங்கிணைத்த நவீன கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது.
படக்குழு தரப்பில் கூறியதாவது, “நிழல் உலகத்துக்கும் காவல் துறைக்கும் இடையே நடைபெறும் கடும் யுத்தத்தில், ஒரு சாமானிய மனிதன் எதிர்பாராத விதமாக சிக்கிக்கொள்கிறான். அந்த சூழ்நிலையில் இருந்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக்கொள்ள அவன் மேற்கொள்ளும் போராட்டமே ‘லீடர்’.”
சாதாரண மனிதன் ஒரு சூழ்நிலையால் ‘லீடர்’ ஆக மாறும் பயணத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கி, ஜெய்ப்பூர், ஊட்டி, ஜார்ஜியா உள்ளிட்ட பல்வேறு பிரம்மாண்ட லொகேஷன்களில் நடைபெற்று, சென்னையில் நிறைவடைந்துள்ளது. தற்போதைய சினிமா டிரெண்டுக்கு ஏற்ற வகையில், ஆக்ஷன் காட்சிகளும், பரபரப்பான திரைக்கதையும் படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
‘லீடர்’ படத்தில், பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால், பாகுபலி பிரபாகர், அமிர்தா ஐயர், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா, அறந்தாங்கி நிஷா, குழந்தை நட்சத்திரம் இயல் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைக்க, S. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் E. ராகவ் படத்தொகுப்பை கையாள, ஆக்ஷன் காட்சிகளை மகேஷ் மேத்யூ வடிவமைத்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாக உயர்தரமான காட்சியமைப்புடன், விஎஃப் எக்ஸ் மற்றும் அனிமேஷன் அம்சங்களும் படத்தில் முக்கிய இடம் பெறுகின்றன.
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், லெஜெண்ட் சரவணன் நடிப்பில், R.S. துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படம், லெஜெண்ட் சரவணனின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சாத்தியமற்றதை மேடையில் சாத்தியமாக்கிய முரளிதரன்” - இயக்குநர் K. பாக்யராஜ்
மருது சகோதரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் இயல்–இசை–நடன ஒருங்கிணைந்த வடிவில் மேடையேற்றும் கலைமாமணி மதுரை R. முரளிதரனின் கனவு முயற்சியான ‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7, 2026 (சனி) அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெற உள்ளது.
இந்தப் பெருநிகழ்ச்சியை முன்னிட்டு, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்ற அறிமுக விழாவில், இயக்குநர் K. பாக்யராஜ், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் மற்றும் செயலாளர் விஜயா தாயன்பன், பத்திரிகையாளர் மக்கள் குரல் ராம்ஜி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கலைமாமணி மதுரை R. முரளிதரன் பேசியதாவது…
உலக வரலாற்றில் முதல் முறையாக மருது சகோதரர்களின் கதையை இயல்–இசை–நடன வடிவமாக மேடையேற்ற உள்ளேன். இதை அறிமுகப்படுத்த வந்துள்ள அனைவருக்கும் என் நன்றிகள். தமிழக மண்ணில் தோன்றிய இந்த இரு சகோதரர்கள் ஆங்கிலேய அரசையே அதிர வைத்தவர்கள். கொரில்லா போர்முறையை கையாண்டு ஆங்கிலேய படைகளை திணறடித்தனர். தமது வீரத்தால் 16 ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களை நடுங்க வைத்த விடுதலை வீரர்கள் அவர்கள். கி.பி. 1801 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று, “இந்த தேசத்தின் பிறவி எதிரிகள்” என அறிவிக்கப்பட்ட அவர்கள், மக்களிடம் அச்சம் விளைவிக்க இருவரும் தூக்கிலிடப்பட்டனர். ஆனால் அதற்குப் பதிலாக மக்களிடையே புரட்சி எழுந்தது. இந்த வரலாற்றை இயல், இசை, நாடக வடிவில் மேடையேற்ற உள்ளோம். இதில் 70 பேர் பங்கேற்க உள்ளனர். குதிரை, மாடு போன்றவை கூட மேடையேற உள்ளன. இந்த மேடை நாடகத்தை அனைவரும் கண்டு ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் பேசியதாவது…
முரளிதரன் அவர்களின் மகள் காவ்யாவின் நடனத்திற்கு நான் பெரிய ரசிகை. ஒரு நாட்டிய நாடகத்திற்கான அறிமுக விழாவை பார்க்கும் முதல் அனுபவம் இது. முரளிதரன் எப்போதும் வித்தியாசமாக செயல்படுவார். நாட்டிய மேடையில் புலிகேசியாகவும், நாகநந்தியாகவும் ஒரே நேரத்தில் சந்திக்கும் வகையில் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேடையில் நிகழ்த்தியவர் அவர். அவரது திறமைக்கு என் வணக்கங்கள். அவரது அர்ப்பணிப்புக்கு என் வாழ்த்துக்கள். பல்வேறு மேடைகளில் அவர் கலை ஒளிவீசுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு மிகச் சிறந்த கலைஞர். ‘மருதிருவர்’ என்ற தலைப்பே அருமையாக உள்ளது. முரளிதரன் அவர்களின் முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தாயன்பன் பேசியதாவது…
இன்று அறிஞர் அண்ணாவின் நினைவு நாள். “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” என்று அவர் கூறினார். ஏனெனில் மருது சகோதரர்கள், குயிலி உள்ளிட்ட பலரின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டது. அந்த மறைக்கப்பட்ட வரலாற்றை இங்கு முரளிதரன் எடுத்துச் சொல்கிறார். இயல், இசை, நடனம், நாட்டியம், நாடகம் என அனைத்தையும் ஒருங்கிணைத்து, மொசார்ட் இசையையும் இணைத்து இந்த மேடை நாடகத்தை உருவாக்கியுள்ளார். எல்லாக் கலைஞர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் முரளிதரன் அவர்களின் இந்த முயற்சி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஒரு சக கலைஞனாக வாழ்த்துகிறேன். நன்றி.
மக்கள் குரல் ராம்ஜி பேசியதாவது…
இந்த மேடை நிகழ்ச்சி வெறும் ஒரு நிகழ்ச்சி மட்டுமல்ல, நடனம், இசை, நாடகம், சிந்தனை, சமூகப் பொறுப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைத்த ஒரு முயற்சி. தமிழ் கலாச்சாரம், கலைஞர்கள், மருத்துவர்கள், சமூக சேவையாளர்கள் என பல தரப்பினரின் பங்களிப்பு இதில் உள்ளது. சிறுவயதிலிருந்தே கலைக்கு ஊக்கம் அளித்த பெற்றோர்கள், ஆசான்கள், நடனம், இசை, நாடகம் போன்ற துறைகளில் தங்களை அர்ப்பணித்தவர்களின் உழைப்பு இந்த மேடையில் வெளிப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒருவருக்கானது அல்ல — அவரது குடும்பத்தார் நான்கு பேரின் உழைப்பு, பலரின் கனவு, அனைவரின் ஆதரவு. அதனால் இதன் வெற்றி அனைவருக்கும் உரியது. இவ்வளவு அர்த்தமுள்ள நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றிகள். இது அவரது குடும்பத்திற்கே உரித்தானது. அவர்களோடு தொடர்புடையவன் என்ற முறையில், இந்த மேடையில் நானும் இருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி. மருது சகோதரர்களின் வரலாற்றை சொல்லும் முரளிதரனின் இந்த புதிய முயற்சி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இயக்குநர் K. பாக்யராஜ் பேசியதாவது…
முரளிதரன் அவர்களைப் பற்றி இத்தனை நாளாகத் தெரியாமல் இருந்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எனக்கும் நடனத்திற்கும் அவ்வளவு பொருத்தம் இல்லை. ஆனால் முரளிதரன் இத்தனை சாதனைகள் செய்துள்ளார் என்பதே எனக்கு இன்றுதான் தெரிய வந்தது. அவர் செய்த சாதனைகள் அனைத்தையும் கேட்கும் போது பிரமிப்பாக உள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ள அவரது நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற பெரும் ஆவல் ஏற்பட்டுள்ளது. மேடையில் அவர் டூயல் ரோலை நிகழ்த்திய விதம் அபாரம். சினிமாவிலேயே டூயல் ரோல் எடுப்பது கடினம். ‘கைதியின் டைரி’ கதையை எழுதினேன். ஆனால் அதை அமிதாப் பச்சனை வைத்து இந்தியில் எடுக்கும்போது நான் மாட்டிக்கொண்டேன். டூயல் ரோல் ஷூட்டிங் எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். பின்னர் அமிதாப் சொன்னபடியே மாஸ்க் ஷாட்டை எடுத்தேன். அதை என் குரு பாரதிராஜா பாராட்டினார். எம்.ஜி.ஆர். அவர்களும் பாராட்டினார். அத்தனை சிரமமான விஷயத்தை முரளிதரன் மேடை நாடகத்தில் செய்திருக்கிறார் என்பதே ஆச்சரியம். இதில் இசையும் அவரே அமைத்துள்ளார். வசனம், பாடல், சண்டைக் காட்சிகள் என அனைத்தும் உள்ளதாகச் சொல்கிறார்கள். இத்தனையும் மேடையில் எப்படி நிகழப்போகிறது என்பதை காண ஆவலாக இருக்கிறது. மருது சகோதரர்களின் தெரியாத பல வரலாறுகளை இந்த நாடகம் வெளிக்கொண்டு வருகிறது. முரளிதரன் அவர்களின் இந்த புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். நன்றி.
இந்த மேடை நிகழ்ச்சியில், மருது சகோதரர்களாக கலைமாமணி மதுரை R. முரளிதரன் மற்றும் சிவக்குமார் நடிக்கின்றனர். வீர வேலு நாச்சியாராக முரளிதரனின் மகள் காவ்யா மேடையேறுகிறார். கவிஞர் வைரமுத்து தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
வரலாறு, கலை, புரட்சி மூன்றையும் ஒரே மேடையில் சந்திக்க வைக்கும் ‘மருதிருவர் – A Dance Musical’, தமிழ்க் கலை மேடைகளில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
எல்லைகளை கடந்த மாஸ் - ஜப்பானில் ‘புஷ்பா 2’ 14 நாளில் ரூ.6.1 கோடி வசூல்!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம், ஜப்பானில் வெளியான வெறும் 14 நாட்களிலேயே ரூ.6.1 கோடி (¥105 மில்லியன்) வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றி, உலகளாவிய அளவில் அல்லு அர்ஜுன் கொண்டுள்ள ரசிகர் செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
உலகெங்கிலும் தனித்துவமான, தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வரும் ஜப்பான் சந்தை, தற்போது அல்லு அர்ஜுனையும் ‘புஷ்பா 2’ திரைப்படத்தையும் உற்சாகமாக கொண்டாடி வருகிறது. ஜப்பான் திரைப்படங்களின் வழக்கமான ரன்டைமை விட மாறுபட்டு, 3 மணி 40 நிமிடங்கள் நீளமுள்ள இந்த படம், வெளியான குறுகிய காலத்திலேயே பெற்றுள்ள வரவேற்பும் வசூலும், அங்கு அல்லு அர்ஜுனுக்கு உருவாகியிருக்கும் புதிய ரசிகர் பட்டாளத்தைக் காட்டுகிறது.
கடந்த சில ஆண்டுகளில், இந்திய சினிமாவின் மிகச் சக்திவாய்ந்த நடிகர்களில் ஒருவராக அல்லு அர்ஜுன் உருவெடுத்துள்ளார். அவரது படங்கள் தொடர்ந்து சர்வதேச கவனத்தை ஈர்த்து, சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி வருகின்றன. குறிப்பாக ‘புஷ்பா’ தொடர், இந்திய சினிமாவை உலக அரங்கில் புதிய உயரத்திற்கு கொண்டு சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தியாவிலிருந்து ஜப்பான் வரை மாஸ் வணிகத் திரைப்படங்கள் மூலம் கொண்டாடப்படும் சில இந்திய நடிகர்களில் ஒருவராக, ‘புஷ்பா 2’ திரைப்படம் மூலம் அல்லு அர்ஜுன் மாறியுள்ளார். மொழி, கலாச்சாரம் போன்ற எல்லைகளைத் தாண்டியும் ரசிகர்களுடன் அவர் இணைந்திருக்க முடிகிறது என்பதை இந்த படம் தெளிவாக நிரூபித்துள்ளது.
உலகளாவிய சினிமாவில் இந்திய நட்சத்திரங்களின் வருகை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அந்த வரிசையில் முன்னணியில் அல்லு அர்ஜுன் இருப்பதை ஜப்பானில் ‘புஷ்பா 2’ படத்தின் வசூல் நிலவரமும், அங்கு கிடைக்கும் கொண்டாட்டமும் வெளிப்படுத்துகிறது என்று வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜப்பானில் ‘புஷ்பா 2’ திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியாவின் பல முன்னணி இயக்குநர்களுடன் அல்லு அர்ஜுன் இணைந்து பணியாற்றவுள்ள அடுத்தடுத்த திரைப்படங்கள், சர்வதேச அளவில் அவரின் அந்தஸ்தை இன்னும் உயர்த்தி, ஒரு இந்திய நடிகருக்கான இதுவரை இல்லாத உலக அங்கீகாரத்திற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Hotstar Specials-ஆக ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'லக்கி' திரைப்படம் JioHotstar-ல்
நேரடி ஓடிடி ஒரிஜினல் திரைப்படமான ‘லக்கி’ (Lucky), Hotstar Specials ஆக பிப்ரவரி 20, 2026 அன்று பிரத்யேகமாக JioHotstar தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை JioHotstar, தனது சவுத் அன்பவுண்ட் நிகழ்வில் வெளியிட்டு, ‘லக்கி’ திரைப்படத்தின் தனித்துவமான உலகத்தை முதன்முறையாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
வெளியாகியுள்ள டீசர், பார்ப்பதற்கு அப்பாவியாக இருக்கும் ஒரு நாய்க்குட்டி அரசியல் அதிகார மையங்களின் கவனத்தை ஈர்க்கும் போது உருவாகும் குழப்பங்களே கதையின் மையம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், ‘லக்கி’ திரைப்படம் நகைச்சுவை, குழப்பம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் நிறைந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது.
உதய் மகேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை தேவதர்ஷினி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை, அரசியல், ஆக்ஷன் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன், அப்பாவித்தனமும் அதிகாரமும் மோதும் போது கட்டுப்பாட்டை மீறி நடைபெறும் சம்பவங்களை இந்த திரைப்படம் பேசுகிறது.
புதிய கதைக்களம், திறமையான நடிகர் குழாம் மற்றும் குடும்பங்கள், இளைஞர்கள், செல்லப்பிராணி பிரியர்கள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலான பொழுதுபோக்கு அம்சங்களுடன் ‘லக்கி’ ஒரு முழுமையான எண்டர்டெய்னராக உருவாகியுள்ளது.
Hotstar Specials ‘லக்கி’ திரைப்படம், தமிழ் மொழியில் பிப்ரவரி 20, 2026 அன்று பிரத்யேகமாக JioHotstar தளத்தில் வெளியாகிறது.
விஜய் அரசியல் குறித்த அனு மோகன் கருத்துகள் தனிப்பட்டவை - ‘ரெட் லேபிள்’ தயாரிப்பாளர் விளக்கம்!
சமீபத்தில் நடைபெற்ற ‘ரெட் லேபிள்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அனு மோகன் அவர்களிடம் நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில், குறிப்பாக நடிகர் விஜயின் அரசியல் தொடர்பான கருத்துகள், பல ஊடகங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதாக பேசப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, ‘ரெட் லேபிள்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் இதுகுறித்து தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார்.
அவர் கூறியதாவது, “அனு மோகன் பேசிய கருத்துக்கள் அனைத்தும் அவரது தனிப்பட்ட கருத்துகளே. தயாரிப்பாளராகவும், நடிகராகவும் எனக்கு அந்த கருத்துகளில் எந்தவித உடன்பாடும் இல்லை. சொல்லப்போனால், நானும் விஜய் ரசிகர்தான்,” என்று தெரிவித்தார்.
மேலும், ஃபிலிம் சேம்பர் மற்றும் பெப்சி குறித்து அவர் முன்பு பேசிய கருத்துக்கள் முழுமையாக உண்மையிலானவை என்றும், அதில் இருந்து எப்போதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் உறுதியாக கூறினார்.
இந்த சர்ச்சைகளுக்கு இடையிலும், படத்தை அதன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பார்ப்பதையே ரசிகர்கள் விரும்புவார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், “வரும் பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் எங்கள் ‘ரெட் லேபிள்’ திரைப்படத்தை பார்த்து அனைவரும் மகிழுங்கள்,” என்று ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.
இதன்மூலம், அனு மோகன் கருத்துகளால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், படக்குழு தரப்பில் இருந்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் திரையரங்குகளில் STR-ன் ‘சிலம்பாட்டம்’!
நடிகர் சிலம்பரசன் (STR) பிறந்தநாளைத் தொடர்ந்து, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘சிலம்பாட்டம்’ மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது. முன்னணி வெளியீட்டு நிறுவனமான எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.
மறுவெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வினில்…
விநியோகஸ்தர் எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ் பேசியதாவது..,
ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை அனைவரும் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன் நன்றி.
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் பேசியதாவது..,
இந்தப்படத்தை மீண்டும் வெளியிடுவதாக வந்த தகவல் பெரும் உற்சாகத்தைத் தந்தது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இப்படத்தை விஜய் சாரும் அஜித் சாரும் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். இப்படத்தில் பல சுவாரஸ்யமான விசயங்கள் உள்ளது. யுவன் இசையில் இப்படத்தில் ஐந்து பாடல்களுமே பிளாக்பஸ்டர். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸுக்கு பெரிய லாபம் தந்த படம். இப்படத்தை எல்மா பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்குவது பெருமை. ரசிகர்களுக்கு இப்படம் பெரிய விருந்தாக இருக்கும்.
இயக்குநர் சரவணன் பேசியதாவது..,
”சிம்புவுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். சிம்புவுக்கு பின்னால் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நாம் ஒரு மாஸ் சீனை எழுதுவோம், அதை சிம்பு நடிப்பில் திரையரங்கில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது. சிம்பு என் குடும்பம் மாதிரி, அவருக்கு கொடுத்த வெற்றி நான் எனக்கே தந்துகொண்ட வெற்றி. அப்போது போலவே இப்போதும் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடுவார்கள். இந்நேரத்தில் இப்படத்தில் நடித்த சினேகா, பிரபு உட்பட அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்தார்கள். படத்தை ரசிகர்கள் இப்போதும் கொண்டாடுவார்கள் நன்றி.”
இயக்குநர் Tராஜேந்தர் பேசியதாவது..,
என் மகன் சிலம்பரசன் பிறந்த நாள் கொண்டாட்டத்தை, சிலம்பாட்டம் படத்தோடு கொண்டாடும் அனைவருக்கும் நன்றி. எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் ஆகிய இருவருக்கும் என் நன்றி. இயக்குநர் சரவணன் காலம் கடந்து நிற்கும் அருமையான ஆக்சன் படத்தை தந்துள்ளார். நான் என் பையன் நடித்ததில் வியந்து பார்த்த காதல் படம், விண்ணைத் தாண்டி வருவாயா!, நானும் பல காதல் படங்களை எடுத்திருக்கிறேன். ஆனால் என்னையே வியக்க வைத்த படம், விண்ணைத் தாண்டி வருவாயா.
அதே போல ஆக்சன் படம் என்று எடுத்துக்கொண்டால், எத்தனையோ படங்கள் ரீரிலீஸ் ஆகிறது. ஆனால், மங்காத்தா மட்டும் தான் வெற்றி பெற்றது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஏன் வேறுபடங்களுக்கு கூட்டம் வரவில்ல.? அது போல இந்த சிலம்பாட்டமும் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு ஏற்றாற் போல மீண்டும் டிஜிட்டல் செய்துள்ளார்கள். ஒவ்வொரு ஃப்ரேமும் அவ்வளவு கலர்ஃபுல்லாக இருக்கிறது. சரவணன் அடிப்படையில் கேமராமேன். அத்தனை அற்புதமாக எடுத்துள்ளார். இந்தப்படத்தில் நடித்த பிரபு, சந்தானம், சினேகா என எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். என் உயிருள்ள உஷா படமும் ரீ ரிலிஸுக்கு தயாராகிவிட்டது. ஆனால், சிலம்பாட்டம் வருவதால் என் படத்தை தள்ளி வைத்துவிட்டேன். தம்பி, என் நண்பர் விஜய்யின் ஜனநாயகன் படம் வந்தாலும் தள்ளிப்போவேன் அது நான் தரும் மரியாதை. தமிழ் சினிமா ரீ-ரிலீஸில் என் பையனின் சிலம்பாட்டம் பெரிய வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன். அனைவருக்கும் நன்றி.
2008ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’, நல்ல வசூலையும் ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது. காலப்போக்கில், STR-யின் கல்ட் படங்களில் ஒன்றாக இந்த படம் மாறியது. இப்போது, மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புத்தம் புதிய பொலிவில் மீண்டும் திரைக்கு வருவது ரசிகர்களுக்கு ஒரு பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் STR, “தமிழரசன்” மற்றும் “விச்சு” என இரு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தது பெரிதும் பேசப்பட்டது. கிராமத்து பின்னணியில் சிலம்பக் கலையை மையமாகக் கொண்டு அமைந்த ஆக்ஷன் காட்சிகள், அவரது உடல் மொழி மற்றும் டயலாக் டெலிவரி ஆகியவை படத்திற்கு தனித்த அடையாளத்தைத் தந்தன. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை, மாஸ் ஆக்ஷன், உணர்ச்சிப் பூர்வமான அம்மா–மகன் சென்டிமெண்ட், கிராமத்து அரசியல் என பல அம்சங்கள் ரசிகர்களை கவர்ந்தன.
மாஸ் சிம்பு, ஆக்ஷன் சிம்பு, கிராமத்து சிம்பு – அனைத்தையும் ஒரே படத்தில் காண விரும்பும் ரசிகர்களுக்கு, ‘சிலம்பாட்டம்’ ரீ-ரிலீஸ் ஒரு திருவிழா அனுபவமாக இருக்கும்.
‘பள்ளிச்சட்டம்பி’யில் விண்டேஜ் லுக்கில் கயாடு லோஹர் கேரக்டர் போஸ்டர் வெளியீடு!
இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது நடிகையின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளியிடப்பட்ட போஸ்டரில், கயாடு லோஹர் விண்டேஜ் தோற்றத்தில் காட்சியளித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இருப்பினும், படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
கன்னட திரைப்படமான ‘முகில்பேட்’ மூலம் திரையுலகில் அறிமுகமான கயாடு லோஹர், ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் காலடி எடுத்து வைத்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு பெரும் கவனத்தை பெற்றது. தொடர்ந்து, கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’ எனும் தமிழ் திரைப்படம் அவரது திரை வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
‘பள்ளிச்சட்டம்பி’ கயாடு லோஹரின் மூன்றாவது மலையாள திரைப்படமாகும். இதனுடன், துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ எம் கேம்’ படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. அதேசமயம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படம், முழுமையான மாஸ் ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வருகிறது. ஏற்கனவே வெளியான மோஷன் போஸ்டர், டைட்டில் போஸ்டர் மற்றும் டொவினோ தாமஸ் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெறும் வீடியோக்கள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இந்த திரைப்படத்தை வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் நௌஃபல், பிரிஜீஷ் ஆகியோருடன், சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சானுக்யா, சைதன்யா மற்றும் சரண் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மேகா ஷியாம் மற்றும் தன்சீர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். எஸ். சுரேஷ் பாபு எழுதிய திரைக்கதையுடன், 1950–60 காலகட்டத்தில் கேரளாவில் நடைபெறும் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. டொவினோ தாமஸ், கயாடு லோஹர் ஆகியோருடன் விஜயராகவன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.
விண்டேஜ் பின்னணியும், மாஸ் ஆக்ஷன் கதையமைப்பும் இணைந்த ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைக் கடற்கரையில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ‘வித் லவ்’ படக்குழுவினர்!
தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான ஒரு மைல்கல்லாக, ‘வித் லவ் (With Love)’ திரைப்படக் குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான ட்ரோன் ஷோ ஒன்றை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 ட்ரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவினரின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக உருவான காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த அபூர்வமான நிகழ்வை நேரில் கண்ட பொதுமக்கள் கைதட்டி உற்சாகப்படுத்தியதுடன், அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வித் லவ் (With Love)’ திரைப்படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படம் 2026 பிப்ரவரி 6ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பட வெளியீட்டை முன்னிட்டு பல்வேறு புதுமையான விளம்பர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் படக்குழு, அதன் ஒருபகுதியாகவே இந்த ட்ரோன் ஷோவை நடத்தினர். தமிழ் சினிமாவில் இவ்வளவு பெரிய அளவில், ஒரு திரைப்பட விளம்பரத்திற்காக ட்ரோன் ஷோ நடத்தப்பட்ட முதல் முயற்சி என்பதால், இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
வானில் மின்னும் எழுத்துகளாக ‘With Love’ தோன்றிய தருணம், காதலின் மென்மையும், இளமை துள்ளலும் ஒருசேர வெளிப்படுத்தியதாக பேசப்பட்டது. இந்த நிகழ்வில் ‘வித் லவ்’ படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, ரசிகர்களுடன் அந்த நினைவுகூரத்தக்க தருணத்தை பகிர்ந்து கொண்டனர். சினிமா விளம்பரத்தைத் தாண்டி, இது ஒரு நவீன கலை நிகழ்வாகவும் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.
அறிமுக இயக்குநர் மதன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். K. சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த ட்ரோன் ஷோ வீடியோக்கள், ‘வித் லவ்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது. ‘வித் லவ் (With Love)’ திரைப்படம் 2026 பிப்ரவரி 6ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.


சசிகுமாரின் ‘மை லார்ட்’ அதிகாரம், அன்பு, அரசியல் நையாண்டி கலந்து பிப்ரவரி 13 முதல் திரையில்!
தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் நட்சத்திர நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘மை லார்ட்’ (My Lord). இந்த படம் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்பதை படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
முன்னணி இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மை லார்ட்’ திரைப்படத்தில் சசிகுமாருடன் சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத், இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். ஆடை வடிவமைப்பாளராக டி.ஆர். பூர்ணிமா பணியாற்ற, நடன அமைப்பை எம்.ஷெரீப், சண்டைக் காட்சிகளை பி.சி. ஸ்டண்ட் அமைத்துள்ளனர்.
அடித்தட்டு மக்களின் வாழ்வியலில் நடைபெறும் சுரண்டல்களை அரசியல் நையாண்டி பாணியில் சொல்லும் இந்த படம், அதே நேரத்தில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாகி உள்ளது. ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்து, அம்பேத்குமார் வழங்கும் இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது.
ஏற்கனவே வெளியான ‘மை லார்ட்’ ட்ரெய்லர் ஏழரை மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பெரிதும் உயர்த்தியுள்ளது. ஏழை எளிய மக்கள்மீது நடைபெறும் அதிகார அத்துமீறல்கள் அரசியல் நையாண்டியுடன் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும், அன்பும் உறவுகளும் மையமாகக் கொண்ட குடும்பக் காட்சிகள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருப்பதும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ‘மை லார்ட்’ திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியில் காண சினிமா ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

அக்கு சிகிச்சையின் மகத்துவத்தைப் பேசும் சீனு ராமசாமி
மருந்தில்லா மருத்துவத்தின் மகத்துவத்தை பாதுகாக்கும் நோக்கில், அகவெளி அக்கு சிகிச்சையாளர்கள் சங்கத்தின் மாநில மாநாடு இன்று விமரிசையாக தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், முன்னாள் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும், இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன், அக்கு தெரபிஸ்ட் அசோசியேஷனுக்கான யூடியூப் சேனலை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்திவேலன் அக்கு சிகிச்சையாளர்கள் மாநில மாநாட்டை வாழ்த்தி பேசியதாவது,
“அகவெளி பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த அன்பழகன் மற்றும் மனோகரன் அண்ணன்களுக்கு நன்றி. சமுதாயத்தை சீர்திருத்தும் பணியை தொடர்ந்து இங்கிருப்பவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அன்பழகன் மற்றும் மனோகரன் இருவரும் உறவினர்களாக இருந்து எனக்கு நண்பர்கள் போன்று நெருக்கமானவர்கள். இவர்கள் மூலம் ஏங்கல்ஸ் ராஜா அறிமுகம் கிடைத்தது. இவர் சமுதாயத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர். மருந்தில்லாத உணவு என்பதைத் தாண்டி, மருந்தில்லாத மருத்துவம் என்ற நிலைக்கு இன்று வந்திருக்கிறார். இதற்கு நம்முடன் இருப்பவர்களின் ஆதரவும் மிக முக்கியம். அக்குசிகிச்சையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அடுத்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்திய அளவில் அகவெளி ஆலமரம் போல வளர்ந்து நிற்க வேண்டும். இதன் பெருமையை எட்டி நின்று என்னால் உணர முடிகிறது. இன்றைய தேதியில் நல்லது செய்வதுதான் கடினமான ஒன்று. அந்த தடைகளை தாண்டி இந்த இயக்கத்தை அடுத்தடுத்து எடுத்துச் செல்லுங்கள். மனிதனின் வலியை போக்குவதைவிட சிறந்த ஒன்று கிடையாது. அந்த இடத்தில் அக்கு இருப்பது மகிழ்ச்சி” என்றார்.
அக்கு பங்சர் சிகிச்சையாளர்கள் சங்க தலைவர் ஏங்கல்ஸ் ராஜா,
“அக்கு சிகிச்சையாளர்கள் சங்கத்தினுடைய முதல் மாநில மாநாடு இது. நாற்பது நாட்களில் இதனை ஏற்பாடு செய்திருக்கிறோம். அறம்சார் வாழ்வே நலம் தரும் மருந்து என்பதே மாநாட்டின் நோக்கம். இந்த மாநாடு நம் அனைவருக்கும் தேவையானது. அக்குபங்சர் மருத்துவம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருக்கிறது. அதை அனைவருக்கும் எடுத்து செல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அக்குபங்சர் அறிவியல்பூர்வமான தா என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. நிச்சயமாக! உலகம் முழுவதும் இந்த சிகிச்சை முறை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவும் 2017ல் இதை முழுமையான மருத்துவமுறையாக அங்கீகரித்திருக்கிறது. நமக்கு ஆதரவாக அரசியல் நிலைப்பாடுகளும் நம்மை சுற்றி இருக்கிறது. இந்த மருத்துவம் மக்களிடம் அதிகம் போய் சேரும்போது அதிகம் நன்மை கிடைக்கும்” என்றார்.
இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது,
“மனித உடலில் ஏற்படுகிற வலியை நீக்குபவர்கள்தான் கடவுள். அவர்கள்தான் மருத்துவர்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் மருத்துவர் ஆவது கடினம். ஏனெனில் வருகிறவர்கள் எல்லாருமே நோயாளிகள்தான். மருத்துவர்கள் சொல்வதை முழுதாக கேட்பதில்லை. மருந்தும் இல்லாமல், மந்திரமும் இல்லாமல் என் 75 வயது பாட்டியை அக்கு சிகிச்சை நடக்க வைத்தது. அப்போதிருந்து இதன் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. மனிதனின் ஆசையை கட்டுப்படுத்த புத்தர் சொன்ன விஷயம் இந்த ஊசியாகக் கூட இருக்கலாம். சில மருத்துவத்தின் பின்விளைவுகளால் கிராமப்புற மக்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களை எல்லாம் இந்த சிகிச்சை சென்று சேர வேண்டும் என்பது என் கோரிக்கை. என்னை இந்த விழாவிற்கு அழைத்ததற்கு நன்றி” என்றார்.


- உலக செய்திகள்
- |
- சினிமா













